(41) ராமருக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழகம்!

மிழ்நாட்டுல இப்ப காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விவகாரம், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம்... சமீபத்துல தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்... இப்படி எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டு பரபரப்பா பேசப்படுது... ராமராஜ்ய ரத யாத்திரை.

விஸ்வ இந்து பரிஷித் அமைப்பின் ஆதரவோடு... "ஸ்ரீ ராமதாஸா மிஷன் யுனிவர்ஸல் சொஸைட்டி' இந்த ரத யாத்திரையை கடந்த பிப்ரவரியில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்து தொடங்கியது. "அயோத்தி முதல் ராமேஸ்வரம் வந்து மீண்டும் அயோத்தியை அடைவதுதான் ரத யாத்திரையின் பயணத்திட்டம்'னு இந்து ஆதரவு கட்சிகள் சொல்லுது. ஆனா... "இந்த பயணத் திட்டத்துக்குப் பின்னாடி... வேற பல திட்டமும் இருக்கு'னு தமிழக அரசியல்வாதிகள் சொல்றாங்க.

kasthuri

Advertisment

"ரத யாத்திரை... ரத யாத்திரை'னு பேச்சு என்னவோ பெரிசா இருந்தாலும்... சுதந்திர தினம், குடியரசு தினங்கள்ல... அரசோட திட்டங்களை விளக்கி அலங்கார வேன்கள் ஊர்வலம் நடக்குமே... அந்த மாதிரி ஒரு "டேப்லோ வேன்'’எனச் சொல்லப்படுற ஒரு அலங்கரிக்கப்பட்ட வேன் சுத்தி வருது. அதுதான் ரதம்.

அஞ்சு மாநிலங்களக் கடந்து... கேரளா தாண்டி தமிழ்நாட்டுக்குள்ள செங்கோட்டை வழியா ரதம் உள்ள நுழைஞ்சதும்... இந்த ரத யாத்திரைக்கி தமிழ்நாட்டுல பயங்கர எதிர்ப்பு. சட்டசபையே ஸ்தம்பிக்கிற அளவுக்கு கூச்சல் வெளிநடப்பு. தமிழகம் முழுக்க ஆங்காங்கே சாலை மறியல்.

Advertisment

தமிழ்நாட்டுல இருக்க முக்கியமான பிரச்சினைகளைத் தாண்டி ஒரு டேப்லோ வேன் வர்றதுதான் மிகப்பெரிய பிரச்சினையா ஆயிருச்சா?.

"இது பெரியார் மண்ணு'னு சொல்லி ரத யாத்திரைக்கு எதிரா போராட்டம் செஞ்சு நிறையப் பேர் அரெஸ்ட் ஆகியிருக்காங்க.

ஒரு மாபெரும் போராட்டம், ரயில் மறியல்... இப்படியான விஷயங்களுக்காக... சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி... தடை உத்தரவு போடலாம் போலீஸ். ஆனா... ஒரு வேன் வர்றதுல என்ன சட்டம்-ஒழுங்கு கெடும்னு 144 தடை உத்தரவு போட்டாங்க?

இதை என்னால ஆதரிக்க முடியாது. இந்த வேனை எதிர்க்கிறவங்களையும் என்னால ஆதரிக்க முடியாது.

நான் அமெரிக்காவுல கலிஃபோர்னியா மாகாணம் சான்ஃபிரான்ஸ்கோ நகரத்துல ரொம்பநாள் வசிச்சேன். அந்த நகரத்துல வருஷாவருஷம் அமெரிக்காவில் வசிக்கிற ஓரின சேர்க்கையாளர்கள் திரண்டுவந்து மிகப்பிரமாண்டமான பேரணி நடத்துவாங்க. அவங்களோட உரிமைக்குரல ஓங்கி ஒலிக்கச் செய்வாங்க அந்த பரேடுல. அந்தப் பேரணி நடக்கிற நாள்ல... சான்ஃபிரான்ஸ்கோ நகரமே இயங்காது. எங்க பார்த்தாலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஊர்வலம்தான் இருக்கும். பேரணியில் கலந்துக்க வர்ற ஜனத்திரளோட... பேரணியை வேடிக்கை பார்க்க வர்ற மக்கள் கூட்டமும் பெரிசா இருக்கும்.

