(65)

கமல் சிபாரிசு!

லகநாயகன் கமல்ஹாஸன் எனக்கு நீண்டகால நண்பர்.

எங்க தெருமுனையில் நாங்கள் முப்பது நண்பர்கள் ஒண்ணா கூடுவோம்... அதில் பி.வாசுவும் உண்டு. அப்படியே கேங்கா கிளம்பி... எல்டாம்ஸ் ரோடு வழியாகப் போய்... சாம்கோ ஓட்டல் மாடியில உட்காருவோம். கமல்ஹாஸனும் அவருடைய நண்பர்களுடன் தன் வீட்டுக்கு எதிரேயுள்ள அந்த ஓட்டலுக்கு வருவார். நான் கமலுடன் பழகுவதற்கு முன்... கமலின் பெரிய அண்ணன் சாருஹாஸன் அவர்களுடன் எனக்குப் பழக்கம். நானும் சாருஹாஸனும் ஒரே தட்டில் சுண்டல் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம். கமலின் இளைய அண்ணன் சந்திரஹாஸன் அவர்களுடன் நான் அவ்வளவாக பேசிப் பழகியதில்லை என்றாலும்... அவருடனும் எனக்கு பரிச்சயம் இருந்தது. இவங்க மட்டும் இல்லாம சந்தானபாரதி, கேமராமேன் ஸ்ரீராம், ருத்ரய்யா, நடிகை ரமாபிரபாவோட தம்பி ரெட்டி, டி.எஸ்.பாலையா அப்பாவோட மகன் நாகராஜு, ரமேஷ், சிட்டி, சுந்தர், சண்முகம், மனோ, ராமகிருஷ்ணன்... எல்லாருமே அடிக்கடி சாம்கோ ஹோட்டலில் மீட் பண்ணுவோம்.

Advertisment

பழைய நடிகை சந்திரகாந்தா அவர்களோட தம்பி விஜயகுமார் கேங்க் லஸ் கார்னரில் உள்ள சாந்தி விஹார் ஓட்டலுக்கு வருவார். விஜயகுமார் அப்போதிலிருந்து இன்றுவரைக்கும் ரொம்ப ஸ்டைலிஷாக இருப்பார். (டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் அவரை கட்டாயப்படுத்தி சேர்த்தேன் நான். அவர் மிகக்கடுமையான உழைப்பாளி. சந்திரகாந்தாம்மா வீட்டுக்கு நாங்கள் போகும்போது அங்கே மலேசியா வாசுதேவன், கங்கைஅமரனைப் பார்த்திருக்கேன். சந்திரகாந்தா அவர்களின் நாடகங்களுக்கு இளையராஜா சகோதரர்கள் "பாவலர் பிரதர்ஸ்' என்னும் பெயரில் மியூஸிக் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.)

குரூப் குரூப்பாக குறும்பு கொப்பளிக்க... ஹோட்டல்களில் சந்தித்து நட்பு வளர்த்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான்... நான் இரண்டு கன்னடப் படங்களில் நடித்திருந்த நிலையில்... என்னைப்பற்றி இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சாரிடம் கமல்ஹாசன் சொன்னதுடன்... கே.பி. சாரை சந்திக்கும்படியும் என்னிடம் சொன்னார்.அதன்படி கே.பி.சார் ஆபீஸ் சென்றேன்.

""யார் நீங்க? என்ன வேணும்?''’’

Advertisment

""டைரக்டர் பாலசந்தர் சாரைப் பார்க்கணும்''’’

""நான்தான் பாலசந்தர்''’என்றார் கே.பி. சார்.

""உங்களைப் பார்க்கச் சொல்லி கமல் என்னை அனுப்பி வச்சார்''’என்றேன்.

என்னை மேலும், கீழுமாக பார்த்தவர்... நடந்து காட்டச் சொன்னார்.

