(55) எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ஆர்.!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், என் அப்பாவுக்கும் இடையே கொள்கை முரண், கருத்து முரண் இருந்திருக்கலாம். ஆனால்.. "தம்பி ராமச்சந்திரா'’என்று அப்பாவும், ‘"அண்ணே'’என எம்.ஜி.ஆரும் சகோதர பாசத்துடன் அழைத்துக்கொள்வார்கள். அப்பாவுக்கு எம்.ஜி.ஆரின் நடிப்பை ரொம்பப் பிடிக்கும். "ராமச்சந்திரன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துறவன்' என அப்பா சொல்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.
எங்கப்பாவுக்கு ஈஸ்னோபீலியா இருந்தது. தண்ணீரில் நனைந்தாலே மூச்சுவிட சிரமப்படுவார். இருந்தும் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டதால் "நல்லவன் வாழ்வான்'’படத்தில் எம்.ஜி.ஆருடன் க்ளைமாக்ஸில் அண்டர் வாட்டர் ஃபைட்' ஸீனில் நடித்ததால் அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது.
"நம்மால்தானே ராதாண்ணனுக்கு உடம்பு முடியாமல் போனது'’என வருத்தப்பட்ட புரட்சித்தலைவர்... கிட்டத்தட்ட அப்பா உடல்நலமில்லாமல் வீட்டில் படுத்திருந்த ஒருவாரமும் தினசரி காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து... கட்டிலில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்தபடி... தரையில் சம்மணமிட்டு அமர்ந்து... தியானத்தில் ஈடுபடுவதுபோல... அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த ஒரு வாரமும்... ஷூட்டிங்கை கேன்ஸல் செய்துவிட்டு... அப்பாவைப் பார்க்க வந்தாரென்றால்... அப்பாவின் மீது புரட்சித்தலைவருக்கு இருந்த அபிமானம் வார்த்தைகளால் சொல்ல முடியாததுதான்.
நான் நடிகர் திலகம் சிவாஜியப்பாவின் தீவிர ரசிகன் என்ற போதிலும்... ஆக்ஷன் ஹீரோவான எம்.ஜி.ஆர். படங்களையும் விரும்பிப் பார்ப்பேன்.
அந்த ஆக்ஷன் ஹீரோ... தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து தியானிப்பது... சிறுவர்களாக இருந்த எனக்கும், என் சகோதரிகளுக்கும் வியப்ப
(55) எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ஆர்.!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், என் அப்பாவுக்கும் இடையே கொள்கை முரண், கருத்து முரண் இருந்திருக்கலாம். ஆனால்.. "தம்பி ராமச்சந்திரா'’என்று அப்பாவும், ‘"அண்ணே'’என எம்.ஜி.ஆரும் சகோதர பாசத்துடன் அழைத்துக்கொள்வார்கள். அப்பாவுக்கு எம்.ஜி.ஆரின் நடிப்பை ரொம்பப் பிடிக்கும். "ராமச்சந்திரன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துறவன்' என அப்பா சொல்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.
எங்கப்பாவுக்கு ஈஸ்னோபீலியா இருந்தது. தண்ணீரில் நனைந்தாலே மூச்சுவிட சிரமப்படுவார். இருந்தும் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டதால் "நல்லவன் வாழ்வான்'’படத்தில் எம்.ஜி.ஆருடன் க்ளைமாக்ஸில் அண்டர் வாட்டர் ஃபைட்' ஸீனில் நடித்ததால் அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது.
"நம்மால்தானே ராதாண்ணனுக்கு உடம்பு முடியாமல் போனது'’என வருத்தப்பட்ட புரட்சித்தலைவர்... கிட்டத்தட்ட அப்பா உடல்நலமில்லாமல் வீட்டில் படுத்திருந்த ஒருவாரமும் தினசரி காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து... கட்டிலில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்தபடி... தரையில் சம்மணமிட்டு அமர்ந்து... தியானத்தில் ஈடுபடுவதுபோல... அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த ஒரு வாரமும்... ஷூட்டிங்கை கேன்ஸல் செய்துவிட்டு... அப்பாவைப் பார்க்க வந்தாரென்றால்... அப்பாவின் மீது புரட்சித்தலைவருக்கு இருந்த அபிமானம் வார்த்தைகளால் சொல்ல முடியாததுதான்.
நான் நடிகர் திலகம் சிவாஜியப்பாவின் தீவிர ரசிகன் என்ற போதிலும்... ஆக்ஷன் ஹீரோவான எம்.ஜி.ஆர். படங்களையும் விரும்பிப் பார்ப்பேன்.
