(32) நெஞ்சு பொறுக்குதில்லையே...!
தமிழ்நாட்டுல "அச்சுக்கு எவ்வளவு சக்தி உண்டோ... அதே அளவு எச்சிலுக்கும் உண்டு'னு தெரிஞ்சுக்கிட்டேன்.
"இசைஞானி' இளையராஜாவுக்கு "பத்ம விபூஷன்' விருது கொடுத்தது சம்பந்தமா என்னோட வீடியோ சமூக வலைத்தளத்துல வைரல் ஆகியிருப்பத பார்த்திருப்பீங்க.
சம்பந்தப்பட்ட பத்திரிகை அப்படி செய்தி போட்டதுக்காக வருந்தியிருக்காங்க. அதனால... அதை விட்ருவோம்.
ஆனா... எனக்கு ஏன் அவ்வளவு கோபம்கிறத இங்க நான் சொல்றேன்.
பொதுவா என்னோட தலைமுறையச் சேர்ந்தவங்களுக்கு இளையராஜாவோட இசை வெறும் பாடல்கள் கிடையாது. அது தாலாட்டு. பிறக்கும்போதே ராஜாவோட பாட்ட கேட்டு பிறந்து, எழுந்து, வாழ்ந்துகிட்டிருக்க தலைமுறையச் சேர்ந்தவள் நான்.
அம்மாவையும், சாமியையும் சாதிப்பேர் சொல்லிச் சொன்னா... என்ன கோபம் வருமோ... அதே தார்மீக கோபம்தான் எனக்கும் வந்தது.
ராஜா சார்ங்கிறத தாண்டி இதுல இன்னொரு விஷயம் அடங்கியிருக்கு. யாரோட வெற்றியையும் உள்நோக்கத்தோட.. சாதிய வச்சுப் பேசுறதுங்கிறது ஒரு தேசிய வியாதியா இருக்கு.
"சாதியப்பத்தி பேசக்கூடாது'னு சட்டம்போட்ட பிறகு இன்னும் அதிகமா இங்க சாதியம் "நீறு பூத்த நெருப்பா' வெளிய தெரியாம ஒரு பிசாசா உலவிக்கிட்டிருக்கு. "இருட்டு நேரத்துலதான் பிசாசெல்லாம் வெளிய வரும்'னு சொல்வாங்க. மக்களோட மனம் இன்னும் இருண்டு கிடக்குனு நினைவுபடுத்துற மாதிரித்தான் தமிழ்நாட்டுல அடிக்கடி சாதிக் கொடுமை அரங்கேறுது.
நடக்கிற சாதிக் கொடுமைகளைத்தாண்டி, வாழ்க்கை முறையே இன்னும் ஒரு சமத்துவத்தையே எட்டாத நிலைல இருக்கு தமிழகம்... இத்தனை வருஷங்கள் கழிச்சும். சுதந்திரம் வாங்கி 73 வருஷங்கள் ஆகிப்போச்சு. 69-வது குடியரசு தினத்தையும் பிரமாதமா கொண்டாடி முடிச்சாச்சு. ஒரு பக்கம் இந்தியாவோட வலிமைய பறைசாற்றி கொண்டாடிக்கிட்டிருக்கும்போது, தினசரி நம்மள பீடிச்சுக்கிட்டிருக்க சாதி அநீதிகளுக்கு இன்னும் நிரந்தரமான ஒரு தீர்வும் கண்டபாடில்ல.
ஒரு கதை சொல்றேன்...
ராஜரிஷியான விசுவாமித்திரர் தன்னோட தவ வலிமையால.. மகரிஷியா மாறிடுவார். அதுக்கும் அடுத்தகட்டமான ‘பிரம்மரிஷியா’ மட்டும் அவரால மாறவே முடியாது.
ஏன்னா... அவருக்கே தெரியாம அவருக்குள்ள இருக்கிற அந்த சாதி வயரிங்... சாதி துவேஷம். எல்லா மனுஷங்களையும் மனுஷங்களா பார்க்காம... அவருக்கே தெரியாம... பிரிவினையா பார்த்தாரு.
