ks

(34) தமிழக தாகம்!

தென்னாப்பிரிக்காவுல... கேப்டவுண் சிட்டியில... நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெற்றி மேல வெற்றிய குவிச்சிக்கிட்டிருக்காங்க... ரொம்பப் பெருமையா இருக்கு.

Advertisment

எப்பவுமே நம்ம இந்திய மண்ணுல நல்லா விளையாடுற நம்ம டீம் வெளிநாட்டுல சொதப்பும்னு பொதுவான விமரிசனம் இருக்க சூழ்நிலைல... ஸ்ரீலங்காவுலயும் சரி... தென்னாப்பிரிக்காவுலயும் சரி... ஜெயிச்சிருக்காங்க.

Advertisment

ஆனா... விஷயம் அதப்பத்தி இல்ல.

கும்பகோணம் அன்னை குரூப்ஸ் கல்லூரி கல்ச்சுரல் விழாவுல சீஃப் கெஸ்ட்டா கலந்துக்க சென்னைலருந்து கார்ல போயிருந்தேன். பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, சேத்தியாதோப்பு வழியா கிட்டத்தட்ட அஞ்சரை மணிநேர கார் பயணம்.

போற வழியில நான் கவனிச்சது... பெரிய ஆத்துப்பாலங்கள் 6-ஐ கார் கடந்துபோச்சு.

ஆறு பாலங்களைக் கடந்தேன்... ஆனா ஆறு எதையுமே கடக்கல.

ks

எல்லா ஆறுமே காய்ஞ்சு கிடக்கு. புல்லு முளைச்சு... ஆடுகள் மேஞ்சுக்கிட்டிருக்கு. பாலங்களும் சரியான பராமரிப்பு இல்லாம இருக்கு.

அங்க இருக்கிற மக்கள் சொல்றாங்க... "யாரு வந்தாலும் ஜாதி அரசியல் பண்றதுல காட்டுற ஆர்வத்த, சீரமைப்பு பணிகள்ல காட்டுறதில்ல... திட்டங்கள் போடுறாங்க... பட்ஜெட் ஒதுக்குறாங்க. ஆனா வேலதான் நடக்கமாட்டேங்குது'னு அங்கலாய்க்கிறாங்க.

கும்பகோணம் பக்கத்துல ஒரு பாலம் சிதிலமா இருக்கு. அங்க போஸீஸ் பாதுகாப்பு போடணும். ஆனா... பெரும்பாலான நாட்கள்ல அங்க போலீஸ் இருக்குறதில்ல. லோக்கல்ல இருக்கிற ரெண்டு பேருக்கு பாக்கெட் மணி குடுத்திட்டு, போலீஸ்காரங்க போயிடுறாங்க. அந்த லோக்கல் ஆட்கள் பல சமயம் ஆத்துப்படுகைக்குள்ளயே வாகனங்கள போக அனுமதிக்கிறாங்கனும் மக்கள் சொல்றாங்க.

அதுலயும் பல இடங்கள்ல... குறிப்பா... சேத்தியாதோப்பு அணைக்கரை பகுதியில ஆறு முழுக்க மணல் அள்ளுற லாரிகள்தான் நிரம்பி வழிஞ்சு நின்னுக்கிட்டிருந்தது.

ரெண்டுவாரம் முன்னாடி மதுரை போயிருந்தேன்.

வைகை ஆத்துப்படுகை ஆறு மாதிரி இல்லாம... மக்கள் குடியிருக்க ஒரு குட்டி கல்லணை மாதிரி அங்கங்க ஆக்கிரமிப்புகளால அடைப்பட்டுக்கிடக்கு.

ஆத்துல தண்ணி போகல. ஆத்துக்கு அடியிலகூட வாட்டர் கம்பெனிக்கு பைப்மூலமா தண்ணி உறிஞ்சப்படுது.

இதயெல்லாம் பார்க்கிறப்போ... நம்மள எந்த நேரமும் தாக்கக்கூடிய ஒரு பயங்கர ஆபத்த நாம புரிஞ்சுக்காமலே... புரிஞ்சுக்க முயற்சிக்காமலே... புரிஞ்சுக்கிட்டும் புரியாதது மாதிரியே இருக்கோமே...ங்கிற பயம் எனக்கு வந்துச்சு.

கேப்டவுண் போயிருக்க கிரிக்கெட் டீமுக்கு அந்த நகரத்தோட கார்ப்பரேஷன் நிர்வாகம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்கிருக்க நம்ம வீரர்களுக்கு ஒரு உத்தரவு போட்டிருக்கு.