அந்த ஆக்ஷன் ஹீரோ... தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து தியானிப்பது... சிறுவர்களாக இருந்த எனக்கும், என் சகோதரிகளுக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அந்தச் சமயம்தான்... ""ஏண்ணே... நீங்க திருச்சிய உங்களோட ஹெட்குவாட்ரஸா வச்சிருந்தீங்க?''’என புரட்சித்தலைவர் கேட்க... “"திருவள்ளூருக்கும், கன்னியாகுமரிக்கும் நடுவே... தமிழகத்தின் மையமாக இருக்கிற ஊர் திருச்சி'’’ என என் அப்பா சொன்னதும்... பின்னாளில் புரட்சித்தலைவர் முதல்வரானதும்... தமிழக தலைநகராக திருச்சியை மாற்ற முயற்சித்து... சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போனதும்... குறிப்பிடத்தக்கது.
நாடகக்குழுவில் புரட்சித்தலைவர் சிறுவனாக இருந்த காலகட்டத்திலிருந்தே... என் அப்பாவின் மீது அவருக்கு மிகுந்த அபிமானம் இருந்துள்ளது.
என் அப்பாவுக்கு தியாகராஜர் கீர்த்தனைகளில் சுமார் இருநூறு கீர்த்தனைகள் மனப்பாடமாகத் தெரியும். அதை ராகத்துடன் பாடவும் தெரியும். ஆனாலும்... அந்தக்காலத்து நாடகங்களில் வசனத்தில் காட்சியை நகர்த்துவதைவிட... எதற்கெடுத்தாலும் பாடும் முறை இருந்தது. ஆரம்பகால தமிழ் சினிமா படங்களில் ஒரு படத்தில் 50-60 பாடல்கள்கூட இடம் பெற்றதுண்டு. இந்த பாணி அப்பாவுக்கு பிடிக்காததால்தான்... தனது நாடகங்களில் ஓரிரு பாடல்களைத் தவிர... அதிகமாக பாடல்கள் வைக்கக்கூடாது என்பதாலும்தான்... தனது பாட்டுத் திறனை பூட்டி வைத்துக்கொண்டார் என் அப்பா. வீட்டில் உலாவும்போது... தனக்குப் பிடித்த "கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ'’ பாடலை சத்தமாகப் பாடுவார். முரட்டுக் குரலில் அப்பா பாடுவதைக் கேட்டு நாங்கள் சிரிப்போம்.
என் அப்பாவின் பாடல் பற்றி புரட்சித்தலைவரும் சொல்லியிருக்கிறார்....
மதுரை "ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி' நாடகக்குழுவில்... எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்... "வேறொரு கம்பெனியிலிருந்து நம்ம கம்பெனிக்கு ஒரு நடிகர் வரப்போறார்'’என நாடக நிர்வாகிகள் சொல்ல... "அது யாராக இருக்கும்?'’என்கிற ஆர்வத்தில் எம்.ஜி.ஆரும், அவரின் சக நாடகப் பையன்களும் பரபரப்பாகவும், ஆர்வமாகவும் பேசிக்கொண்டார்களாம்.
அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஒருநாள் பாய்ஸ் கம்பெனிக்கு வந்திருக்கிறார் என் அப்பா.
தலை நிறைய முடி, கழுத்தில் மப்ளர், கோட், வேட்டி, செருப்பு, பயமற்ற வேக நடை, உரக்கப் பேச சங்கோஜப்படாமல் வாய்விட்டுச் சிரித்து அளவளாவும் தன்மை... இவைகளைப் போன்ற நடைமுறைகளைக் கொண்ட... அந்த நடிகர் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கம்பெனி வீட்டை கலகலப்பாக்கிக்கொண்டிருந்தார். "அவர்தான் "நடிகவேள்' எம்.ஆர்.ராதா அண்ணன் அவர்கள்'’எனச் சொல்லியிருக்கும் புரட்சித்தலைவர்... "அலி பாதுஷா'’என்கிற நாடகத்தில் பிச்சைக்காரர் வேஷத்தில் வரும் அப்பாவும், அவரின் குடும்பமும் பாடுவதாக அமைந்த பாடலைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
""பிச்சைக்காரக் குடும்பம் மேடையில் வந்து நின்றது. அவ்வளவுதான்... மக்கள் கைத்தட்டல் ஓய குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ஆகியிருக்கும்.
சிறிய பையன்கள் உச்சஸ்தாயியிலும், சாரீரம் போன பையன்கள் இடையிடையே கெட்டுப்போன ஆர்மோனியத்தில் எழும் சுருதிபேதமான கீச்சு சத்தம்போல் சம்பந்தமின்றி எழும் ஒலியும், பெரியவர்கள் மந்தாரஸ்தாயியில் பாடுவதும், எல்லாவற்றுக்கும் மேலாக திரு.எம்.ஆர்.ராதா அவர்களுக்கேயுரிய அவருடைய குரலில் வேண்டுமென்றே விகாரமாகப் பாடுவதுமாக... எல்லோரும் சேர்ந்து பாடிய அந்தப் பாட்டின் இனிமை... அப்பப்பா! இப்போது நினைத்தாலும் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடிவதில்லை. அப்போதெல்லாம் வீதிகளில் இரவு ஏழு மணிக்கு மேல் அப்படிப்பட்ட குடும்பங்கள் பாடியவாறு பிச்சையெடுப்பார்கள். திரு. எம்.ஆர்.ஆர். அவர்கள் பாடிய அந்தப் பாட்டைப் பாடுவார்கள்.
