(150) நக்கீரன் குடும்பமே கதிகலங்கிய நேரம்!
எனக்கு 74 வயசாகுது தம்பி. எப்படா செவ்வாயும் வெள்ளியும் வரும்னு இருக்குது. நக்கீரன கடையில வாங்கி மொத வேலையா கோபால் தம்பியோட போர்க்களம் படிச்சு முடிச்சிடுவேன். அதுக்கப்புறம் அப்டுடேட்டா நக்கீரன் புத்தகம் முழுவதையும் படிப்பேன்.
போர்க்களத்த நான் அனுபவிச்சுப் படிக்கிறேன். கோபாலோட எழுத்து சும்மா இதயத்துக்கு இதயம் பேசுறது போல இருக்குது. அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. அந்தப் பொம்பளையால (ஜெயலலிதா) நக்கீரன் கோபால் பட்ட கஷ்டத்த, அவஸ்தைய அப்படியே எழுது றாரு. அத்தனையும் உண்மைதான். சும்மா கிழிச்சுத் தொங்கவிட்டி ருக்காரு கோபால் தம்பி.
நாங்க பல வருஷமா நக்கீரன் படுற பாட்டை பாத்துக்கிட்டுதான் இருக்கோம். தம்பி கோபால் அநீதிகள எதுக்குற போராளி. நெத்திக்கண் தொறந்தாலும் குத்தம் குத்தம்தான்னு பல விஷயங்கள்ல வெளிப்படுத்தியிருக்கு நக்கீரன்.
நான் வயசான தாய்... ஒன்னப் பெத்த அம்மாவா ஆத்மார்த்தமா சொல்றேன். அய்யா கோபால் நீ நல்லா இருப்பய்யா.
அந்தப் பொம்பள என்ன? எந்தப் புயல் வந்தாலும் நக்கீரன அசைக்க முடியாது. அந்த மார்க்கண்டேயன் போல நீ சாவே இல்லாம வாழணும்... நான் மனசார ஒன்ன வாழ்த்துறேன் எங்க ராசா... கோபால்.
-காலம்சென்ற அ.தி.மு.க. சேர்மனின் துணைவியார்
டிரைவர் சீனிவாசன் எங்க வீட்டுக்காரம்மாட்ட "எங்க வீட்டுக்கு போலீஸ் வந்ததுனால, நான் என்னோட ரெண்டு பசங்களையும் கூட்டிட்டு கே.கே.நகர்ல இருக்கிற தங்கச்சி கீதா வீட்டுக்குப் போனேன். நாங்க போனது தெரிஞ்சு போலீஸ ஃபாலோ பண்ணி வந்து, உள்ள யாராவது இருக்காங் களான்னு பார்த்துட்டு போனாங்க. அதனால நாங்க பயந்துபோய் அங்க இருந்து பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு எங்க அப்பா இருக்கிற கிராமத்துக்கே போயிட்டோம். எங்கள யாருமே என்னான்னு கேக்கலன்னு காமராஜ் அண்ணன் ஒய்ப் சுதா அக்கா ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாங்க''ன்னு சொல்லியிருக்காரு.
உடனே எங்க வீட்டுக்காரம்மா பதறிப் போய், "ஐயோ... இவ்வளவு நடந்திருக்குன்னு தெரியாமப் போச்சே. முதல்ல அண்ணனுக்கு தெரியுமா? எங்க தெரியப்போகுது. அதான் அவரு ஓடிக்கிட்டே இருக்காரே... நீயாவது தெரிஞ்சி என்ட்ட சொல்லியிருந்தா நானாச்சும் கேட்டிருப்பேன். நாம எங்க கேக்குற நெலையிலயாப்பா இருந்தோம்? நாமளே இருட்டுக்குள்ளயே வாழ்ந்துட்டுக் கெடக்கோம். நாம வீட்ட விட்டு வெளிய போகவே இல்லியே...