"நீங்க ஒரு நாளைக்கு ரெண்டு நிமிஷம் மட்டுமே குளிக்கணும். ஒரு ஆள் ஒரு நாளைக்கி 50 லிட்டர் தண்ணீர் மட்டும்தான் பயன்படுத்தணும்'கிறதுதான் அந்த உத்தரவு.

கேப்டவுண் நகரத்துல... போர்வாட்டரோ... கிணத்துத் தண்ணியோ கிடையாது. எல்லா வீடுகளுக்குமே நகராட்சி நிர்வாகம்தான் பைப் மூலமா தண்ணீர் விநியோகிக்குது. வாட்டர் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கு. ஒரு வீட்ல நாலு பேர்னா... 200 லிட்டர் தண்ணீரை தாண்டக்கூடாதுங்கிறது உத்தரவு.

"தோட்ட பராமரிப்புக்கு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது. அதையெல்லாம் விட்ருங்க'ங்கிறது அந்த நிர்வாகத்தோட முக்கியமான கண்டிஷனாவும் இருக்கு.

இத அந்த நகர மக்கள் தங்கள் மேல திணிக்கப்பட்ட கட்டளையா பார்க்காம... யதார்த்தத்த உணர்ந்து தங்களோட கடமையா நினைச்சு... தண்ணீர் சிக்கனத்த பொறுப்போட செய்றாங்க.

கேப்டவுண்ல... தண்ணி சுத்தமா வத்திப்போச்சு... கால் கழுவ தண்ணி இல்ல.

"மூணு வருஷமா மழை இல்ல. இந்த வருஷம் ஏப்ரல் மாச கடைசியோட ஒரு சொட்டு தண்ணி கூட இருக்காது'னு கணக்குப் போட்டிருக்காங்க.

"என்ன பண்றதுன்னு தெரியாம... அதுக்குள்ள ஏதாவது விடிவு வராதா?'னு நீர் நெருக்கடி நிறைஞ்ச புது வாழ்க்கைய வாழ்ந்தபடி... வானத்த அண்ணாந்து பார்த்துக்கிட்டிருக்காங்க அந்த மக்கள்.

கேப்டவுணைவிட 30 மடங்கு அதிகமான மக்கள் தொகை இருக்க தமிழ்நாட்டுல... அந்த நிலமை வரக்கூடாதுனு மனசு விரும்பினாலும்... வர்றதுக்கு எம்புட்டு நேரமாகிடும்?

காவிரி, பெண்ணை, பாலாறு... இதெல்லாம் காய்ஞ்சு பலவருஷம் ஆகுது தமிழ்நாட்டுல.

நான் விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாலாற... வெறும் மணல் இருக்க ஆறாத்தான் பார்த்துக்கிட்டிருக்கேன். இப்ப மணலும்கூட அதுல இல்ல. "சாமி இல்லாத கோவில், நீர் இல்லாத ஆறு, ராஜா இல்லாத கோட்டை'னு வேலூரப்பத்தி சொல்வாங்க. அந்த அளவுக்கு பாலாறு பல வருஷமா பாழான ஆறு.

ஆண்டவனே வந்து கை வச்சதுனால... "வைகை'னு பேர் வந்ததா சொல்லப்படுற வைகைல கிட்டத்தட்ட 20 வருஷமாவே தண்ணி இல்ல.

"காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?'னு பாட்டு வரியா மட்டுமே இருக்கு காவிரி... பல சமயம். சிறுவாணியும் வாட்டர் பாட்டில் கம்பெனிக்கு இரையாகுது. தமிழ்நாட்டு பெரிய ஆறுகள்ல தாமிரபரணி மட்டும்தான் ஓரளவு நீரோட்டமா இருக்குனு கேள்விப்படுறேன். அங்கயும் பன்னாட்டு கம்பெனி கூல்ட்ரிங்ஸுக்காக ஆத்த வேலிகட்டி உறிஞ்சுது.

நம்ம தமிழ்நாட்டோட இயற்கை வளங்கள்ல... மண்ண வித்திட்டோம், தண்ணிய வித்திட்டோம், வெயில வித்திட்டோம்... சோலார் பேனலுக்கு. காத்த மட்டும்தான் வாங்க ஆளில்லாததால விற்கல. மானத்தக்கூட இலவசத்துக்கு வித்துக்கிட்டிருக்கோம்.

சென்னை வெள்ளம்... நிறைய சேதங்களை செஞ்சிருந்தாலும்... சென்னையோட அடையாளமான கூவத்தையும், அடையாறயும் சுத்தம் பண்ணிட்டு... ஏரி குளங்களை நிரப்பிட்டுப் போச்சு.

ரெண்டே வருஷத்துல... பழைய நிலமை வந்திருச்சு.

