(56) எம்.ஜி.ஆர். செய்த அட்வைஸ்!
நான் சென்னை நியூ காலேஜில் படிக்கும்போது...
1972-ல் தி.மு.க.விலிருந்து அதன் பொருளாளராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நீக்கப்பட்டார். இதனால் தி.மு.க.வை கண்டித்து போராட்டம் நடத்த நியூ காலேஜ் மாணவர்களில் ஒரு பிரிவினர் முடிவு செய்து, மைதானத்தில் திரண்டபோது...
""எதுக்காகப் போராட்டம் நடத்துறீங்க. யாரோ ஒருத்தர கட்சியில இருந்து நீக்கீட்டாங்க. அதுக்கு நாம ஏன் வகுப்ப புறக்கணிச்சிட்டு போராட்டம் நடத்தணும்? இதனால எல்லாரோட படிப்பும்தான் பாதிக்கப்படுது''’எனச் சொன்னேன்.
ஒரு நல்ல எண்ணத்தில்தான் நான் இதைச் சொன்னேன். ஆனால்... "எம்.ஆர்.ராதாவோட மகன் தி.மு.கழகத்துக்கு ஆதரவா பேசுறான்'’எனச் சொல்லி.. எனக்கு ’"தி.மு.க.காரன்'’என முத்திரை குத்திட்டாங்க.
அந்தவகையில் சர்ச்சையோடு தொடங்கிய எனது அரசியலுக்கு ஏதோ ஒரு வகையில் புரட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்தான் காரணமாக இருந்தது. "அரசியல்னா என்னா?'’என நான் முழுமையாக கற்றுக்கொண்ட இடம் என்றால்... அது சென்னை -அம்பேத்கர் சட்டக்கல்லூரிதான்.
காங்கிரஸ்., தி.மு.க., அ.தி.மு.க. என எல்லாக் கட்சிகளிலும் மாணவர்கள் செயல்பட்டாங்க.
இண்டர்காலேஜ் போட்டியில் எங்களோட சட்டக்கல்லூரி சார்பிலும் போட்டியில் பங்கெடுத்தோம்.
இந்தப் போட்டியில் நானும், நண்பர்களும் நாடகம் போட்டோம்.
சிறந்த நடிகர்’ பரிசுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
சென்னை -தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில்... கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அப்போது லோகு என்கிற ரைட்டர் இருந்தார்.
""முதலமைச்சர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு வர்றார். அவர் கையாலதான் ஜெயிச்ச மாணவர்களுக்கு விருதுக் கோப்பையை தரப்போறாங்க''’என ரைட்டர் லோகு சொல்ல...
எனக்குப் பதட்டமாக இருந்தது.
அரங்கில் மாணவர்கள் கூட்டம் நிரம்பியிருக்க... புரட்சித்தலைவர் மேடைக்கு வந்தார். அப்படியே ரோஸ் கலரில் இருந்தார் எம்.ஜி.ஆர்.
வெற்றிபெற்ற மாணவர் பெயரையும், கல்லூரி பெயரையும் அறிவிக்க... சம்பந்தப்பட்டவர்கள் சென்று... புரட்சித்தலைவரிடம் விருதை பெற்றுவந்தார்கள்.
"சிறந்த நாடகம்... நடிகர் எம்.ஆர்.ஆர்.ராதாரவி, சென்னை -அம்பேத்கர் சட்டக்கல்லூரி'’என என் பெயர் சொல்லப்பட்டதும்... மேடைக்குப் போனேன்.
அரங்கில் இருந்த மாணவர்களில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், என்னைப்பற்றி தெரிந்த மாணவர்களும்... "வாத்யாரே... இது யாருனு தெரியுதா?'’என சத்தமாகச் சொல்ல... மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது அந்த சத்தத்தில் புரட்சித்தலைவருக்கு கேட்கவில்லை.
சுதாரித்துக்கொண்ட நான்... புரட்சித்தலைவரிடம் சுயஅறிமுகம் செய்துகொண்டேன்... ""ஐயா வணக்கம். நான் ராதாரவி, எம்.ஆர்.ராதாவோட பையன்... சட்டக்கல்லூரியில படிக்கிறேன்''’எனச் சொன்னேன்.
""வெரிகுட்...''’எனச் சொன்னவர்... விருதுக் கோப்பையை என் கையில் கொடுத்தபடி... ""உடம்பை நல்லபடியா வச்சுக்கணும்... என்ன...''’என அட்வைஸ் செய்தார். நான் தலையசைத்தேன்.
