(62) முதல் நடிப்பு!

ன் அப்பா நடிகவேள்’எம்.ஆர்.ராதாவின் "ரத்தக்கண்ணீர்'’படத்தின் வெற்றியும், தாக்கமும் ‘தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடத்தை இன்றும் வகிக்கிறது. "ரத்தக்கண்ணீர்'’படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து 1956-1957-ல் என் அப்பாவிற்கு "நல்ல இடத்து சம்பந்தம்'’, ‘"தாமரைக்குளம்'’போன்ற படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்ததால்... திருச்சி சங்கிலியாண்டபுரத்திலிருந்து எங்கள் குடும்பம் சென்னைக்கு ஷிஃப்ட்டாக வேண்டிய சூழல் வந்தது. அப்போது அறிவாலயத்திற்கு முன்னாடி ஒரு கார்னர் பில்டிங்கில் ஒரு நாடகக் கம்பெனி இருந்தது. அங்குதான் கொஞ்சநாள் இருந்தோம். பிறகு எனக்கு விவரம் தெரிந்து நாங்க குடிவந்தது தி.நகர் போக் ரோட்டிற்குத்தான். இப்போது நடிகர்திலகம் சிவாஜி அப்பா வீடு இருக்கிறதே... அந்த வீட்டுக்கு முன்னாடி இருந்த வீட்டில்தான் குடியேறினோம். அந்த வீடு இன்னமும் இருக்கிறது. (அப்போது சிவாஜியப்பா ராயப்பேட்டையில் இப்போது "சிவாஜி பிலிம்ஸ் ஆபீஸ்' இருக்கிற வீட்டில்தான் குடியிருந்தாங்க.)

"நல்ல இடத்து சம்பந்தம்', "தாமரைக்குளம்'’போன்ற படங்களில் என் அப்பா நடிச்சது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அந்த ஷூட்டிங்கெல்லாம் நான் பார்த்திருக்கேன். நாகேஷ் சார் நடிச்ச முதல்படம் "தாமரைக்குளம்தான்'’என்று அவரே சொல்லியிருக்கிறார். முக்தா சீனிவாசன் அவர்கள் டைரக்ஷன் பண்ணிய ‘தாமரைக்குளம்’ படப்பிடிப்பை நான் ஒருமுறை பார்க்கப் போயிருந்தபோது... சௌகார்ஜானகி அம்மாவ... என் அப்பா குதிரையில் வைத்து தூக்கிக்கொண்டு போவதுபோல காட்சி எடுத்தாங்க.

இப்படித்தான் எனக்கு சினிமா உலகம் பரிச்சயமானது.

Advertisment

நாடகம், சினிமா, சின்னத்திரை... என பல வடிவங்களில் நான் நடிகனாக இருக்கிறேன். இந்த 42 வருடங்களில்... பல மொழிகளில் சுமார் 350 படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து நடித்தும் வருகிறேன். பல்வேறு விருதுகளையும், மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறேன்.

’நடிகர் ராதாரவி’என்றால் எல்லாருக்கும் தெரியும்.

இந்த நடிகனை முதன்முதலில் நடிகனாக்கியது.... அருள்சாமி வாத்தியார் அவர்கள்தான்.

Advertisment

எனக்குள்ள என்னையும் அறியாம இருந்த நடிப்பு உணர்ச்சியைத் தூண்டிய குரு அவர்தான். அவரின் தூண்டுதல் இல்லாமல் இருந்திருந்தால்... ஒருவேளை... சினிமாப் பக்கம் வந்திருப்பேனாங்கிறது டவுட்டுதான்.

சென்னை -சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் வரலாறு மற்றும் தமிழ்ப் பாடம் நடத்தியவர் ஆசிரியர் அருள்சாமி. அவருக்கு கலை ஆர்வம் அதிகம். 1967-ஆம் ஆண்டு நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது... வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய "ஜூலியஸ் சீஸர்'’’ஆங்கில நாடகத்தை தமிழாக்கம் செய்து... அதில் என்னை ஜூலியஸ் சீஸராக நடிக்க வைத்தார்.

அதுதான் எனது முதல் நடிப்பு. அதில் நான், தம்பிதுரை, இப்போது தர்மபுரி ஆர்ச் பிஷப்பாக இருக்கும் லாரன்ஸ் ஃபயஸ், நடிகை தேவிகா அம்மாவின் தம்பி சக்கரபாணி, பி.எல்.முத்து, ராமலிங்கம் ஆகியோரும் இதில் நடித்தோம்.

