(64) 2 நாள் மயக்கம்!

"களவும் கற்றுமற...' என்பதற்கு ஏற்ப... எல்லா போதைப் பழக்கங்களையும் தொட்டுப் பார்த்தவன் நான்.

எனது முதல் சினிமாவான... ’"ரகசிய ராத்ரி'’ கன்னடப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க பெங்களூரு பகுதியில் எடுக்கப்பட்டது. அப்போது கஞ்சா சிகரெட்டும் புகைத்த அனுபவம் உண்டு.

தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும்போது... லீவு தேவைப்பட்டால் நானும், அதில் நடித்த என் நண்பன் ஜீவாவும் ஒரு வேலை செய்வோம்.

Advertisment

மாலையில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது... ஒரு கஞ்சா சிகரெட்டை ஹீரோ விஷ்ணுவர்தன் சாரிடம் கொடுத்துவிடுவோம். அது கஞ்சா சிகரெட் என்பது தெரியாமல் வாங்கிப் புகைத்துவிடுவார். இந்த போதை உண்டாக்கும் தாக்கத்தால்... மறுநாள் ஷூட்டிங்கிற்கு விஷ்ணுவர்தன் சாரால் வரமுடியாது.

அப்புறம்... அன்றைய தினம் படப்பிடிப்பு கேன்ஸலாகிவிடும்.

radharavi

Advertisment

எனது இரண்டாவது திரைப்படமாகவும் "எல்லாம் பணத்துக்காக'’(எல்லாம் அனாஹாஹே) என்கிற கன்னடப் படமே அமைந்தது.

என் முதல் படத்தை உருவாக்கிய டான்ஸ் மாஸ்டர்கள் சின்னி-சம்பத், இந்தப் படத்தையும் உருவாக்கினார்கள். முதல் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்த சின்னி சாரின் மகன் சின்னி பிரகாஷ்... இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்தப் படத்திற்காக பெங்களூருவில் தங்கியிருந்தபோது... "நாட்டுச்சாராயத்தில் பீர் மிக்ஸ் பண்ணினால்... அது உயர்ரக மதுபோல இருக்கும்' என்பதை கண்டுபிடித்தோம் நானும் ஜீவாவும்.

ஒருமுறை வட இந்தியர்கள் பயன்படுத்தும் ‘"பாங்கு'’ என்கிற போதையை அடிக்க முடிவுசெய்து... ஒரு சேட்டிடம் பாங்கு அடித்தேன்.

அந்த போதையை நுகரத்தொடங்கிய அந்தத் தருணம் மட்டும்தான் நினைவில் இருந்தது.

அதன்பின்... கண்விழித்தபோது... லாட்ஜில் படுத்திருந்தேன்.

டான்ஸர் ஜப்பான் ரவியிடம் ""என்ன நடந்துச்சு?''’எனக் கேட்டேன்.

அவர் சொன்ன ஃபிளாஷ்பேக் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பாங்கு போதை ஏறியதும்... மெஜஸ்டிக் கார்னரில் பெரிய தகராறு பண்ணியிருக்கிறேன். போலீஸார் என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துப்போய் என்னை ரிமாண்ட் செய்வதற்காக... எனது உடலில் அங்க அடையாளங்களையெல்லாம் பார்த்து எழுதியிருக்கிறார்கள்.

விஷயம் தெரிந்து வந்து... படக்குழுவினர் வருத்தம் தெரிவித்து என்னை லாட்ஜிற்கு அழைத்து வந்து படுக்க வைத்திருக்கிறார்கள்.

""நேத்து இவ்வளவு நடந்துபோச்சா?''’எனக் கேட்டேன்.

"நீ பாங்கு அடிச்சது நேத்து இல்ல... முந்தாநேத்து'’’ என ஜப்பான் ரவி சொன்னதும் எனக்கு கூடுதல் அதிர்ச்சி.

கிட்டத்தட்ட இரண்டுநாள் மயக்கத்தைத் தந்திருக்கிறது பாங்கு போதை.

(அதன்பிறகு நான் பல சேட்டு வீட்டு விசேஷங்களுக்கு போயிருக்கிறேன். என்றாலும்... ‘"பாங்கு அடிக்கிறீங்களா?'’என்று கேட்டாலே... ‘"பங்க்'காகி... ஒதுங்கி வந்துவிடுவேன்.)

நான் சபரிமலைக்கு மாலை போட்ட பிறகு... யூனிட் சாப்பாடு சாப்பிடுவதில்லை.

