எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்களைக் குறிவைத்து கொள்ளை யடிக்கும் வட மாநில மேவாட் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவனை நாமக்கல் அருகே, காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் எஸ்.பி.ஐ. வங்கிக்குச் சொந்தமான மூன்று ஏ.டி.எம். மையங்களில், வட மாநில கும்பல் ஒன்று, செப்டம்பர் 27ஆம் தேதி அதிகாலையில், 67 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக்கொண்டு நாமக்கல் வழியாக தப்பிச்செல்வதாக அம்மாநில போலீசார் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் அளித்தனர்.
அந்த கும்பல், கொள்ளைக்குப் பயன்படுத் திய ஒரு சொகுசு காரை, ராஜஸ்தான் பதிவெண் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றதாகவும் தகவல் சொல்லப்படவே, மின்னல் வேகத்தில் களமிறங்கியது நாமக்கல் போலீஸ். மேலும், ஒட்டுமொத்த மேற்கு மண்டல போலீசாரையும் உஷார்படுத்தினார் சேலம் சரக டி.ஐ.ஜி. உமா.
எஸ்.பி. தலைமையிலான போலீசார், குமாரபாளையம் வெப்படை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த கன்டெய்னர் லாரியொன்று, போலீசாரை கண்டதும் வேகமெடுத்து, சாலை யோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்கள், கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதையடுத்து, சினிமாவில் வருவதுபோல ரோந்து ஜீப், கார், மோட்டார் சைக்கிள்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கன் டெய்னர் லாரியை போலீசார் துரத்திச்சென்று, சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். லாரியை ஓட்டி வந்தவர் ஹரியானாவின் பல்வால் மாவட்டம், மேவாட் பகுதியைச் சேர்ந்த ஜூமான் என்பது தெரியவந்தது. கன்டெய்னர் லாரியை வெப்ப டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
வழியில், தோப்புக்காடு என்ற ஆள்நட மாட்டமில்லாத காட்டுப் பகுதியில் கன் டெய்னர் சென்றபோது, கன்டெய்னருக்குள்ளி ருந்து யாரோ தட்டும் சத்தம் கேட்டது. டிரைவர் ஜூமானை அழைத்து கன்டெய்னரை திறக்கச் செய்தபோது, கன்டெய்னருக்குள் 6 பேர் இருந்த தோடு, கொள்ளையடிக்கப் பயன்படுத்திய பதிவெண் இல்லாத வெள்ளை நிற ஹூண்டாய் கிரெடா காரும் இருந்ததைக்கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
கொள்ளையர்களில் ஒருவன் திடீரென்று குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியை இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு, பெரிய டிராவல் பேக்குடன் "ஜூமான் நீயும் தப்பி ஓடிவிடு...' என்று கத்தியபடியே தப்பியோடி னான். அதேபோல் ஜூமானும் தப்பியோட, போலீசார் துரத்தியோடினர். அப்போது ஓர் ஓடையருகே ஜூமான் வழுக்கி விழ, அவனை மடக்கிப்பிடித்த எஸ்.ஐ. ரஞ்சித்தை தாக்க முயன்றான். அதையடுத்து பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர் தவமணி ஜூமானை துப்பாக்கி யால் சுட, அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.
பணப்பையுடன் முன்னால் ஓடிச்சென்ற அஸ்ரூ என்கிற அஸாருதீன், இன்ஸ்பெக்டரை நோக்கி கல்லால் தாக்கினான். அப்போது அவனையும் இன்ஸ்பெக்டர் இரண்டு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் அவனுடைய இரண்டு கால்களிலும் குண்டடிபட்டு காயம் ஏற்பட்டது. அஸாருதீனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. இருவரும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கன்டெய்னர் லாரிக்குள் இருந்த கொள்ளையர்கள் இர்பான், சபீர், சவ்ஹீன்கான், முபாரக் அத், முகமது இக்ரம் ஆகிய 5 பேரை யும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிரா வல் பேக்கில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக் கள் இருந்தன. திருச்சூரில் ஏ.டி.எம்.களில் கொள் ளையடித்த 67 லட்சம் ரூபாயும் அதில் இருந்தது தெரியவந்தது. கன்டெய்னர் லாரிக்குள் கார் மட்டுமின்றி, திருச்சூரில் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்ட ஏ.டி.எம். இயந்திரங்களும் இருந் தன. அவற்றையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
பிடிபட்ட மேவாட் கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தில் நூதனமாக டெக்னிக்கை பின்பற்றி வந்துள்ளனர். அதாவது, கொள்ளைச் சம்பவத்திற்குச் செல்லும் போதும், ஆள்நடமாட்டத்தைக் கண் காணிப்பதற்கும் சொகுசு காரை பயன்படுத்தி வந்துள்ளனர். அதேபோல், காரியத்தை முடித்துவிட்டு தப்பிச்செல்வதற்காக ஒரு கன்டெய்னர் லாரியை பயன்படுத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் பென்ஷன் என லோடிங் தொகை அதிகமாக இருக்கும் என்பதால் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களை டார்கெட் செய்துள்ளனர். கூகுள் மேப் மூலம் எங்கெங்கு எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்து கொள்ளையடித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் காவல்துறையினரை கலங்கடித்த வேளையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமெண்ட் ஆலை ஒன்றின் குடியிருப்பில் நடந்த கொள் ளைச் சம்பவத்தில் தொடர்புடைய பவாரியா கொள்ளையர்களை, அப்போது அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா, ராஜஸ்தானுக்கு தனிப்படையை அனுப்பிப் பிடித்துவந்தார். அதன்பிறகுதான் பவாரியா என்ற கொள்ளை கும்பல் இருப்பதே தெரியவந்தது. அதேபோலத்தான் தற்போது தமிழக காவல்துறையிடம் வசமாகச் சிக்கியிருக் கிறார்கள் ஹரியானாவைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள். பவாரியா கொள்ளைக் கும்பல், தனியாக இருக்கும் வீடுகள் மற்றும் குவாட்டர்ஸ்களில் தைரியமாகப் புகுந்து கொள்ளையடிப்பதில் வல்லவர்கள். அதேபோல, ஹரியானாவைச் சேர்ந்த மேவாட் கொள்ளை யர்களோ ஏ.டி.எம். மிஷின்களைக் குறி வைத்து கொள்ளையடிப்பதில் திறமைமிக்கவர்கள் எனக் கூறுகிறார்கள் காவல்துறையினர்.
