(52) கசப்புகளை இனிப்பாக்கிய தலைவர்!

நான் தி.மு.கழகத்திற்காக தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம்... இப்படி கடுமையாக உழைத்து வந்தேன். அப்படியிருந்தும் சின்னச் சின்ன கசப்புகள்.

ஆனாலும் தலைவர் கலைஞர் சித்தப்பா மீது எனக்கு எப்போதும் இருக்கும் மதிப்பால்... பாசத்தால்... இந்த கசப்புகளை தாங்கிக்கொண்டேன்.

ஆனால் முன்புபோல்... தலைவர் கலைஞரை நான் விரும்பியபோதெல்லாம் சந்தித்துப் பேசும் வாய்ப்பையும் சிலர் தடுத்தனர்.

Advertisment

தலைவர்-தொண்டன் உறவு மட்டும் என்றால்... நான் அதையும்கூட பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன். ஆனால்... தகப்பன்-மகன் உறவு போன்றது தலைவர் கலைஞருக்கும், எனக்குமான உறவு. அதனால் சில விஷயங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அந்தச் சமயம்... அண்ணன் வைகோ அவர்கள் தி.மு.கழகத்திலிருந்து பிரிந்து "மறுமலர்ச்சி தி.மு.கழகம்' கட்சியைத் தொடங்கினார்.

radharavi

Advertisment

திரைப்படத் தயாரிப்பாளர் தாணு சார் ம.தி.மு.க.வில் இருந்தார். எனக்கு மனக்கசப்பு ஏற்பட்ட அந்த நேரத்தில் மயிலாப்பூர் தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் தாணு சார் போட்டியிட்டார். தாணு சார் எனக்கு நல்ல நண்பர் என்பதால் அவருக்காக தேர்தல் பணி செய்தேன். தேர்தல்ல தாணு சார் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் நான் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள்... வைகோ அண்ணனுடன் இருந்தேன்.

வைகோ அண்ணனுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவர் தி.மு.கழகத்தில் இருந்தபோது... அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ததை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்..

மறுமலர்ச்சி தி.மு.க.வில் தொடர்ந்து நான் இருந்திருக்கலாம். ஆனால்... என்னமோ தெரியவில்லை... எனக்குப் பிடிக்கவில்லை.

உள்ளூர் பிரச்சினைகளுக்காக போராடாமல்... மற்ற பிரச்சினைகளுக்காக அவர் தீவிரமாக போராடியது எனக்குப் பிடிக்கவில்லை.

அதனால் ம.தி.மு.க.விலிருந்து ஒதுங்கினேன்.

இந்தச்சமயம்... நான் தந்தை ஸ்தானத்தில் வைத்து மதிக்கும் திரு.வீரபாண்டி ஆறுமுகம் அவர்களும், மிகுந்த தன்னம்பிக்கையாளரான... எனது அன்புச் சகோதரர் டி.ராஜேந்தர் அவர்களும்... "சின்னச் சின்ன மனக்கசப்புகளை சரி பண்ணிக்கலாம்... திரும்ப தாய் கழகத்துக்கு வரணும்' என என்னை அழைத்தனர்.

அதன்படி... தலைவர் கலைஞரைச் சந்தித்து... மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்தேன்.

1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.கழகம் அமோக வெற்றிபெற்று... தலைவர் கலைஞர் மீண்டும் முதல்வரானார்.

அந்த காலகட்டத்தில் ஒரு சம்பவம்...

என்னுடைய நண்பர் சந்திரசேகர் சுப்பையா. சென்னை மெடிக்கல் காலேஜில் படித்தவர். அவருடைய கல்யாணம் தலைவர் கலைஞர் தலைமையில் நடந்தது.

வாழ்க்கையில் பல சிக்கல்கள், வளர்ச்சிகளைச் சந்தித்தார் சந்திரசேகர் சுப்பையா. இப்போது மலேசியாவில் குடும்பத்தோடு செட்டிலாகிட்டார். "நாதஸ்வரம்' என்கிற தொலைக்காட்சி சேனலையும் நடத்திக்கொண்டு வருகிறார்.

நெருங்கிய நண்பர் என்பதால் சந்திரசேகர் சுப்பையா எப்போது சென்னைக்கு வந்தாலும் நான் அவரை சந்திப்பது வழக்கம். கூடவே... எங்களுடைய நண்பர்கள் வட்டாரமும் சந்தித்துப் பேசுவோம்.

ஒருமுறை சந்திரசேகர் சுப்பையா சென்னைக்கு வந்தபோது என்னை மீட்பண்ணி ஒரு பவர் புராஜெக்ட் சம்பந்தமாகப் பேசினார். ஒரு அமெரிக்க கம்பெனியுடன் சேர்ந்து சென்னையில் "பவர்' சம்பந்தப்பட்ட பிஸ்னஸ் பண்ணப்போவதாகவும், கம்பெனிக்கு "த்ரி சக்தி' என பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லி, என்னிடம் சில உதவிகளைக் கேட்டார்.

"சென்னையில பவர் தொடர்பான திட்டம் வந்தா நல்லா இருக்குமே' என நினைத்து நானும் உதவுவதாகச் சொன்னேன்.

அப்போது... ஆற்காடு வீராசாமி அண்ணன்தான் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். ஆனாலும் நான் நேராக தலைவர் கலைஞரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னேன். தலைவர் கலைஞரும் "ஓ.கே.'’ சொல்லிவிட்டு "ஆற்காடு வீராசாமிகிட்ட சொல்றேன்'’ எனச் சொன்னார்..