"நாம காலேஜ்ல ஹீரோ மாதிரி இருந்தோம். இவரென்ன நடந்துகாட்டச் சொல்றார்' என யோசித்த நான், ""கமல் உங்களை பார்க்கச் சொன்னார். அதான் வந்தேன். வாய்ப்புக் கொடுத்தால் கொடுங்க'' என்றேன்.

""டேய்... ஒங்க அண்ணன் வாசுவே எனக்கு பயப்படுவான்...'' என்று சொல்லி சிரித்தார்.

நான் கமலை சந்தித்து, ""ஏப்பா நீ சொன்னபடி கே.பி.சார பார்த்தேன்'' என்றேன்.

""என்னப்பா நீ அவர் நடந்துகாட்டச் சொன்னா நீ பண்ணலையாமே'' என்றார் கமல்.

""அட போப்பா... வாய்ப்பு கிடைச்சா கிடைக்குது, கிடைக்கலைன்னா போகுது... எனக்கு சினிமா மேல இன்ட்ரஸ்ட்டே இல்ல...'' என்றேன்.

""அப்படியெல்லாம் சொல்லாதப்பா... சரி சரி அட்ஜஸ்ட் பண்ணிப் போ...'' என்றார் கமல்.

"மன்மதலீலை'’படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்தார் கே.பி. சார்.

இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயப்ரதா. அவருக்கு இது முதல் படம். கதைப்படி... பிறகு கமலுக்கு ஜோடியாகிவிடுவார் ஜெயப்ரதா. எனக்கு இன்னொரு ஜோடியாக வாணி நடித்தார்.

சாத்தனூர் டேமில்... ’பட்... பட்... படாபட்...’ பாடல் காட்சி படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.

லாங் ஷாட்டில் நான், வாணியுடன் பேசிக்கொண்டிருப்பதுபோல நடிக்கச் சொன்னார்கள். "பேசுகிற சத்தம் கேட்கக்கூடாது' என்றும் சொன்னார்கள்.

காட்சி படமாக்கப்பட்டது.

""அந்தப் பொண்ணுகிட்ட என்ன பேசிக்கிட்டிருந்த?''’எனக் கேட்டார் கே.பி. சார்.

""நான் எதுவும் பேசலையே...''’’

""யேய்... அந்தப் பொண்ணுகிட்ட அட்ரஸ் கேட்டதானே...?''’’

எனக்கு ஆச்சரியம். லாங்ஷாட்டில் ஏதாவது பேசி நடிக்கவேண்டும் என்றால்... என்ன பேசமுடியும்? ""எந்த ஊரு? எங்க குடியிருக்கீங்க?''னு கேட்டேன். அதனால்“""ஆமாம்... சார்''’என்றேன்.

radharavi

யூனிட்டில் இருந்த எல்லோரும் சத்தமாக சிரித்துவிட்டார்கள். (அன்று முதல்... இன்று வரை... யாராவது ‘"ஸைலண்ட்டா பேசுங்க'’என்று சொன்னாலே... எனக்கு கே.பி. சார் ஞாபகம்தான் வரும்).

நான் காலேஜில் படிக்கும்போது ஜாவா பைக் (நம்பர் ஙபஆ 572) வைத்திருந்தேன். அந்த பைக்கை கொடுத்துட்டு ஜாவா கம்பெனியோட வேற மாடல் பைக் வாங்கினேன். (நம்பர் பஙஊ 6998). அந்த பைக்கை "மன்மத லீலை' படத்துல நான் ஓட்டிட்டு வருவேன். என்னுடைய முதல் தமிழ்ப் படத்துல என் பைக்கும் என்னோடு சேர்ந்து நடித்திருக்கும். "மன்மதலீலை'யில் எனக்கு டப்பிங் கொடுத்தது என் பள்ளித்தோழன் சுப்பிரமணி. பிறகு ’கண்மணி சுப்பு’ என பெயர் மாற்றிக்கொண்டார். கவிஞர் கண்ணதாசன் சாரோட பையன். அவர்தான் எனக்கு குரல் கொடுத்தார்.

