radharavi-title

(46) கல்மேடையில் உதித்த ஞானம்!

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம்...

Advertisment

சென்னை -மவுண்ட்ரோடு புகாரி ஹோட்டலுக்குச் சாப்பிடுவதற்காக என் அப்பாவின் மேனேஜரும், எங்களின் குடும்ப நண்பருமான அழகர்சாமி மாமா என்னை அழைத்துச் சென்றார்.

Advertisment

சிக்னலில்... நாங்கள் நடந்து சென்றபோது... க்ரீன் சிக்னலுக்காக காத்திருந்த காருக்குள் இருந்து ஒரு குரல் அழைத்தது...

""அழகர்சாமி அண்ணே...''’’

குரல் வந்த காருக்குள் இருந்தவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார் மாமா.

""எப்படி இருக்கீங்க?''’’

""நல்லா இருக்கேங்கய்யா... நீங்க எப்படி இருக்கீங்கய்யா?''’’

""“இதென்ன புதுசா... "அய்யா'னு கூப்பிட்டுக்கிட்டு... என்னை பேரைச் சொல்லியே கூப்பிடுங்க...''’’

“""அய்யய்யோ...'' “

“""எங்க போறீங்க? கார்ல ஏறுங்க... இறக்கிவிடுறேன்''’’

""இல்லய்யா... ஓட்டல்ல சாப்பிடுறதுக்காகப் போறோம்...’’

""இது யாரு?''’’

“""ராதாவோட பையன்''’என என்னை அறிமுகப்படுத்த.... நான் காருக்குள் இருந்த கலைஞரைப் பார்த்து கும்பிட்டேன்.

அதற்குள் க்ரீன் சிக்னல் கிடைத்துவிட... கலைஞரின் கார் கிளம்பியது.

radharavi

அப்போது கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

அன்றுதான்... நான் முதன்முதலாக கலைஞரை நேரில் பார்த்தேன்.

பின்னாளில், "நான் கலைஞரின் செல்லப்பிள்ளையாக மாறுவேன்' என அப்போது நினைக்கக்கூட வாய்ப்பில்லை.

நான் "நடிகர் திலகம்' சிவாஜியப்பாவின் தீவிர ரசிகன். அதனாலும், பெருந்தலைவர் காமராஜர் மீதிருந்த பிரியத்தாலும் எனக்கு காங்கிரஸ் மீது ஈடுபாடு இருந்துவந்த நிலையில்... கலைஞரின் மேடைப் பேச்சுக்கள் என்னை அவர்பக்கம் சுண்டி இழுத்தன.

நானும், டைரக்டர் பீம்சிங் அவர்களின் மகன் திலீப்பும் நண்பர்கள். எனது நண்பர்கள் வட்டத்திலேயே அரசியல் பேசுவது நானும், திலீப்பும்தான்.

திலீப்தான் என்னை அரசியல் மீட்டிங்குகளுக்கு... தலைவர்களின் பேச்சைக் கேட்க அழைத்துச் சென்றார். முதன்முதலாக தி.நகரில் பனகல் பார்க் அருகில் நடந்த கலைஞரின் மீட்டிங்கிற்கு அழைத்துச் சென்றார். அதிலிருந்து கலைஞரின் மீட்டிங் சென்னையில் எங்கு நடந்தாலும் அவரின் பேச்சைக் கேட்க நானும், திலீப்பும் கிளம்பிவிடுவோம். அதேபோல "சொல்லின் செல்வர்'’ஈ.வெ.கி.சம்பத் அய்யா அவர்களின் மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன்.

சென்னை -நியூ காலேஜில் நான் படித்த... எனது கல்லூரி வாழ்க்கை என்பது எனது அரசியல் வாழ்க்கையாகவே மாறிப்போனது. எனது நடிப்பு ஈடுபாட்டிற்கும் நியூ காலேஜ்தான் உந்துதலாக இருந்தது. எதிலும் முன்னின்று போராடுவதற்கு எனக்கு களம் அமைத்துத் தந்தது நியூ காலேஜ்தான்.

அதைப்பற்றி விரிவாக அப்புறம் எழுதுகிறேன்.

இப்போது தலைவர் கலைஞர் சித்தப்பா அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறேன்.

எனது அரசியல் பயணத்தின் தொடக்கம் என்பது.... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்திலிருந்துதான் தொடங்கியது.

நான் சென்னை -நியூ காலேஜில் படிக்கும்போது...

