(36) "ரஜினி கலாம்...' "கமல் பாரதி' நினைக்கவே பயமா இருக்கு!

காவிரியையும் சம்பந்தப்படுத்தி "தமிழக தாகம்'னு நான் எழுதியிருந்த நேரம்... உச்சநீதின்ற காவிரி தீர்ப்பு வந்திருக்கு.

தீர்ப்பு வந்திருக்கு.

தண்ணி வருமா?

Advertisment

28 வருஷப் போராட்டத்துக்கு கடைசியில எப்பவும்போல... நாமதான் விட்டுக் கொடுத்திருக்கோம்.

205 டி.எம்.சி. தண்ணியில வந்த பிரச்சினை... அதிலயும் 40 டி.எம்.சி.ய விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கு.

டி.எம்.சி.ன்னா 'Thousand million cubic feet'.

Advertisment

என்ன இப்போ...

சும்மா... நாலு பக்கெட் தண்ணி குறைஞ்சு போச்சுங்கிற விஷயமில்லை.

இது பெரிய இழப்புதான். அதனால ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா... சிக்கனமா... திட்டமிட்டு, தண்ணீரைச் செலவழிக்கணும்.

kasturi

இதப்பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று

கட்டெறும்பும் தேய்ந்து குற்றுயிராயிற்று

மண்டை பிளக்கும் வெயிலில் உழுபவன்

தொண்டை நனைக்க நீருக்கு அழுபவன்

சண்டை போட்டாலும் சந்தியில் நின்றாலும்

கெண்டைக்கால் பற்றி கெஞ்சியே கேட்டாலும்

அண்டை மாநிலத்தார் மனதில் நீரில்லை...

அண்டிப்பிழைக்கும் ஈனமினி தேவையில்லை.

ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை -ஆனால்

காற்றும் மழையும் கொடுக்கும்

வேண்டும் வளத்தை அளிக்கும்

ஆண்டவன் அளப்பதையேனும் காத்திடுவோம்

கள்ளுக்கும் குடுவைக்கும்

காவிரியை இழக்காமல்

மண்ணுக்கு ஆசைப்பட்டு

"பெண்ணை' சீரழிக்காமல்

நீருயர நெல்லுயர

நீதியுடன் நாம் நடப்போம்!

ஏழு வயது சிறுமி ஹாஸினிய மிருகத்தனமா பாலியல் கொடுமை செஞ்சு... கொலைபண்ணி, பெத்த தாயையும் கொன்ன தஷ்வந்த்துக்கு... ஹாஸினி வழக்குல மரண தண்டனை விதித்து நீதிமன்றத்துல தீர்ப்பு கொடுத்திருக்காங்க.

கிட்டத்தட்ட ஒரு வருஷ போராட்டத்துக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்திருக்கு.

இப்படிப்பட்ட கொடுமையான சம்பவங்கள் நடக்காம இருக்கணும்னா... கிரிமினல் நோக்கத்தோட இருக்கிறவங்க அச்சப்படணும்னா...

தஷ்வந்த்தோட குற்றச்செயலும், ஹாஸினி வழக்கில் அவனுக்கு கிடைச்சிருக்கிற மரணதண்டனை தீர்ப்பும்... நிறைய விளம்பரப்படுத்தப்படணும். இதைப் பார்த்து இந்த மாதிரி வக்கிரங்களைச் செய்யப் பயப்படணும்.

ஒரு வருஷத்துல தீர்ப்பு கிடைச்சதுன்னாலும்... இதுவே "லேட்'னுதான் சொல்லுவேன்.

பாகிஸ்தான்ல... பஞ்சாப் ஸ்டேட்ல ஏழு வயது சிறுமி ஜைனப் கடந்த 04-01-2018-ந் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். போன வருஷத்தில் அந்தப் பகுதியில் இப்படி சில சம்பவங்கள் நடந்ததால்... ஜைனப் பாலியல் -கொலை விஷயத்தில் அரசு முனைப்பா செயல்பட்டது. இம்ரான்அலிங்கிற 24 வயசு குற்றவாளியான... தொடர்ந்து கிரிமினல் செயல்களில் ஈடுபட்டிருந்த அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்காடினாங்க.

17-02-2018-ல் அந்தக் கொடூர குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளிச்சிருக்கு.

குற்றம் நடந்ததிலிருந்து 43-வது நாள்ல தீர்ப்பு சொல்லீட்டாங்க. இவ்வளவு விரைவா தீர்ப்புக் கிடைக்கக் காரணம்... அந்தக் குற்றவாளியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து, அதற்குரிய லாகூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்ததால் உடனடியாக தண்டனை தரப்பட்டிருக்கு.

