(57) எம்.ஜி.ஆர். பாசம்! கலைஞர் கோபம்!
சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூரு வழியாக விமானம் கோயம்புத்தூர் வந்தது.
முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்... ஆகிய மூவரும் விமானத்திலிருந்து இறங்கி காரில் ஏறி அமர்ந்தார்கள்.
நான் புரட்சித்தலைவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். வண்டி கிளம்பும்போது புரட்சித் தலைவர் கை அசைத்தார்.
"நமக்குத்தான் கை காட்டுறாரா...'’என யோசித்தபடி... கும்பிட்டேன். அவரும் வணக்கம் தெரிவித்தார்.
முதலமைச்சர் கிளம்பிய பிறகு மற்ற பயணிகள் கிளம்பத் தொடங்கினார்கள்...
அப்போது ஒரு போலீஸ் ஆபீஸர் என்னிடம் வந்து... “"முதலமைச்சர் உங்களை இப்ப வெளியே போக வேண்டாம் இங்கேயே கொஞ்ச நேரம் இருந்துட்டு போகச் சொல்லீருக்கார்...'’என்றார்.
எனக்கு திகைப்பாக இருந்தது.
புரட்சித்தலைவர் ஏன் அப்படிச் சொன்னார்?
புரட்சித்தலைவரை வரவேற்க... அவரைப் பார்க்க... ஏர்போர்ட்டுக்கு வெளிய ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தார்கள்.
ஒருவேளை அந்த நேரம் நான் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்திருந்தால்... அவ்வளவுதான். அங்கு இருந்தவர்கள் எல்லாரும் “"இதுதான்டா எம்.ஆர்.ராதா மகன் ராதாரவி' எனச் சொல்லி... என்னைத் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு சிக்கல் வந்துவிடக்கூடாது. என்பதால்தான்... ‘"கூட்டம் கலைந்து சென்றபிறகு ராதாரவியை வெளியே அனுப்புங்கள்'’ என புரட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார்.
இதை உணர்ந்துகொண்ட நான், ரொம்ப நேரம் வெயிட் பண்ணிவிட்டு... பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியேவந்தேன்.
அந்த விஷயம்... புரட்சித் தலைவர்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையையும், என் மனதில் பெரிய தாக்கத்தையும் உண்டாக்கியது.
"ஜெமினி சினிமா'’வார பத்திரிகையில நான் ஒரு சிறுதொடர் எழுதி வந்தேன். ஒரு வாரம்... புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடனான சந்திப்பை நான் அந்த பத்திரிகைத் தொடரில் எழுதியிருந்தேன்.
அந்தச் செய்தியைத் தாங்கிய பத்திரிகை வெளியே வந்ததும்....
கோபாலபுரத்திலிருந்து போன் வந்தது.
தலைவர் கலைஞர் பேசினார்... ""என்னய்யா... இங்க வாய்யா''’எனச் சொன்னார்.
புரட்சித்தலைவருடனான சந்திப்பு பற்றி நான் எழுதியது சட்டென எனக்கு நினைவுக்கு வரவில்லை. "தலைவர் எதுக்கு கூப்பிடுறார்?'’என யோசித்தபடியே... உடனே புறப்பட்டு கோபாலபுரம் போனேன்.
தலைவர் கலைஞர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக இருந்த டேபிளில் ‘ஜெமினி சினிமா’ பத்திரிகை இருந்தது.
எனக்கு விஷயம் விளங்கிவிட்டது.
""என்னய்யா இது, இன்னும் அஞ்சு நிமிஷம் உன் கையை எம்.ஜி.ஆர். பிடிச்சிக்கிட்டிருந்தா அண்ணா தி.மு.க.வுல சேர்ந்திருப்பியா?''’என தலைவர் கோபமாக கேட்டார்.
விளக்கம் கேட்கும்போது... அந்தப் பத்திரிகைய அடிக்கடி கையில எடுத்து என்னோட முகத்துக்கு நேரா காட்டிக் காட்டி கோபமாக திட்டினார். நான் அந்த அளவுக்கு யார்கிட்டேயும் திட்டு வாங்கி பழக்கம் இல்லை. ’வீட்டுக்கு செல்லப்பிள்ளை’ எனச் சொல்லி எங்க நைனாவும், அம்மாவும் கூட என்னைத் திட்டினது இல்லை.
என்னைத் திட்டுவதற்கு தலைவர் கலைஞருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவர் எனது கட்சித்தலைவர். எங்கள் குடும்பத் தலைவரும் ஆவார்.
அப்படியே தலைவர் கலைஞரையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன்.
தலைவர் கலைஞர் ""என்ன இது''’கேட்டதற்கு எனக்கு பதில் வரவில்லை. என்னோட கண் கலங்குச்சி. உடனே நான், ""நான் வரேன் தலைவரே''’’எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
நான் புரட்சித்தலைவருடனான சந்திப்பை உருக்கமாகச் சொல்லியிருந்தேன். அதற்கு தலைப்பு வைத்தவர்கள்... "இன்னும் ஐந்து நிமிடம் பிடித்திருந்தால் அ.தி.மு.க.வில் சேர்ந்திருப்பேன்' என வைத்துவிட்டார்கள். "யாரோ செய்த தப்புக்கு நாம வாங்கிக் கட்டிக்கிட்டமே தலைவர்கிட்ட' என நினைத்தபடி படிக்கட்டில் நான் இறங்கிக்கொண்டிருந்தபோது... தலைவர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் அண்ணன் என் பின்னாடியே ""ரவி... ரவி நில்லு ரவி... அப்பா கூப்பிடுறாரு''’எனச் சொல்லியபடியே என் பின்னால் வந்தார்.