"வழிகாட்டி'’படத்தின் கதையை எழுதிய நாகர்கோவில் பத்மநாபன் சார் எங்கள் குடும்ப நண்பர். சென்னையில எங்களுடைய வீடு இருந்த அதே தெருவில்தான் பத்மநாபன் சார் குடும்பம் இருந்தது. பத்மநாபன் சார் இறந்ததுக்கு அப்புறம் அவரோட மனைவி சரஸ்வதி அம்மாள் ரெண்டு மகள்கள் அமரா, அனுராதா ஆகியோருடன் பெங்களூருவில் குடியேறிவிட்டார்கள்.. விரதச் சாப்பாடு சாப்பிட பத்மநாபன் சார் வீட்டுக்குத்தான் போவேன். சரஸ்வதி அம்மாள் என்னை மகன் மாதிரி உபசரிப்பார்கள். இன்றைக்கு வரைக்கும் நாங்கள் நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம். இப்போதும், நான் பெங்களூரு சென்றால்... அனுராதாவின் வீட்டில்தான் தங்குவேன்.

இந்தப் படத்தில் எனக்கு வில்லன் வேஷம். படத்தில் எனது உதவியாளராக என்னுடன் நடித்தவர் சக்திபிரகாஷ் (நடிகர் அர்ஜுனின் அப்பா. இதனால் நான் இப்போதும் சகோதரர் அர்ஜுனை, ‘"முதலாளி' என்றுதான் அழைப்பேன். அபிமான் ஸ்டூடியோஸ் உரிமையாளர் பாலகிருஷ்ணா அவர்களும் என்னுடன் இந்தப் படத்தில் நடித்தார். தமிழில் நான் நடித்த படங்களை கன்னடத்தில் ரீ-மேக் செய்யும்போது... என் அப்பா ஏற்ற கேரக்டர்களை ஏற்று நடித்தவர் பாலகிருஷ்ணாதான். அவருக்கு காது கேட்பதில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. இருந்தாலும் எதிரில் பேசுபவர்களின் லிப் மூவ்மெண்ட வைத்து வசனத்தை பேச ஆரம்பித்துவிடுவார்.. நல்ல திறமையான நடிகர்.

படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றால்... சங்கரலிங்கபாண்டியன் லாட்ஜிலும், கென்ஞ்சாம்பாள் லாட்ஜிலும் தங்குவது வழக்கம்.

இதேபோல... போ(வ்)ரிங் ஹாஸ்பிடல் எதிரே இருக்கும் சிட்டிஸன் லாட்ஜிலும் தங்குவோம். எதிரே மிகவசதியான சிட்டிஸன் பார் உண்டு. இந்த லாட்ஜில் இடம் கிடைக்காதபோது... செலக்ட் ஹோட்டலில் தங்குவோம். அங்கே ஜீ.வி. பார் பிரபலம். அங்கு அடிக்கடி போவதுண்டு.

(நான் பின்னாளில் ரஜினி சாருடன் நடிக்கும்போது... பெங்களூரு அனுபவங்களைச் சொல்லும்போது... ஜீ.வி. பார் பற்றியும் சொன்னேன். "நானும் அங்க அடிக்கடி போவதுண்டு'’என ரஜினி சொல்லியிருக்கிறார்)

கன்னடப் படத்திற்கு டப்பிங் பேசப் போவதற்காக நானும், நண்பர் ஜீவாவும் பைக்கிலேயே பெங்களூரு போனோம்.

நட்ராஜ் தியேட்டர் அருகில் சேஷாத்ரிபுரம் பக்கத்தில் இருந்தது டப்பிங் தியேட்டர்.

அங்குதான் எனக்கு பிரபல கன்னட பின்னணிக் குரல் கலைஞர் புஷ்பாவும், அவரின் தோழி நிர்மலாவும் அறிமுகமானார்கள்.

(சில வருடங்களுக்குப் பின்... ‘"வைதேகி காத்திருந்தாள்'’ படத்தில் விஜயகாந்த் அவர்களுடன் நானும் நடித்தபோது... படப்பிடிப்பிற்காகப் போயிருந்தபோது... பாரத் ஹோட்டலில் எங்களுக்கு ரூம் போடப்பட்டிருந்தது.

""இந்தப் படத்தில் கதாநாயகி யார்?''’என நான் விசாரித்தபோது... கன்னடத்தில் பிரபலமான நடிகை பிரமிளா ஜோஷி... விஜயகாந்த்திற்கு ஜோடியாக நடிப்பதாகச் சொல்லவும்... நான் பிரமிளா ஜோஷியைப் பார்க்கச் சென்றேன் அவரின் அறைக்கு.

என்னைப் பார்த்ததும்... ""என்ன ரவி... எப்படி இருக்கீங்க? என்னைத் தெரியுதா?''’எனக் கேட்டார் பிரமிளா ஜோஷி.

""தெரியுதே... நீங்க டப்பிங் ஆர்டிஸ்ட் புஷ்பா''’என்றேன்.