தி.மு.க.விலிருந்து அதன் பொருளாளராக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நீக்கப்பட்டார். இதனால் தி.மு.க.வை கண்டித்து போராட்டம் நடத்த நியூ காலேஜ் மாணவர்களில் ஒரு பிரிவினர் முடிவு செய்து... வகுப்புகளுக்குச் செல்லாமல் காலேஜ் மைதானத்தில் திரண்டனர். நிலைமை உஷ்ணமாக இருந்தது.

உடனே... நானும், என்னுடன் படித்த நண்பர் பட்டேலும்... ஓடிப்போய்... கல்லூரி மைதானத்தில் இருந்த கல்மேடையில் ஏறி நின்றோம்.

""எதுக்காக போராட்டம் நடத்துறீங்க. யாரோ ஒருத்தர கட்சியில இருந்து நீக்கிட்டாங்க. அதுக்கு நாம ஏன் வகுப்ப புறக்கணிச்சிட்டு போராட்டம் நடத்தணும்? இதனால எல்லாரோட படிப்பும்தான் பாதிக்கப்படுது''’எனச் சொன்னோம்.

ஒரு நல்ல எண்ணத்தில்தான் நான் இதைச் சொன்னேன். ஆனால்... "எம்.ஆர்.ராதாவோட மகன் தி.மு.கழகத்துக்கு ஆதரவா பேசுறான்'’எனச்சொல்லி... எனக்கு "தி.மு.க.காரன்'’என முத்திரை குத்திவிட்டார்கள்.

""என்னுடைய மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் உண்மை சொல்றேன். காலேஜில் இருக்கும் மாணவர்கள் எல்லாருக்காவும்தான் நானும், பட்டேலும் இப்படி பேசினோம். நான் ஒரு சாதாரண ஸ்டூடண்ட். நான் உண்டு என் வேலை உண்டுன்னு "சிவனே'’என இருந்திருக்கலாம். ஏதோ ஒரு உத்வேகத்தில் இப்படி பண்ணியதை பிரச்சினையாக ஆக்கிவிட்டார்கள்.

இந்த விஷயம் பிரின்ஸிபால் மொய்தீன் சார் அவர்களின் கவனத்திற்குச் சென்றது.

அவர் என்னைக் கூப்பிட்டு "என்ன நடந்தது?' என விசாரித்தார்.’’

""போராட்டம் நடத்த வேண்டாம். வகுப்புக்கு போங்கன்னுதான் சொன்னேன்''“என நான் என்பக்கம் இருந்த நியாயத்தை அவரிடம் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுதான் எனது அரசியலின் முதல்படி.

"புத்தருக்கு ஞானம் வந்தது மோதிமரத்துக்கு கீழ'’எனச் சொல்வார்கள்.

எனக்கு அரசியல் ஞானம் வந்தது அந்த கல்மேடை மேலேதான்.

நியூ காலேஜில் இப்போதும் இருக்கிறது அந்தக் கல்மேடை.

அன்றிலிருந்து நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக... கலைஞரின் லட்சோபலட்சம் உடன்பிறப்புகளில் ஒருவனாக ஆனேன்.

எனது திருமணமும் கலைஞர் தலைமையில் நடந்தது. (இதைப்பற்றி ஏற்கெனவே விரிவாகச் சொல்லியிருக்கிறேன்)

என் அப்பாவின் மறைவிற்குப் பிறகு... 1979-ல் சிவகாசியில் "ரத்தக்கண்ணீர்'’நாடகத்தை நான் நடித்தது குறித்த அனுபவங்களை இதற்குமுன் உங்களுடன் மிக விரிவாகப் பகிர்ந்திருக்கிறேன்.

அதன்பின்...

1980-ஆம் ஆண்டு, மார்ச் 1-ஆம் தேதி சென்னை -ராஜா அண்ணாமலை மன்றத்தில்... எனது முதல் நாடகமான "நீ எந்த ஜாதி'’நாடகத்தை நடத்த ’இளங்கோ கலைமன்றம்’ சார்பில் அண்ணன் வீரப்பன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நாடகத்துக்கு யாரை தலைமை தாங்க வைக்கலாம்’என ஒரே யோசனை. அப்போது அழகிரி மாமாதான் என்னை தலைவர் கலைஞரிடம் கூட்டிச் சென்றார்.

