திருவாரூருக்கு அழகிய தேர் கொடுத்த கலைஞருக்கு, திருவாரூரில் கோட்டம் அமைத்து விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் தி.மு.க.வினரும், தயாளு அம்மாள் அறக்கட்டளையினரும்,.
மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் மிகப்பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் நினைவிடத்திற்கு அருகாமையில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு, அங்கு கலைஞரின் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா கண்டிருக்கிறது.
தேர் வடிவில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தின் உள்ளே நுழைந்ததும் ஹாலில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கோட்டத்தின் வாயிலில் நின்று பார்த்தாலே தெரியும்வகையில் அமைக்கப் பட்டிருக்கிறது. 7 அடியில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மேல் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட பளிங்குக் கற்களால் கலைஞர் அமர்ந்து பேனா பிடித்து எழுதுவதுபோன்ற சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் தளத்தில் முத்துவேலர் நூலகம், கலைஞரின் நினைவுகளைப் போற்றும் பழைய புத்தகங்கள், கலைஞரின் இளமைக் கால அரசியல், பொதுவாழ்வுப் பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார், அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களோடு கலைஞர் ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கலைஞர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விழாவுக்கு தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டா லின் தலைமை தாங்கினார். கோட்டத்தை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்துவைப்பதாக ஏற்பாடு. திடீரென அவரது உடல் நலக்குறைவினால் விழாவிற்கு வரமுடியாமல் போனதால், சிறப்பு விருந்தினராக பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அம்மாநில நீர்வளத்துறை மந்திரி சஞ்சய் குமார் ஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கலைஞர் கோட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரி செல்வியும் திறந்துவைத்தனர். தொடர்ந்து கலைஞரின் சிலையையும் அவர்களே திறந்துவைத்தபின், கலைஞர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை அனைவரும் பார்வையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் இருக்கையில் அமர்ந்து, மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருடன் தேஜஸ்வி யாதவ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் அங்குள்ள முத்துவேலர் நூலகத்தை திறந்துவைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து, கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமண அரங்கத்தை திறந்துவைத்து, நான்கு ஜோடிகளுக்கு திருமணமும் செய்துவைத்து மகிழ்ந்தனர்.
விழா சரியாக காலை பத்து மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் தொடங்கியது. அதன்பின்னர் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடந்தது. தொடர்ந்து பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது தலைவர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பின்னர் கலைமாமணி மாலதி லக்ஷ்மண் குழுவினர் பாட்டரங்கமும் அரங்கத்தை அதிரவிட்டது.
கவிஞர் வைரமுத்துவின் கவியரங்கத்தில் பா. விஜய் பேசுகையில். "அனைவருக்கும் திருஷ்டி விழுந்தால் துர்க்கையம்மன் கோவிலுக்குச் செல்வார்கள். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு துர்காவே மனைவியாக வந்ததால் எந்த திருஷ்டியும் அவருக்கு இல்லை'' என்றதும் முதலமைச்சர் முகம்மலர்ந்து சிரித்தார்.
கவிஞர் வைரமுத்துவோ, "கலைஞரின் இந்த நூற்றாண்டு விழாவில் சொல்லும் செய்தி தமிழர்கள் சாதியாகப் பிரியாமல் தமிழால் ஒன்றுபட வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டவேண்டும். தமிழன் கண்டறிந்த பெயருக்கு உலகம் பெயர் சூட்டட்டும்'' என்றார்.
