(44) தூக்குமேடையில் நிறுத்தப்பட்ட அவலங்கள்!

லைஞர் எழுதிய "தூக்குமேடை'’ நாடகத்தை தஞ்சாவூரில் நடத்திவந்த என் அப்பா... கலைஞரின் எழுத்தாற்றலை வியந்து கலைஞர்’ என்கிற பட்டத்தைத் தந்ததுடன்... தந்தை பெரியார் தலைமையில் ‘தூக்குமேடை’ நாடகத்தை ஒருநாள் நடத்தி... அன்றைய தினம் வசூலாகும் மொத்த தொகையையும் கலைஞருக்குத் தர விரும்பினார்.

Advertisment

அப்போது திருச்சியில் தங்கியிருந்த பெரியாரிடம் தேதி கேட்பதற்காக... திருவாரூர் திராவிடர் கழகப் பிரமுகரான சிங்கராயரை அனுப்பி வைத்தார்.

"யாருக்கோ... பாராட்டி நிதி கொடுக்குறதாவது... அந்த நாடகத்துக்கு நான் தலைமை தாங்குறதாவது? அதெல்லாம் முடியாது'’என பெரியார் சொல்லியிருக்கிறார்.

Advertisment

ஏன் மறுத்தார் பெரியார் என்பதற்கு என் அப்பா சொன்ன காரணம்...

radharavi

""விஷயம் என்னன்னா... கருணாநிதியை அப்போ பெரியாருக்கு கொஞ்சம் பிடிக்காது. இதுக்குக் காரணம் வேற ஒண்ணுமில்ல. எல்லா பெரிய மனுஷங்களுக்கும் ஏதாவது ஒண்ணுல வீக்னஸ்’ இருக்குமே. அந்த வீக்னஸ் அவருக்கும் இருந்துச்சு. மேடைப் பேச்சுல சிலசமயம் எல்லாரையும் மிஞ்சிப் பேசி... பொதுமக்கள்ட்ட அப்ளாஸ்’ வாங்கிடுற சாமர்த்தியம் அப்பவே கருணாநிதிக்கு உண்டு. அதுதான் பெரியார் மறுத்ததுக்கு காரணம்.

ஆனாலும் நான் விட்ருவனா... ?

நானே திருச்சிக்குப் போனேன். வக்கீல் வேதாச்சலம் வீட்ல தங்கியிருந்த பெரியாரைச் சந்திச்சேன். கட்சி நிதியா நூறு ரூபாய கொடுத்திட்டு... விஷயத்தச் சொல்லி... தேதி கேட்டேன்.

உடனே தேதி கிடைச்சது. பெரியார் கொடுத்த தேதியிலயே... அவர் தலைமையில ‘"தூக்குமேடை'’ நாடகத்த நடத்தி, அன்றைய வசூலை கருணாநிதிக்கு கொடுத்தேன்.

வெற்றி எனக்கு மட்டுமா? இல்ல... கருணாநிதிக்கும்தான்''’எனச் சொல்லியிருக்கிறார் என் அப்பா.

1947-ஆம் வருடம் நவம்பர் மாதம் 26-ஆம் தேதி... பெரியார் தலைமையில் நடந்த ‘"தூக்குமேடை'’ நாடகத்தையும், அதில் நடித்த என் அப்பாவின் நடிப்பையும், கலைஞரின் நடிப்பையும் மிகவும் பாராட்டியிருக்கிறார் பெரியார்.

"தூக்குமேடை'யில் மாணவர் தலைவர் பாண்டியனாக நடித்து வந்த கலைஞர்... அதன்பிறகு வேறு பணிகள் காரணமாக திருவாரூர் சென்றுவிட்டார்.

இருப்பினும் நாடகத்திற்கு இருந்த அமோக வரவேற்பால் தொடர்ந்து தஞ்சையில் இந்த நாடகம் நடந்தது.

அப்பாவின் நாடகக்குழுவில் இருந்த நடிகரான காஞ்சிபுரத்தார்அவர்கள் "ரத்தக்கண்ணீர்'’ நாடகத்தில் அப்பாவின் கேரக்டரான மோகனுக்கு நண்பராகவரும் பாலு கேரக்டரில் நடித்தவர். கலைஞர் ஏற்றிருந்த ‘பாண்டியன்’ வேஷத்தில் தொடர்ந்து காஞ்சிபுரத்தார் நடித்தார்.

"தூக்குமேடை'’நாடகமும், அதன் கதையமைப்பும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டதால் தொடர்ந்து நடத்தப்பட்டது. அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றபிறகு... "தூக்குமேடை'க்கு தடைவிதித்தனர். இருந்தாலும்... ’நல்ல தீர்ப்பு, ‘நல்ல முடிவு, ‘பேப்பர் நியூஸ், ‘காதல் பலி, ‘காதலின் முடிவு, ‘பணக்காரன், ‘பக்தன்... இப்படி வேறு, வேறு பெயர்களில் இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார். இந்த நாடகத்தை தனது இறுதிக் காலம்வரை நடத்தினார் அப்பா.

பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தியதால் இந்த நாடகம் நடந்த இடங்களில் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

சர்ச்சையைக் கிளப்பிய "தூக்குமேடை'’கதைதான் என்ன?

மாரியம்மன் கோயிலுக்கு தினமும் விளக்குப்போட வரும் பக்தை மாரியம்மாள் மீது செல்வந்தர் அபிநயசுந்தர முதலியாருக்கு ஆசை. பூசாரியிடம் விருப்பத்தைச் சொல்கிறார். அவளை சம்மதிக்க வைப்பதாகச் சொன்ன பூசாரி... அபிநயத்துக்கு முன்பாக... மாரியம்மாளை கோயிலிலேயே பலாத்காரம் செய்துவிட... மாரியம்மாள் இதை, தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்துகொள்ள... பூசாரியை கொலை செய்துவிட்டு தூக்குத்தண்டனையால் மரணிக்கிறான் அண்ணன்.