என் அப்பாவின் நாடகக் கம்பெனியில் தலைவர் கலைஞர் "தூக்குமேடை'’நாடக கதாசிரியராகவும், நடிகராகவும் இருந்ததால அவருக்கும் என் அப்பாவின் மேனேஜராக இருந்த அழகிரி மாமாவுக்கும் நல்ல நெருக்கம்.“""இவருதான் ராதா அண்ணனோட பையன் ராதாரவி''’என மீண்டும் ஒருமுறை அழகிரி மாமா, தலைவர் கலைஞரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்தநாளை என்னால் மறக்கவே முடியாது.

கிட்டதட்ட 9 வருஷம் தலைவரோட அறிமுகம் கிடைக்காமலேயே தி.மு.கழகத்தில் இருந்து வந்தேன். இந்தச் சந்திப்பு அதை மாற்றியது. கலைஞருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைத் தந்தது.

""ரவியோட நாடகத்துக்கு நீங்க தலைமை தாங்கி நடத்தித் தரணும்''’என மாமா கேட்க... தலைவரும் உடனே சம்மதம் தெரிவித்தார்.

நாடகத்துக்கு தேவையான வேலைகளை நாங்கள் செய்துகொண்டிருந்தோம். அரங்கேற்ற நாளில் ஏதோ ஒரு அவசர வேலையாக கலைஞர் டெல்லிக்கு போய்விட்டார்.

எனக்கு இதில் வருத்தம் இருந்தாலும்... உண்மையிலே அவருக்கு நிறைய அலுவல்கள் இருந்ததும், அந்தச்சமயம் தலைவர் கலைஞர் ரொம்ப பிசியாக இருந்ததும் எல்லாருக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்.

ஆனாலும், அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியவில்லை.

"என்னடா இது, நாடகத்துக்கு தலைமை ஏற்க வேண்டும்னு சொல்லி நேர்ல போய் கூப்பிட்டோம். ஆனா... அவர் டெல்லிக்கு போய்ட்டாரே'’என எனக்கு மனக்கஷ்டமாக இருந்தது.

நாடக அரங்கேற்றத்திற்கு சாதிக்பாட்ஷா அண்ணன் வந்தார். அதுக்கு அப்புறம்தான் தி.மு.கழக வளர்ச்சி நிதிக்காக நிறைய நாடகங்கள் போட ஆரம்பித்தேன்.

அப்போது வடசென்னை, தென்சென்னை என இரண்டு மட்டும்தான் இருந்தன. மத்திய சென்னை பிரிவு கிடையாது.

தி.மு.கழகத்தோட தென்சென்னை மாவட்ட பொறுப்பாளரா டி.ஆர்.பாலு அண்ணன் இருந்தபோது.... தென்சென்னை மாவட்ட தி.மு.கழகத்துக்கு நிதி திரட்ட டி.ஆர்.பாலு அண்ணன் முடிவு செய்து, என்னிடம் வந்து என் அப்பா நடித்த "ரத்தக்கண்ணீர்'’நாடகத்தை பெரியார் திடலில் நடத்தச்சொல்லிக் கேட்டார். அவருக்காக நான் நடிக்க சம்மதித்தேன். அப்போது எனக்கு கூடுதல் உற்சாகமும் கிடைத்தது. காரணம்... கலைஞர் தலைமையில் நாடகம் நடப்பது உறுதியானதால்.

"ரத்தக் கண்ணீர்'’ நாடகத்தில் என் அப்பாவின் நடிப்பைப் பார்த்து ரசித்தவர் கலைஞர். அதே வேஷத்தில் எனது நடிப்பை எப்படி எடுத்துக்கொள்வார்?

இந்த ஆர்வம்... கொஞ்சம் அச்சத்துடன் எனக்குள் இருந்தது.

ஆனால் இந்த உற்சாகத்தை அசைத்துப் பார்ப்பதுபோல் டி.ஆர்.பாலு அண்ணன் எனக்கு போன் செய்தார்.

""நாடக தேதியை மாத்தலாமா?''

""ஏண்ணே?''

""அந்த தேதியில வச்சா, தலைவர் இடைவேளை வரைக்கும்தான் நாடகம் பார்ப்பார். அதுக்குப் பின்னாடி அவருக்கு ஒரு அவசர வேலை இருக்கு, கிளம்பிடுவார். வேற தேதியில வச்சா, முழு நாடகத்தையும் பார்ப்பார்'' எனச் சொன்னார் பாலு அண்ணன்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மனதுக்குள் ஒரு திட்டம் போட்டு... ""இதே தேதியே இருக்கட்டும், தலைவர் பாதி நாடகமே பார்க்கட்டும்'' எனச் சொன்னேன்.

(நான் தீட்டிய திட்டம்...)