முத்துவேலர் நூலகத்தைத் திறந்துவைத்துப் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், "சமூக நீதிக்கான நமது வருங்கால போராட்டங் களுக்கு கலைஞரின் கொள்கைகளும், வழிகாட்டுதல் களும், அவர் கடைப்பிடித்த சமூக நீதியும், சமத்துவமும், அவர் கடைப்பிடித்த கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவதும் மிக அவசியம். திராவிடக் கருத்துக்களை நிலைநிறுத்திய தில் முக்கிய தலைவராக விளங்கியவர் கலைஞர். அவரின் கொள்கைகளும், சிந்தனைகளும் இன்றைய காலத்தில் அவசியமாக இருப்பதை நினைவுகூரவே இங்கு நாம் கூடியிருக்கிறோம். கலைஞரின் சிந்தனைகளும், கருத்தியலும் அடுத்தடுத்த தலைமுறையிடம் செல்வாக்கு பெற்றுவருகிறது. சமூக நீதியை காப்பதில் முதன்மையானவராக இருந்தவர் கலைஞர். கலைஞரின் ஆட்சி முறை தேசிய அளவில் பின்பற்றப்படுகிறது'' என்றார்.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினோ, "வான் புகழ் கொண்ட வள்ளுவருக்கு தலை நகரில் கோட்டம் கண்ட கலைஞருக்கு, திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழை நாடு இதுவல்லவே! என்று 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் கலைஞர் போர்ப் பரணி பாடி ஓடிவந்தாரோ, அதே திருவாரூர் வீதியில் அவருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவை கலைஞர் முதன்முதலில் சந்தித்ததும் திருவாரூரில் தான். தலைவராக பிற்காலத்தில் ஆனவர் அல்ல கலைஞர், தலைவராகவே பிறந்தவர்தான் கலைஞர். அதற்கு அடித்தளமிட்டது இந்த திருவாரூர் மண்'' என்றவர்...
"மேலும் ‘’என்னைப் பொறுத்தவரை இது கலைஞர் கோட்டம் மட்டுமல்ல, என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே இதை கருதுகிறேன். கலைஞரை எனது தாயார் திருமணம் செய்துகொண்டதும் இதே திருவாரூர்'' மண்ணில்தான்.
தான் பிறந்த திருக்குவளையை காதலித்தார். தான் வாழ்ந்த இல்லத்தில், தாயார் அஞ்சுகம் பெயரில் படிப்பகம், தந்தை முத்துவேல் பெயரில் நூலகம் அமைத்தார். பள்ளி மேற்படிப்பு படிக்க திருவாரூர் வந்தார். எத்தனையோ தொகுதிகளில் அவர் போட்டியிட்டாலும் இறுதியாக வந்துநின்ற இடம் திருவாரூர். இரண்டு முறை இங்கு அவர் வென்றுள்ளார். தேர் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிலைகொள்ளும் என்பதுபோல கலைஞரும், கலைஞரின் பயணமும் இருந்தது. அதனாலேயே இந்த கோட்டம் இங்கு கம்பீரமாக எழுப்பப் பட்டுள்ளது'' என்றவர், அரசியல் பக்கம் திரும்பி, "பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகாலமாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தொடங்கிவைக்க இருக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன்.
இந்திய ஜனநாயகத்தைக் காக்கவேண்டிய நெருக்கடியான நேரத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் பழமை வாய்ந்த தமிழ்நாடு இல்லாமல் போய் விடும். மீண்டும் பா.ஜ.க.வை ஆள அனுமதிக்கக் கூடாது. அது தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டின் எதிர்காலத்துக்கும் கேடாய் முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வெற்றி பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும். திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுவதும் அரசியல் எதிர் காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவோம், 40-ம் நமதே நாடும் நமதே'' என்று பேசிமுடித்தார்
திருவாரூர் மக்களோ, "கலைஞரை வளர்த்த இந்த மண்ணுக்கு வான்புகழைத் தேடிக்கொடுத்துள் ளார். திருவாரூர் தேர் அழகு என்பார்கள், எங்களைப் பொருத்தவரை தேரைக் கொடுத்த கலைஞரே அழகு என்போம். இருக்கும்போது திருவாரூர் மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்து நன்மை செய்தார் கலைஞர். அவர் மறைந்தபிறகு அவரது கோட்டத்தில் ஏழைகள் குறைந்த வாடகையில் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பளித்துள்ளார். சாதாரணமாக திருவாரூரில் 1000 பேர் அமரும் மண்டபத்திற்கு 2 லட்சம் வாடகை, ஆனால் கலைஞர் கோட்டத்திலுள்ள அஞ்சுகம், தயாளு அம்மாள் மண்டபத்திற்கு வெறும் 40 ஆயிரம்தான் வாடகை. அவர் மறக்கமுடியாதவர், எங்களோடு வாழ்கிறார்'' என்று பூரித்துப் போனார்கள்.