குட்டியூண்டு மாநிலமான திரிபுராவை என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிடுவது என்று, கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சி செய்கிறது பா.ஜ.க. அங்கே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வரான, எளிமைக்குப் பெயர் பெற்ற மாணிக் சர்க்கார், மாநிலத்தை விலை போக விடமாட்டோம் என உறுதியோடு இருக்கிறார்.
முன்னாள் முதல்வர்கள் நிருபேன் சக்கரவர்த்தியும், தசரத் தேவும் மேற்கு வங்கத்திலிருந்து கட்சி வேலைக்காக திரிபுரா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணிக் சர்க்கார் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்று, நான்காவது முறையாக தேர்தலைச் சந்திக்கிறார்.
மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே 36 லட்சம் பேர்தான். வனப்பகுதி நிறைந்த இந்த மாநிலத்தை எப்படியேனும் பா.ஜ.க. கைப்பற்ற வேண்டும் என்பது கார்ப்பரேட்டுகளின் திட்டமாக இருக்கிறது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததில் இருந்து அமித் ஷாவின் குறி அனைத்தும் திரிபுரா மீதுதான் இருந்தது. ஆனால், 2013 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அந்த மாநிலத்தில் பெற்ற வாக்குகள் வெறும் 1.5 சதவீதம்தான். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 45 சதவீதம் வாக்குகளும், காங்கிரஸுக்கு 36 சதவீதம் வாக்குகளும் பாரம்பரியமாக இருக்கின்றன.
காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவரும் மாநிலத்தில், பா.ஜ.க. எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும்? அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார் அமித்ஷா.
சட்டமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்களில் 7 பேரை விலைக்கு வாங்கினார். இதையடுத்து, மாநிலத்தில் அடித்தளமே இல்லாத பா.ஜ.க., சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றது.
அதுமட்டுமின்றி, பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் 20 தொகுதிகளை பா.ஜ.க. குறிவைத்தது. அந்த மக்களிடையே பிரபலமாக இருக்கும் ஐ.பி.எப்.டி என்ற கட்சியோடு கூட்டணி அமைத்தது. இந்தக் கட்சிக்கு திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்புடன் தொடர்பு இருக்கிறது. தடைசெய்யப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், திரிபுராவை தனி நாடாக்குவது ஆகும்.
வங்கதேச எல்லையை ஒட்டி இப்போதும் அந்த அமைப்பு செயல்படுகிறது. ஆனால், அதன் அரசியல் பிரிவாக செயல்படுகிறது ஐ.பி.எப்.டி. கட்சி. பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதியை பிரித்து "துவிப்ராலாந்து' என்ற தனிமாநிலமாக அமைக்கவேண்டும் என்று இந்தக் கட்சி கோருகிறது.
இப்படிப்பட்ட கட்சியுடன் கைகோத்து, விலைக்கு வாங்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. ஆனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் அந்தக் கட்சியின் தலைவர்கள் சிலரையும் தனதாக்கினால், காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளை சிதைத்துவிட முடியுமா என்பது கேள்விக்குறி.
அமித் ஷாவின் இன்னொரு தந்திரம் மிகவும் மோசமானது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்த இருவரை சி.பி.எம்.மிலிருந்து விலகிவந்தவர்கள் என்று அறிவித்தார். அதாவது, சி.பி.எம்.மிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர்களை சி.பி.எம். பிரமுகர்கள் என்றே குறிப்பிட்டார்.
இதெல்லாம், பழங்குடியினர் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ள செல்வாக்கை சிதைப்பதற்கு உதவும் என்று அவர் நினைக்கிறார். பா.ஜ.க.வுக்கு அடித்தளம் இல்லை என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நினைத்தாலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி அப்படி கருதவில்லை என்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பணத்தை வாரியிறைத்து மக்களை விலைக்கு வாங்கிவருகிறது என்கிறார்கள். வாக்காளர்களுக்கு மொபைல் போன் கொடுக்கிறார்கள். பழங்குடியின மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்களும் அடுப்புகளும் வினியோகிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.
பிரதமர் மோடி பிரச்சாரம் செய்திருக்கிறார். ராகுல் காந்தியும் வரவிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டவில்லை என்கிறார்கள். "போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சி நிச்சயமாக வெல்லும்'’என்கிறார் திரிபுரா மாநில சி.பி.எம். செயலாளர் பிஜான் தர்.
மார்க்சிஸ்ட் கட்சி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காது. அந்தக் கட்சியின் முதல்வரின் கையிருப்புப் பணமே 1520 ரூபாய்தான் என்று கணக்குக் கொடுத்திருக்கிறார். அவரைவிட சீனியரான 90 வயதான சி.பி.எம். வேட்பாளர் நிரஜாய் திரிபுராவோ, தன்னிடம் 1218 ரூபாய்தான் இருப்பதாக சொல்லியிருக்கிறார். இவர் "எப்படியும் பான்கார்டு வாங்கிவிட வேண்டும் என்பதே ஆசை' என்கிறார். தனது தொகுதியில் தேவைப்படுவோருக்கு உதவுமே என்றுதான் அதையும் சொல்கிறார்.
இப்படிப்பட்ட எளிமையான, நேர்மையான தலைவர்கள் இருக்கும்போது... வாக்காளர்கள் எந்தப்பக்கம் திரும்பப் போகிறார்கள் என்பது மார்ச் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.