(என் முதல் தமிழ்ப்படத்தில் நான் என் சொந்தக்குரலில் பேச வாய்ப்பில்லாமல் போனபோதும்... பின்னாளில் நான்... (இப்போதும்) டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவராக இருந்ததும், இருப்பதும் ஆச்சர்யமான விஷயம்)

"மன்மதலீலை'’ படம் வெளியானது. நான் என் அம்மாவை கூட்டிக்கொண்டுபோய்... ராம் தியேட்டரில் படம் பார்க்க வைத்தேன். படத்தின் டைட்டில் கார்டில் ‘அறிமுகம் எம்.ஆர்.ஆர்.ரவி என பெயர் போட்டிருந்தார்கள். படம் முடிந்து நானும் என் அம்மாவும் தியேட்டரிலிருந்து வெளியே வந்தபோது... யாரோ இரண்டு பேர் என்னை பார்த்துவிட்டு, “"டேய் இந்தப் பையன்தான்டா இந்தப் படத்துல நடிச்சிருக்கான்'’எனச் சத்தமாகச் சொன்னாங்க. இதைக் கேட்டதும் எங்க அம்மாவுக்கு பெருமையாக இருந்தது.

"மன்மதலீலை'’ படத்தை பார்த்துவிட்டு என்னோட பள்ளி-கல்லூரி நண்பர்கள்... "ரவிக்கு ரொம்ப பெரிய கேரக்டர்...'’என கிண்டல் செய்தார்கள். படத்தில் எனக்கு ரொம்ப சின்ன கேரக்டர்தான்.

கேரக்டர் சின்னது என்றாலும் இந்தப் படம் மூலம் எனக்குக் கிடைத்த பெரிய நண்பர்... கே.பி. சாரிடம் உதவி டைரக்டராக இருந்து, பின்னாளில் இயக்குநராக ஆன... டைரக்டர் அமீர்ஜான். என்னை பட்டை தீட்டிய இயக்குநர் அமீர்ஜான்.

"மன்மதலீலை'’ படத்திற்குப் பின் உடனடியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. எனது நண்பர்கள் ஆனந்த், மாரீஸ், தாஜ் உள்ளிட்டவர்கள் சேர்ந்து நாடகம் போடுவார்கள். இவர்களின் நாடகக் குழுவில் வருடத்திற்கு இரண்டு நாடகங்களில் நான் நடிப்பேன். அப்படி ஒருமுறை நாடகத்திற்கான ரிகர்ஸல் நடக்கும்போது... டைரக்டர் டி.கே.போஸ் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் அமீர்ஜான்.

(அன்றிலிருந்து நான், அமீர்ஜான், டி.கே.போஸ் ஆகிய மூவரும் ‘நகமும் சதையும்’ என்பார்களே... அப்படியான நண்பர்களானோம்.)

அப்போது மெஜஸ்டிக் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்து ‘"முருகாலயா ஸ்டுடியோ'’என்கிற பெயரில் நடத்திவந்தார் என்.ராமன் அவர்கள். டி.கே.போஸும், ராமனும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். ராமன் தயாரிப்பில், டி.கே.போஸ் இயக்கும் படத்திற்காக என்னை அழைத்துக்கொண்டுபோய் ராமனிடம் அறிமுகப்படுத்தினார் டி.கே.போஸ்.

""படத்துல உனக்கு வில்லன் வேஷம். நீ டயலாக் பேசிக் காமி''’என்றார் போஸ்.

""எம்.ஆர்.ராதா புள்ளய டயலாக் பேசச் சொல்லித்தான் செலக்ட் பண்ணணுமா?. அதெல்லாம் வேண்டாம். அவரை செலக்ட் பண்ணீருங்க''’என ராமன் சொல்லிவிட்டார்.

அந்தப் படம்... ‘"திருக்கல்யாணம்'.’

ஸ்ரீகாந்த் அந்தச்சமயம் மிக பிஸியான ஹீரோ. அவரும்... ‘"நேரில் பார்ப்போமா?'’என வியந்து நான் ரசித்த நடிகை ஸ்ரீவித்யாவும் நாயகன்-நாயகி. நான் வில்லன். விஜயகுமாரும் இந்தப் படத்தில் நடித்தார்.

