டைபெற்ற பாராளுமன்றத் தேர் தலில் கூட்டணி பலத்துடன் தி.மு.க. சுலபமாக வெற்றி பெற்றுவிட்டது. அதே போன்று 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற, தி.மு.க. தலைமை வேகம்காட்டி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி எப்படி அமையுமென்ற கேள்விக்குறி ஒரு பக்கமென்றால், தி.மு.க. கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எழுந்துள்ள சலசலப்பும் இன்னொரு பக்கம் கூட்டணி குறித்த கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனைகள், சாராயச்சாவுகள், விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை சரிசெய்ய, மக்களின் நன்மைக்காக இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, கட்சிக்காரர்கள் மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்கு கட்சியினர் மத்தியில் ஒற்றுமையும், வலுவும் தேவை.

cc

எனவே மாவட்ட அளவில் நிர்வாகிகளிடையே நிலவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கென, கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரோடு அமெரிக்காவிலிருந்தபடியே சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த ஒருங்கிணைப்புக் குழுவினர், கட்சியிலுள்ள அனைத்து அணிகளின் நிர்வாகிகளையும் அழைத்து கருத்துக்களைக் கேட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

Advertisment

அதன்படி, மாவட்டம்தோறும் பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் தீவிர மாக நடத்தி வருகிறார்கள். இது எந்த அளவுக்கு வலிமையை உருவாக்கும்? புதிய மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படுமா? எனப் பல்வேறு கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் எழும்பியுள்ளன. உதாரணமாக, கடலூர் மாவட்ட தி.மு.க.வில் என்ன நடக்குமென்று இம்மாவட்ட தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பாகப் பலவும் பேசப்படுகின்றன.

கலைஞர் இருக்கும்போது ஒரு மாவட் டத்திற்கு இரண்டு மாவட்டச் செயலாளர்கள் என்றிருப்பதை மூன்று என எண்ணிக்கையில் உயர்த்த முடிவெடுத்தார். ஆனால் நடை முறைப்படுத்த காலதாமதமாகும் சூழலில், அ.தி.மு.க.வில் இதேபாணியில், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்ற கணக்கில் மாவட்டச் செயலாளர்களை உருவாக்கியுள்ளது. தி.மு.க.விலும் கலைஞர் எடுத்த முடிவைச் செயல்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் தற்போது கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு கட்சி ரீதியாக கிழக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மேற்கு மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் மாவட்டச் செயலாளராக உள்ளனர். இந்த இருவரிடமும் உள்ள தொகுதிகளை நிரவல் செய்து, புதிய மாவட்டச் செயலாளர்கள் உருவாக்கப்படலாமென உறுதியாகக் கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.

Advertisment

அதன்படி நெய்வேலி, பண்ருட்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் நெய்வேலி சிட்டிங் எம்.எல்.ஏ. சபா. ராஜேந்திரன் மாவட்டச் செயலாளராகவும், கடலூர், புவனகிரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடலூர் சிட்டிங். எம்.எல்.ஏ. ஐயப்பன் மாவட்டச் செயலாளராகவும் உருவாக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர். புவனகிரி, சிதம்பரம் தொகுதிகளைப் பிரித்து அதற்கு எக்ஸ் எம்.எல்.ஏ. துரை சரவணனை மாவட்டச் செயலாளராக நியமிக்குமாறு அவரது ஆதரவாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். கடலூர் மாநகராட்சித் தேர்தலின்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோர் இரு அணிகளாகப் பிரிந்து மேயரை உருவாக்க முயன்றனர். எம்.ஆர்.கே. தற்போதைய கடலூர் நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை மேயராகக் கட்சித்தலைமை மூலம் அறிவிக்கச் செய்தார். இவரை எதிர்த்து மாவட்ட பொருளாளர் குணசேகரன் மனைவி கீதா போட்டியிட்டார். மேயரைத் தேர்ந்தெடுக்கும் கவுன்சிலர்கள் பலரை ஐயப்பன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, மேயர் தேர்தல் பரபரப்பானது. ஒரு வழியாக சுந்தரி வெற்றி பெற்றார். இதன் காரணமாகக் கட்சித் தலைமை எம்.எல்.ஏ. ஐயப்பனை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து வைத்திருந்தது. பிறகு அதை ரத்து செய்தது.

இந்த நிலையில், கட்சித் தலைமை யின் அறிவுறுத்தல் காரணமாக தற்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், எம்.எல்.ஏ. ஐயப்பனும் நெருக்கமாகிவிட்டனர். அனைத்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து சென்று கலந்துகொள்கின்றனர். உதாரணமாக, மகளிர் குழுவினருக்கு கடலூரில் கடன் வழங்கும் அரசு விழாவில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் என்ற முறையில் சி.வி.கணேசனும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீரின் விசுவாசியான மாநகர கவுன் சிலர்களில் ஒருவர், டிப்பர் லாரிகள் முதலாளி பிரகாஷ். இவர் அமைச்சரின் பிறந்தநாளன்று பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் நலத் திட்ட உதவிகளை வழங்கி தனி வேகத்தைக் காட்டிவருகிறார்.

பிரிக்கப்படும் மாவட்டச் செயலாளர் பதவி பிரகாஷுக்கு கிடைக்கும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இருந்தும் ஐயப்பன் தரப்புக்கு சபரீசன் வரை வலிமையான தொடர்பு உள்ளதென்றும், அதனால் ஐயப்பன் தான் மாவட்டச் செயலாளர் என்றும் பேச்சு உள்ளது. இப்படியான பஞ்சாயத்துக்களை மீறி கட்சியை கரைசேர்ப்பது தான் சவாலான ஒன்று!