(63) முதல் ஷூட்டிங்கில் நிஜ ஃபைட்!

சென்னை -சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில்... நான் முதன்முதலாக நாடகத்தில் நடித்தேன். அதன்பின்... சென்னை -புதுக்கல்லூரி என் அரசியல் வாழ்க்கைக்கும், சினிமா வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருந்தது.

நியூ காலேஜ் ‘ஃபைன் ஆர்ட்ஸ்’ டிபார்ட்மெண்ட்டின் ஜெய்லானி சாரும், ரபீக் சாரும் நாங்கள் நிறைய நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடத்த உதவினார்கள். (ரபீக் சார் பின்னாளில் டைரக்டர் பி.வாசுவிடம் சேர்ந்து பயிற்சி பெற்று ஒரு படத்தை இயக்கினார். அதில் என்னை வில்லனாக நடிக்க வைத்தார். நடிகை கஸ்தூரியும் அந்தப் படத்தில் நடித்தார்.)

புரட்சித்தலைவரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி அவர்களின் மகன் பாலசுப்பிரமணியன் இன்டர் காலேஜ் போட்டிகளில் எங்கள் கல்லூரி சார்பாக நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் ‘"ரத்தக்கண்ணீர்'’ படத்தில் வரும் ‘"குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது'’ பாடலைப் பாடுவார்.

Advertisment

"ஏது? வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது?'’என இந்தப் பாடலின் இடையிடையே என் அப்பா வசனம் பேசியிருப்பார். அந்த வசனங்களை நான், என் அப்பாவின் குரலில் பேசுவேன். எனக்கு என் அப்பாவின் குரலில் மிமிக்ரி பேச கற்றுக்கொடுத்தவர் நகைச்சுவை நடிகர் ‘மிமிக்ரி’ ராமநாதன். "பராசக்தி' படத்தில் சிவாஜி பேசிய பொறிபறக்கும் கலைஞரின் வசனத்தை என் அப்பாவின் குரலில் பேசக் கற்றுக்கொடுத்தவரும் ராமநாதன்தான். அவர்தான் என் மிமிக்ரி குரு.

கலைஞர் எழுதி என் அப்பா நடித்த... புகழ்பெற்ற ‘"தூக்குமேடை'’ நாடகத்தின் ஹைலைட்டான காட்சிகளை எடுத்து, சுருக்கி கல்லூரிப் போட்டியில் நாடகமாக போட்டு நடித்திருக்கிறேன்.

நியூகாலேஜ் அனுபவம் என் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் உந்துதலாக அமைந்தது.

Advertisment

நியூ காலேஜில் பி.ஏ. தத்துவம் பட்டப் படிப்பை முடித்தபின்... மேற்படிப்பு படிக்கிறதா? வேலைக்குப் போறதா?’ என எனக்குள் யோசனை ஓடிக்கொண்டிருந்தது.

இருந்தாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல்... என் நண்பர்கள் ராம்குமார், ஹரி, ஏழுமலை, திலகர், கோகுல் உட்பட சுமார் 30 நண்பர்கள் புடைசூழ... எங்க தேனாம்பேட்டை ஏரியாவை வலம் வருவோம்.

எங்கள் தெரு முக்கில் பிரபல இசையமைப்பாளர் டி.வி.தட்சிணாமூர்த்தி அவர்களின் வீட்டு மாடியில் சாரதா அம்மாள் குடியிருந்தார். பாண்டிபஜாரில் அப்போது மிகப்பிரபலமாக இருந்த மகாலட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் அவர்.

radharavi

(இன்று இந்திய சினிமாவில் மிகப்பிரபலமாக இருக்கும் டான்ஸ் மாஸ்டர் சின்னிபிரகாஷின் சித்திதான் சாரதா அம்மாள். அன்று மிகப்பிரபலமாக இருந்த இரட்டை டான்ஸ் மாஸ்டர்களான சின்னி-சம்பத் ஆகியோரில் சின்னி மாஸ்டரின் மனைவி சி.லீலாவுடைய தங்கைதான் சாரதா அம்மாள். சின்னிபிரகாஷின் அம்மா லீலா, "நாகமலை அழகி'’என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். 1964-ல் வந்த இந்தப் படத்தில் என் அப்பாவும், சி.எல்.ஆனந்தன் அவர்களும் நடித்திருக்கிறார்கள். இது சின்னி-சம்பத் தயாரித்த படம்.)

ஒருநாள்... தெருமுக்கில் நாங்கள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்கும்போது... ""ரவி... இங்க வா, எங்க மாமா (சின்னி மாஸ்டர்) ஒரு படம் எடுக்குறார். அதுல நீ நடிக்கிறியா?'' என சாரதா அம்மாள் கேட்டார். ’

""என்ன படம்? என்ன கேரக்டர்?''’’

