விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார். இதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அவர் அனுப்பிவைக்க, அ.தி.மு.க.வின் பொதுக்குழு செய்தியைத் தாண்டியும் அவரது விலகல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டியின் இந்த விலகலின் பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் பின்னிக் கிடக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

v

கடந்த 6-ந் தேதி அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அர்ஜுன் ரெட்டி, முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதியையும் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருடைய இந்தப் பேச்சு, தி.மு.க.விலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், தி.மு.க. -வி.சி.க. கூட்டணி உறவில் சிக்கலையும் உருவாக்கியது. இதனை வி.சி.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் ரசிக்கவில்லை. கட்சியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்கிற குரல்கள் சிறுத்தைகளிடம் வலுத்தன.

இதனையடுத்து கட்சியின் உயர்நிலை நிர்வாகக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த திருமாவளவன், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, கட்சியிலிருந்து 6 மாத காலம் தற்காலிகமாக அவரை நீக்கினார்.

Advertisment

தற்காலிக நீக்கம் குறித்து நம்மிடம் பேசிய சிறுத்தைகள், ‘’"கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர், கட்சியின் சட்ட திட்டங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி இல்லை. அதனால், இனியாவது கட்சிக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறாரா? என்பதை ஆராய்வதற்காகத்தான் இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்தார் திருமாவளவன்.

ஆனால், அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நடிகர் விஜய்யுடன் இணைந்து வி.சி.க.வை உடைக்கும் சதி வேலையில் ஈடுபட்டு வந்தார். அம்பேத்கர் விழாவில் மேடை ஏறுவதற்கு முன்பு, தி.மு.க.வுக்கு எதிராக விஜய்யும் அர்ஜுன் ரெட்டியும் என்ன மாதிரி அட்டாக் பண்ணவேண்டும் என்பதை முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டுதான் மேடையேறினர்''” என்றார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப் பட்ட அவர், தனது நீக்கத்துக்கு தி.மு.க.தான் காரணம் என்பதாக மீண்டும் மீண்டும் சொல்லியபடியிருந்தார். குறிப்பாக, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அர்ஜுன் ரெட்டி, ‘’"தி.மு.க. என்னை டார்கெட் செய்யத் தொடங்கிவிட்டது. இதனால் திருமாவுக்கு தொடர் அழுத்தங்கள் இருந்தன. விஜய் பங்கேற்கும் விழாவிற்கு நீங்கள் சென்றால் கூட்டணிக்கு சிக்கல் உருவாகும். அதனால் போக வேண்டாம்' என திருமாவளவனுக்கு அமைச்சர் எ.வ.வேலு அட்வைஸ் செய்தார். அவரது அறிவுறுத்தலை உள்வாங்கினார் திருமாவளவன்’என்று பேச, ஏகத்துக்கு டென்சனாகி யிருக்கிறார் திருமா. இந்த நிலையில் பத்திரிகை யாளர்கள் அவரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, "நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னால் முடியாது என்பதை தெளிவாக சொல்லி விட்டேன். இது சுதந்திரமாக நான் எடுத்த முடிவு. என்னை அழுத்தம் கொடுத்தெல்லாம் இணங்க வைக்கவோ முடிவு எடுக்க வைக்கவோ முடியாது. என்னை அறிந்தவர்களுக்கு இது தெரியும். இதனை அவரிடம் (அர்ஜுன் ரெட்டி) நான் தெரிவித்திருக்கிறேன்.

Advertisment

மீண்டும், மீண்டும் முரண்பட்ட கருத்துக் களை தவறான கண்ணோட்டத்தில் அவர் சொல்லிவருவதால், அவருக்கு வேறு ஏதோ செயல்திட்டம் இருப்பதாகத் தெரிகிறது'”என்று அர்ஜுன் ரெட்டியின் அரசியல் தில்லுமுல்லுகளை நாகரிகமாக வெளிப்படுத்தினார் திருமாவளவன்.