நான் மேடையில் நடிகனாக அரங்கேற்றம் ஆவதற்கு எனக்கு சில தடைகளும் வந்தன. அதே சமயம்... ’கூடவே அதிர்ஷ்டமும் இருந்தது’ என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த நாடகத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தபோது, எனக்கு அம்மை போட்டுவிட்டது. ஒத்திகைக்கு வர முடியவில்லை. எனக்காக நாடகத்த நிறுத்த முடியுமா? நான் பண்ணவேண்டிய ஜூலியஸ் சீஸர் கேரக்டரை, என் சக மாணவ நண்பன் ஆற்காடு முரளிக்கு கொடுத்தார்கள். அவனுக்காக மறுபடியும் நாடக ஒத்திகையும் நடந்தது. ஆனால் நாடகம் நடக்க வேண்டிய நாள் தள்ளித் தள்ளிப் போனது. எனக்கு உடல்நலம் சரியாகி வந்ததும் அருள்சாமி வாத்தியார் மீண்டும் என்னையே ஜூலியஸ் சீஸர் கேரக்டரில் நடிக்க வைத்தார்.

1967-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

"மாய மோதிரம்'’திரைப்படத்தில் காந்தாராவ் அவர்கள் போட்ட டிரஸ்தான் ஜூலியஸ் சீஸர் கேரக்டருக்கு நான் போட்ட முதல் டிரஸ்.

அந்த கேரக்டருக்கு ரோமானிய ஆடைதான் அணியவேண்டும். ஆனாலும் நம்ம ஊர் மகாராஜா போடுற மாதிரியான அந்த ட்ரெஸ் போட்டு நடித்தேன்.

நான் முதன்முதலில் நடிகனான விஷயத்தில் அருள்சாமி வாத்தியாரை எப்படி மறக்க முடியாதோ.. அதேபோல... எங்கள் பள்ளியின் பிரின்ஸிபல் ஃபாதர் ரஸ்தாலி அவர்களையும் மறக்க முடியாது. அந்த நாடகத்துக்கான நடிப்பை சொல்லிக்கொடுத்தது அவர்தான். ஃபாதர் ரஸ்தாலி ரோமன்காரர். தமிழ் தெரியாது. ஆனாலும், நான் அந்த கேரக்டருக்கான நடிப்பை புரிந்துகொண்டு... எளிதில் கிரகித்துக்கொள்ளும்படியாக... ரொம்ப அழகாகச் சொல்லிக் கொடுத்தார்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால்... நாடகத்தின் கடைசியில் எல்லா செனட்டும் சேர்ந்து ஜூலியஸ் சீசரை கொல்வார்கள். அந்த சீனை அப்படியே பிரமாதமா நடித்துக் காட்டுவார் பாருங்க... அப்பப்பா... பார்க்கவே அவ்வளவு அருமையா இருக்கும். பாதிரியார் வெள்ளை அங்கிதான் போட்டிருப்பார். அது அழுக்கு ஆகிறத பத்தியெல்லாம் கவலையே படாமல் ஸ்டேஜில அப்படியே விழுந்து புரண்டு நடித்துக் காட்டுவார். அவ்வளவு அற்புதமான மனிதர்; அவரையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது.

அந்த நாடகத்துல நடந்த ஒரு காமெடியையும் மறக்க முடியாது. கிம்பரோட பிரதராக நடித்தவன் என் ஃபிரெண்ட் விஜயகுமார். கிம்பரா நடித்தது பிரெடிக் குரியன். கேசுவல்சா நடிச்சவர் பிஷப் லாரன்ஸ் பயஸ், கிம்பரோடு தம்பி வந்து கெஞ்சுவான். ஸ்கிரிப்டில் "மதிப்பிற்குரிய சீசர் அவர்களுக்கு தாழ்மையான வணக்கம்'’என்று டயலாக்கை சொல்லிவிட்டு ஸ்கிரீன்பிளேவிற்கு எழுதிய ’"முழந்தாள் இடல்'’ என்கிற குறிப்பையும் டயலாக்காக சொல்லிட்டான். ஒரே காமெடியாகி எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்த ஞாபகம் மறக்கவே முடியாது. அதிலிருந்து இன்னிக்கும் அவன் பட்டப்பெயரா "முழந்தாள் இடல் ’என சொல்கிற அளவிற்கு அந்தக் காமெடி ஆகிவிட்டது.

"பெரும் கூட்டம் ரசித்த... தமிழ் மொழியிலான "ஜூலியர் சீஸர்'’ நாடகம்' என்கிற சிறப்புடன் அமைந்தது அந்த நாடகம்.

இதில் இன்னொரு பெருமையான விஷயம்... இந்த நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் தரப்பட்டது. அந்தச் சான்றிதழை போப் ஆண்டவரிடம் கொண்டுபோய் கொடுத்து... போப்பின் ஆசி பெற்று வாங்கிவந்து எங்களுக்குத் தந்தார்கள்.

இந்த ஆசிர்வாதத்தை என் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே எப்போதும் நான் நினைத்துக்கொள்வேன்.

(ரகசிய ராத்ரி’என் முதல் சினிமா அனுபவம்...)

------------------------------------------------------------

அந்த நாள்!