""கன்னடப் படம். இப்ப நீ எப்படி ஃப்ரெண்ட்ஸ்களோட சுத்திக்கிட்டிருக்கியோ... அதுமாதிரி... காலேஜ்ல ஜாலியா வளைய வர்ற ஸ்டூடண்ட் வேஷம்''’’

""எனக்கு கன்னடம் தெரியாதே ஆன்ட்டி''’’

""அதெல்லாம் கத்துக்குடுப்பாங்க. முழுக்க பெங்களூரைச் சுத்தி ஷூட்டிங்''’’

"பெங்களூர்... ஆஹா சூப்பரான ஏரியாவாச்சே...' என குஷியான நான் கன்னடப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

அடையாறு பகுதியில் சின்னி மாஸ்டரின் வீட்டில்தான் கன்னட மொழியில் ஓரளவு பேசவும், கேரக்டர்களுக்கான ரிகர்ஸலும் நடந்தது. இந்தப் படத்தில் நடிக்க வந்த "பாப்புலர் டயர்ஸ்' குடும்பத்து பையனான ஜீவன் எனக்கு இங்குதான் நண்பரானார்.

கன்னட நடிகர் விஷ்ணுவர்தன்-நடிகை பாரதி ஒரு ஜோடியாகவும், சின்னிபிரகாஷ் - பத்மப்ரியா ஒரு ஜோடியாகவும் நடிக்க... நான், ஜெயமாலினி உட்பட பலரும் நடிக்க... "ரகசிய ராத்ரி'’என்கிற அந்த கன்னடப் படத்தின் படப்பிடிப்பு 01-12-1974-ல் பெங்களூர் பகுதிகளில் தொடங்கியது. எனக்கு மட்டுமில்லை... ஜெயமாலினிக்கும், பத்மப்ரியாவுக்கும்கூட "ரகசிய ராத்ரி'’முதல் படமாக அமைந்தது. எனக்கு சம்பளம் ரூபாய் 1,500.

அந்தச்சமயம் நான் சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருந்தேன்.

ஆனாலும்... சோதனையாக... என் முதல் சினிமாவில் முதல் காட்சியாக... ஒரு பெட்ரூம் ஸீனில்தான் நடிக்கவேண்டி வந்தது. பெண்ணை தொட்டு நடிக்கவேண்டி வந்ததால்... அந்தக் காட்சி எடுக்கப்பட்டதும்... குளித்துவிட்டேன்.

இந்தப் படத்தை தயாரித்தவர் நடிகை பாரதியின் அப்பா ஜனார்த்தனன். (நடிகை பாரதி தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உட்பட பல ஹீரோக்களுடன் நடித்தவர்)

ஒரு நாள் பாரதியின் அப்பாவும், நாங்களும்... சுவிஸ் காட்டேஜில் படப்பிடிப்பின்போது... லஞ்ச் பிரேக்கில் எல்லோரும் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களுடன் சாப்பிட்ட பாரதியின் அப்பா... தன் கையிலிருந்த பேக்கை கீழே வைத்துவிட்டு... மறந்துபோய்விட்டார். நானும், ஜீவனும் அதை எடுத்து திறந்து பார்த்தால்... கட்டுக்கட்டாக பணம். சில நிமிடங்களில் பதறி அடித்து... பேக்கை தேடிக்கொண்டிருந்தார் பாரதியின் அப்பா. கொஞ்சநேரம் விளையாட்டு காட்டிவிட்டு பணப்பையை அவரிடம் கொடுத்தோம். திறந்து பார்த்து திருப்தியாகி கிளம்பிவிட்டார்.

"என்னடா இது... ஒரு நூறு ரூபா நமக்கு குடுத்திருக்கலாமே...'’என நானும், ஜீவனும் சலித்துக்கொண்டோம்.

""ரவி, நாங்க தயாரிச்ச "நாகமலை அழகி'’படத்துல உங்க அப்பா நடிச்சார். எங்களுக்காக நிறைய பணத்தை விட்டுக்கொடுத்தார். ‘எம்.ஆர்.ராதாவோட மகன்ங்கிற ஒரே காரணத்தால... அவர் செய்த உதவிக்கு நன்றியா... உன்னை இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறேன்''’என சின்னி மாஸ்டர் சொல்ல... என் அப்பாவை நினைத்து மிகப்பெருமையாக இருந்தது.

"நாம செய்ற உதவியும், நடந்துக்கிற நேர்மையும்... உடனடி பலனைத் தராவிட்டாலும்... பின்னாளில் பேசப்படும்'’என்கிற நம்பிக்கையை எனக்குள் உருவாக்கியது.

ஒருமுறை படப்பிடிப்பிற்கு... பணம் அவசரத்தேவை. என்னையும், ஜீவாவையும் சென்னைக்கு அனுப்பி... சின்னி மாஸ்டரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் பணம் வாங்கிவரச் சொன்னார்கள். அதன்படி வந்து, அந்த அம்மாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு... பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்-ரிஸர்வ்டு கம்பார்ட்மெண்ட்டில் பயணித்து அந்தப் பணத்தை பத்திரமாகக் கொண்டுபோய் சேர்த்தோம்.