போகவே வேணாம், போயிறாதீங்கன்னு வக்கீல்க சொன்னதுனால வெளிய தலை காட்டல. புள்ளகுட்டிக எல்லாம் பயந்துபோய் கிடக்குக. எந்த நேரம் என்ன நடக்குமோன்னு பக்கு பக்குன்னுல இருக்கோம். கடை... கண்ணிக்குக் கூட போகல. புள்ள குட்டிகளுக்கு ஆக்கிப் போட எதுவும் புதுசா வாங்க முடியாம, இருக்குறத வச்சு கஞ்சிய காய்ச்சி குடிச்சிக்கிட்டு இருக்கோம். ஏன் அந்தப் புள்ளயும்தான் நம்மள கேக்கல. சரி, பாவம்... அந்தப் புள்ளைதான் என்ன செய்யும். அது அவங்களுக்கு புதுசு, அதான்... இந்தப் பிரச்சினை முடிஞ்சதும் அந்தப் புள்ள வீட்டுக்குப் போகணும். நமக்கு இது பழகிப்போச்சு சீனி. நான் வாக்கப்பட்டு வந்ததுல இருந்து இதே அக்கப்போருதான். நாம யாருட்ட போய் ஒப்பாரி வைக்கிறது. எல்லாம் தலையெழுத்து. இந்தப் பொம்பள வந்தாலே ஈரக்கொலை எல்லாம் வெடவெடன்னு ஆடிட்டேதான் பொழப்பு நடக்குது. அதுக்காக... நாம யாரையும் குறை சொல்லக்கூடாது.
முதல்ல வீட்டச் சுத்தி வேவு பாக்குற இந்த போலீஸ்காரங்க நம்ம தெருவ விட்டுப் போனா போதும்ப்பா. வெளிய போய் எத்தன நாளாச்சு? 7-ந் தேதி அந்த சம்பவம் நடந்து, அதுக்கப்புறமா மூணுவாரம் ஆகிப்போச்சு... தவியா தவிச்சுக்கிட்டிருக்கோம்''னு சொல்லியிருக்காங்க பரிதாபமா...
தம்பி காமராஜோட துணைவியார் சுதா வருத்தப்பட்டதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு. "நாம கஷ்டத்துல ஓடுறோம்.. அண்ணனோட ஒய்ப் வந்து கேக்கல்லியே'ன்னு நெனைச்சிருக்க லாம். ஆனா... கேக்குற நிலைமையில அவங்க இல்லியே!
எங்களுக்கு கல்யாணமாகி 33 வருஷம் ஆச்சு. அவங்க நல்லதா எதையும் பெருசா காண்கல. மகராசன் எங்க மாமனார் ஆர்.எஸ்.பி. செத்ததுதான் மிச்சம். அவங்க சமீபத்துல ஒரு டி.வி. பேட்டியில சொன்ன மாதிரி, எப்பவுமே ஒரு பெரிய பையோடவே வாழ்ந்தாங்க. அந்தப் பையில பிள்ளைங்களுக்கு வேண்டிய துணிமணி, பால் பவுடர் இருக்கும். எப்பவுமே ரெடியா இருப்பாங்க, எப்ப தப்பிச்சு ஓடணும்னு தெரியாது. திடீர்னு சொல்லுவேன்... விழுந்தடிச்சு ஓடுவாய்ங்க... பாவம்! அந்த மகராசிக்கு நாம எந்த சுகத்தையும் குடுக்கல. வண்டி, வண்டியா கஷ்டத்தையும், துன்பத்தையும்தான் கொடுத்திருக்கேன். இன்னிக்கு வரைக்கும் அதான் நெலைம.