சென்னை வந்து, நான், எங்க அக்கா சம்பத்ராணி, கோ-சிஸ்டர் ஞானவள்ளி மூன்று பேரும் தி.நகர் சுப்புராயன் தெருவில் இருக்கிற குண்டு சுப்பையா ஸ்கூலில்... (இப்ப தி.நகர் ஹைஸ்கூல்) சேர்ந்து படித்தோம். அங்கு எனக்கு மணி என்கிற சகமாணவன் நண்பன் ஆனான். மூன்றுமாதம்தான் அங்கே படித்தோம். பிறகு தி.நகர், அவர்லேடி ஸ்கூலுக்கு வந்துட்டோம். அவர்லேடி ஸ்கூல்ல நான் எல்.கே.ஜி.யில சேர்ந்தபோது நடிகர் அரவிந்தசாமியின் சித்தப்பா மகன் காளிதாஸ், என்.ஸ்ரீராம், ’ஆச்சி’ மனோரமா அம்மாவின் பையன் பூபதி, முத்துவீரப்பன், எல்.எஸ்.கணேஷ் இவங்களெல்லாம் என் வகுப்பு தோழர்கள்.

இந்த ஸ்கூலில் மேரி டீச்சர் ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருப்பாங்க. ஆனாலும்... ஒரு தாயைப்போல என்னை கவனித்துக்கொள்வார்கள். சிலசமயம் எனக்கு லூஸ்மோஷன் ஆகும்போது... அவங்க சுத்தம் செய்துவிட்டிருக்கிறார்கள்.

என் பெரியஅக்கா படித்த ஹோலிஏஞ்சல்ஸ் ஸ்கூலுக்கு உள்ளேதான் நான் படித்த அவர் லேடி ஸ்கூல்.

என் அக்காவின் தோழிகளான கமலா அக்கா (இப்ப இவங்க செட்டிநாடு ஆசிரமம் ஸ்கூல் தலைமை ஆசிரியைனு நினைக்கிறேன்), லட்சுமி அக்கா, சத்யா அக்கா, வசந்தா அக்கா, ஆஷா பரேக் அக்கா, கிட்டி சோப்ரா அக்கா... இவர்களுக்கெல்லாம் நான் செல்லப்பிள்ளை.

அடுத்ததாக நாங்க எல்லோருமே அப்படியே நான்காம் வகுப்பில் சாந்தோம் செயின்ட் பீட்ஸுக்கு படிக்க வந்தோம். அங்க நிறைய நண்பர்கள் கூட்டம் உருவானது. ஸ்ரீபிரியன், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்களோட பையன் நாமக்கல் பாலு அவர்களின் மகன் ராமலிங்கம், எனக்கு ஒரு வருஷம் ஜூனியராக இருந்த டி.ஆர்.ராமண்ணாவோட பையன் கணேஷ் ராமண்ணா, ’இலட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர். மகன் தம்பிதுரை அவங்க அண்ணன் கலைவாணன், பின்னாளில் செங்கல்பட்டு அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த ராஜேந்திரகுமார் இப்படி நிறையபேர் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

இதுதவிர கவிஞர் கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு, கலைவாணன் கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன் இவங்களெல்லாம் எனக்கு ஜூனியராக படிச்சாங்க. நடிகை தேவிகா அம்மாள் தம்பி சக்கரபாணி, பி.ரமேஷ், ஆல்பர்ட் ஃபெரோஸ், ஐ.ஓ.பி.யில கிரிக்கெட் பிளேயராக இருந்த எம்.சுந்தர், எட்வின் ஜேசுதாஸ், (கர்னலாக இருந்து ஓய்வுபெற்றவர்) டெரிக், ஆலன் டெக்கோஸ், ஆடம், முகமது இக்பால், அவரது தம்பி நாசர், ஜி.எஸ்.மணி, குலசேகரன் இப்படியொரு பெரிய நட்பு வட்டம்.

(1970-ல் படித்து முடித்து வெளியில் வந்தாலும் செயின்ட் பீட்ஸ் நண்பர்கள் கோபால் ராமானுஜம், ஜான்சன் ஜேக்கப், மைக்கேல் லாசரஸ், எட்வின் பானட், பி.சி.முத்து, பிரெடிக் குரியன், எம்.சுந்தர் மற்றும் சீதாராம் போன்றோருடன் இன்னமும் நெருங்கிய தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் ஜனவரி 26-ம் தேதி நாங்கள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.)

செயின்ட் பீட்ஸில் 4ஏ செக்ஷனில் படித்தேன். கிளாஸ் டீச்சர் மிராண்டா. ஃபாதர் ரஸ்தாலி... சேட்டை செய்யும் மாணவனை பென்சிலால் மண்டையில் குத்துவார். ஒரு முறை ‘ஃபாதர் ரஸ்தாலி இஸ் பேட் -பை எம்.ஆர்.ரவி’ என எவனோ சுவரில் எழுதி வைத்துவிட்டான். என்னைக் கூப்பிட்டு ஃபாதர் குரூஸக்கும், ஃபாதர் ரஸ்தாலியும் விசாரித்தார்கள். நான் எழுதவில்லை என்று சொன்னபோதும் என்னை ஸ்கூலிலிருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்.