(53) நான் + தளபதி = ஒரே ரத்தம்!
திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக... அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நாடகங்களில் நடித்திருக்கிறார். தளபதியாருடன் எஸ்.எஸ்.சந்திரன் நடித்திருக்கிறார்.
நானும் தளபதியாரும் சேர்ந்து "ஒரே ரத்தம்'’என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறோம்.
தலைவர் கலைஞரின் வசனத்தில் உருவான இந்தப் படத்தை அண்ணன் சொர்ணம் அவர்கள் இயக்கியிருந்தார்.
தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இளைஞன் நந்தகுமார், சென்னையில் படித்துவிட்டு... கிராமத்துக்கு வருகிறான். ஜாதி, மத கொடுமைகளுக்கு எதிராக அவன் புரட்சியாளனாக மாறி... அந்த லட்சியத்திற்காக தன்னையே தியாகம் செய்கிறான்.
இதுதான் "ஒரே ரத்தம்'’படத்தின் கதை.
புரட்சிக்கார இளைஞன் நந்தகுமாராக தளபதி மிக இயல்பாக நடித்திருந்தார். கார்த்திக், பாண்டியன், சீதா, மாதுரி உட்பட பலரும் நடித்திருந்தார்கள்.
பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்த வண்டிக்காரன் முனியாண்டியாக நான் நடித்திருந்தேன்.
குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு சம்பவம்...
கதைப்படி... தளபதி, என் மாட்டுவண்டியில் ஏறுவதற்காக வருவார்.
""அண்ணே... வண்டிக்கார அண்ணே...''’’
""என்னடா... தமிழ்நாட்டுல இவ்வளவு மரியாதையா கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்களா? வெளிநாட்டுக்காரனா இருப்பானோ?''’என கேட்டபடி பீடிப் புகையை ஊதியபடி... நான் பார்ப்பேன்.
எதிரே தளபதியார் நிற்பார்.
""ம்... முக ஜாடயப் பார்த்தாலே தெரியுதே... தமிழ் வாடை''’என நான் சொல்லுவேன்.
""என்ன தம்பி எந்த ஊரு?''’’
""சென்னைங்க...''’’
""அட... எல்லாரும் சொல்றமாதிரி... "மெட்ராஸ்'னு எல்லாருக்கும் புரிஞ்ச தமிழ்ல சொல்லக்கூடாதா? ஆமா... அங்க சினிமாக்காரங்கள பார்த்திருக்கீங்களா? அவங்கள்லாம் கருப்பா? சிவப்பா? சுலபமா பார்க்க முடியுமா?''’’
""சென்னைல, மெரினா கடற்கரை எப்படி இருக்கும்? துறைமுகத்தை பார்த்திருக்கியா? அண்ணா சதுக்கத்த வணங்கியிருக்கியா? பெரியார் திடல், காந்தி -ராஜாஜி -காமரஜர் மண்டபங்கள், வள்ளுவர்கோட்டம்... இதைப்பத்தியெல்லாம் கேட்காம, சினிமா நடிகர்களைப் பத்தி கேட்கிறீங்களே?''’என தளபதி சொல்வார்.
அவர் பண்ணையார் மகன் என நான் நினைத்திருக்கும்போது... பண்ணையார் வீட்டில் வேலை செய்யும் கீழ்ஜாதிக்கார மாரியோட மகன் எனத் தெரிந்து கோபப்படுவேன். வண்டியிலிருந்து இறங்க மறுப்பார் தளபதி. உடனே நான் வண்டியை குடை சாய்த்துவிட... தளபதி கீழே உருண்டு விழுந்து காயப்படுவார்.
-இப்படிப்போகும் படத்தின் தொடக்கக் காட்சி.
இந்தக் காட்சியை எடுக்கும்போது...
"முக ஜாடய பார்த்தாலே தெரியுதே தமிழ் வாடை'’ என நான் என் சொந்த வசனத்தைச் சேர்த்துப் பேசினேன்.
உடனே... "கட்'’சொல்லி நிறுத்திய அண்ணன் சொர்ணம் அவர்கள்... ""கலைஞர் எழுதித் தந்திருக்க வசனத்தை மட்டும் பேசுங்க''’என்றார்.
""ஏன்... நல்லாத்தானே இருக்கு. நான் இப்படி ஒரு வசனத்த சேர்த்துப் பேசினதா கலைஞர் சித்தப்பாகிட்ட சொல்லுங்க... அவர் எதுவும் சொல்லமாட்டார்''’என நான் சொன்னேன்.
கோபமான டைரக்டர்... ஷூட்டிங்கை நிறுத்தி... "பேக்-அப்' சொல்லிவிட்டார்.
"நாம சேர்த்துப் பேசின வசனம் இந்தக் காட்சிக்கு சரியாத்தான் இருக்கு'’ என்பதில் நானும் விடாப்பிடியாக இருந்தேன்.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிற்கும் தேவையான காட்சி -வசனங்களை கலைஞர் எழுதியதும்... அந்த டயலாக் பேப்பர்ஸ் சென்னையிலிருந்து கிளம்பும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடுத்துவிடப்படும். யூனிட் ஆள் ஒருவர் தென்காசி ரயில் நிலையத்திற்குப் போய் அதை வாங்கிக்கொண்டு வருவார்.
எனது சொந்த வசனத்தால் இங்கே ஷூட்டிங் நின்றது கலைஞருக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது.
மறுநாள்...
ரயிலில் வந்த டயலாக் பேப்பரில்... ஒரு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார் கலைஞர்.
""ராதாரவி தனக்கான வசனங்களை மாற்றிப் பேசினால் பேசிக்கொள்ளட்டும். அதை அனுமதியுங்கள்''’என கலைஞர் எழுதியிருந்தார்.
