"கப்பல்ல வேலைன்னு ஒரு பன்னி சொன்னான்' என்ற கவுண்டமணி காமடியைப் போன்று, ஆஸ்திரேலியாவில் விவசாயப் பணிக்காக வேலைக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறிக்கொண்டு ஆஸ்திரேலியன் விசாவுக்கு வசூல் வேட்டையில் இறங்கியுள்ள மோசடிக் கும்பலால் தமிழகத்தில் பெரும்சர்ச்சை கிளம்பியுள்ளது.

உண்மையிலேயே ஆஸ்திரேலியாவில் விவசாயத்திற்கு ஆட்கள் தேவை இருக்கிறதா எனப் பார்த்தோமானால், நிச்சயமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்ட காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த விவசாயப் பணியாளர்கள், அவரவர் நாட் டுக்குச் சென்றுவிட்ட காரணத்தால், இதற்கான தேவை அதிகரித்தது. இந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மற்ற நாடுகளிலிருந்து ஆட்களை எடுக்க ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்தது.

aa

Advertisment

மேலும் ஆட்கள் தேவைப்பட்டால் தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா போன்ற நாடு களிலிருந்து அழைக்கலாமென்று திட்டமிட்டது. ஆனாலும் அந்தத் திட்டத்தை ஆஸ்திரேலியா இதுநாள் வரையிலும் அறிவிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் அழைக்கலாம் என்பதையே, அதற்கான தேவை இருப்பதாகக் காட்டி, கனரக வாகன ஓட்டு னர்கள், மெக்கானிக், பிளம்பர், எலக்ட்ரீஷி யன், சமையல்காரர் எனப் பல பணியிடங் களுக்கு ஆட்களை அனுப்புவதாகக்கூறி, கோரோவிங் க்ளோபல் இமிக்கிரேஷன் என்ற நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

இந்தப் பணிகளுக்கு கல்வித்தகுதி எதுவும் கிடையாது. வயது 22 முதல் 54க்குள் இருக்கவேண் டும். மாத ஊதியமாக 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை கிடைக்கும். ஆஸ்திரேலியா விசாவிற்கான பதிவுக் கட்டணமாக 12 ஆயிரம் ரூபாயை முதலிலேயே கட்ட வேண்டும். விசா, விமானக் கட்டணம், உணவு, தங்குமிடம், மருத்துவம் உட்பட அனைத் தையும் இந்த நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இவர்கள் பணிக்குச் சென்றவுடன் மாத வருமானத் திலிருந்து 15 மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை லட்சத்தை இந்நிறுவனமே எடுத்துக் கொள்ளும் என்றெல்லாம் ரூல்ஸ் சொல்லியிருக் கிறார்கள். இந்நிறுவனம் சென்னை, கோவை, பெங்களூர் மற்றும் வட மாநிலத்திலும் செயல்படுவ தாகவும், ஹைதராபாத் தலைமையிடமென்றும் விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்நிறுவனம் செய்த விளம்பரத்தை நம்பி, சிறுகச் சிறுக சேமித்த 12 ஆயிரத்தை பலரும் கொடுத்து பெயரைப் பதிவுசெய்துள்ளனர். பின்னர் இவர்களை மெடிக்கல் செக்கப் என்று டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாவிற்கான மருத்துவப் பரிசோதனைக்கு சென்னையிலேயே அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யலாம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு டெல்லிக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளனர். இதை முடித்தவுடன் விசா 4 மாதத்திற்குள் கிடைத்துவிடும் என்று தெரிவித்து, அதற்கான விசா கிராண்ட் கொடுத்துள்ளனர். காலம் கடந்து விசா கேட்கச் சென்றால், போலியான விசா கொடுத்து, ஆஸ்திரேலியா விமான டிக்கெட் போடுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டச் சொல்வார்களாம். அப்படி கட்டியபிறகு, அவர்கள் சொல்லிய காலம் கடந்தும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லாமலே, ஏதேதோ காரணங் களைச் சொல்லி தட்டிக்கழித்து வந்துள்ளனர். பின்னர், அவர்களின் அலுவலகத்தை இடம் மாற்றிவிடுவார்களாம். அப்படியே கண்டுபிடித்துச் சென்றாலும் அவர்களிடம் பணத்தை வசூலித் தவர்கள் அங்கே இருக்க மாட்டார்களாம். இப்படியாக பலரிடமும் ஏமாற்றிவந்துள்ளனர்.

as

Advertisment

சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியில் பள்ளிச்சாலையில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் களுக்கு இந்த முகவரி தெரியுமென்பதால், தற்போது அண்ணாநகர் கிழக்குப் பகுதியில் பி.பிளாக் அல்சா ஆர்கேட் கட்டிடத்தில், மூன்றாவது தளத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாம் அங்கு சென்று, ஆஸ்திரேலியா விசாவுக்கு விண்ணப்பிக்க வந்ததாகக்கூறி பேச்சு கொடுத்தோம். முதலில் நம்முடைய விவரத்தையும், தொடர்பு எண்ணையும் ஒரு பதிவேட்டில் எழுதச் சொன்னார்கள். பின்னர், மேனேஜர் ரஸ்க் என்பவரிடம் நம்மை அனுப்பிவைத்தனர். ஏற்கெனவே இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படிப் பேசினாரோ, அதேபோன்று நம்மிடமும் அவர் பேசினார். நாமும் அதை அப்பாவியாகக் கேட்டுக் கொண்டதோடு, கிருஷ்ணகிரியில் இன்னும் சிலர் இந்தப் பணியில் சேர விரும்புவதாக சொல்லவும், "கிருஷ்ணகிரியில லூஷினா மேடம் இருக்காங்க. நீங்கள் அவங்களைப் பார்த்தால் பெங்களூர் டீமில் சேர்த்துவிடுவார்கள்'' என்றார். "நான் பணத்தை இப்போவே கட்டலாமா?'' என்றதும், "அது உங்க இஷ்டம்'' எனச் சொல்லி அனுப்பிவைத்தனர்.

ஆஸ்திரேலியா அரசாங்கம் 2018-ல் புதிய விசாவை அறிமுகப்படுத்தியது. அதில் துணைப்பிரிவாகத்தான் தற்காலிக விசாக்களின் மூலமாக, இவர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் இதன்படி அனுப்புவதற்கு, ஸ்பான்சர் செய்யக்கூடிய முதலாளியின் பரிந்துரை அவசியம். ஆனால் இதெல்லாம் செய்யாமல், போலி விசா ஏற்பாடு செய்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். ஏமாறுவோர் இருக்கும்வரை "வெற்றிக்கொடி கட்டு' படத்தில் வருவதுபோல் ஏமாற்று வேலைகளும் தொடர்ந்தபடியே இருக்கும்.