புரட்சித்தலைவரிடம் நான் விருது வாங்கியபோது... அரங்கம் அதிர கைதட்டினார்கள் மாணவர்கள்.
சட்டக்கல்லூரியில என்னுடைய குரூப்பில் ரவிச்சந்திரன், கோமதிநாயகம், இளங்கோ, நாராயணன், மதிவாணன், அமல்நாதன், ரூபர்ட், ராஜமாணிக்கம், சிவா, பாபு, ரிடாஜூலியா, அசோக், கல்யாணி, ஜானகி இவங்க எல்லோரும் இருந்தாங்க. இதுல ரவிச்சந்திரன், கோமதிநாயகம் இவங்க ரெண்டுபேரும் அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்தவங்க. சட்டக்கல்லூரியில் படிக்கிற மாணவன் எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பார் கோமதிநாயகம். வக்கீல்கள்கூட அந்தமாதிரி டிரெஸ் பண்ணமாட்டாங்க. ஆனா கோமதிநாயகம் சும்மா ஒயிட் அண்ட் ஒயிட்டில் டிப்டாப்பாக ட்ரெஸ் பண்ணுவார்.
நாராயணன்தான் எங்க குரூப்போட தலைவர். நாங்கள் எல்லாம் மரத்தடி சங்கம். அடிக்கடி மரத்தடியில உட்கார்ந்து கதை அடிச்சிட்டிருப்போம்.
என்னோட சட்டக்கல்லூரி வாழ்க்கையில் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்தது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சரா இருந்த நேரத்தில் காலேஜ் தேர்வு முறையில மாற்றம் கொண்டுவந்து செமஸ்டர் தேர்வு முறைய அறிமுகப்படுத்தினார்கள். செமஸ்டர் தேர்வு முறையில அப்போது மாணவர்களுக்கு உடன்பாடு இல்லை. எல்லோரும் போராட்டம், வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டாங்க. நியூ காலேஜ் மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்தார்கள். எங்க குரூப்தான் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தியது. அப்போது மாணவர்களின் எதிர்ப்பைத் தெரியப்படுத்த நான் ஒரு விஷயத்தை செய்தேன். அதன்படி...
ஒரு பஸ்ஸை எடுத்துக்கிட்டு... நேரா கோட்டைக்குள்ள போய்ட்டோம். கோட்டையில போலீசார் என்னை சுத்தி வளைச்சி கைது பண்ணாங்க.
நான் என் வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாதபடியான... புரட்சித்தலைவருடன் ஏற்பட்ட ஒரு சந்திப்பைச் சொல்கிறேன்.
1986-ல் நடிகர் சத்தியராஜின் சகோதரி கல்யாணம் கோயம்புத்தூரில் நடந்தது.
(அந்தக் காலகட்டத்தில் சென்னையில இருந்து கோவைக்கு நேரடியாக விமானம் போகாது. சென்னையிலிருந்து பெங்களூரு போய்விட்டு அங்கிருந்து கோயம்புத்தூருக்கு ஃப்ளைட் போகும்). அந்த கல்யாணத்துக்காக நானும் என்னோட மேக்கப்மேன் குமாரும் விமானத்தில் ஏறினோம். அதே ஃப்ளைட்டில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மா, பண்ருட்டி ராமச்சந்திரன்... ஆகியோரும் வந்தாங்க.
விமானத்தில் சகபயணிகள் எல்லோரும் ‘"முதலமைச்சர் (புரட்சித்தலைவர்) வந்திருக்காரு'’என பேசினார்கள். புரட்சித்தலைவர பார்த்து எல்லோரும் வணக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அமைதியா உட்கார்ந்திருந்தேன்.
"ஃப்ளைட் பெங்களூரு போனதுக்கு அப்புறம் புரட்சித்தலைவர் இறங்காமல் அப்படியே கோயம்புத்தூருக்கு வர்றாருன்னா எப்படியாவது அவர்கிட்ட பேசிடணும். ஒருவேளை அவரு பெங்களூர்ல இறங்கிட்டாருன்னா, நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்... புரட்சித்தலைவர்கிட்ட பேசுறதுக்கு கொடுத்து வைக்கவில்லைனு நினைச்சிக்க வேண்டியதுதான்'‘என மனசுக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஃப்ளைட் பெங்களூருக்குப் போய் சேர்ந்தது.
