நிதி நெருக்கடியில் தத்தளித்தாலும் அரசு ஊழியர்களை ஓய்வுபெற அனுமதித்திருக்கிறது தி.மு.க. அரசு. அதே சமயம், ஓய்வு பெறும் கடைசி நாளில் சிலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் சர்ச்சைகளையும், அதிர்ச்சி களையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருந்தது முந்தைய எடப்பாடி அரசு. அப்படி உயர்த்தியதால் அரசு ஊழியர்களுக்கு தரவேண்டிய ஓய்வூதிய பலன்களைக் கொண்டு நிதி நெருக்கடியைச் சமாளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அது போல தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடப்பது பற்றி விரிவாக நக்கீரனில் எழுதியிருக்கிறோம். இதை ஏற்காக அரசு ஊழியர்கள் தங்களின் அதிருப்திகளை அரசுக்கு மறைமுகமாக தெரிவித்தபடி இருந்தனர்.
இதனையடுத்து, ஓய்வு பெற அனுமதிக்கலாம்; ஆனால், பணப்பலன்களை ஓராண்டு கழித்து பெறுகிற வகையில் பாண்ட் பத்திரத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்கலாம் என ஒரு யோசனையை தி.மு.க. அரசு முன்னெடுத்த நிலையில், இதனையறிந்த அரசு ஊழியர்கள், ஓய்வூதிய பலன்களை பணமாகத்தான் கொடுக்க வேண்டும்; இதற்கு மாறாக எது நடந்தாலும் நீதிமன்றத்தை நாடலாம் என்று திட்டமிட்டனர். இதையும் நக்கீரனில் பதிவு செய்திருந்தோம்.
அரசு ஊழியர்களின் மனநிலையை அறிந்த தி.மு.க. அரசு, ஓய்வு வயதை ஒன்றிய அரசு 62 ஆக உயர்த்தினால் நாமும் உயர்த்தலாம். அது வரை உயர்த்த வேண்டாம். அதனால், 31-05-2022 முதல் நடப்பு நிதியாண்டு இறுதிவரை ஓய்வு பெறுபவர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்”என்று உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
மே மாதம் 31-ந்தேதி அரசின் கூடுதல் செயலாளர்கள், சார்பு செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், பொது மேலாளர்கள், துணைப் பொது மேலாளர்கள், ஆணையர்கள் என பல்வேறு துறைகளிலிருந்து சுமார் 7 ஆயிரம் அரசு ஊழியர்களை ஓய்வு பெற அனுமதித்திருக்கிறது தி.மு.க. அரசு. கடும் நிதி நெருக்கடியிலும் இவர்களுக்கான ஓய்வூதியப் பணப் பலன்கள் கிடைக்க வழிவகை கண்டிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இனி ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் ரிட்டயர்மெண்ட் ஆவார்கள். அதனை கணக்கிடும் போது நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 25,000 பேர் ஓய்வுபெற விருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், சில துறைகளின் ஊழியர்கள் பலரை கடைசி நேரத்தில் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்திருப்பதும் அதன் பின்னணிகளும் அரசு ஊழியர்களை கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, தமிழக பால் வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவின் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் புகழேந்தி, புரொடக்ஷன் பிரிவு பொதுமேலாளர் ராஜேந்திரன், மதுரை மண்டல துணை பால் ஆணையர் கிறிஸ்துதாஸ் உள்பட 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஆவினின் டெபுடி ஜி.எம். (இன்ஜினியரிங்) செல்வம், புதுக்கோட்டை ஆவின் ஜி.எம். ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுக்கு ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டது; ஆனால், அவர்களின் ஓய்வூதிய பணப்பலன்களை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறார் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் ஐ.ஏ.எஸ்.
ஆவின் நிறுவன அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் செல்வனிடம் இது குறித்து நாம் பேசியபோது, "ஓய்வுபெறும் கடைசி நாளில் அதுவும் வேலை நேரம் முடிந்த பிறகு சிலருக்கு சஸ்பெண்ட் ஆர்டரை ஆவின் அதிகாரிகள் இஷ்யூ பண்ணியிருப்பது மகாகொடுமை. பொதுவாக, அரசு ஊழியர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் நமது முதல்வர் ஸ்டாலின். அதனால்தான், அரசு ஊழியர்களை கடைசி நாளில் சஸ்பெண்ட் செய்யும் சூழலை தி.மு.க. அரசு எடுக்காது என்று ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களில் தெரிவித்திருந்தார். முதல்வரின் அந்த நம்பிக்கைக்கு எதிராக, ஆவின் அரசு அதிகாரிகள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓய்வுபெறும் நாள் என்பது மே மாதம் 31-ந்தேதி, மாலை 5:45 மணி. அதுவரை எந்த சார்ஜையும் ப்ரேம் பண்ணாத ஆவின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி செய்ய அனுமதித்து விட்டு, அவர் வீட்டுக்குச் சென்றபிறகு சஸ்பெண்ட் ஆர்டரை இஷ்யூ பண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?
