1991 மே 21-ம் தேதி... சேலத்தில் நான் தங்கியிருந்த நேஷனல் ஹோட்டலிலிருந்து ஜீப் மூலம் தேர்தல் பிரச்சாரத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் கிளம்பினேன். கொண்டலாம்பட்டியில மீட்டிங் முடித்துவிட்டு இரவில் ஜீப் மூலம் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது... போலீஸ்காரர் ஒருவர் நாங்கள் வந்த வண்டியை வழிமறித்து.....
"வண்டியில கட்டியிருக்க கட்சிக் கொடிய எடுத்திடுங்க'னு சொன்னாரு. அந்த போலீஸ்காரரோட முகத்துல பதட்டமும், பரபரப்பும் நொடிக்கி நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது.“""என்ன சார் என்ன ஆச்சு, எதுக்கு வண்டியில கட்டியிருக்க தி.மு.க. கொடிய எடுக்க சொல்றீங்க''’எனக் கேட்டேன்.
""ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த பிரதமர் ராஜீவ்காந்திய வெடிகுண்டு வைச்சி கொலை பண்ணிட்டாங்க, சீக்கிரமா நீங்க எங்கயாவது போய்டுங்க''’எனச் சொன்னார்.
நாங்கள் எல்லோரும் அதிர்ச்சியாகிவிட்டோம்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. இரவு நேரம் நடுரோட்டில்... எந்த ஊரில் இருக்கிறோமென்றே தெரியவில்லை.
ஜீப்பில் கட்டியிருந்த கட்சிக் கொடியை எடுத்துவிட்டு...
மெயின் ரோட்டுக்கே வராமல்... குறுக்கு வழியில புகுந்து... புகுந்து... நேராக திரு.வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வீட்டுக்குப் போய்விட்டோம்.
வீரபாண்டியார் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான்... எங்களுக்கு நிம்மதியே வந்தது.
ஆனால்... அந்த நிம்மதி சிலமணி நேரங்கள்தான் நீடித்தது.
"ராஜீவ்காந்தியோட படுகொலைக்கு தி.மு.கழகமும் ஒரு காரணம்'’என பிரச்சினையை கிளப்பிவிட்டார்கள்.
காங்கிரஸ்காரர்கள் தி.மு.கழகத்தோட கொடிக்கம்பத்த அறுத்துப்போட்டார்கள்.
சேலம் நேஷனல் ஹோட்டலில் நான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் காங்கிரஸ் பிரமுகர் ரங்கராஜன் குமாரமங்கலம் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க வந்த காங்கிரஸ் தொண்டர்கள்... ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்னுடைய காரை அடித்து நொறுக்கிவிட்டார்கள்.
வீரபாண்டியார் வீட்டில் தங்கியிருந்த எனக்கு... தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நாங்க இருந்த விஷயத்த கேள்விப்பட்டு எங்களை தாக்க வந்தாங்க. அன்னைக்கு நைட் வீரபாண்டியார் வீட்டுல தங்கிட்டோம். வீட்டு மாடியில தூங்கிட்டிருந்தேன். "ரவியோட பாதுகாப்புக்காக நம்ம ஆட்கள் எப்பவும் அவர் கூடவே இருக்கணும்'’எனச் சொன்னார் வீரபாண்டியார்.
அதனால் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போதும் என்னைச் சுற்றி பாதுகாப்பிற்கு ஆட்கள் இருந்தார்கள்.
எனக்குள்ள ஒரு பயம்... ’"சென்னையில நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆகிடுமோ?'’என்கிற பதட்டத்துடன்... வீட்டுக்கு போன்பண்ணி என் அம்மா தனலட்சுமி அம்மாளிடமும், என் மனைவி பாக்கியலட்சுமியிடமும் விசாரித்தேன்.
"இங்க எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லப்பா... நீ பத்திரமா இரு'’என அம்மா சொன்னார்கள்.
என் கூடவந்த கார் டிரைவர் சுந்தர் ஹோட்டல்ல தங்கியிருந்தார். இந்த பரபரப்பில் அவரை நான் மறந்துவிட்டேன். உடனே, ஹோட்டலுக்கு போன்செய்து விசாரித்தேன்.
சுந்தரிடமும் பேசினேன். அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
சுந்தரிடம் பேசியபோதுதான் என் கார் அடித்து நொறுக்கப்பட்டதையும், என் காரில் இருந்த ரேடியோ திருடப்பட்டதையும் தெரிந்துகொண்டேன்.
இரவு முழுக்கத் தூங்கவில்லை. எப்படியோ கண் அசந்து... விடிந்திருந்த நேரம்.. ஒரே சத்தமாகவும், ஆவேசக் குரல்களுமாக இருந்தது.
"என்ன சத்தம்'’என எழுந்து பார்த்தேன். அப்போது...