காக்கி நாடாவுலருந்து விழுப்புரம் வரைக்கும் நீண்டு கிடக்கிற கூவத்த... ஒரு காலத்துல வர்த்தகத்துக்கு நீர்வழி போக்குவரத்தா இருந்த கூவத்த சாக்கடையா மாத்திட்டோம்.

நீர் வளம், மர வளம், மீன் வளம்னு எல்லாம் போய்க்கிட்டிருக்கு.

"இன்னைக்கி நமக்கு இந்த பிரச்சினை வராது'னு சொல்லி தற்காலிக ஏற்பாடுகள செஞ்சுக்கிட்டிருக்கு அரசாங்கம்.

ஆனா... இந்தப் பிரச்சினை என்னைக்கோ தொடங்கிருச்சு. நான் என்னோட ஏழு வயசுலயே தண்ணிப் பஞ்சத்த பார்த்திருக்கேன். அதுக்கு முன்னயே எழுத்தாளர் அசோகமித்ரன் தண்ணீர் பஞ்சம் பத்தி எழுதியிருக்கார்.

இடிஞ்சு... எப்பவேணாலும் மக்கள் மேல விழலாம்கிற சுவருக்கு நிரந்தர மாற்று தீர்வ யோசிக்காம... முட்டுக்குடுக்குற வேலைய மட்டும்தான் செய்றாங்க.

"கண்டிப்பா தல மேல இடிஞ்சு விழும். ஆனா... நம்ம ஆட்சியில விழாதபடி பார்த்துக்கிட்டா போதும்'னு நினைக்கிறாங்க.

நான் இத ரொம்ப பயத்தோட சொல்றேன்.

தண்ணீர் பஞ்சம் புராண காலத்துலயே இருந்ததுக்கு ஒரு கதை இருக்கு.

சிவன்-பார்வதி திருமணத்தப் பார்க்க தேவர்களும், முனிவர்களும் கைலாயத்துல மொத்தமா கூடினாங்க. இதனால் பாரம் தாங்காம... வட இந்தியா தாழ்ந்தும், தென்னிந்தியா ஒசந்தும் ஆடினது. தென் பகுதிக்குப் போய் நிலப்பரப்பை சமப்படுத்த அகத்திய முனிவரை பணித்தார் சிவன். "உங்க கல்யாணத்தை நான் பார்க்க வேணாமா?'னு அகத்தியர் கேட்க... "உன் ஞான திருஷ்டியில் கல்யாண காட்சிகள் தெரியும்'னு சிவன் சொன்னதோட... தெற்குல இருக்க தண்ணீர் பஞ்சத்தப் போக்க... காவிரி நீரை எடுத்துச் செல்லக் கூறினார். அகத்தியரும் கமண்டலத்தில் காவிரி நீரை எடுத்துக்கிட்டு கிளம்பினார். ஒரு நல்ல இடத்துல காவிரியை விடுவிக்கணும்னு நினைச்சு... காவிரிய ரிலீஸ் பண்ணாமலே ரொம்ப நாளா வச்சிருந்தார் அகத்தியர். ஒருநாள்... கணபதியிடம்... "அகத்தியர் ஒரு ஆத்தவே அடக்கி வச்சிருக்காரு. நீ போய் விடுவிச்சுவிடு'னு பார்வதி சொல்ல... காக்கா ரூபம் எடுத்த கணபதி... அகத்தியர் ஒதுங்கியிருந்த நேரம் பார்த்து கமண்டலத்தை தட்டிவிட... காவிரி உருவாகி பொங்கியதாம்.

இப்ப இருக்கிற அரசியல் காக்கைகள்... பொங்கி ஓடுற காவிரிய சிறை வைக்கத்தானே பார்க்கிறாங்க.

(அடுத்த விஷயத்தை ஒரு இதழ் விட்டு மறுஇதழில் எழுதுகிறேன்)

சல்யூட் போலீஸ்!

வழக்கமா பார்ட்டி பாலிடிக்ஸ பேசுவோம். ஒரு வித்தியாசமான பார்ட்டியப் பத்தி பேசலாமே...

'Truth is stranger than fiction'னு சொல்வாங்க. சில சமயம் கதையல்ல... நிஜம்தான் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.

ஒரு ரௌடி சக ரௌடிகள் நூறு பேரை விருந்தாளிகளா அழைச்சு பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட... அழையா விருந்தாளிகளா போன... நூறு சென்னை போலீஸார் ரௌடிகளை சுத்தி வளைச்சு அரெஸ்ட் பண்ணிருக்காங்க.

சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட நிஜ சிங்கங்களான சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையிலான போலீஸ் டீமுக்கு என் வாழ்த்துகள்.