தாசி அபரஞ்சி வீட்டில் இரவு நேரத்தில் தங்கவிரும்பும் அபிநயம் அதற்கு ஒரு உத்தி செய்கிறார். மெத்தையில் போர்வையால் கால்முதல் தலைவரை முகம் தெரியாதபடி முழுக்க மூடி தூங்குவதுபோல் பாவனை செய்ய.... அவரின் மனைவி, போர்வையை இழுத்துப் பார்க்கும்போது... ‘"தூங்கும்போது போர்வையைத் திறந்து பார்த்தா எனக்குக் கோபம் வரும்'’எனச் சொல்கிறார்.

மறுநாள்... தன் வீட்டு வேலைக்காரனை போர்வையால் மூடி தூங்கச் சொல்லிவிட்டு, தாசி வீட்டுக்கு போகிறார். முதலாளியின் சொகுசுக் கட்டிலில் தூங்க ஆசைப்பட்ட வேலைக்காரன், காரணம் தெரியாமலேயே படுத்துத் தூங்குகிறான்.

"கணவர் தூங்குறாரே... எழுப்பினால் திட்டுவாரே...'’ என எண்ணி அபிநயத்தின் மனைவி அருகே படுத்துத் தூங்க... தாசி வீட்டிலிருந்து திரும்பிய அபிநயம், தன் மனைவி வேலைக்காரனுடன் படுத்திருப்பதைப் பார்த்து ‘"தப்பு நடந்திருக்குமோ'’என சந்தேகப்பட்டு... பூ ஜாடியால் அடித்து மனைவியைக் கொன்றுவிடுகிறார். இந்தக் கொலையிலிருந்து தப்பிக்க... வடநாட்டில் பிரபலமான ஒரு வக்கீலை பெரும் பணம்கொடுத்து அமர்த்தி, நீதிமன்றத்தில் வாதம்செய்ய வைக்கிறார். வக்கீலின் வாதத் திறமையால்... வேலைக்காரன் மீது கொலைப்பழி விழுகிறது. நீதிமன்றம் வேலைக்காரனை தூக்குமேடைக்கு அனுப்புகிறது.

அபிநயம் நடத்தும் பள்ளியின் ஆசிரியர் பரமாத்தீகர், கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கதாகாலட்சேபம் நடத்த... அந்தப் பள்ளியின் மாணவனான பாண்டியன் தன் தோழர்களுடன் வந்து... பகுத்தறிவுக் கேள்விகளை எழுப்ப... கலாட்டா ஏற்படுகிறது. "மொழியில் உயர்ந்தது தமிழா? சமஸ்கிருதமா?' என பாண்டியனுக்கும், இன்னொரு மாணவனுக்கும் இடையே விவாதம். இதில் தமிழ் மொழியே சிறந்தது என வாதிட்டு, பாண்டியன் வெல்கிறான். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகள் வேணிக்கு பாண்டியன் மீது பிரியம் ஏற்படுகிறது.

பள்ளியில் பெரியார் விழா’நடத்த பாண்டியன் அனுமதி கேட்க... நிர்வாகம் மறுக்க... தடையை மீறி விழா நடத்தியதால், அபிநயத்தின் அடியாட்கள் மூலம் பாண்டியன் கத்தியால் குத்தப்படுகிறான். மருத்துவமனையில் பாண்டியனைப் பார்த்து ஆறுதலாகப் பேசுகிறாள் வேணி.

இந்நிலையில் வேணி மீது ஆசைப்படுகிறார் அபிநயம். இதற்கு தலைமையாசிரியர் எதிர்ப்பு தெரிவிக்க... ஆசிரியர் பரமாத்திகர் உதவியுடன் தலைமையாசிரியரை கடத்தி, தன் வீட்டில் சிறை வைத்துவிட்டு வேணியை அடைய... அவளுடைய வீட்டுக்குப் போகிறார் அபிநயம்.

இந்தநேரம் பாண்டியனை தனது வீட்டுக்கு வரச்சொல்லி, தன் தோழி மூலம் கடிதம் கொடுத்து அனுப்புகிறாள் வேணி.

பாண்டியனை எதிர்பார்த்திருந்த வேணிக்கு அபிநயம் வந்தது அதிர்ச்சியைத் தர... இந்த பலவந்த முயற்சியில் தன்னைக் காக்க அபிநயத்தை கத்தியால் கொன்றுவிடுகிறாள் வேணி. அப்போது பாண்டியன் வர... பரமாத்தீகர், பாண்டியனை கொல்ல முயற்சிக்க... பாண்டியனைக் காப்பாற்ற பரமாத்திகரையும் கொன்றுவிடுகிறாள் வேணி.

"அபிநயத்தின் மீதும், பரமாத்திகர் மீதும் பாண்டியனுக்கு நெடுநாள் பகை. அதனால் இருவரையும் கொன்றது பாண்டியனே...' என்கிற வாதத்தால் நீதிமன்றம் குற்றம் செய்யாத பாண்டியனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க... இந்த தீர்ப்பைக்கேட்டு அதிர்ச்சியில் வேணி நீதிமன்றத்திலேயே இறந்துவிடுகிறாள்.

பாண்டியன் தூக்கிலிடப்படுகிறான்.

-இதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் தம் இளம்வயதில் எழுதிய இரண்டாவது நாடகமான ‘"தூக்குமேடை'யின் கதை.

("தூக்குமேடை'யின் தொடக்கக் காட்சி... "பராசக்தி'யின் முக்கியக் காட்சியானது)