(45) கலைவாணர் தேன்... நடிகவேள் புயல்!

லைவர் கலைஞர் சித்தப்பா அவர்களின் கனல் தெறிக்கும் வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜியப்பா நடிப்பில் பெரும் புரட்சியை உண்டாக்கிய படம் "பராசக்தி'.

Advertisment

இதில் பரபரப்பு மூட்டிய கோயில், போலி பூசாரி, பக்தையை அடைய நினைப்பது... போன்ற காட்சிகள் இன்றும்... என்றும் மறக்க முடியாதவை.

radharavi

Advertisment

கலைஞர் எழுதி என் அப்பா நடித்து புகழ்பெற்ற "தூக்குமேடை'’நாடகத்தின் தொடக்கக் காட்சியான மாரியம்மன் கோயில், போலி பூசாரி, பக்தை சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் ‘"பராசக்தி'’ படத்தில் சின்ன மாறுதல்களுடன் இணைத்தார் கலைஞர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முறை முதலமைச்சராக இருந்த சமயம்... எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கலைஞர் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அப்போது ‘"தூக்குமேடை'’ நாடகத்தை படமாக்க விரும்பினார்.

என் அப்பா அப்போது இந்த நாடகத்தை நடத்திவந்தார். சென்னை -தியாகராயர் கல்லூரி அரங்கிலும், ஒரு பிரபல பள்ளியின் விழாவிலுமாக இரண்டுமுறை கலைஞர் தலைமையில் இந்த நாடகத்தை என் அப்பா நடத்தினார்.

""திராவிடர் கழகம், பெரியார் அவர்கள் தலைமையில் வீரநடை போட்ட அந்தக் காலத்தில்... அதாவது 1940-42-ஆம் ஆண்டுகளில் இந்த இயக்கத்தோடு தொடர்புடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லி, இந்த இயக்கம் வளர்வதற்கு ஒருவகையில் பக்கபலமாக இருந்தவர், இன்றும் இருப்பவர் நடிகவேள். தொடர்ந்து நடிகவேள் அவர்கள், பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் லட்சியங்களை நாடகங்கள் மூலம் எடுத்துச்சொல்வதும், பல இடங்களிலே கடும் எதிர்ப்புகளுக்கிடையே "அந்தக் கருத்துக்களை ‘சொல்லியே தீருவேன்'’ என்று திடஉள்ளத்தோடும் தன் நாடகங்களை நடத்தினார். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல, தேனில் மருந்தைக் கலந்து கொடுப்பதைப்போல, மென்மையாக சுயமரியாதைக் கருத்துக்களை மக்கள் உள்ளத்தில் பதியச் செய்தார். நடிகவேள் புயல் வேகத்தில் அந்தக் கருத்துக்களைப் பதியச் செய்தார்.

""பிரசித்திபெற்ற "ரத்தக்கண்ணீர்'’என்ற அவருடைய நாடகம் படமாக்கப்பட்டு, இன்றைக்கு வெளியிடப்பட்டாலும் அரங்கம் நிறைந்த காட்சி என்ற அளவிற்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதைப்போல ‘"தூக்குமேடை'’என்ற இந்த நாடகத் தலைப்பு ஏறத்தாழ 35 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மக்களுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்ற ஒன்றாகும். அக்காலத்தில் இந்நாடகத்தில் எதிர்பாராமல் என் வசனங்களை விட்டுவிட்டு ராதா திடீரென அதில் சொந்த வசனங்களை சேர்த்துக்கொள்வார்.

ஒருமுறை "தூக்குமேடை'’நாடகத்தில்... "அண்ணாத்துரையை தளபதி என்கிறீர்களே. அவர் எத்தனை போர்க்களங்களைச் சந்தித்தார்?'’என்று நான் எழுதாத வசனத்தைப் பேசிவிட்டார். அந்த நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த நான் ஒரு கணம் தயங்கினாலும், உடனடியாக "வீணை மீட்டப்படுவதற்கு முன்புகூட அதை "வீணை'’என்று அழைப்பதில்லையா? அதேபோல போர் தொடங்குவதற்கு முன்பும் அண்ணா தளபதியாக உள்ளார்'’என்று வசனம் பேசினேன். காட்சி முடிந்ததும் ராதா என்னை மிகவும் பாராட்டினார்.

நடிப்பை தலைமுடியிலேயே காட்டிய ஒரு நடிகர் இந்த நாட்டிலே உண்டென்றால் அது ராதாவே ஆகும். இன்றுள்ள பெரிய நடிகர்களுக்கெல்லாம் ராதா வழிகாட்டியாக உள்ளார். அப்படிப்பட்ட நடிகவேள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துவதை நான் பெற்ற பெருமைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்''’என்று கலைஞர் பேசினார்.

1957 தேர்தலில்... திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குளித்தலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக கலைஞர் போட்டியிட்டார்.