"பிரம்மரிஷி' பட்டம் பெற துடிச்சுக்கிட்டிருந்த விசுவாமித்திரர்கிட்ட... ""அதோ... அந்த பாலைவனத்தைக் கடந்துபோனா... அங்க ஒரு சிவலிங்கம் இருக்கும். அதை தரிசனம் செஞ்சா... பிரம்மரிஷி பட்டத்த பெற முடியும்''னு ஒரு ரகசியத்த சொன்னாங்க.
காடு, மலை, மேடு சுத்தி பழக்கப்பட்ட விசுவாமித்திரர்... அந்த லிங்கத்தை தரிசிக்க பயணப்பட்டார்.
கண்ணுக்கு எட்டின மட்டும் மணல். சுட்டெரிக்கிற வெயில். தாகத்துல தவிச்சாரு.
""ஆண்டவா... எனக்கு இப்படி நா வறளுதே... என் உசுர காப்பாத்தவாவது எனக்கு ஒரு சொட்டு தண்ணி கொடுக்கக்கூடாதா?''னு இறைஞ்சின நேரம்... எதிர ஒரு புலையன் தன்னோட செல்ல நாய்க்குட்டியோட வந்தான். அவன் கையில ஒரு தோல்பை. அதுல குடிக்க நீர் இருக்கு.
விசுவாமித்திரரைப் பார்த்ததும்... ""அய்யா... ரொம்ப தாகத்துல இருக்கீங்க போலருக்கு. தண்ணி குடிக்கிறீங்களா?''னு கேட்டான்.
"போயும் போயும் ஒரு புலையன்கிட்ட தண்ணி வாங்கிக் குடிக்கிறதா?'னு தயங்கினார். ஆனா... வெய்யிலோட தாக்கம் தாங்காம... வேற வழி இல்லேன்னு தெரிஞ்சதும் புலையன்கிட்ட தண்ணி வாங்கிக் குடிச்சார். அப்பத்தான் அவருக்கு போய்க்கிட்டிருந்த உசுரு திரும்ப வந்துச்சு.
தாகம் தீர்ந்ததும்... ""அய்யா... நீங்க யாருனு தெரியல. ஆனா... என்னோட தாகத்த தீர்த்து உசுரக் காப்பாத்தின நீங்க எனக்கு கடவுளாத்தான் தெரியிறீங்க''னு சொன்னார்.
விசுவாமித்திரர் அப்படிச் சொன்ன கணநேரத்துல... அந்த புலையன் மறைஞ்சு... கடவுள் நின்னாரு.
இப்படிப்போகும் அந்தக் கதை.
இந்த கதையோட நோக்கமே... "கடவுளுக்கு சாதி இல்ல... மனிதர்களால உருவாக்கப்பட்டதுதான் இந்த சாதி...'ங்கிற கருத்தை முன்வைக்குது. விஸ்வாமித்திரருக்கு ஞானத்தை தந்த கதை இதுனு சொல்வாங்க. ஒவ்வொரு மனிதன்லயும் கடவுளைப் பார்க்கணும்கிறது கதையோட சித்தாந்தம்.
விசுவாமித்திரர் அந்த சித்தாந்தத்த உணர்ந்த பிறகுதான் அவருக்கு மிக உயர்வான "பிரம்மரிஷி' பட்டம் கிடைச்சதா சொல்வாங்க.
தமிழ்நாட்டுல சாதிய ஒழிக்க சட்டங்கள்கூட தேவையில்ல. பாடத் திட்டங்கள்ல சில விஷயங்கள சேர்த்தாலே போதும். ஔவையாரையும், பாரதியையும், உலகப் பொதுமறையான திருக்குறளையும் படிச்சாலே... சாதிங்கிற சமாச்சாரத்த சுலபமா விலக்கி வைக்கிற ஒரு பக்குவம் நமக்கு கிடைச்சிடும். ...
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
-இப்படி அன்னைக்கே ஔவையார் சொல்லிட்டுப் போய்ட்டாங்க.
சாதிங்கிறது பிறப்புல இல்ல. நீதி வழுவாம இருக்கிறவங்க மேலானவங்க. பொய், புரட்டு, ஊழல், பண்றவங்க கீழ்த்தனமானவங்க.
சாதி ரெண்டுதான். ஒண்ணு கொடுக்குற சாதி,
இன்னொண்ணு... கொடுக்காம பதுக்கிற சாதி.