எங்க வீட்டுக்காரம்மா மனசுல அப்போ என்ன ஓடிக்கிட்டிருந்திருக்கும். குறைஞ்சது 200, 300 போலீசுக்கு மேல நம்ம புருஷனத் தேடி அலையுறாங்க. அவங்களுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ, எந்த நேரம் புடுச்சு ஜெயில்ல வைக்கப் போறாய்ங்களோ... இப்படி எதுவுமே தெரியாம நாம வாழ்ந்துக்கிட்டிருக்கோமே. இப்ப இதையெல்லாம் யாருக்கிட்ட போய் கேக்கிறதுன்னு அவங்க அல்லாடிப் போய் உக்காந்துட்டு இருந்திருப்பாங்க. "பொடா'வுல என்னை அரெஸ்ட் பண்ணி ஊர், ஊரா... ஜெயில், ஜெயிலா கொண்டுபோய் வச்சு, நம்மள சல்லி... சல்லியா பிரிச்சு மேய்ஞ்சாய்ங்க.
அந்த நேரம் என் துணைவியாருக்கு ரொம்ப ரொம்ப ஆறுதலா இருந்தது என் மாமனார் த.ந.ட. மட்டும்தான். டி.வி.யிலயும், பேப்பர்லயும் நம்மளப் போட்டுத் தாக்கு தாக்குன்னு அடி பின்னி எடுப்பாய்ங்க. நம்ம நியூஸை ஒரு டி.வி. நமக்கு சாதகமா போடும், மத்த டி.வி. அவ்வளவுதான்... கோபால் குளோஸ்ங்கிற கணக்குல போடுவாய்ங்க. இத பாத்து எங்க வீட்ல எங்க அம்மாவும், என் துணைவியாரும் கதிகலங்கி நிப்பாய்ங்க. அப்ப என் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லி, மாப்பிள்ளைக்கு எதுவும் ஆகாதும்மானு தேத்துறதும் அவருதான். அவரு போன பிறகு ஆறுதல் சொல்ல ஆளில்லாம ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. அந்த ரணம் இன்னும் விலகல. அதத்தான் சீனிட்ட, "நாம படுற கஷ்டத்த யார்ட்ட போய் சொல்றது சீனி'ன்னு சொல்லி அங்கலாய்ச்சிருக்காங்க.
எங்க வீட்டுக்காரம்மா என்கிட்ட பேசிக் கிட்டிருக்கும்போது, "சுதாம்மா மட்டுமில்லங்க... நம்ம லெனின் மனைவி பிரதிபாவும் போன் பண்ணுச்சு. "அக்கா ஒரே பயமா இருக்குக்கா. எப்ப, எங்க யாரு வருவாங்கன்னே தெரியல் லக்கா. பாக்குறவங்கெல்லாம் போலீஸ் மாதிரியே இருக்குக்கா... நாங்கள்லாம் வெளியவே போகல. நிலாவையும் வெளில அனுப்பல'ன்னு சொல்லி பதறிச்சு... அது அந்தப் பக்கம்!
இதுக்கிடையில பெருமாள் சாரும், சிவகுமாரும் "அண்ணன்கிட்ட டாகுமெண்ட் ஒண்ணுல கையெழுத்து வாங்கணும். அதுவும் நாளைக்கு கண்டிப்பா வேணும்'னு சொல்லி ஆபீசுக்கு குடுத்து விட்டுருந்திருக்காங்க. (இந்த விஷயம் சிவகுமார் துணைவியார் இந்திராம்மா சொல்லித்தான் ரொம்ப நாளைக்குப் பிறகு தெரியும்.)