"எங்களோட பொதுவான நம்பிக்கைக்கு, மத நம்பிக்கைக்கு, அரசியல் கொள்கைக்கு, மக்களின் இயற்கையான வாழ்வியல் முறைக்கு விரோதமா இருக்கு'னு சொல்லி அந்த பேரணிய அரசாங்கம் தடுக்கிறதில்ல. ஓரினச் சேர்க்கையாளர்களும், தங்களோட உரிமையை நிலைநாட்ட... சட்டம் அனுமதிச்சிருக்கு. அதனாலதான்... அந்தப் பெரும் பேரணி நடக்க... அரசாங்கம் எல்லா ஏற்பாடுகளையும் செய்துதருவதோட... போலீஸ் பாதுகாப்பையும் தருது. கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் மதிக்கிற நடவடிக்கை அது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் அதை பாதுகாக்குது.

kasthuri

நம்ம இந்திய அரசியல் சாசனத்த எழுதின அம்பேத்கர்... அமெரிக்காவைவிட சிறப்பாவே கருத்துரிமைகளை வகுத்திருக்கார். ஒவ்வொருத்தரோட வழிபாட்டு முறைக்கும் மதிப்பளிச்சிருக்கார்.

"இந்திய குடிமக்களாகிய நாங்கள் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாக இந்தியாவை அமைத்து, அனைத்துப் பிரஜைகளுக்கும் உறுதி கொடுப்பது என்னவென்றால்...

நீதி -சமூக, பொருளாதார, அரசியல் நீதி

சுதந்திரம் -சிந்தனை, கருத்து, நம்பிக்கை, மதம், வழிபாடு முதலிய சுதந்திரம்.

சமத்துவம் -அந்தஸ்து, வாய்ப்பு அனைவருக்குமான சமத்துவம்.

சகோதரத்துவம் -தேசத்தில் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், தனிமனிதரின் மரியாதையையும் போற்றும் வகையில் சகோதரத்துவம்.'

இதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் சாராம்சம்.

ஒருத்தரோட வழிபாட்டு முறை இன்னொருத்தருக்கு பிடிக்கலைங்கிறதுக்காக எதிர்க்கக்கூடாது.

தமிழக அரசும், காவல்துறையும் ‘ரதயாத்திரையை அனுமதிச்ச விஷயத்துல... சட்டத்துக்கு உட்பட்டு தங்களோட கடமையைத்தான் செஞ்சிருக்காங்க.

ஆனா... ரதத்த... அட... அந்த வேனை தமிழ்நாட்டுக்குள்ள அனுமதிச்சது ஏதோ தமிழகத்துக்கே தலைகுனிவு ஏற்பட்டுட்ட மாதிரி அரசியல் பண்றாங்க.

பெரியாரை மதிக்கிற தமிழ் மண்... ... பெரியார் உயிரினும் மேலாக மதித்த தனிமனித சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்கணும்.

இந்த ராமராஜ்ய ரத யாத்திரை தமிழ்நாட்டுக்குள்ள நுழைஞ்ச அதேநாளன்னைக்கித்தான்... திருப்பதி தேவஸ்தானத்துலருந்து ஒரு ரதம் தமிழ்நாட்டுக்குள்ள வந்திட்டுப் போயிருக்கு. அத கண்டுக்க ஆளில்ல.

"அதென்னய்யா இந்தியாவுல வேற எங்கயும் இல்லாத எதிர்ப்பும் முட்டுக்கட்டையும் தமிழ்நாட்டுல

மட்டும் இருக்கு?'ன்னு விஷ்வ இந்து பரிஷத் ஆளுங்க கேட்கிறாங்க.

உங்களுக்குத் தெரியுமா... அந்த ஒரிஜினல் ராமருக்கே முட்டுக்கட்ட போட்ட கதை இங்க நடந்திருக்கு. அதுதான் தமிழ் மண்ணோட புராண மகிமை... வரலாறு.

வாங்க... அந்தக் கதையைச் சொல்றேன்...

