(61) அ.தி.மு.க. அனுபவங்கள்!

நான் டெல்லி சென்று ராகுல்காந்தி அவர்களை சந்திப்பதற்கு... விமான டிக்கெட் போட்டுக் கொடுத்தவர் தமிழக காங்கிரஸ் பிரமுகர் நாசே ராமச்சந்திரன். "நடிகர் சங்க நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கத்தான் ராகுலை சந்தித்தேன் என்றாலும்... ராதாரவி காங்கிரஸ்ல சேரப்போறார்'’என செய்திகள் பரவின.

ஒரு வாரத்துக்குப்பின்... ‘"மிடாஸ்'மோகன் அவர்களும், வெற்றிவேல் அவர்களும் போன் செய்தனர்.

என் தங்கை ரதிகலாவின் கணவருக்கு வேண்டப்பட்டவர் வெற்றிவேல்.

Advertisment

""எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்''’எனச் சொன்னார்கள்.

என் தங்கையின் வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது.

"மிடாஸ்'மோகன் நல்ல மனிதர். அவரிடம் “""எனக்கு அண்ணா தி.மு.கவும் வேண்டாம், தி.மு.கவும் வேண்டாம்''னு சொல்லிவிட்டேன்.

Advertisment

ஆனால் அவரோ, "உங்களுக்கு உரிய முக்கியத்துவம் தர தலைமை விரும்புது...'’எனச் சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.

""எம்.ஜி.ஆரை சுட்டது எம்.ஆர்.ராதானு கோர்ட்டுல சொன்னாங்க. எம்.ஆர்.ராதா மகனான என்னை எம்.ஜி.ஆர். ஆரம்பிச்ச கட்சியில சேர்த்துக்கிட்டதுக்காக, நான் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றியோட இருப்பேன். மறுபடி அ.தி.மு.க.வுல தீவிரமா செயல்படுறதுபத்தி யோசிச்சுச் சொல்றேன்''’ எனச் சொன்னேன்.

மறுநாளும் "மிடாஸ்'மோகன் வந்தார். என்னைச் சமாதானப்படுத்தி... சம்மதிக்க வைத்தார்.

radharavi-jaya

அம்மா அவர்களைச் சந்தித்து... என்னோட அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பித்து... அம்மா கையால் வாங்கினேன்.

2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்தேன். மீண்டும் அம்மா முதலமைச்சர் ஆவார்கள்... என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது. அந்தச்சமயம் என் மகன் ஹரி ராதாரவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்ததால்... திருமண அழைப்பிதழில்... ’மாண்புமிகு முதலமைச்சர் அம்மா‘ என அச்சடிக்க விரும்பினேன்.

"தேர்தல் முடிவு வெளிவராத நேரத்துல அந்தமாதிரி அழைப்பிதழ்ல பெயர் போட்டா அது சட்டத்துக்கு புறம்பானதாக மாறிடும். புரட்சித்தலைவி போட்டியிட்ட தொகுதியில தேர்தல் முடிவ நிறுத்தி வைச்சிடுவாங்க... ஒரு வகையில் இது குற்றம்'’என சேகர்பாபு சொன்னார். அதனால் ’"புரட்சித் தலைவி அம்மா'’என்று மட்டும் அழைப்பிதழ்ல பெயர் போட்டேன்.

அம்மாவைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தேன்.

நான் எதிர்பார்த்தது மாதிரியே அண்ணா தி.மு.க. ஜெயிச்சு, புரட்சித்தலைவி அம்மா மீண்டும் முதலமைச்சரானார்.

முதலமைச்சரான பிறகு அம்மா கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சியாக அமைந்தது... என் மகன் ஹரி ராதாரவியோட திருமண நிகழ்ச்சிதான். திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.

அந்தக் கல்யாணத்தை மிகப்பிரமாண்டமா நடத்தினேன். காரணம்... ஒரு பெற்றோர், தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள். அப்படி... கடைசிப்பிள்ளைக்கு கல்யாணம் செய்துவைக்கும்போது... என்னோட குடும்பத்துல என் மகன் கல்யாணம் கடைசி கல்யாணம் என்பதால் அதை "கடலைமிட்டாய் கல்யாணம்'’எனச் சொல்வார்கள். விருந்தில் கடலை மிட்டாயும் வைக்கப்படும். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்கு ஏற்கெனவே திருமணம் செய்து வைத்துவிட்டதால்... என் மகன் திருமணம்... கடலை மிட்டாய் கல்யாணம் ஆனது.