சப் எடிட்டரா இருக்கிற நம்ம கொடைக்கானல் செந்தில், என்கிட்ட கையெழுத்து வாங்கவேண்டிய பேப்பர நல்லா பேக்பண்ணி கவர்ல போட்டு பப்ளிகேஷன்ல வேலை பாத்த தம்பி சந்துருவ கூட்டிக்கிட்டு அவனோட டூவீலர்ல வெளியவர... அவங்கள போலீஸ் ஃபாலோ பண்ணியிருக்கு. வண்டி ஓட்டிட்டு சந்து, பொந்தெல்லாம் சுத்தி, போலீசுக்கு அல்வா குடுத்துட்டு... சிவகுமார் வீட்டுப் பக்கம் வரையிலும் போயிட்டாங் களாம். அங்க போனா பெரிய இழவு காத்துக் கிடக்கு. சிவகுமார் வீட்டுப் பக்கத்துலயும் சுத்தி முத்தி எல்லா இடத்துலயும் மஃப்டி போலீஸ். ஏன்னா... சிவகுமார் லாயர். அவர பார்க்கிறதுக்கு நான் எப்படியும் வருவேன்னு நெனைச்சி அங்கயும் போலீஸ்காரய்ங்கள மஃப்டியில போட்டுருந்தாங்களாம்.
அப்ப இந்திராம்மா, "இங்கயும் போலீஸா இருக்காங்கக்கா, என்ன பண்றதுன்னே தெரியல'ன்னு சொல்லிட்டு, "அண்ணன்கிட்ட கையெழுத்து வாங்குறதுக்காக செந்தில் அண்ணன் ஒரு கவர் கொண்டு வந்தாங்க'ன்னு சொல்லிச்சு.
அவங்க கையெழுத்து வாங்குனாங்களா, இல்லியான்னு தெரியல. ஆனா இந்திரா போன் பண்ணி, "அக்கா ஒரே பயமா இருக்குக்கா'ன்னு சொன்ன அந்த வார்த்த...!
மேக்கொண்டு நா தழுதழுக்க... முன்னாடி அண்ணனுக்கு எதிரா கேஸ் வந்தா அண்ணனுக்கு ஏதாவது ஆயிடக்கூடாதேன்னு மட்டும்தான் பயப்படுவோம்.. ஆனா இப்ப நக்கீரன் குடும்பத்துக்கே என்ன ஆயிருமோன்னு எல்லாரும் பயந்துக்கிட்டிருக் காங்க'' அப்படின்னு இந்திரா சொன்னதா, என் துணைவியார் கண் கலங்கச் சொன்னாங்க.
எப்படிப்பட்ட வார்த்தை பாருங்க. அதாவது முன்னாடி 91-ல இருந்து 2011 வரைக்கும் அண்ணனுக்கு எதாவது ஆயிருமோன்னு பயந்தோம். இப்ப 2012-ல 7-ந் தேதி இந்த பிரச்சினை சனியன் ஆரம்பிச்சதுல மொத்த நக்கீரன் குடும்பமே... அது இங்கன்னு இல்ல... வெளியூர் கள்ல இருக்கிற நம்ம நிருபர் தம்பிங்க, முகவர்கள் இவங்க எல்லாருமே உசுர கையில புடிச்சுக்கிட்டுதான் உக்காந்திருந்திருக்காங்க. அதத்தான் அந்தநேரம் என் துணைவியாருட்ட, இந்தம்மா சொல்லியிருக்காங்க.
ஆட்சியில இருந்துக்கிட்டு அலம்பு பண்ற ஆத்தா, ஆத்தாவுக்காக சலம்பிக்கிட்டே இருக்குற போலீஸ்காரய்ங்க... இதுக்கிடையில ஆத்தாவோட கட்சியில பேர் எடுக்கணும்னா எதிரிகள்ட்ட வகை தொகையில்லாம அவனுக பண்ணுற லோலாயித்தனம், இத்தனையையும் நக்கீரன் குடும்பம் சகிச்சுக்கிட்டு எதிர்வினை பண்ணாம நாம உண்டு நம்ம சோலியுண்டுங்கிற கணக்கா ஓடிக்கிட்டே இருந்தோம்.
ஷாட்ட கட் பண்ணி தம்பி செந்தில வரச்சொல்லி, அன்னைக்கி என்ன நடந்ததுன்னு கேட்டேன்.
(புழுதி பறக்கும்)