கடந்த 2021ஆம் ஆண்டு இதே கேரளாவில் கண்ணூர் மாவட் டத்தில் கன்னியாசேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட கள்ளியாச் சேரி என்ற ஊரில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்கள் கேஸ் கட்டர்களைக் கொண்டு வெட்டப்பட்டு அதிலிருந்த ரூபாய் மொத்தமும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை புலன்விசாரணை செய்த காவல்துறையினர் ஏ.டி.எம். இருந்த பகுதிகளில் ஒரு கார் நிற்பதையும் அதன்பின்னர் சம்பந்தமே இல்லாமல் கன்னியாச்சேரியில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று கர்நாடகா மாநிலத்திற்குள் புகுவதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அந்த கன்டெய்னர் லாரி சென்ற வழிகளை கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து, டெல்லிவரை சென்று அந்த கன்டெய்னரை கைப்பற்றி, கொள்ளையர்களை கைது செய்ததோடு, கன்டெய்னரில் பதுக்கப்பட்டிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். அப்போது, கண்ணூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த இளங்கோ என்ற ஐ.பி.எஸ். அதிகாரி.
தற்போது, திருச்சூர் மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையையும் துப்பு துலக்கி, இதிலும் கேஸ்கட்டர், கார் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்து, "ஒருவேளை அவர் கள் கண்டெய்னரில் தப்பிச் சென்றிருக்கலாமோ?' என்ற சந்தேகத்தை விதைத்ததும் அதே இளங்கோ ஐ.பி.எஸ்.தான்.
ஏற்கெனவே கண்ணூர் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்துவிட்டு கர்நாடகா வழியாக அவர்கள் தப்பிச்சென்றது போல இம்முறை திருச்சூரில் கொள்ளையடித்தவர்கள், கிருஷ்ண கிரி, ஈரோடு, சேலம் அல்லது நாமக்கல் வழியா கக் கர்நாடகாவிற்குள் நுழைந்து டெல்லிக்கு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாக தமிழகக் காவல் துறைக்கு அலர்ட் கொடுக்க, அதேபோல கொள் ளையர்கள் சிக்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து திருச்சூர் மாவட்ட காவல்துறை ஆணையர் இளங்கோ ஐ.பி.எஸ். நம்மிடம் கூறுகையில், "ஹரியானாவைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள், ஏ.டி.எம்.களை உடைப்பதற்காக முழுப்பயிற்சியும் எடுத்த பின்னரே இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காகவே, காலாவதியான பழைய ஏ.டி.எம். இயந்திரங்களை உடைக் கும் இடங்களிலிருந்து வாங்கிவந்து, எந்த இடத்தில் வெல்டிங் மூலம் கட் பண்ணினால் பணத்தை வெளியில் எடுக்க முடியுமென்பது, ஒரு ட்ரெய்னிங் சென்டரை போலவே கற்றுத்தரும் இடங்கள் ஹரியானா வில் இருப்பதாக தெரியவருகிறது. தவிர, நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். செயல்பாடுகள் குறித்தும் இவர்கள் அறிந்துள்ளனர்.
இதில், ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களில் பணம் குறையக் குறைய உடனுக்குடன் நிரப்பு வதால்தான் அந்த ஏ.டி.எம்.களைக் குறிவைக் கிறார்கள். பொதுவாக, ஏ.டி.எம். இயந்திரங் களை எவரேனும் உடைக்க முயன்றால் 10 நிமிடங்களில் அலாரம் அடிக்கத் தொடங்கி விடும். ஆனால் திருச்சூரில் சம்பந்தப்பட்ட ஏ.டி. எம்.களில் 20 நிமிடங்களுக்கு பிறகே அலாரம் அடித்திருக்கிறது. அதனால்தான் அதற்குள் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இந்த கொள்ளையின் பின்னணியில் இருப் பவர்கள் குறித்தும் விசாரித்துவரு கிறோம்'' என்றார்.
-துரை.மகேஷ், இளையராஜா