வதந்தி என்ன செய்துவிடும் என்று அலட்சியமாக இருந்துவிடமுடியாது. வதந்திக்கு வாயும் கொடுக்கும் முளைக்கும்போது, அது செய்யத் தகாதவற்றையெல்லாம் செய்யும். அதிகம் யோசிக்கத் தேவையில்லை. சமூக ஊடகங்களில் கலைஞரும் கவுண்டமணியும் சீரியஸ் என எத்தனை முறை தகவல் பரவி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நினைவுகூர்ந்தால் போதும்.
கடந்த சில மாதங்களில் மட்டும் வதந்தி காரணமான தாக்குதல்களில் பல பேர் காயமடைந்துள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்துள்ளது தம்புக்கொட்டான்பாறை கிராமம். அங்கு அத்திமூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு காரில் வழிகேட்டு வந்தனர் நான்கு பேர். அவர்கள் விசாரித்துவிட்டு அங்கே நின்ற குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்திருக்கின்றனர். இதைக் கவனித்த உள்ளூர் மக்கள் அவர்களை பிள்ளை பிடிக்கிறவர்களாகக் கருதி துரத்தத்தொடங்க, பயந்துபோன அவர்கள் தங்கள் காரில் ஏறி அந்த இடத்தை காலிசெய்திருக்கின்றனர்.
ஆனால் அவர்களது துரதிர்ஷ்டம் அத்தோடு நிற்கவில்லை. காரை ஓட்டிச் சென்றவர்களை குழந்தை கடத்துபவர்களாக நினைத்து ஊர்மக்கள் செல்போனில் தகவல்சொல்ல, நடுவிலேயே வழிமறித்தனர் பக்கத்து கிராம மக்கள். காரில் இருந்த 65 வயது ருக்குமணியையும், மலேசியாவிலிருந்து வந்த மோகன்குமார், சந்திரசேகரன், பழைய பல்லாவரம் வெங்கடேசன், கஜேந்திரன் ஆகியோரையும் இழுத்துப்போட்டு அடித்தனர்.
இந்தத் தாக்குதலில் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே ருக்குமணி உயிரிழக்க மோகன்குமார், சந்திரசேகரன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலின்போது, ருக்குமணி, கஜேந்திரன், மோகன்குமாரின் 40 சவரன் நகைகளும், மூன்றரை லட்சம் ரொக்கமும் காணாமல் போயுள்ளதாம். போளூர் காவல்துறை 8 பிரிவுகளின்கீழ் 67 பேர்மேல் வழக்குப் பதிவுசெய்து 23 பேரை கைதுசெய்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைதுசெய்துவருகிறது என்ற தகவல் பரவி, அத்திமூர், களியம், பணப்பாம்பட்டு, காமாட்சிபுரம், ஜம்பங்கிபுரம், திண்டிவனம், கணேசபுரம், தம்புக்கொட்டான்பாறை கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
நாம் தகவல் சேகரிக்கச் சென்றபோது சில வீடுகளில் மட்டுமே ஆட்கள் காணப்பட்டனர். அதிலும் ஆண்களைக் கண்ணில் பார்ப்பதே அரிதாக இருந்தது. அத்திமூரில் நாம் சந்தித்த அலமேலு, விஜயகுமாரி, ராஜகுமாரி மூவரும் பேசும்போது, “""குழந்தையை அங்க கடத்துனாங்க… இங்க கடத்துனாங்கனு ஒரு மாசமா ஊரெல்லாம் பேச்சா இருந்துச்சு. குழந்தை கடத்த வந்தவங்க தப்பிப்போறாங்கனு தகவல் வரவும் மடக்கிப் பிடிச்சு அடிச்சுருக்காங்க. பார்க்கிறவங்களை எல்லாம் "நீங்கதான அடிச்சவங்க'னு ஆண்-பெண் வித்தியாசமில்லாம கைது பண்றாங்க போலீஸார். அதனால நிறையபேர் ஊருக்குள்ள இல்லை''’என்கிறார்கள்.
ஜமீன்புரம் அமுதா, ""சாவுற அளவுக்கு ஒருத்தரை அடிக்கிறது தப்புதான். அடிபட்டவங்களுக்கும் கிராமத்துல இருக்கிறவங்களுக்கும் பரம்பரை தகராறு கிடையாது. டி.வி., வாட்ஸ்அப் தகவல்களால ஏற்கெனவே பதட்டத்துல இருந்தோம். சந்தேகத்துல அவங்கள அடிக்கிறப்போ சிலபேர் தடுத்திருக்காங்க. "உங்க பிள்ளைய கடத்தவந்தா நீங்க சும்மா இருப்பீங்களா?'னு அவங்களை விலகச் சொல்லிட்டு அடிச்சிருக்காங்க''’என்றார்.
வடமாநிலங்களை ஓரளவுக்கு அறிந்தவரும், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவருமான விநாயகம், ""பெண்களை மதிக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம். இங்கு வயதான ஒரு பெண்ணை அடித்துக்கொன்றிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவும்போது தடுக்கவேண்டியது காவல்துறையின் கடமை. முன்பு இதேபோல தவறான வதந்திகள் பரவியபோது, ஆட்டோக்களில் ஸ்பீக்கர்கள் கட்டி தேவையற்ற பயங்களைப் போக்கியிருக்கிறது காவல்துறை''’என்கிறார்.