"தலைவரே ஓ.கே. சொல்லிட்டாரே' என நானும், சந்திரசேகர் சுப்பையாவும் தைரியமாக இருந்தோம். ஆனால் இந்த விஷயத்தில் என்ன நடந்தது... ஏது நடந்தது... இடையில யார் வந்து ஆட்டத்தை கலைத்தது... இது எதுவும் எனக்கு தெரியவில்லை. சில அரசியல் சித்து விளையாட்டு காரணமாக விஷயம் வேறமாதிரி போய்விட்டது.

radharavi

"திடீர்' என சந்திரசேகர் சுப்பையாவ கைது செய்ய வாரண்ட் கொடுத்துட்டாங்க.

"ஏன், எதுக்கு?' என எங்களுக்கு விடை தெரியவில்லை.

இந்த பிரச்சினையால சந்திரசேகர் சுப்பையா அந்த பவர் புராஜெக்ட்டை பாதியிலேயே விட்டுட்டு மலேசியாவுக்கு போய்விட்டார். அதுக்கு அப்புறம் அவர் தமிழ்நாட்டுப் பக்கமே வருவதில்லை. இந்த விஷயத்தால எனக்கு பெயர் கெட்டுப்போனதுதான் மிச்சம். சந்திரசேகர் சுப்பையாவும், நானும் முயற்சி பண்ணி நடக்காம போன அந்த பவர் புராஜெக்ட் நீண்ட நாட்களுக்கு அப்புறம் வேறொரு வடிவத்தில் செயலுக்கு வந்தது. அதுதான் எண்ணூர் பவர் புராஜெக்ட்.

-இப்படி சின்னச் சின்ன கசப்புகள் காரணமாக நான் தி.மு.கழகத்திலிருந்து வெளியேறியபோதும்... அ.இ.அ.தி.மு.கழகத்தில் சேர்ந்தபோதும் என் மனதில் தலைவர் கலைஞர் மீதான பாசம் குறையவில்லை... மதிப்பும் குறையவில்லை.

ஓஹஸ்ரீந் ர்ச் ஹப்ப் ற்ழ்ஹக்ங்ள் ஙஹள்ற்ங்ழ் ர்ச் ய்ர்ய்ங்.... இப்படி ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

எல்லாத் தொழிலும் தெரிந்தவன்... "ஒரு தொழிலிலும் மாஸ்டராக முடியாது...' என்பது இதன் அர்த்தம்.

தலைவர் கலைஞர் விஷயத்தில் இந்த ஆங்கிலப் பொன்மொழியே பொய்மொழியாகிவிட்டது.

கலைஞர் மிகவும் அபூர்வமானவர்.

தான் ஏற்ற ஒவ்வொரு துறையிலும் அவர் மாஸ்டராகத் திகழ்கிறார்.

இந்தியாவே ஆர்வமுடன் கவனிக்கும் அரசியல் பாணி கொண்ட.... அரசியல் தலைவர்.

லட்சோப லட்சம் தொண்டர்களை கட்டுக்கோப்புடன் வழி நடத்தும் தலைவன்.

இலக்கியப் படைப்பால் தமிழ்த்தாய்க்கு தொண்டு செய்கிற தலைமகன்.

மேடைப்பேச்சில் வல்லவர், திரைத்துறையில் ஜாம்பவான்...

இப்படி... தான் ஏற்ற ஒவ்வொரு துறையிலும் மாஸ்டராகத் திகழ்பவர் தலைவர் கலைஞர் சித்தப்பா அவர்கள்.

கலைஞர் உடல்நலமின்மையால் பேசமுடியாமல் இருக்கலாம்... ஆனால் கலைஞர் பேசவேண்டாம்... அவர் பார்த்தாலே போதும்... தொண்டர்களான உடன்பிறப்புகள் உற்சாகமடைவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் அசைக்க முடியாது.

தி.மு.க.வை தாங்கி நிற்கிற பெரிய பாறை.... தலைவர் கலைஞர்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை பார்க்கும்போது... சில சமயம் கலைஞரைப் பார்ப்பதுபோலவே இருக்கும்.

தளபதியார் மார்ச் மாதம் பிறந்தவர். நான் ஜூலையில் பிறந்தவன்.

என்னைவிட மூன்று, நான்கு மாதங்கள் மூத்தவர் தளபதி. ஆனாலும் அவர் என்னை "அண்ணன்' என்றுதான் அழைப்பார். நான் அவரை "தம்பி' என்பேன்.

தளபதி மீது எனக்கு எப்பவுமே ‘லைக்கிங்’ உண்டு.

அப்பாவைப்போல... புள்ளிவிவரம் கொடுத்துப் பேசுவார். தேர்தல் சமயங்களில் டூர் புரோக்ராம் உள்ளிட்ட விவரங்களை என் வீட்டிற்கு வந்து ஆலோசித்திருக்கிறார் தளபதி.

நண்பர்... நடிகரும் எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர் வீட்டு திருமணவிழாவில்... (அப்போது நான் அ.தி.மு.க.வில் இருந்தபோதும்) "முதலமைச்சராக தகுதிபடைத்த தலைவர் தளபதிதான்' என பேசினேன்.

நான் பல வருடங்களாக அவரைப் பார்த்து, அறிந்து வருபவன் என்ற முறையில்தான் அப்படிச் சொன்னேன்.

(நானும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அப்போது நான் பேசிய ஒரு வசனத்தால் ஷூட்டிங்கே நின்றது.... கலைஞர் தலையிட்டு சரிசெய்தார்... )