கடவுள் ஆசிர்வாதத்தால் என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் உதவியால் என் மகனோட கல்யாணத்தை ’ஜாம்ஜாம்’ என நடத்தினேன். நிறையபேர் பொருட்களாக கொடுக்காமல் பணமாக கொடுத்து உதவி செய்தார்கள். நிறையப்பேர்களுக்கு நான் உதவி செய்திருக்கிறேன். அதனால் எனக்கு திருப்பி உதவி செய்தார்கள்.

தொடர்ந்து மீட்டிங்கில் பேச உடல்நிலை எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. எஸ்.எஸ். மாமா (நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்) உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு, "மீட்டிங்கில் மிகச்சத்தமாக பேசியதும் ஒரு முக்கிய காரணம்...' என டாக்டர்கள் சொன்னாங்க. "அவரோட இறப்புக்கு இதுவும் ஒரு காரணம்'னு சொன்னாங்க. அதனால் நான் மீட்டிங்ல பேசுவதை குறைத்துக்கொண்டேன். எனக்கு பைபாஸ் ஆபரேஷன் பண்ணப்பட்டது.

"முன்னமாதிரி மீட்டிங்ல பேசக்கூடாது'‘என டாக்டர்கள் சொன்னதால்... ""நான் மீட்டிங்கில் இப்போது பேசுவதற்கு வசதிப்படாது''’என அண்ணா தி.மு.க. தலைமையிடம் எழுதிக் கொடுத்தேன். நன்றாக ஓய்வெடுத்து உடல்நிலை நன்கு தேறியது.

2016 சட்டப்பேரவை தேர்தல் நேரம்...

""எனது உடல்நிலை இப்போது சீராக இருப்பதால்... மீண்டும் நான் கட்சிக் கூட்டங்களில் பேசுகிறேன்''’என கட்சித் தலைமைக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால்... தலைமையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

புரட்சித்தலைவியிடம் நேரடியாக பேசக்கூடிய சிலரில் ஒருவரான சேகர்பாபுவும், தி.மு.க.வில் இணைந்துவிட்டார். இதனால் தொடர்ந்து கடிதம் எழுதினேன். சுமார் முப்பது கடிதங்களாவது எழுதியிருப்பேன்.

"ஏழு மலைதாண்டிப் போகணும்'’என கதையில் சொல்வதுபோல... கட்சிக்காரர்கள் கடிதம் எழுதினாலும்... அது ஐந்து தடைகளைத் தாண்டித்தான் போகவேண்டும். இதனால் எனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இருந்தாலும் அம்மா அவர்கள் மீது எனக்கு மதிப்பு குறையவில்லை.

எனது சகோதரியின் மகன் ஐய்க் இயக்கிய "சங்கிலி புங்கிலி கதவ திற'’பட ஷூட்டிங்கிற்காக நான் பழனியில இருந்தேன். அப்போது பத்திரிகையாளர்கள் என்னிடம் "இந்த தேர்தல்ல யார் வெற்றி பெறுவாங்க?'’எனக் கேட்டார்கள்.

""அ.தி.மு.க.தான் ஜெயிக்கும். அம்மாதான் முதலமைச்சராவாங்க''’எனச் சொன்னேன்.

அதன்படியே... அம்மா ஜெயித்து, முதல்வராகி, புதிய சாதனையையும் படைத்தார்.

புரட்சித்தலைவி அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்... அவரைப் பார்ப்பதற்காகச் சென்றேன்.

மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் ஒரு அறையில் என்னை உட்கார வைத்தார்கள். சிறிது நேரத்தில் ஒரு டாக்டர் வந்து என்னிடம் விவரம் சொன்னார்.

டாக்டர் சொன்ன தகவலைத்தான் மீடியாவிடமும் நான் சொன்னேன்.

அம்மாவின் மரணச் செய்தி... என்னை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது. "அம்மா முதலமைச்சர் -நான் சட்டமன்ற உறுப்பினர். அம்மா கட்சித்தலைவர் -நான் தொண்டன்...' என்கிற நிலைகளைத் தாண்டி... மூத்த சகோதரியும், இளைய சகோதரனுமாக எங்களுக்குள் ஒரு பாசம் நிலவியது.

(தி.மு.க.வின் செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வராக்கப் பாடுபடும் பலரில் நானும் ஒருவனாக முனைப்போடு செயல்படுகிறேன். தி.மு.க. மேடைகளில் பேசிவருகிறேன். தி.மு.க. மேடைகளிலும் ‘ஜெயலலிதா அவர்களை அம்மா என்றுதான் குறிப்பிடுகிறேன். அம்மாவை திட்டியும் பேசுவதில்லை... பேசவும்மாட்டேன். என் உணர்வுகளுக்கு தி.மு.க. தலைமை மதிப்பளித்திருக்கிறது)

நான் ஜே.கே.ரித்தீஷ் அவர்களிடம்... என் வேதனையைச் சொன்னேன். அம்மாவுக்கு இறுதி மரியாதை செய்ய அவர்தான் என்னை அழைத்துச் சென்றார்.