புரட்சித்தலைவர் பெங்களூரில் இறங்கவில்லை. அவர் கோயம்புத்தூருக்குத்தான் வருகிறார் என தெரிந்ததும்... பெங்களூரு பயணிகள் இறங்கிச் சென்றதும்.... நான் இருக்கையைவிட்டு எழுந்தேன். என்னோட மேக்கப்மேன் குமார், “""அண்ணே... எங்கண்ணே போறீங்க?''’என பதட்டமாகக் கேட்டான்.
நான், ""டேய் சும்மா இருடா''’எனச் சொல்லிவிட்டு... நேராகப் போய் புரட்சித் தலைவர் முன்னாடி நின்றேன்.
""ஐயா வணக்கம்! நான் ராதாரவி. எம்.ஆர்.ராதாவோட மகன்''’எனச் சொன்னேன்
(முதன்முதலில் புரட்சித்தலைவரிடம் கல்லூரி விழாவில் நான் சொன்ன இந்த வார்த்தைகளை அப்படியே இப்போதும் சொன்னேன்.)
அப்போது திடீர் என புரட்சித்தலைவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஏழெட்டுபேர்கள் ‘டக் ... டக்... டக்‘ என எழுந்தார்கள். அவர்கள் முதல்வரின் பாதுகாவலர்கள். (முதல்வருக்கு இவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்கிற விஷயமே எனக்கு அப்போதுதான் தெரியும்)
புரட்சித்தலைவர் ஏதோ சொன்னார் என்னிடம். அவருக்கு உடல்நலம் சரி இல்லாததால அவர் பேச்சு எனக்கு புரியவில்லை.. பக்கத்தில் அமர்ந்திருந்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான் என்கிட்ட “"நீதான் ராதாரவினு எனக்குத் தெரியாதா?னு தலைவர் சொல்றாரு'’எனச் சொன்னார்.
ஜானகி அம்மா அவர்களுக்கும் என்னுடைய வணக்கத்தைச் சொல்லிவிட்டு... புரட்சித்தலைவரைப் பார்த்தேன்.
தன் கைகளால் என்னுடைய கன்னத்தை புரட்சித்தலைவர் பிடித்தபடி, என்னையே உற்றுப் பார்த்தார். நானும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தநேரம் புரட்சித்தலைவர் உணர்ச்சிவசப்பட்டதையும், அவருடைய கண்கள் கலங்கியதையும் நான் பார்த்தேன். உடனே நான் சொன்னேன்... ""நான் நடிகர் சங்க தலைவரானதுக்கு அப்புறம், உங்களப் பார்க்க பலதடவ முயற்சி செஞ்சேன். ஆனா யாருமே ஏற்பாடு செய்யல''’எனச் சொன்னேன்.
உடனே புரட்சித்தலைவர் திரும்பி, பண்ருட்டி ராமச்சந்திரனைப் பார்த்தார்.
பிறகு....“""நீங்க சென்னைக்கு வந்ததுக்கப்புறம் சொல்லுங்க... பார்க்கலாம்''’என புரட்சித்தலைவர் என்னிடம் சொன்னார்.
நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு... என்னுடைய இருக்கையில் வந்து உட்கார்ந்தேன்.
அப்போது நான் எதுவும் பேசாம அமைதியா இருந்தேன். என் கண்ணில் புரட்சித்தலைவரின் உருவம் மட்டுமே தெரிந்தது.
விமானம் கோயம்புத்தூர் வந்தது.
புரட்சித்தலைவர், ஜானகி அம்மா, பண்ருட்டி ராமச்சந்திரன் இவங்க மூணுபேரும் ஃப்ளைட்டோட முன்பக்க கதவு வழியா இறங்கினார்கள் ப்ளூகலர் அம்பாசிடர் கார் வந்தது. அதில் ஏறி அமர்ந்தார்கள்.
நான் புரட்சித்தலைவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். வண்டி கிளம்பும்போது புரட்சித் தலைவர் வெளியே கை அசைத்தார். "நமக்குத்தான் கை காட்டுறாரா...'’என யோசித்தபடி கும்பிட்டேன். அவரும் வணக்கம் தெரிவித்தார்.
முதலமைச்சர் கிளம்பிய பிறகு மற்ற பயணிகள் கிளம்பத் தொடங்கினார்கள்...
அப்போது ஒரு போலீஸ் ஆபீஸர் என்னிடம் வந்து... ""முதலமைச்சர் உங்களை இப்ப வெளியே போகவேண்டாம் இங்கேயே கொஞ்சநேரம் இருந்துட்டுப் போகச்சொல்லீருக்கார்...''’என்றார்.
எனக்குத் திகைப்பாக இருந்தது.
(புரட்சித்தலைவருடன் சந்திப்பு... கலைஞரின் கோபம்)