""கடந்த வாரம் வடமாநிலத்தைச் சேர்ந்த 200 பேரைக் கொண்ட கடத்தல் கும்பல் ஒன்று வந்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 52 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். எனவே குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் பெற்றோர்களே''’என்ற தொனியில் சமீபமாக ஒரு வாட்ஸ் அப் தகவல் பரவியது. இதுபோல் விதவிதமாக வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் செய்திகள் பரவாத நாளில்லை. தகவல் தொழில்நுட்ப புரட்சியை, வெறும் வதந்தியும் புரளியும் பரப்பும் சாதனமாக மாற்றுவது பெரும் அவலம். அந்த அவலத்தின் விளைவுதான் கீழ்க்கண்ட நிழ்வுகள்:
கடந்த 6-ஆம் தேதி காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியில் திருவிழாவைக் காண வந்தனர் ஆந்திர கூலித்தொழிலாளிகளான அஷ்வித், ராம்கோபால். இருவரையும் குழந்தை கடத்தல் பேர்வழிகளென சந்தேகப்பட்ட ஊர்மக்கள், சரமாரியாக அடித்து நொறுக்கியதில் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரித்து, "அவர்கள் இந்தூரைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கட்டட வேலைக்கு வந்தவர்கள்' என அறிந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருக்கின்றனர்.
அன்று இரவே, காஞ்சிபுரம் லிங்கப்ப தெருவில் இரவு 9 மணியளவில் வலம்வந்த நபரை, சந்தேகம் காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதில் படுகாயமடைந்தார். போலீசார் அந்நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் அதே பகுதியிலுள்ள ஆலடித்தோப்பு காலனியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
பொன்னேரி தேவமாநகரில் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரேயுள்ள புதரில் குழந்தைக் கடத்தல் கும்பல் மறைந்துள்ளதாக நினைத்து, அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் உருட்டுக்கட்டையுடன் இரவெல்லாம் தேடினர். தேடியவர்கள் கிடைக்காத ஆத்திரத்தில் புதருக்கு மக்கள் தீவைத்துக் கொளுத்துவதை டி.எஸ்.பி. அலுவலக போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்தது இன்னும் கொடுமை.
கடந்த 9-ஆம் தேதியன்று பழவேற்காடு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஒருவரை, சந்தேகப்பட்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதில் அவர் சுருண்டுவிழுந்து உயிரிழக்க, அவரை பழவேற்காடு ஏரிப் பாலத்தில் கட்டித் தொங்கவிட்ட அவலமும் நடந்தது. தகவலறிந்து விரைந்துவந்த போலீஸ், அந்த மனநலம் பாதித்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்ததுடன் 13 பேரையும் கைதுசெய்தது.
வேலூரில் ஏப்ரல் 28-ஆம் தேதி, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை திருட வந்தவர் என நினைத்து தாக்கியதில் அவர் இறந்துபோனார். இந்த வழக்கில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரென நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபர், காவல்துறையால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஷயங்கள் விபரீதமான பரிமாணத்தை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, “""வீண்புரளியை பரப்புபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் புரளியை நம்பவேண்டாமென ஆட்டோவைத்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். பிட் நோட்டீஸ் கொடுத்துவருகிறோம். இதுபோன்ற சந்தேகத்துக்கிடமான தகவல்களை பற்றி தகவல் தெரிவிக்கவும் தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது''’என்கிறார்.
இத்தகைய தாக்குதல்களையும் உயிரிழப்புகளையும் தடுக்க, "சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினாலோ... சந்தேகத்துக்குரிய நபர்களைத் தாக்கினாலோ குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என காவல்துறை எச்சரிக்கைவிடுத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, குழந்தை கடத்தல் தொடர்பாக ஒரு வீடியோ வேகமாகப் பரவியது. செய்யாறு, பாரானூர், காஞ்சிபுரம் வேலியனூர் என வெவ்வேறு ஊர்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இந்திக்காரர்கள் ஐஸ் விற்பவர்கள் வேடத்தில் வந்து ஐஸ்பெட்டியில் குழந்தையைக் கடத்திச் செல்வதாகவும் அந்த வாட்ஸ் அப் வீடியோ கூறியது. வீடியோவில் சொன்னதுபோல் குழந்தைகள் எதுவும் கடத்தப்படவில்லை என அறிந்த போலீஸார், அதைப் பரப்பிய செய்யாறை அடுத்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவனை கைதுசெய்தது.
தவறான வதந்திகளைப் பரப்புபவர்களின் மூலத்தைக் கண்டறிந்து ஆரம்பத்திலேயே கைதுசெய்யலாமே என காவல்துறையைக் கேட்டால், சைபர் க்ரைம் போலீசார் தங்களது சிரமங்களைப் பட்டியலிடுகின்றனர். “""பெரும்பாலும் சர்வர்கள் வெளிநாடுகளில் இருக்கும். இதனால் என்கிரிப்டட் (குறியாக்கம்) செய்யப்பட்ட செய்திகளில், முதன்முதலில் இந்த செய்தியைப் பரப்பியது யாரென கண்டுபிடிப்பது கஷ்டம். ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை பரப்பியது யாரென கண்டுபிடிப்பது, வாட்ஸ்அப்பை ஒப்பிட எளிது. திருவண்ணாமலை வதந்தியில் வீரராகவனே தனது வீடியோவில் தோன்றி பேசியிருந்ததால் அவனைப் பிடிப்பது எளிதாக இருந்தது''’என்கிறார்கள் போலீசார்.
தீரவிசாரிக்காமல் செய்யப்படும் ஒரு லைக்கோ...… பார்வர்டோ...… ஷேரிங்கோ அப்பாவிகளின் உயிரை என்றென்றைக்குமாய் பறித்துவிடும் என்ற நினைவோடு சமூக ஊடகங்களைக் கையாளுங்கள்.
"உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்' என்பதே வாட்ஸ்அப் தகவல்களின் முழக்கமாக உள்ளது. உண்மையான தமிழர்கள் ஷேர் செய்யாதீர்கள் இத்தகைய வதந்திகளை!
-து.ராஜா, அரவிந்த்