கோயம்பேடுன்னதுமே எல்லாருக்கும்... பெரிய பஸ் ஸ்டாண்ட்டும், காய்கறி மார்க்கெட்டும் சட்டுனு நினைவுக்கு வரும். சென்னை நகரத்த தமிழ்நாட்டோட மற்ற பகுதிகளோடவும், மற்ற மாநிலங்களோடவும் லிங்க்பண்ற கோயம்பேட்டுக்கு புராணத்துலயும் ஒரு லிங்க் இருக்கு.

அயோத்தியில ராமர் தன்னோட ராஜ்ஜியத்த விரிவுபடுத்த அசுவமேத யாகம் செஞ்சார்.

பொதுவா அரசன் ஒருவன், தன்னோட ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தணும்னு நினைச்சா... அக்கம்பக்க நாடுகள குறிவச்சு... ஒவ்வொரு நாட்டின் மேலேயும் போர்தொடுத்து... ஜெயிச்சு... அந்த நாட்டை தன்னோட ஆளுகைக்கு உட்பட்ட நாடாக்கிவிடுவான். இந்த முறைக்குப் பதிலாக... கையாளப்படுவதுதான் அசுவமேத யாகம்.

அசுவமேத யாகம்னா என்ன?

ஒரு அழகான, கம்பீரமான குதிரைக்கு பட்டம் கட்டி... அந்த குதிரையை ஒரு சிறு படையோடு அனுப்பி வைப்பார்கள். அந்தக் குதிரை பல பகுதிகளைச் சுற்றிவரும். அந்தக் குதிரையின் கால் பட்ட இடமெல்லாம் அந்த குதிரையை அனுப்பிய அரசனுக்குச் சொந்தம். தங்களோட நாட்டுல கால் பதிக்கிற அந்தக் குதிரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத ராஜாக்கள்... "நாங்களும் அந்தப் பேரரசின் கீழ் இருக்கச் சம்மதம்'’என தெரிவிப்பாங்க. எதிர்ப்புத் தெரிவிச்சு... குதிரையை கட்டிப்போட்ட ராஜாக்களோட... குதிரையின் பின்னாடி வரும் படை மோதும். அதில் அந்த ராஜா ஜெயிச்சிட்டா... அவனே தொடர்ந்து அந்த நாட்டை ஆளலாம். சண்டைல தோத்துட்டா... அவனோட நாடும் குதிரையை அனுப்பிய அரசனுக்குச் சொந்தம். அந்தக் குதிரை கால்போன போக்கில் சுற்றிவிட்டு... மறுபடி புறப்பட்ட இடத்திற்கே வரும்வரை யாகம் நடக்கும். குதிரை வந்தபிறகு... யாகம் முடிந்து... அந்தக் குதிரையின் கால்பட்ட பிற நாடுகள் கணக்கெடுக்கப்பட்டு... ராஜ்ஜியத்துடன் இணைக்கப்படும்.

குதிரையை அனுப்பிவிட்டு இந்த யாகத்தை செய்துக்கிட்டிருந்தார் ராமர்.

தென்னிந்தியாவுக்குள் நுழைந்த ராமனின் குதிரை... கோயம்பேடு ஏரியாவுக்குள்ளயும் நுழைஞ்சது. இரட்டையர்களான இரண்டு சிறுவர்கள் அந்தக் குதிரையை கட்டி வைத்துவிட்டார்கள். பின்னால் வந்த ராமரின் தம்பியான லட்சுமணனின் தலைமையிலான குழு... சண்டையில் இறங்கியது. வில் வித்தையில் தேர்ச்சிபெற்ற சிறுவர்கள் இருவரும்.... லட்சுமணனை தோற்கடிக்கப்போற நேரத்தில் வால்மீகி பதறி வந்து ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணினார்.

ராமாயணத்தை எழுதின வால்மீகி முனிவரோட ஆசிரமம் கோயம்பேடு பகுதியிலதான் இருந்திருக்கு. "எவனோ சொன்னான்'னு சீத மேல சந்தேகப்பட்டு... கர்ப்பிணியான மனைவி சீதையை ராமன் விலக்கி வச்சப்போ... வால்மீகியோட ஆசிரமத்துலதான் சீதை தங்கியிருந்தாங்களாம். ராமர்-சீதை தம்பதியோட லவன்-குசன் இரட்டைக் குழந்தைகள், இந்த ஆசிரமத்துலதான் பிறந்தது. ஞானக் கல்வியும், போர்க்கலையையும் கத்துக்கிட்டு அந்த குழந்தைங்க வளர்ந்திருக்கு.

