விவசாய நிலங்களுக்கு மத்தியில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை குதறிப்போட்டது மாதிரி 20 அடி ஆழத்திற்கு குறைவில்லாமல் மணல் எடுக்கப்பட்டு கிடப்பது அதிர்ச்சி யளிக்கிறது என்றால், அந்த மணல் குவாரியில் இருந்து வயற்காட்டு பாதை அமைக்கப்பட்டு மூங்கில்குடிக்கும், ஆனைக்குப்பத்திற்கும் இடையே ஓடும் விளப்பாற்றிற்கு நடுவே ஒன்றரை கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

mm

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து, காவிரி காப்பாளர் பட்டத்தையும் சூட்டிக் கொண்ட எடப்பாடி ஆட்சியில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம் கிராமத்தில் தான் இந்த அடாவடி அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

dd

Advertisment

மணல்குவாரிக்கு அருகில் விவசாய பணியில் இருந்தவரிடம் அதுகுறித்து விசாரித்தபோது, ""நன்னி லம் ஒன்றிய சேர்மனின் கணவரும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான ராம.குணசேகரன் ஆனைக்குப்பத்தின் முன்னாள் கவுன்சிலர் ஒருவரின் உதவியோடு இங்குள்ள பெருமுதலாளிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கினார். விவசாயத்துக்குன்னு நினைச்சோம். ஆனால், பொன்னா விளையுற நிலத்தை மணல் குவாரியாக மாற்றி விட்டார். இப்போ 20 ஏக்கருக்கு குறைவில்லாமல் நாசமாய் போய் கிடக்குது.

குவாரிக்காக அரசாங்க நிதியில் ஆற்றுக்கு நடுவில் பிரமாண்டமான பாலம் போட்டிருக்காங்க. மக்கள் பயன்பாடே இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய பாலத்தை அமைக்க அதிகாரிகளும், அமைச்சர் காமராஜும் உடந்தையாக இருந்தது தான் வேதனையாக இருக்கிறது'' என்கிறார்.

கிராம காவலர் முத்தையனோ, ""ஆரம்பத்திலேயே நாங்கள் ஒன்றுகூடி எதிர்த்தோம், அமைச்சரோட குவாரின்னு அ.தி.மு.க.காரவுங்க போராட்டத்தை முடக்கிட்டாங்க. இப்போ புதுசா பாலமும் போட்டுட்டாங்க. அந்த பாலத்தின் வடக்கு முனைப்பகுதியே மணல் குவாரிக்காக போடப்பட்ட சாலையில்தான் இருக்குது. வேறுசாலையே இல்லை'' என்கிறார்.

Advertisment

""ராம. குணசேகரன், ஆறுவருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் ஐ.ஒ.பி வங்கி மாடியில் வாடகைக்கு இருந்தார். ஆனால் இன்றைக்கு வேற லெவல். 200 கோடிக்கு குறைவில்லாத சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். சொத்தில் பெரும்பகுதி ஆனைக்குப்பம் மணல்குவாரி மூலமாகவே சம்பாத்தித்தார்'' என்கிறார் நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர்.

அமைச்சர் காமராஜ், ராம.குண சேகரனுக்கு முழு சப்போர்ட்டாக இருப்பதால், அவரை அ.தி.மு.க.வினரும் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மக்களும் போராடிப் போராடி ஓய்ந்து போய் விட்டனர். மணல் சீசனில் மணல் கொள்ளை அடிப்பார், மற்ற நாட்களில் சவுடு மண் குவாரி என்கிற பெயரில் வண்டல்மண், களி மண்ணை அள்ளி விற்பார். அமைச்சர் காமராஜுக்கு 20 சதவிகிதம் கமிஷன் போவதால் அவர் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் குவாரிக்கு தடையில்லாமல் மூங்கில் குடியை கடந்துசெல்லும் ஆற்றின் குறுக்கே பாலம்கட்டி கொடுத்துள்ளார். நன்னிலம் தொகுதியில் எத்தனையோ கிராமங்கள் பாலம் வசதியில்லாமல் போராடி வருகின்றனர். ஆனால் மணல் குவாரிக்காகவே அரசு நிதியில் பாலம் அமைத்துள்ளனர்''’என்கிறார் மாவட்ட ஆட்சியரகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர்.

mm

மக்கள் பயன்பாடே இல்லாத இடத்தில் பாலம் தேவையா? என பொதுப்பணித்துறை ஏ.இ. அன்பு ராஜிடம் நாம் கேட்டதற்கு, ""ஆனைக்குப்பத்திற்கு வயற்காட்டு பாதையாக மூங்கில்குடி, ஓமங்குளம் மக்கள் செல்வதற்காகவே இந்த பாலத்தை அமைத்தோம். அமைச்சர் சொன்னார். அதனால் நாங்கள் பாலம் அமைத்தோம்''’ என்கிறார்.

ராம,குணசேகரனோ, ""மூங்கில்குடி, ஆனைக்குப்பம் மக்கள் பிரதான சாலைக்கோ, மருத்துவமனைகளுக்கோ போக சுற்றிவர வேண்டியிருந்தது. அதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும்தான் அந்த பாலம் போட்டுள்ளோம்'' என்கிறார். அதுமட்டுமா, ""எனக்கு வேண்டாதவர்கள் ஆயிரம் சொல்லுவாங்க, அதெல்லாம் உண்மையாகிவிடுமா?'' என்று கேட்கிறார்.

உண்மையை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தப் பாலம்.

-க.செல்வகுமார்