நான் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கீழே இறங்கிக்கொண்டிருந்தேன்.
சண்முகநாதன் அண்ணனோ... ""அட நில்லுப்பா... உன்னதான் அப்பா கூப்பிடுறாரு''னு சொன்னார்.. நான் உடனே நின்றுவிட்டேன்.
திரும்பி உள்ளே போய் தலைவர் கலைஞரைப் பார்த்தேன்.
""என்னய்யா... கோவமா''’என கேட்டபடி என் தோளைத் தட்டினார்.
அவ்வளவுதாங்க. அந்தநேரத்துல எல்லாமே முடிஞ்சி போச்சு. தலைவர் கலைஞர் பார்த்தாலே என்னோட மனசு மாறிடும்.
தலைவர் கலைஞர் ""என்னய்யா''’என பாசமா பேசினா பொட்டிப் பாம்பா அடங்கிடுவேன்... பாசமா தொட்டு பேசுனா நாய்க்குட்டி மாதிரி ஆகிவிடுவேன்.
பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பார்ப்பதற்காக கிளம்பிய சித்தப்பா வீ.கே.ராமசாமி அவர்கள், ""நீயும் வாடா''’என என்னையும் அழைத்துப் போனார். சிவாஜியப்பா மேக்-அப் போட்டுக்கொண்டபடியே உதவி இயக்குநர் வாசித்த எட்டு பக்கங்கள் கொண்ட டயலாக்கையும் கேட்டுக்கொண்டிருந்தார். மேக்-அப் முடிந்து கீழே வந்ததும்... ""ஓதுடா''’என்றார் உதவி இயக்குநரிடம். மறுபடி டயலாக்கை வாசித்துக் காண்பித்தார்.
அப்படியே கேமரா முன் போன சிவாஜியப்பா... ஒரே டேக்கில் முழு வசனத்தையும் பேசி நடித்து ஓ.கே. செய்தார்.
இதை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
அப்போது... கதாசிரியர் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், "முதலமைச்சர் சத்துணவு நிதி'க்கான புத்தகத்துடன் வந்தார். ‘நிதி தருகிறவர்களிடம் வாங்கவும், நிதிக்காக கலைநிகழ்ச்சி நடத்த விரும்புகிறவர்களிடம் கையெழுத்து வாங்கவும் முதலமைச்சர் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார்.
நான் தி.மு.க.வில் இருந்தாலும்... "பள்ளிக் குழந்தைகளுக்கான நல்ல திட்டமாச்சே'’என்பதால் கையெழுத்துப் போட்டேன்.
அடுத்த சில நாட்களில்... "சத்துணவு நிதிக்காக நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கெடுப்பவர்களுக்கும், நிதி அளிப்பவர்களுக்கும் ஒரு பவுன் மோதிரம் பரிசளிக்கப்படும்'’என தெரிவித்தார்.
நான் எஸ்.எஸ்.சந்திரன், அக்கா எஸ்.என்.பார்வதி... ஆகியோர் நாடகம் போட்டோம்... நிதி நிகழ்ச்சிக்காக.
அப்போது புரட்சித்தலைவர் டெல்லியில் திட்டக்கமிஷன் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு... தமிழகத்திற்கான நிதியை பெற்றுக்கொண்டு... சென்னை திரும்பியதும்... விமான நிலையத்திலிருந்து நேராக விழா நடந்த நேரு ஸ்டேடியத்திற்கு வந்துவிட்டார்.
அவர் வந்ததும் மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
மூன்றாவதாக என் பெயர் அழைக்கப்பட்டது.
என்னைப் பார்த்ததும்... ""எப்படி இருக்க ரவி? கல்லூரி விழாவுல பார்த்தப்போ... ’"உடம்பை நல்லபடியா பார்த்துக்கணும்'னு சொன்னேன். உடம்பை நல்லா வச்சுக்கணும்''’எனச் சொல்லியபடி ஒரு பவுன் மோதிரத்தை என் கைவிரலில் மாட்டிவிட்டார் புரட்சித்தலைவர்.
நான் சின்னச் சின்ன தொகைக்காக கஷ்டப்பட்டபோதும்... அந்த மோதிரத்தை அடகு வைக்கவோ... விற்கவோ... நினைக்கவில்லை. அந்த மோதிரத்தை இன்றும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
புரட்சித்தலைவர் தந்த மோதிரத்தை மட்டுமல்ல... புரட்சித்தலைவருடனான நினைவுகளையும் பொக்கிஷம்போல் பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன்.
என் வீடு ஏலத்திற்கு வந்த பிரச்சினையில் தொடங்கி... என் அம்மாவுக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா மீதிருந்த அபிமானம் வரையில்... குடும்ப ரீதியாக ஜெயலலிதாம்மாவுடனான எனது அனுபவங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
(அரசியல் ரீதியாக புரட்சித்தலைவியுடனான எனது அனுபவங்களைச் சொல்கிறேன்)