படப்பிடிப்பின்போது... பரணி ஸ்டுடியோ அருகில் உள்ள "திருநெல்வேலி ஹோட்டலிலிருந்துதான் இட்லி, தோசை, வடை உள்ளிட்ட டிபன் வேண்டும்' என கண்டிஷனாகச் சொல்லி வரவழைத்துச் சாப்பிடுவார் ஸ்ரீகாந்த். எனக்கும் அந்த ஹோட்டல் உணவை அறிமுகப்படுத்தினார்.

(சினிமா கைகொடுக்குமா? என்கிற எண்ணம் எனக்குள் வந்த நிலையில்... அமெரிக்காவில் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டேன்)

---------------------------------------------

பிக்னிக் ஸ்பாட்டில்...!

சென்னை -சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் படிக்கும்போது... சாத்தனூர் டேமுக்கும், செஞ்சிக் கோட்டைக்கும் பிக்னிக் போயிருந்தோம். என்னை பள்ளி நாடகம் மூலம் முதன்முதலில் நடிகனாக்கிய அருள்சாமி வாத்தியாரும், ஹெட்மாஸ்டர் டி-னட்டோ அவர்களும்... இன்-சாரஜ்.

செஞ்சி மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்கப் போனபோது... நானும், பிரட்ரிக் குரியனும், ஆல்பிரட் கோமஸும் பஸ்ஸிலேயே உட்கார்ந்துகொண்டோம். கோட்டையைப் பார்க்கப் போகவில்லை. ஹெட்மாஸ்டரும் பஸ்ஸிலேயே அமர்ந்திருந்தார். அப்போது... பிச்சைக்காரர் ஒருவர்... ஹெட்மாஸ்டரிடம்... ‘"அய்யா... அய்யா...'’ என தொடர்ந்து சொன்னபடி பிச்சை கேட்க... ‘"கோ... கோ...'’னு சொன்னார் ஹெச்.எம். பிச்சைக்காரரோ அவரை விடுவதாக இல்லை.

"உனக்குத்தான் தமிழ் தெரியுமே... அந்த பிச்சைக்காரனை விரட்டு'’னு ஹெச்.எம். ஆங்கிலத்தில் சொன்னார். இதுதான் சான்ஸ்னு... பிச்சைக்காரரை திட்டுகிற சாக்கில்... ஹெச்.எம்.மையும் திட்ட... அதை ஓரளவு புரிந்துகொண்ட ஹெச்.எம். “"போதும்...போதும்'’’ என்றார்.

இரவு... சாத்தனூரில் தங்கியிருந்தபோது... எப்பவும் எங்களுக்கு ஆதரவான அருள்சாமி சார்... காற்றடைத்த தலையணையை வைத்து உறங்கிக்கொண்டிருந்தார். நைஸாக... காற்று அடைக்கப்பட்ட வால்வை திறந்துவிட... அருள்சாமி சாரின் தலை உயரத்திலிருந்து கீழிறங்குவதை பார்த்து சிரித்துக்கொண்டிருக்க... ஹெச்.எம். வந்தார் டார்ச் அடித்தபடி. நாங்கள் தூங்குவதுபோல பாவனை செய்தோம்.

டார்ச்சை முகத்தில் அடித்துப் பார்த்தார். அப்போது ஆல்பிரட் கோம்ஸ் கண்களை திறந்தபடி இருக்க... “"ஏன் கண்ணை முழிச்சிருக்க?'’ எனக் கேட்க... ‘""முகத்துல டார்ச் அடிச்சா... கண்ணு திறக்கும் சார்''’ எனச் சொல்ல... டார்ச்சை அணைத்துவிட்டு... திரும்ப அடித்தார். திரும்ப ஆல்பிரட் கண்ணைத் திறந்து வைத்திருக்க... இப்படியே... ஹெச்.எம்.மை டென்ஷன் பண்ணிவிட்டோம்.