மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆதிவீரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட தகவலுக்கு, தமிழில் பதிலளிக்க முடியாதென்றும், இந்தியில் கேட்க வேண்டுமென்றும் பதில் வந்ததால் அதிர்ச்சியாகி, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிவீரன், "மதுரை யைச் சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளிகளுக்கு மாதச் சம்பளமாக வெறும் 500 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு எதிராக எத்தனையோ முறை போராட்டம் நடத்தியும் விடிவு காலம் பிறக்காததால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மாவட்ட பொது சுகாதார மைய இயக்குநருக்கு, 'மதுரை மாவட்டத்தில் சுகாதார துப்புரவு பணியாளர்கள் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? சம்பளம் எவ்வளவு? அரசு தருகிறதா, இல்லை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரப்படுகிறதா?' என்று விபரம் கேட்டபோது, 97 பேர் பணியாற்றுவதாகவும், ஆர்.சி.ஹெச். என்ற தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல் வந்தது.
இந்த தகவல் முழுமையாக இல்லாததால், முழுவிபரமும் பெற விரும்பினேன். அனைத்து விபரங்களும் பெறுவதானால், தில்லியில் உள்ள ஒன்றிய பொது சுகாதார மைய ஆணையாளரிடம் தான் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றார்கள். அதன்படி விவரங்களை தமிழில் கேட்டனுப்பினேன். அவர்கள் அதற்கு இந்தியில் கடிதம் அனுப்பினார்கள். அது எனக்கு புரியாததால் 'இந்தி மொழி தெரியாது. என் தாய் மொழி தமிழ். எனவே எனக்கான தகவலை தமிழில் அனுப்பிவைக்கவும்' எனப் பதில் அனுப்பினேன். அங்கிருந்து சில வாரங்கள் கழித்து ஆங்கிலத்தில், 'உங்களுக்கான தகவல் வேண்டும் என்றால் இந்தி மொழியில் அனுப்பவும். இல்லை யென்றால் மற்றொரு வாய்ப்பாக ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே தகவல் கொடுக்கப்படும்' என்று பதில் வந்தது. இது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது
'அலுவல் மொழியாக 22 மொழிகளை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்துள்ளார்களே ஏன்? எங்களைப் போன்றோர் தாய் மொழியில் தகவலைக் கேட்கக்கூடாதா?' என்று மீண்டும் கடிதம் போட்ட தற்கு இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை. இப் படியான சூழலில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என வெளியிட்ட கருத்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து மொழிகளுக்குமான முக்கியத் துவத்தை வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன்''” என்றார். வெளிநாட்டு நிறு வனங்களேகூட, இந்தியாவுக்குள் தங்களை வளர்த் துக்கொள்ள, அனைத்து இந்திய மொழிகளுக்கும் மதிப்பளிக்கிறார்கள். அப்படியிருக்கையில், இந்திய அரசே மாநில மொழிகளைப் புறக்கணிப்பது வேதனையான செயலாகும். -
அண்ணல்