இந்த வகையில பார்த்தா இன்னிக்கி தமிழ்நாட்டுல... மேல் சாதி அதிகமா? கீழ் சாதி அதிகமா? நீங்களே சொல்லுங்க?
"கையும் களவுமா பிடிபட்டான்'னு தமிழ்ல ஒரு சொல் வழக்கு இருக்கு. இதையே ஆங்கிலத்துல ஸ்ரீஹன்ஞ்ட்ற் ழ்ங்க் ட்ஹய்க்ங்க்... அதாவது... "கை சிவந்திருக்கும்போதே பிடிபட்டுட்டதா' அர்த்தம். அந்தக் காலத்துல பாதுகாப்பு வேலிகளுக்கெல்லாம் சிவப்புச் சாயம் பூசியிருப்பாங்களாம். அந்த வேலிகள பிரிச்சுக்கிட்டுப்போய் திருடும்போது... அந்தச் சிவப்புச் சாயம் அவன் கைல ஒட்டிருக்கிறதோட பிடிபடுவானாம். அது ரத்தக் கறையாவும் இருக்கலாம்... தடயமாவும் இருக்கலாம்.
இதுகூட இப்ப நம்ம தமிழ்நாட்டுக்கு பொருத்தம்தான். "கொடுத்து சிவந்த கை'னு ஒரு காலத்துல சொல்லுவாங்க. இப்பல்லாம் "எடுத்து சிவந்த கை'களத்தானே பார்க்குறோம். அப்ப... ஸ்ரீஹன்ஞ்ட்ற் ழ்ங்க் ட்ஹய்க்ங்க்-தானே.
"சாதிகள ஒழிக்கணும்'னு பேசுற அதே வாயால... அரசியலுக்காக சாதிய ஊதி ஊதி வளர்த்துவிடுற ஒரு சூழல்ல... நமக்கெல்லாம் சாதிங்கிறது வயரிங்லயே இருக்க சூழல்ல... அடுத்த தலைமுறையாவது "சாதின்னா என்னப்பா? அப்படின்னா என்னம்மா?'னு கேட்கிற குழந்தைகளை வளர்க்கணும். முடியுமா? பேப்பர்ல சாதியப்பத்திப் போட்டா துப்புற எனக்கு... "சாதி சர்டிபிகேட்ட கொண்டுவா'னு கேட்கிறவன துப்புற தைரியம் வருமா? இந்தக் கேள்விய என்னையே கேட்டுக்கிறேன். எனக்கு அதுக்கு பதில் தெரியல.
எந்த தயக்கமும் இல்லாம "கண்டிப்பா'னு நான் சொல்லணும். அது எனக்கு வரணும். ஆனா வரல. ஏன்னா... சின்ன வயசிலருந்து சாதிய ஊட்டி வளர்த்த சமுதாயத்துல நானும் வளர்ந்திருக்கேன். "ஒருவேளை... சாதிய மறுத்திட்டா... நமக்கு என்ன பிரச்சினை வருமோ?'னு பயப்படுற ஒரு குடிமகளா வளர்ந்திருக்கேன். ஆனாலும் எனக்கு கோபம் வருது. இந்த கோபத்த எனக்கு ஊட்டியதும் பாரதிதான்.
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்'னு பெரியவங்கள நினைச்சு குமுறிக் குமுறி எழுதினவரு... தன்னோட முழு நம்பிக்கையவும் குழந்தைங்க மேல வச்சாரு. "மாற்றம்னு ஒண்ணு வரணும்னா... அது குழந்தைங்ககிட்டருந்து வரணும்'னு நினைச்சு...
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
....
உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!.
-இப்படிச் சொல்லீருக்கார் பாரதியார்.
நம்மளப் பிடிச்ச சாதிப்பேய் நம்மோட போகட்டும். அடுத்த தலைமுறையை தமிழர்களாக மட்டும் வளர்ப்போம்.
சமத்துவத் தமிழகம் என்கிற கனவு மெய்ப்பட வேண்டும்.
ஒரு அந்தணன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்.
அப்படித்தான் இளையராஜாவின் செயல் இருந்தது...
(இதுபற்றி வரும் இதழிலேயே எழுதுகிறேன்...)