அம்மா அவர்களை சிங்கம்போல் பார்த்துப் பழகிய நான்... இப்படி ஒரு பெட்டியில் மீளாத் துயிலில் வைக்கப்படுவார்... என கற்பனைகூட செய்திருக்கவில்லை.

கசிந்த கண்ணீரோடு... அம்மாவுக்கு இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தேன்.

ஆங்கிலத்தில் SPICK AND SPAN என்று சொல்வார்கள்.

அதாவது... extremely neat and clean..... ஆமாம்... அதிகப்படியான சுத்தம்.

வீடு அதிகப்படியான சுத்தமாக இருப்பதை நான் அனுபவப்பூர்வமாக அம்மாவைச் சந்திக்கப் போகும்போது பார்த்திருக்கிறேன். அவர் வீடு அதிகப்படியான சுத்தத்துடன் காணப்படும்.

ஆனால்... இயல்புப்படி... வீடு என்பது... கொஞ்சம் அழுக்குடனும் இருக்கவேண்டும்.

மியூஸியம் மட்டும்தான் அதிகப்படியான சுத்தத்துடன் இருக்கும்.

புரட்சித்தலைவி அம்மாவின் வீட்டைத்தான் மியூஸியமாக மாற்றப்போகிறார்களே...

(இனி என் சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்...)

ஸ்பெஷல் வணக்கம்!

சாத்தான்குளம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குப் போயிருந்தேன். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வரவும்... தேர்தல் பொறுப்பாளரான டி.டி.வி.தினகரன் அவர்களிடம் சொல்லிவிட்டு... காரிலேயே சென்னை வந்து... அம்மாவைப் பார்த்துவிட்டு... மறுபடி காரிலேயே சாத்தான்குளம் சென்றுகொண்டிருந்தேன். வழியில்... ஒரு லெவல் கிராஸிங்கில்... எல்லாருடைய கார்களையும் போலீஸார் ஓரங்கட்டினார்கள். நானும் காரைவிட்டு இறங்கி... ஓரமாய் நின்றிருந்தேன். நான் நிற்பது... போலீஸாருக்கு தெரியவில்லை. எதிர்புறத்திலிருந்து முதலமைச்சர் அம்மா வருவதால் போலீஸார் போக்குவரத்தை ஒழுங்கு செய்துகொண்டிருந்தனர்.

நாங்கள் நின்றிருந்த இடத்தை கடந்து சென்ற அடுத்தநொடியே... அம்மாவின் கார் நின்றது. காருக்குள் லைட் போடப்பட்டது.

கூப்பிட்டார் அம்மா. அப்போதுதான் போலீஸார் நான் அங்கு நிற்பதையே பார்த்தார்கள்.

நான் போய் அம்மாவைக் கும்பிட்டேன்.

""ரவி... உங்கம்மாவுக்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு?''’என விசாரித்தார்கள்.

நானும் பதில் சொல்லிவிட்டு... சாத்தான்குளம் தேர்தல் வெற்றிக்காக வாழ்த்தும் சொன்னேன்.

அம்மாவின் கார் புறப்பட்டுச் சென்றதும்... நாங்கள் புறப்பட்டோம். அம்மாவின் காருக்குப் பின்னாலும், எங்கள் காருக்குப் பின்னாலும் வந்த கட்சிக்காரர்கள்... அம்மா என்னிடம் காரை நிறுத்தி விசாரித்ததைப் பார்த்துவிட்டு... உடனே தகவலைப் பரப்பினார்கள்.

இதனால் நான் சாத்தான்குளம் போய்ச் சேருகிறவரை காரில் போய் வந்துகொண்டிருந்த கட்சிக்காரர்கள்... எனக்கு ரொம்ப ஸ்பெஷலாகவே வணக்கம் வைத்தார்கள்.

இப்போது நானும் டி.டி.வி.தினகரன் அவர்களும் அரசியலில் எதிரெதிராக இருந்தாலும்... நான் அ.தி.மு.க.வில் இருந்தபோது அவருடன் பழகியிருக்கிறேன். அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவராக... இருந்த... திறமையானவர் தினகரன்.

சினிமாவிலும், அரசியலிலும் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் "அதிர்ஷ்டம் அவசியம்'’என்பார்கள்.