அறிஞர் அண்ணா மீதும், தி.மு.க. மீதும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் தந்தை பெரியார். அதனால் காங்கிரஸை... குறிப்பாக காமராஜரை ஆதரித்தார்.

தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் தோற்கடிக்கப்படுவதையும், குறிப்பாக அண்ணாவின் தளபதியாக விளங்கிய கலைஞரை தோற்கடிக்கவும் தி.க. தலைமை விரும்பியது.

என் அப்பாவிடம் "குளித்தலையில் கருணாநிதியை எதிர்த்து நீங்க நிக்கணும்'’எனக் கேட்டிருக்கிறார் பெரியார்.

பெரியார் மட்டுமில்ல... ‘"விடுதலை'’வீரமணியும், மணியம்மையும்கூட "எப்படியாவது கருணாநிதியை தோற்கடிக்கணும். நீங்க அவரை எதிர்த்து நிக்கணும்'னு சொல்லி வற்புறுத்தினாங்க. தேர்தலுக்கு ஆகுற செலவையும்கூட அவங்களே செய்றதா சொன்னாங்க. ஆனா... நான் மறுத்திட்டேன்.

ஏன்னா... கலைஞரைப்போல ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு வேணும்னு நான் அப்பவே நினைச்சதுண்டு''’எனச் சொல்லியிருக்கிறார் என் அப்பா.

அண்ணா இருக்கும் காலத்திலேயே என் அப்பா கலைஞரை விரும்பியது ஏன்?

""அண்ணா நல்லவர். அவர் மனசும் நல்ல மனசு. ஆனா அவரால எப்பவும், எதிலயும் அவ்வளவு உறுதியா இருக்க முடியிறதில்ல. ஆனா... கலைஞர் கருணாநிதி... பிடிச்சா உடும்புப் பிடிதான்... விடவே மாட்டார். சிலசமயம், சில விஷயங்கள்ல அவர் விட்டுக் கொடுக்கிறாப்போல விட்டுக்கொடுப்பார். கடைசியில, தான் நினைச்சதை எப்படியும் செய்துமுடிப்பார். அப்படி ஒரு உறுதி அவருக்கு அப்பவே உண்டு.

ஒருசமயம் எம்.ஜி.ராமச்சந்திரன் ரசிகர் மன்றத்தாரெல்லாம் சேர்ந்து ‘"எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாடு'னு ஒரு பெரிய மாநாடு நடத்த ஏற்பாடு செஞ்சாங்க. அந்த மாநாட்டால தி.மு.க.வோட வளர்ச்சி கொஞ்சம் பாதிக்கப்படும்போல இருந்தது. அதைத் தடுக்கமுடியாத தர்மசங்கடம் அண்ணாவுக்கு.

பார்த்தார் கருணாநிதி... தானே தன் சகாக்களான சி.பி.சிற்றரசு, ப.உ.ச., மதுரை முத்து... இவங்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு நின்னு, அந்த மாநாட்ட நடக்கவிடாம தடுத்துட்டார். அப்படி ஒரு உறுதியான தலைவர். கருணாநிதியப் பத்தி நான் எப்பவோ நினைச்சது தப்பில்லேங்கிற மாதிரி இப்போ அவரோட ஆட்சியிலிருந்து தெரியுதா... இல்லையா?''’’

-இப்படி கலைஞரோட உறுதி குறித்து என் அப்பா சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். ஷூட்டிங் கேஸில் சிறையிலிருந்த அப்பாவை... ‘"இதுவரைக்கும் சிறையில் இருந்த காலமே போதுமானது'’ என சுப்ரீம் கோர்ட் சொன்னதும்... வேறு ஏதாவது வழக்கில் என் அப்பாவை சிக்கவைக்க முயற்சிகள் நடந்தப்போ... முன்னறிவிப்பு ஏதுமின்றி சிறையிலிருந்து என் அப்பாவை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார் கலைஞர்.

அந்தச் சமயம் கலைஞர் முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால்... வேறு ஏதாவது வழக்கில் என் அப்பாவை மீண்டும் சிறையில் அடைத்திருப்பார்கள் என்பது உறுதி.

ஜெயிலிலிருந்து விடுதலையானதும்... காங்கிரஸ் பிரமுகர்களும், சிவாஜி மன்றமும் சேர்ந்து சைதாப்பேட்டையில் நடத்திய வரவேற்பு விழாவில்... "காங்கிரஸை ராதா ஆதரிப்பார்'’ என்கிற நிலைப்பாட்டிற்கு மாறாக... "கலைஞர் கருணாநிதி நல்லாட்சிதானே நடத்துறார். தமிழன் ஆளும்போது அதை ஏன் எதிர்க்கணும்?'’என பேசினார் என் அப்பா.

(முதன்முதலாக நான் கலைஞரைப் பார்த்த சம்பவம் இப்போதும் என் கண்முன்னால் உயிர்ப்புடன் நிற்கிறது...)