தனது முகமூடி கிழிக்கப்படுவதை ஜீரணிக்க முடியாத நிலையில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுகிறேன் என்கிற ராஜினாமா கடிதத்தை திருமாவளவனுக்கு அனுப்பி வைத்துள்ளார் அர்ஜுன் ரெட்டி.

அவருடைய விலகல் கடிதம் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பேசிய திருமாவளவன், "இடைநீக்கம் குறித்து அர்ஜுன் ரெட்டி சொன்ன கருத்து, கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக இருந்தது. அவரது பார்வையில் அவருடைய விளக்கம் சரியாக இருக்கலாம். நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. அவர் அமைப்பின் நடை முறையை உள்வாங்கிக் கொள்வதில்லை. ஆர்வக் கோளாறு அதிகம். அவருக்கு பக்குவம் அவசியம்'' என்கிறார்.

ddf

அர்ஜுன் ரெட்டியின் இந்த விலகல் குறித்து பல்வேறு தரப்புகளில் விசாரித்தபோது, ’"விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைந்து அக்கட்சி யின் தேர்தல் வியூக வகுப்பாளராக உருவாகி, விஜய்க்கு அடுத்த பொசிசனில் வரவேண்டும் என காய்களை நகர்த்தினார் அர்ஜுன் ரெட்டி. அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இருப் பினும் அதற்கான முயற்சியை சீக்ரெட்டாக எடுத்து வருகிறார். அதேசமயம், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இந்தமுறை தேர்தல் வியூக வகுப்பாளர் அவசியம் வேண்டும் என எடப் பாடியை கட்டாயப்படுத்திவருகிறார் அவருடைய மகன் மிதுன். இவரும் அர்ஜுன் ரெட்டியும் நல்ல நட்பில் இருந்துவருகின்றனர்.

வியூக வகுப்பாளரை ஹையர் பண்ணுவது குறித்து சமீபத்தில் அ.தி.மு.க.வில் பெரிய ஆலோசனையும் நடந்தது (இது குறித்து, தேர்தல் களத்தில் வியூக வகுப்பாளர்கள் எனும் தலைப்பில் நாம் ஏற்கனவே செய்தி எழுதியிருக்கிறோம்). அப்போது, தி.மு.க.வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் தொடர்புடைய வடஇந்திய வியூக வகுப்பாளர்கள் இருவர், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என 3 நபர்கள் குறித்த விபரங்கள் அ.தி.மு.க.வில் ஆராயப்பட்டன.

இந்த சூழலில்தான் அ.தி.மு.க.வில் நுழைய திட்டமிடுகிறார் அர்ஜுன் ரெட்டி. தி.மு.க.வுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த்கிஷோரை நான்தான் அழைத்துவந்தேன் எனச்சொல்லி வரும் அவர், பிரசாந்த் கிஷோரை அ.தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கலாம் என மிதுனிடம் விவாதித்துள்ளார். "பிரசாந்த் கிஷோர்தான், பீகாரில் தற்போது தனிக் கட்சி ஆரம்பித்து அரசியலில் பயணப்பட்டு வருகிறாரே' என மிதுன் கேட்க, "நீங்க ஓ.கே.ன்னு சொல்லுங்க; அவரை அ.தி.மு.க.விற்குள் கொண்டுவருகிறேன்' எனச் சொல்லியிருக்கிறார் அர்ஜுன் ரெட்டி. இதற்கு மிதுன் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் எடப்பாடியும் அ.தி.மு.க. சீனியர்களும் ஒப்புக்கொள்வார்களா என தெரியவில்லை.

பிரசாந்த் கிஷோரை முன்னிறுத்தி அ.தி.மு.க.வுக்குள் நுழைய திட்டமிட்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகியுள்ள அர்ஜுன் ரெட்டி, விஜய்யின் த.வெ.க., அ.தி.மு.க. என இரட்டை வேடம் போடுகிறார்''” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.