கண்ணுக்கு எட்டிய தூரம்வரைக்கும் மனித தலைகள் தெரிந்தன. அந்தக் கூட்டம் வீரபாண்டியார் வீட்டை நோக்கி ஆவேசமாக ஓடிவந்தது. அந்தக் கூட்டத்தினரின் கைகளில் கடப்பாரை, வேல்கம்பு... என பலவிதமான ஆயுதங்கள் இருந்தன.
அந்தக் கூட்டம் வீரபாண்டியார் வீட்டை சுற்றி வளைத்து... இடிக்க ஆரம்பித்தது.
"அய்யய்யோ... வீரபாண்டியாருக்கு ஏதாவது ஆகிவிடுமோ?'’என பயந்து... மாடியிலிருந்து கீழே ஓடி வந்தேன்.
ஆனால் வீரபாண்டியார் என்னை கீழே வரக்கூடாது எனச் சொல்லிவிட்டார். “"ரவிய மாடியவிட்டு கீழ இறங்கவிடாதீங்க'’ எனவும் சொன்னதால்... அவரின் ஆட்கள் என்னை தடுத்து நிறுத்தி மாடிக்கே அனுப்பி அறையில் போட்டு பூட்டினார்கள்.
மாடியை நோக்கி கற்கள் பறக்கிறது.
கலவரச் சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
நான் பலம் கொண்ட மட்டும் கதவைத் தட்டித் திறந்து... மாடியைவிட்டு கீழே இறங்கியபடியே... “"அய்யாவுக்கு எதுமில்லையே... அய்யா எப்படி இருக்காரு?'னு கேட்டுக்கொண்டே படியில் இறங்க...
கலவரத்தை தைரியமா எதிர்கொண்டிருந்த வீரபாண்டியார்... ""மேல போ...''’எனச் சொல்லி பயங்கரமா கத்தினார். உடனே திரும்பிப் பார்க்காம நான் மேலே ஓடிவந்தேன்.
வீரபாண்டியாருக்கு கட்சி என்பதும், கட்சிப்பதவி என்பதும் பலமாக இருந்தாலும், அவருடைய சொந்த ஊரில் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு நிறைய.
"வீரபாண்டியாருக்கு ஒண்ணுனா கட்சிக்கு அப்பாற்பட்டு ஊர்க்காரர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்துடுவாங்க'’எனச் சொல்வார்கள்.
அந்த உண்மையை நேரில் பார்த்தேன்.
வீரபாண்டியாரோட வீட்டை பெரும் கும்பல் தாக்குகிற விஷயத்தைக் கேள்விப்பட்டு ஊர்க்காரர்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு வந்து... வீட்டைத் தாக்கிக்கொண்டிருந்தவர்களை... அடித்து விரட்டுனாங்க. எல்லாம் அடங்குறதுக்குள்ள போதும்... போதும்னு ஆகிவிட்டது. கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாத விஷயம் அது.
அப்புறம்தான் எனக்கு விஷயம் புரிந்தது... தாக்க வந்த கும்பலின் இலக்கு... நான்.
வீரபாண்டியாரும் அவரோட குடும்பத்தினரும் என்னைப் பாதுகாக்கவில்லையென்றால்.... இந்த ராதாரவிய பீஸ்பீஸா ஆக்கியிருப்பார்கள்.
அந்தக் கும்பல் வீட்டை இடிக்கும்போது ’"ராதாரவி இங்கதாண்டா இருக்கான்'’எனச் சொல்லிச் சொல்லித் தாக்கியிருக்கிறது. அதனால்தான்... "நீ கீழ வராத'’ என கடுமையாகச் சொல்லியிருக்கிறார் வீரபாண்டியார்.
அன்றைய கலவரம் ஓய்ந்தாலும்... "நான் சென்னை போய் சேர்கிறவரை ஆபத்து நேரக்கூடாது' என்கிற அக்கறையில் என்னை ஒருவாரம்... தன் வீட்டிலேயே பாதுகாப்பா தங்கவைத்தது வீரபாண்டியாரின் குடும்பம்.
அவ்வப்போது சென்னைக்கு... என் வீட்டுக்கு மட்டும் போன்செய்து விசாரித்துக்கொண்டே இருந்தேன்.
என்னதான் தைரியமானவனா இருந்தாலும் குடும்பத்து மேல அளவுக்கதிகமா பாசம் வைத்திருப்பவனாச்சே நான்.
ஒரு வாரத்திற்குப்பின்... நிலமை சுமுகமானதும்...
புளூமவுண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் என்னை அழைத்துக்கொண்டு சென்னை வரை பாதுகாப்பாக வந்தார் வீரபாண்டியார்.