இந்தப் படம் முன்பாதி கருப்பு-வெள்ளையாகவும், பின்பாதி வண்ணமாகவும் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் விஷ்ணுவர்தனும், பாரதியும் தீவிரமா காதலிக்க ஆரம்பிச்சாங்க. படப்பிடிப்பு முடிஞ்சு... படம் ரிலீஸாகுற நேரத்தில் கல்யாணம் செய்துகொண்டார்கள்.

அப்போதிலிருந்தே காவிரி சம்பந்தமாக தமிழக-கர்நாடக பிரச்சினை இருந்ததை... படப்பிடிப்பு ஸ்பாட்களில் நேரடி அனுபவம் மூலமா என்னால் உணரமுடிந்தது.

அப்போது... பெங்களூர் யூனிவர்சிட்டி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. அங்கு படப்பிடிப்பு நடந்தபோது... உள்ளூர் ஆட்கள் நிறையபேர் பஸ், வேன்ல கிளம்பி வந்து... "தமிழ் ஆட்கள் இங்க வந்து நடிக்கிறீங்களா?'’எனக் கேட்டு ஒரே கலாட்டா பண்ணிட்டாங்க. எங்களைத் தாக்க ஆரம்பிச்சிட்டாங்க. உயிர் தப்பி வந்தது பெரிய விஷயமா இருந்தது.

அங்கிருந்து தப்பித்து வேளாண் கல்லூரியில் ஷூட்டிங் நடத்தினோம். அங்கும் நிறைய காலேஜ் பசங்க திடீர்னு வந்து கலாட்டா செய்தார்கள்.. கேமராவை உடைக்க முயற்சித்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுல இருந்தவர்கள் எல்லாரையும் அடிக்கிறாங்க. நானும், ஜீவாவும் பெண்களை பத்திரமா காப்பாற்றி வெளியே கொண்டுவந்தோம். அங்க நடந்த பிரச்சினையில ஜெயமாலினியோட ஆடை கிழிந்துவிட்டது.. அப்போது என்னோட நீலநிற கோட்டை எடுத்து அவங்களுக்கு கொடுத்தேன். அவங்களை காப்பாற்றப் போன எனக்கு செம அடி. (விஷ்ணுவர்தன் சாருக்கும் உள்ளூர் ஆட்களுக்கும் ஏதோ பிரச்சினை. அதனால இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருக்கலாம்னும் சொன்னாங்க.)

இந்த இரண்டு சம்பவத்தால் "ஷூட்டிங்கை நடத்தலாமா வேண்டாமா?' என யோசித்துக்கொண்டிருந்தபோது... ’"மவுண்ட் காமர்ஸ்' பெண்கள் காலேஜ் இருக்கு. அந்த காலேஜ் சிவாஜி நகர்ல இருக்கு. அந்த இடத்துல தமிழ் ஆட்கள் நிறையபேர் இருக்குறாங்க’ என கேள்விப்பட்டோம். அதனால கொஞ்சம் தைரியமாக கிளம்பி அந்த இடத்துக்கு போனோம். எதிர்பார்த்தபடியே அங்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. கல்லூரிக் காட்சிகளை அங்கேயே எடுத்து முடித்தோம்.

(புதுப்புது போதை)

------------------------------------

"தடால்'!

செயின்ட் பீட்ஸ் ஸ்கூல் சுவரில்... ஃபாதர் ரஸ்தாளியைப் பற்றி எவனோ எழுதி வைத்து... கீழே என் பெயரை எழுதி வைத்துவிட... என்னை பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். என் அப்பாவின் மேனேஜர் சண்முகப்பிள்ளை என்கிற சாம் அப்பா (அவரை நாங்கள் "சாம் அப்பா'’என்றுதான் அழைப்போம்) “""நான் பார்த்துக்கிறேன்... வா... கோர்ட்ல கேஸ் போடுவோம்''’ எனச் சொல்லி என்னை ஸ்கூலுக்கு அழைத்துப் போனார். ""நீ இங்கயே இரு''’என என்னை நிறுத்திவிட்டு... ஆபீஸிற்குள் போனார் சாம் அப்பா. பாதி கதவு வழியாக நான் பார்த்துக்கொண்டிருக்க... "தடால்'’என ஃபாதர் ரஸ்தாளியின் காலில் விழுந்துவிட்டார் சாம் அப்பா.

வெளியே வந்தவர்... "சஸ்பெண்ட் ரத்து. பாதிரிய மிரட்டிப்புட்டேன்ல' என்றார்.

""என்னண்ணே ஆச்சு?''’என என் அம்மா கேட்க... ""ராதா மகனையே சஸ்பெண்ட் செய்வீங்களா? உங்கள கோர்ட்டுல ஏத்திடுவேன்னு சொன்னதும் பாதிரி பயந்துட்டாரு''னு’சொல்ல... நான் அங்கு நடந்ததைச் சொன்னதும்... அம்மா சிரித்தார். அதென்னவோ தெரியவில்லை... நான் என் பள்ளி வாழ்க்கையிலிருந்து பார்த்திருக்கிறேன்... பெரும்பாலான ஆங்கிலோ-இந்தியன்களுக்கு மக்கள்திலகம் எம்.ஜி.ஆரைத்தான் பிடித்திருக்கிறது.