புஷ்பா பெரிய நாயகியாகிவிட்டார் பிரமிளா ஜோஷி என்ற பெயரில். பிறகு நான் நடிக்க மறுத்த ‘"கரையெல்லாம் செண்பகப்பூ'’ படத்தின் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த சுந்தரை திருமணம் செய்துகொண்டார்.

இன்றுவரை சுந்தர்-பிரமிளா தம்பதி எங்கள் குடும்ப நண்பர்களாக இருக்கிறார்கள்.)

இந்த கன்னடப் படத்தில் ஒரு பார் ஸீனுக்கு டப்பிங் பேசும்போது... ஒரு கெட்ட வார்த்தையையும் என்னையறியாமல் பேசிவிட்டேன். அது படத்திலும் இடம்பெற்றுவிட்டது.

(என் நண்பர் "உலகநாயகன்' கமல் என்னை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் சிபாரிசு செய்தார்.... என் முதல் தமிழ்ப் படம் ‘"மன்மத லீலை')

----------------------------------------------

விளையாட்டுப் பிள்ளை!

சென்னை -சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் படிக்கும்போது... என்னை "சீஸர்' நாடகத்தில் நடிக்க வைத்து... என்னை முதன்முதலாக நடிகனாக்கியவர் அருள்சாமி சார்.

பசங்க செலவுக்கு காசில்லேன்னா... உடனே அருள்சாமி சாரோட சைக்கிள் ஸீட்டை கழட்டி வித்திடுவானுங்க.

நாடக ரிகர்ஸல் நடக்கும்போது... ‘"ரவி... என் சைக்கிள் ஸீட்டை திருடிட்டாங்க'னு சொல்லுவார். உடனே நாங்க ஆளுக்கு கொஞ்சம் பைசா வசூல் பண்ணி... புது ஸீட் வாங்கி மாட்டிவிட்டு... அருள்சாமி சாருக்கு ஸர்ப்ரைஸ் கொடுப்போம்.

செயின்ட் பீட்ஸ்ல நான் படிக்கும்போது... "ஸ்கூலுக்கு பஸ் வாங்கித்தர உதவணும்'னு என் அப்பாகிட்ட கேட்டாங்க. ஸ்கூல் பஸ் நிதிக்காக ஒரு நாடகம் போட்டார் அப்பா.

அந்தச் சமயம்... என் ஃபிரெண்ட் பத்ரியோட அப்பா டி.வி.எஸ்.ல இருந்தாரு. அவர் மூலமா அப்ப எங்கப்பா பஸ் வாங்கிக் கொடுத்தாரு.

செயின் பீட்ஸில் ஒன்பதாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு படிக்கிற வரை... மூன்று ஆண்டுகளும்... நாங்கள் வலிமையான வாலிபால் டீம் வீரர்களாக இருந்தோம். ‘ஆங்கிலோ-இந்தோ’ பள்ளிகளுக்கான மேட்சில் வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.

வாலிபால் மூலம் ஸ்கூலுக்கு பெருமை சேர்த்ததால்... எங்களுக்கு தோதான சில சலுகைகள் கிடைத்தன. டீமில் இருக்கும் எங்க செட் அடிக்கடி லீவு போட்டுக்குவோம். ஸ்கூலுக்கு லேட்டா வந்தாலும் உள்ளே... அனுமதிப்பார்கள்.

நாங்கள் வாலிபாலை சாக்காக வைத்து ஜாலியாகத் திரிவதால் "நாங்கள் படிப்பில் கவனமாக இல்லை' என ஹெட்மாஸ்டர் டி-னட்டோ நினைத்தார். அதனால்... ‘"பத்தாவது மாணவர்கள் சப்ளிமெண்ட் எக்ஸாமில் பாஸ் ஆனால்தான் 11-ஆம் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்...' எனச் சொல்லிவிட்டார்.

"இந்த எக்ஸாமில் நானும், ஆல்பிரட்டும் தேறமாட்டோம்...' என எல்லாரும் பேசினாங்க. ஆனா... முழுமூச்சா படிச்சு... ‘"படிப்பிலயும் கெட்டி'ங்கிற மாதிரி... நல்ல மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றோம். அதிலும் ‘டிரிக்னாமெட்ரி’ என்கிற சப்ஜெக்ட்டில்... (இப்போது அந்த சப்ஜெக்ட் இல்லை) 75 மார்க் எடுத்திருந்தேன். அதுவரை என்னை வில்லனாக பார்த்து வந்த ஹெச்.எம். இந்த மார்க் எடுத்தபிறகு என்மேல் பிரியம் காட்டினார். இது கடினமான சப்ஜெக்ட். அதுவும்... எங்க ஹெச்.எம். எடுத்த சப்ஜெக்ட்.