""இவங்க ரெண்டு பேரும் ராமனோட பிள்ளைங்க. லவனும், குசனும்''னு லட்சுமணன்கிட்ட வால்மீகி எடுத்துச் சொன்னதோட... ""குழந்தைகளா நீங்க எதிர்த்து சண்டபோட்டது உங்க சித்தப்பாகூட.. நீங்க தடுத்து நிறுத்துனது உங்க அப்பாவோட சக்தியத்தான்'' எனச் சொன்னாராம்.’’

ராமருக்கும் தகவல் பறக்க... வியப்பு, மகிழ்ச்சி... ஆனந்தக் கண்ணீரோடு... ராமரும், சீதையும், குழந்தைகளும் இணைந்தது... சுபமான க்ளைமாக்ஸ்.

அப்பாவின் படையுடன் சித்தப்பா போருக்கு வந்திருப்பது தெரியாமல்... சித்தப்பாவோடு மோதியதால்... லவ-குசாவுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷ நிவர்த்தியாக... சிவனுக்கு கோவில் எழுப்பினார்கள். லவ-குசாவால் உருவானதுதான்... இப்போதும் கோயம்பேட்டில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோவில். (குறுங்காலீஸ்வரர் என்கிற பெயர்க் காரணத்திற்கு வேறு கதை உண்டு.)

ஆக... புராண காலத்துலயே... தமிழ்நாட்டில் ராமரை எதிர்த்த வரலாறு இருக்கு. அப்பவே ராமர் பாச்சா தமிழ்நாட்டுல பலிக்கல.

அயோத்தி ராமர் படையையே மறிச்ச தமிழ்நாட்டுக்கு... அரசியல் ராமரோட தேர் எம்மாத்திரம்?

ராம ராஜ்ஜியம்!

ராமராஜ்யத்த மறுபடி இந்தியாவில் நிறுவுறதுதான் இந்த ரத யாத்திரையோட நோக்கமாம்.

ராமராஜ்யம் எப்படி இருந்தது? புராணம் என்ன சொல்லுது?

ராமராஜ்யம் 11 ஆயிரம் வருஷங்கள் நடந்துச்சாம். ராஜ்யத்துக்கு உட்பட்ட மக்கள் மிகுந்த ஆரோக்கியமாவும், ரொம்ப சந்தோஷமாவும் வாழ்ந்தாங்களாம். ராஜ்ஜியத்துல எந்த போரும் நடக்கலையாம்... ராஜ்ய நிர்வாகத்துல எந்த தவறும் நடக்கலையாம். எந்தவிதமான இயற்கைச் சீற்றமும் நடக்கலையாம். அரசர் ராமர், அறவழியிலயே ஆட்சி பரிபாலனம் செஞ்சாராம். ஏன்னா... எல்லா ராஜாக்களும் வாலண்டரியா வந்து ராமரோட தலைமையை ஏத்துக்கிட்டாங்களாம். இப்படி ஒரு ராஜ்ஜியம் இருந்தது உண்மையாயிருக்கட்டும்... இல்ல... பொய்யா இருக்கட்டும். இந்த மாதிரி பிரச்சினைகளே இல்லாத, நோய் பீடிக்காத ஒரு ஆட்சிய நம்மால கற்பனையாவது பண்ணிப்பார்க்க முடியுமா? ரதம் விடுற புண்ணியவான்களே... இந்த மாதிரியான ஒரு ராமராஜ்யத்த... இந்த நாடு முழுக்க வேணாம்... ஒரே ஒரு ஊர்ல பண்ணிக்காட்டுங்க பார்ப்போம். அதுக்கப்புறம் நீங்க தேரே விடவேணாம். நல்ல ஆட்சி தர்றவங்கள... மக்களே வலிய வந்து போற்றுவாங்க.