இந்தத் தற்காலிக பணி நீக்கத்திற்காக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கார ணங்கள், ஓய்வுபெறும் நாளில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எப்போதோ நடந்திருக்கலாம். அப்போதே நடவடிக்கை எடுக்காமல், ஓய்வு பெறும் நாளில் எடுப்பது அரசு ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுடன் இதன் பின்னணி யில் துறையின் அதிகாரிகளுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்க வேண்டும். என்றைக்கோ நடந்த தவறுக்கு இப்போது நடவடிக்கை எடுக் கப்படுகிறதென்றால், நடவடிக்கை எடுக்கத் தவறிய உயரதிகாரி களுக்கு யார், என்ன தண்டனை கொடுப்பது? இது பற்றித் துறையின் அமைச்சர் ஆவடி நாசர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்''’என்கிறார் அழுத்தமாக.
மேலும் நாம் விசாரித்தபோது,”"ஆவின் புரடெக்ஷன் ஜி.எம். ராஜேந்திரன் கடந்த ஆட்சியில் ராஜேந்திரபாலாஜியால் பழிவாங்கப்பட்டவர். உயரதிகாரிகளின் டார்ச்சரால் மார்க்கெட்டிங் ஜி.எம். புகழேந்தி லீவில் சென்றதால் அந்த பொறுப்பும் கூடுதலாக ராஜேந்திரனிடம் திணிக்கப்பட்டது. தனக்கு மார்க்கெட்டிங் வேண்டாம் என அவர் மறுத்தபோதும் திணித்தனர். இப்போது விற்பனை அதிகரிக்க வில்லை என்று சஸ்பெண்ட் செய்துள்ளனர். விற்பனையை அதிகரிக்க வைக்கவேண்டிய பொறுப்பு பால் இணையத்தின் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.ஸுக்கும், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையனுக்கும் இருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை இல்லையா?
இவர்களை சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று ஆவின் எம்.டி. சுப்பையனுக்கு துறையின் செயலாளர் ஜவகர் ஐ.ஏ.எஸ். ஓரலாக அழுத்தம் தருகிறார். சுப்பையனோ மறுக்கிறார். உடனே ஆர்டராகப் போடுகிறார் ஜவகர். வேறுவழியில்லா மல் சஸ்பெண்ட் ஆர்டரை இஷ்யூ பண்ணுகிறார் சுப்பையன். ஒவ்வொரு சஸ்பெண்ட் டின் பின்னணியில் ஒரு விவகாரம் இருக்கவே செய்கிறது''’என்கிறார்கள்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொதுமேலாளர் ராஜேந்திரனிடம் இது குறித்து நாம் பேசியபோது, "ஓய்வுபெறும் ஊழியர்கள் பட்டியலில் என் பெயர் இருந்தது. ஆனால், 31-ந் தேதி மாலை 6 மணி வரை எனக்கு ஆர்டர் எதுவும் தரப்படவில்லை. வீட்டுக்குச் சென்ற பிறகு, இரவு 11 மணிக்கு சஸ்பெண்ட் ஆர்டரை கொண்டுவந்து கொடுத்தனர். விற்பனை அதிகரிக்கவில்லை என்று காரணம் காட்டியிருக்கி றார்கள்.
கடந்த 3 மாதங்களாக பால் கொள்முதலே அதிகரிக்கவில்லை. இதனால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட உப பொருட்களுக்கு பற்றாக் குறை ஏற்பட்டது. பொருளே இல்லாத நிலையில், விற்பனை எப்படி அதிகரிக்கும்? அதற்கு நான்தான் காரணமெனில் இந்த 3 மாதங்களில் ஒரு முறையாவது என்னிடம் கேள்வி கேட்டிருக்க வேண்டுமே? என்னை சஸ்பெண்ட் செய்யுமாறு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர், ஆவின் எம்.டி. சுப்பையனுக்கு அழுத்தம் தந்துள்ளார். அவர் என்னைப் பற்றி நல்லமுறையில் சொல்லி மறுத்தும்கூட, சஸ்பெண்ட் ஆர்டரை டைப் செய்துகொண்டு வந்து சுப்பையனை நேரில் சந்தித்து கையெழுத்து பெற்றுள்ளார் ஜவகர். நான் பணி செய்த எந்த இடத்திலும் டியூஸ் எதுவும் கிடையாது. எந்தக் குற்றமும் இல்லாதபோது என்னை தண்டித்திருப்பது அநியாயம்? சில உண்மைகளை நாகரிகம் கருதி பேசாமல் இருக்கிறேன். பேசினால் சிலரின் முகமூடிகள் கிழிந்துபோகும்'' என்கிறார் ஆவேசமாக.
ஆவின் விவகாரம் குறித்து துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகரிடம் நாம் பேசியபோது, "அரசு எடுத்த நடவடிக்கை சரியானது, மிக்க நன்றி! -இதுதான் என் பதில்'' என்று அலட்சியமாகக் கூறினார்.
"பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் ஜவகர் மீதும் இருக்கிறது. அவர் ஓய்வு பெறும்போது அவருக்கும் இதே நிலை ஏற்படும்' என்கிறார்கள் அரசு ஊழியர் சங்கத்தினர். கோட்டையில் இதுதான் ஹாட் டாபிக்.