சென்னை உள்ளிட்ட 4 மாவட் டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மக்களை மிகவும் முடக்கிப்போட்டுவிட்டது. கடு மையான மன உளைச்சல்களுக்கு ஆளாகினர் சென்னைவாசிகள். இது ஒருபுறமிருக்க, புயல், வெள்ளம் தாக்கிய முதல் 3 நாட்களில் மக்கள் அதிகம் அவதிப்பட்டது ஆவின் பால் கிடைக்காத சூழல்தான். ஆவின் பால் கிடைக்கவில்லை என்கிற குரல்களும் குற்றச்சாட்டுகளுமே அதிகம் எதிரொலித்தன.

ஆவின் பால் மக்களுக்கு தடையின்றிக் கிடைக்கவும், அனைத்து பகுதிகளுக்கும் பால் பாக்கெட்டுகள் சென்றதை உறுதிப் படுத்தவும் பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தூக்கமின்றி கடுமையாக உழைத்தபோதிலும், அவருக்கு இணையாக ஆவின் அதிகாரிகள் செயல்படாததே பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் என்கிறார்கள் ஆவின் பணியாளர்கள்.

மிகவும் சிக்கலான சூழலில் ஆவின் பால் ஏன் கிடைக்கவில்லை என்று பால்வளத்துறை அதிகாரிகள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, "ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினசரி 44 லட்சம் லிட்டராக இருந்தது. கடந்த சில மாதங்களாக அது 22 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதை ஆராய்ந்தால், அது ஒரு தனி ஸ்டோரி. அந்தளவுக்கு கான்ட்ராவெர்சியான மேட்டர்.

aa

Advertisment

தற்போது புயல், மழை, வெள்ளத்தில் ஆவின் பால் கிடைக்காமல் போனதற்கு ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ்., திட்டமிடல் துறையின் துணைப் பொதுமேலாளர் ராஜேஷ், இன்ஜினியரிங் பிரிவில் உள்ள ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர்தான்.

மிக்ஜாம் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பாகவே வானிலை மையம் எச்சரிக்கை செய்தது. அதற் கேற்ப அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளையும் எடுத்திருந்தது தி.மு.க. அரசு. அந்த வகையில், புயல் தாக்கத்தின்போது மக்களுக்கு பால் கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு வரக்கூடாது; ஆவின் பால் தடையின்றி கிடைப்பதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார் அமைச்சர் மனோதங்கராஜ். அப்படியிருந்தும், ஆவின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கம்போல் சமாளிக்கலாம் என்றே முடிவு செய்திருந்தனர்.

ஆனால், மழை கடுமையாக இருந்த நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட பாலை சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர், காக்களூர் ஆகிய 4 பால்பண்ணைகளிலும் பாக்கெட் அடித்து விநியோகிப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை அதிகாரிகள்.

குறிப்பாக, ஆவின் நிறுவனத்தில் உள்ள திட்டமிடல் பிரிவின் உயரதிகாரி ராஜேஷ் உள்ளிட்டவர்கள் அக்கறை காட்டவில்லை. திட்டமிடல் பிரிவுதான் புயல், மழை, வெள்ளம் போன்ற காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கையாக பல்வேறு யோசனைகளை தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த ஆலோசனையும் கொடுக்கவில்லை.

அதாவது, யூ.ஹெச்.டி டெக்னாலஜியை பயன்படுத்தும் சிஸ்டம் சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் இருக்கிறது. இந்த சிஸ்டத்தில் தயாரிக்கப்படும் பால் 90 நாட்கள் வரை கெட்டுப்போகாது. ஒரு நாளைக்கு 1 லட்சம் பால் பாக்கெட்களை தயாரிக்க முடியும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டது. இந்த சிஸ்டம் அமைக்கப்பட்டதில் நடந்த ஊழல் வேறு ரகம்.

தி.மு.க. ஆட்சி வந்ததும் இந்த யூ.ஹெச்.டி. சிஸ்டத்தை 5 கோடி ரூபாயில் புனரமைக்கப் பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த புயல் காலத்தில் அந்த சிஸ்டத்தை பயன்படுத்தி பால் பாக்கெட்டுகளை தயாரித்திருக்க வேண்டும். அந்த பால் பாக்கெட்டுகள் 90 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதால், கரண்ட் கட் செய்யப்பட்ட சூழலில், மக்களுக்கு இந்த பால் மிக உபயோகமாக இருந்திருக்கும். ஆனால், இதில் அக்கறை காட்டவில்லை ஆவின் அதிகாரிகள்.

இன்னும் சொல்லப்போனால், புயல் உருவாகி மழை பொழியத் தொடங்கிய முதல்நாளில் சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் யூ.ஹெச்.டி. சிஸ்டத்தில் தயாரிக்கப்பட்ட 13,000 பால் பாக்கெட்டுகள் இருந்தன. இதனை மக்களுக்கு விநியோகிக்கும் எண்ணம் கொஞ்சம் கூட ஆவின் அதிகாரிகளுக்கு வரவில்லை. அப்படி 13,000 பால் பாக்கெட்டுகள் இருப்பதையே அமைச்சர் மனோ தங்கராஜிடம் மறைத்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு பிறகுதான் அந்த பாக்கெட்டுகளை வெளியே கொண்டுவந்தனர்.

அதேபோல, பால் பற்றாக் குறை ஏற்படும் என முன்கூட்டியே கணித்து... சேலம், நாமக்கல், பெரம்பலுர், திருச்சி ஆகிய மாவட் டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்து சென்னைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த யோசனையும் அதிகாரிகளுக்கு இல்லை.

பிரச்சனை பூதாகரமான நிலையிலும் கூட இந்த மாவட்டங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்யும் யோசனைகூட வராமல், பெங்களூருக்குச் சென்று கர்நாடக அரசின் நந்தினி பாலை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து சென்னைக்கு கொண்டுவருவது குறித்தே அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினர். அதன்படியே கர்நாடகாவில் இருந்து 2.50 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.

ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ். உட்பட முக்கிய பதவிகளில் அனுபவமற்ற அதிகாரிகளே உட்கார்ந் திருக்கிறார்கள். இதில், வினீத்தும் திட்டமிடல் பிரிவின் ராஜேஷும் மலையாளிகள் என்பதால் அமைச்சர் சொல்வதை கேட்பதே இல்லை. சுருக்கமாக சொல்வதாயின், ஆவின் அதிகாரிகளின் அக்கறைமின்மையும் தவறான வழிகாட்டலும்தான் பிரச்சனைகளுக்கு அடிப்படை! அதிகாரிகளின் அலட்சியம்; அமைச்சருக்கு தலைவலியை ஏற்படுத்தியது என்று விரிவாக சுட்டிக் காட்டுகிறார்கள்.