அதன்பிறகு நிலைமை சுமுகமானது.
அந்தப் படம் தளபதிக்குள் இருக்கும் நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டு வந்தது. 1988-ல் வெளிவந்தது அந்தப் படம்.
இந்தப் படத்தில் ஜாதிய யதார்த்தங்களை நடுநிலையோடு சொல்லியிருப்பார் கலைஞர்.
ஒரு காட்சியில்...
"தாழ்த்தப்பட்ட ஜாதி இளைஞர்களில் நாலைந்துபேர்கள் படிச்சிட்டு... நல்ல வேலை கிடைச்சு... பட்டணத்தில் குடியேறிடுறாங்க. பதவி, வசதினு தேடி... அவங்களும் தங்களை உயர்ஜாதிக்காரர்களா காட்டிக்கிட்டு வாழ்றாங்க. அதனாலதான் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் முன்னேற முடியாம இருக்கு. இந்த நிலமை மாறணும்னா... தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருக்க எல்லாருமே படிக்கணும்'’ என்கிற தீர்வை ‘நந்தகுமார்’பாத்திரம் மூலம் சொல்லியிருப்பார் கலைஞர்.
அதேபோல... தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் அடிச்சிக்கிறதால... இவங்க ரெண்டுபேர்களோட தோள்லயும் ஏறி சவாரி செய்றாங்க உயர்ஜாதியினர்’ என்பதை... தளபதி, நான், கார்த்திக் மற்றும் பாண்டியன் சம்பந்தப்பட்ட காட்சி மூலம் விளக்கியிருப்பார் "ஒரே ரத்தம்'’கதை-வசனகர்த்தாவான கலைஞர்.
என் அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசு, தன்னுடைய 44 வயதுக்குள் இறந்துபோய்விட்டார். பேச்சு, பாவனை என... எங்கள் அப்பா எம்.ஆர்.ராதாவின் பதிப்பாகவே இருந்தார் வாசு அண்ணன்.
அப்பாவிடம் இருந்த சில நெகடிவ்வான விஷயங்களை அதிகமாக எடுத்துக்கொண்டவர்... அப்பாவின் குட் குவாலிடிஸ்களை எடுத்துக்காமல் விட்டுட்டார்.
புகழ்பெற்றவர்களை பெற்றோராய் கொண்ட பிள்ளைகள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
-என குறள் சொல்லி பிரயோஜனமில்லை. செயல்லயும் காட்டவேண்டும்.
ஒருமுறை நடிகர்சங்க நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ் அவர்கள், ""என்னோட அப்பா பிரபலமானவர் கிடையாது. அதனால் நான் எப்படி நடிச்சாலும் அது ஏற்கப்படும். ஆனா... ‘"இளையதிலகம்'’ பிரபு, "நவரசத்திலகம்'’கார்த்திக், "நவரசவேள்'’ராதாரவி... இவங்கள்லாம் ரொம்ப கவனமா நடிக்கணும். அப்பாவோட பேரையும் காப்பாத்தணும். அவங்களை பிரதிபலிக்கிறதோட... தங்களின் தனித்துவத்தையும் காட்டணும். ஆனா இந்த சிரமம்... எங்கள மாதிரியான ஆளுங்களுக்கு இல்லை...''’என பேசினார்.
அது மிகப்பெரிய உண்மைதான்.
எனக்கு, என் அப்பாவின் தைரியமும், வீரமும், வெளிப்படையாகப் பேசும் உண்மையும் இருக்கு. ஆனாலும்... படிப்பறிவு இல்லாத என் அப்பா... எவ்வளவோ விஷயங்களை கிரகித்துப் பேசும் அறிவு அவருக்கு இருந்தது. படித்த எனக்கு அந்தளவு அறிவு இருக்கா?... தெரியாது. ஆனால்... அதை நான் தினசரி வளர்த்துக்க முயற்சித்தபடியேதான் இருக்கிறேன்.
இந்த விமர்சனத்தை... இந்த "அப்பாபோல் செயல்படுகிறார்',’"அப்பாபோல் செயல்படுகிறாரா?'’ என்கிற விமரிசனத்தை தளபதியாரும் எதிர்கொண்டு வருகிறார்.
தன் அப்பாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகிறார். தனது தனித்தன்மையுடனும் செயல்படுகிறார் தளபதி.
(எனக்காக... வருத்தம் தெரிவித்த தளபதி)
--------------------
வாழ்க்கைச் சக்கரம்!
சினிமா நடிகனாகத் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் வரை பல பதவிகளை சினிமாவிலும், அரசியலிலும் நான் அடைந்திருக்கிறேன். முதன்முதலில் நான் நடிகன் என்பதைத் தாண்டி பொறுப்பு வகித்தது... தென்னிந்திய பின்னணிக் கலைஞர்கள் சங்கத்தில்தான்.
டப்பிங் யூனியனில் தொடங்கி... நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் எனும் ஃபெப்சி என சினிமாவின் பல அமைப்புகளிலும் பொறுப்பில் இருந்தேன். அதன்பின்... நான் சினிமாவில் நடிகன் என்பதைத் தாண்டி... எந்தப் பொறுப்பிலும் இல்லாமல்... தொடங்கிய இடத்திற்கே வந்தேன்.
இப்போது... மீண்டும் டப்பிங் யூனியன் தலைவராக தேர்தலில் போட்டியிடுகிறேன். மார்ச் 3-ந் தேதி டப்பிங் யூனியன் தேர்தல் நடக்கிறது.
இதுதான் சைக்கிளிங். வாழ்க்கைச் சக்கரச் சுற்று.
டப்பிங் யூனியனிலிருந்து மீண்டும் எனது சுற்று தொடங்கவிருக்கிறது...