பாலியல் ரீதியா ஏழு வயது சிறுமி துன்புறுத்தி கொலை செய்யப்பட்டதை... சமூகத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயலா பஞ்சாப் மாநில அரசு பார்த்திருக்கு.

இது... பாகிஸ்தான்கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய பாடம்.

மனித உரிமைகளை மனிதத்தன்மை உள்ளவர்களுக்கானதா மட்டும் பார்ப்போம்.

""அஞ்சு ரூபா தண்ணி கிளாஸ சங்கிலி போட்டு பாதுகாத்து... ஒருரூபா பேனாவ கயிறு கட்டி பாதுகாத்து... பதினோறாயிரம் கோடி ரூபாய பறி கொடுத்தா... அதுக்குப்பேருதான் பேங்க்''

poster

-இப்படி ஒரு மெஸேஜ் வாட்ஸ்-ஆப்ல வந்திருக்கு.

நரேந்திரமோடி, லலித்மோடி, நீரவ்மோடி... மோடின்னாலே பேர் ராசிபோல!

ஒண்ணு... மக்கள் பணத்த கொண்டுக்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடுறதும், இல்லேன்னா... மக்களோட பணத்த மதிப்பில்லாம செஞ்சிட்டு வெளிநாடு போயிடுறாங்க.

விஜய்மல்லையாவுல தொடங்கி... எவ்வளவு பேர்... பேங்க்க கொள்ளையடிச்சிட்டு... சகல மரியாதையோட வெளிநாடு போயிடுறாங்க.

கமல்ஹாசன், ரஜினியை சந்திச்ச பரபரப்பு அடங்குறதுக்குள்ள... நான் கார்ல போய்க்கிட்டிருக்கும்போது ரஜினி-கமல் சம்பந்தப்பட்ட... கண்ணைப் பறிச்ச ஒரு போஸ்டரை பார்த்தேன்.

"அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்னய்யா சம்பந்தம்?'னு கேட்பாங்க.

ஒரு சினிமா படத்தோட புரமோஷனுக்காக... ஆன்மிக அரசியல் ரஜினியையும், அப்துல்கலாமையும் சம்பந்தப்படுத்தி போஸ்டர் ஒட்டியிருக்காங்க.

கமல்ஹாசனை பாரதியாரா சித்தரிச்சிருக்காங்க.

ம்... இன்னும் எந்தெந்த தலைவர்கள்லாம் சினிமா விளம்பரத்துல மாட்டப்போறாங்களோ... நினைக்கவே பயமா இருக்கே?!

பாகிஸ்தானில் "சீன மொழியை அதிகாரப்பூர்வ மொழியா அறிவிக்கணும்'னு முயற்சி பண்ணியிருக்காங்க.

ஏற்கெனவே சீனாக்காரன் ஸ்ரீலங்காவுல ஊடுருவி ஒரு துறைமுகத்தையே அமைச்சிட்டான். லங்கா... கிட்டத்தட்ட பாதி சீனாவா ஆகிப்போச்சு.

நம்ம நாட்டுல அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு எல்லைப் பகுதியில... பொழுது போகலேன்னா சீனாக்காரன் வந்துட்டு வந்துட்டுப் போயிட்டிருக்கான்.

இந்தப் பக்கம் பாகிஸ்தான்ல... சைனீஷ் அதிகாரப்பூர்வமான மொழிங்கிற அளவுக்கு ஆக்கிரமிக்கிறான்.

இப்படி "ஸ்கெட்ச்' போட்டு நம்மள சுத்தி வளைக்கிறான். நாம இங்க சைனா மொபைல் செட்ட வச்சு விளையாடிட்டிருக்கோம்.

உஷார்... உஷார்...னு மனசுக்குள்ள ஒரு ஆட்டுக்குட்டி உதைக்கிறத தவிர்க்க முடியல.

ஸ்ரீலங்காவுல ஒரு துறைமுகத்தையே தன் வசமாக்கியிருக்கிற சீனா, அங்க தன்னோட ராணுவத் தளவாடங்கள குவிச்சிக்கிட்டிருக்கதா கேள்வி. இதுக்குத்தான் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளத்தான் ஒருவேளை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை "சாகர் மாலா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வருதோ?னு நினைக்கிறேன். ஆனாலும் குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் காட்டும் எதிர்ப்பும் யோசிக்க வைக்குது. இதப்பத்தி நான் விரிவா தகவல் திரட்டிக்கிட்டிருக்கேன். முழுவிவரம் கிடைச்சதும்... எழுதுறேன்.

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறு இதழில் எழுதுகிறேன்!)