"கண்ணுமில்லே காலுமில்லே கையிலே காசுமில்லே' என்பது போன்ற அந்தப் பாடல் சென்னையிலிருந்த பெரும்பாலான மக்களுக்கு ஒரு புகழ்வாய்ந்த பாடலாகவே இருந்தது. அந்தப் பிச்சைக்காரக் குடும்பம், மேடையிலிருந்து உள்ளே செல்ல பதினைந்து நிமிடங்களுக்கு மேலாயிற்று. அதுமட்டுமல்ல... அந்தக் குடும்பத்தின் வரலாற்றை சத்திரத்தின் அதிகாரியிடம் சொல்லியபோது, ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்கள் கைதட்டி ரசித்தனர். அன்றுவரை அப்படியொரு காட்சி நாடகத்தில் கிடையாது. யாருடைய யோசனையையும் இரவலாகப் பெறாமல், தானே சிந்தித்து அமைத்துக்கொண்ட காட்சியாகும் அது.
எனது நாடக வாழ்க்கையில் திரு.எம்.ஆர்.ராதா அவர்களுடைய நடிப்பை நாடகத்தில் காணவும், அதே நாடகங்களில் நானும் நடிக்கக் கிடைத்த அந்த நாட்கள் குறைவாயினும் எனக்கு அது ஒரு காலகட்டமாகவே இருந்தது. எனது நடிப்புலகில் எனக்குப் பெரிய புதிய ஒரு திருப்பத்திற்கு காரணமாக இருந்த ஒரு காலகட்டம் அது என்றால் மிகையாகாது. அந்த திருப்பத்திற்கு ஓரளவில் திரு. எம்.ஆர்.ஆர். அவர்களும் காரணமாய் இருந்தார் என்பதைச் சொல்லுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்'' எனச் சொல்லியிருக்கிறார் புரட்சித்தலைவர்.
அத்துடன், புரட்சித்தலைவரின் நடிப்புத் தொழிலுக்கு புதிய ஒரு பாதையை என் அப்பா அவரையும் அறியாமல் அமைத்துக் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜி அப்பாவும், என் அப்பாவும் சேர்ந்து நடிச்ச "பாகப்பிரிவினை' படத்தை அறிஞர் அண்ணா அவர்களுக்கு சிறப்புக் காட்சி போட்டுக் காட்டியபோது... படம் பார்த்து ரசித்த அறிஞர் அண்ணா, என் அப்பாவிடம் ""எம்.ஜி.ராமச்சந்திரனோடு நீங்க இப்படி சேர்ந்து நடிக்கணும்ங்கிறது என் ஆசை'' எனச் சொல்லியிருக்கிறார்.
உடனே அதற்குச் சம்மதித்த என் அப்பா, தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் அவர்களைச் சென்று சந்தித்து ""ராமச்சந்திரனும் நானும் சேர்ந்து நடிக்கணும்னு அண்ணா விருப்பப்படுறார். அவர் விருப்பத்த உடனே நிறைவேத்தணும்னா நீங்கதான் செய்யமுடியும். ஏன்னா... குறுகிய காலத்துல படத்த எடுத்து முடிச்சிருவீங்க'' என அப்பா சொல்ல... அப்பாவின் நீண்ட நாள் நண்பரான... (தேவர், சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தேவருடன் பழக்கம் கொண்டவர் என் தந்தை.) தேவர் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டாலும், ""எம்.ஜி.ஆர். அரசியல், சினிமான்னு பிஸியா இருக்காரு. எதுவும் கால்ஷீட் தகராறு வராம இருக்கணுமே?'' எனச் சொல்ல... ""அப்படியெல்லாம் வராது, நான் பார்த்துக்கிறேன்'' என அப்பா சொல்லியிருக்கிறார்.
அப்படி உருவானதுதான் "தாயைக் காத்த தனயன்' திரைப்படம். அந்தப் படத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் என் அப்பாவும், என் அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசுவும் நடித்திருந்தனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் என் அப்பாவுக்கும் இடையே சகோதர பாசப்பிணைப்பும் நட்பும் நெடுங்காலமாக இருந்திருக்கிறது. ஆனாலும் காலம்... ஒரு விரும்பத்தகாத சூழலை உண்டாக்கிவிட்டது. (இதுபற்றி நாம் விரிவாக பிறகு பேசுவோம்.)
(என் கல்லூரி நாட்களில் புரட்சித் தலைவரின் கையால் கேடயம் பெற்றபோது நடந்த சுவாரஸ்யங்களையும், புரட்சித் தலைவர் எனக்குச் சொன்ன அட்வைஸையும் சொல்கிறேன்.)
கூடுதல் பொறுப்பு!
தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பின்னணிக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனது தலைமையிலான அணியினரும் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர்.
பாகுபாடில்லாமல் எங்கள் பணி தொடரும்!