சேலம் மாவட்ட தி.மு.கழக தொண்டர் படையைச் சேர்ந்த கண்ணன், அசோகன், கோபாலகிருஷ்ணன், ஐயர், அருள், ராஜமாணிக்கம் மற்றும் ட்ரிபிள் ஏ ஆகியோர் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள். என்னுடைய காரை சரிசெய்து அசோகன் மூலம் சென்னைக்கு கொண்டுவந்து என் வீட்டில் நிறுத்தச் செய்தார்.
வீரபாண்டியார் ரொம்ப தைரியமானவர். அத்தனைபேர் சேர்ந்து அவரோட வீட்டை தாக்கியபோதும் தைரியமா சமாளிச்சார். அதனாலதானோ... என்னவோ... தலைவர் கலைஞர்கூட வீரபாண்டியாரை "சேலத்து சிங்கம்'’எனச் சொல்லியிருக்கார். அப்ப எந்த அளவுக்கு அவர் தைரியமான மனிதனா இருந்திருப்பார்னு பாருங்க.
சினிமாவில் எத்தனையோ கலவர சீன்களில் நடித்திருக்கிறேன். வாழ்க்கையில எத்தனையோ சண்டை சச்சரவு, அடிதடி, மோதல் சம்பவங்களைப் பார்த்திருந்தாலும், அப்போது நடந்த சம்பவங்களை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது.
1991 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்னொரு அனுபவம்...
தமிழக-ஆந்திர எல்லையில இருக்கிற வி.கோட்டா என்கிற இடத்தில் பிரச்சாரம் செய்யப் போயிருந்தேன். வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலிருந்து போனால்... அந்த ஊருக்கு போய்விடலாம்.. அந்த ஊர்... அண்ணா தி.மு.கவோட கோட்டை. இருந்தும்.. நிறைய எதிர்ப்புக்கு மத்தியில தைரியமா போய் பிரச்சாரம் செய்தேன்.
பிரச்சாரத்தை முடித்துவிட்டு... இரவில்... நானும் தி.மு.கழக தொண்டர்கள் சிலரும் திறந்த ஜீப்பில் வந்துகொண்டிருந்தபோது... அண்ணா தி.மு.க. தேர்தல் அலுவலகம் பக்கத்தில் வந்தபோது... இருட்டிலிருந்து யாரோ ஒருவர் செருப்பை எடுத்து வீச... அது என் மேல் படாமலிருக்க... தி.மு.க. தொண்டர் படையைச் சேர்ந்த சேலம் கண்ணன் தன் கையால் தடுத்துவிட்டார். சேலம் கண்ணன் இப்போதும் எனது குடும்ப நண்பராக இருக்கிறார்.
"இந்தோ ஷிப்பிங் கார்ப்பரேஷன்' என்கிற ஷிப்பிங் கம்பெனி உரிமையாளர் பிரிட்டோ. (நடிகர் விஜய் அவர்களுக்கு மாமா முறை) சட்டக் கல்லூரியில் நான் ஒரு வருடம் கோட்டைவிட்டதால்... ஜூனியரான பிரிட்டோவும், நானும் ஒரு வருடம் சேர்ந்து படித்தோம்.
இவரை சில பிரச்சினைகளால் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டது... துறைமுக நிர்வாகம். பிரிட்டோவின் அண்ணனான எனது நண்பர் மெல்கியார் என்னிடம் உதவி கேட்க... நான் மறைந்த தி.மு.கழக பிரமுகர் ராயபுரம் ஏழுமலை நாயக்கர் அவர்களிடம் விஷயத்தைக் கொண்டுசென்றேன்.
அமைச்சர் ஜெயக்குமாரின் ஒன்றுவிட்ட அண்ணனும், தி.மு.க. பிரமுகருமான மதிவாணன் அவர்களை என்னுடன் அனுப்பி... எனக்காக பிரிட்டோவின் பிரச்சினைகளை சரிசெய்து கொடுத்தார் ஏழுமலை நாயக்கர்.
நான் அவருக்கு நன்றி சொல்லும்போது... “"தம்பி... அந்த ஆள் உங்களை ஏமாத்திடுவார்'’என பிரிட்டோவைப் பற்றி என்னிடம் எச்சரித்தார்.
பலகோடி மதிப்புள்ள விஷயத்தை எனக்காக பிரிட்டோவுக்கு சரி செய்து கொடுத்ததோடு... இப்படி ஒரு எச்சரிக்கையையும் விட்டார் ஏழுமலை நாயக்கர்.
அவர் சொன்னபடியேதான்... ஆச்சு.
-இப்படி சிலருக்காக... தி.மு.கழக பிரமுகர்களிடம் எனக்கு இருக்கும் பழக்கத்தை வைத்து சில காரியங்களையும் செய்து கொடுத்திருக்கிறேன்.
(சின்னச் சின்ன கசப்புகள்...)