2019 அரியானா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெல்ல, தேவிலால் தொடங்கிய இந்திய தேசிய லோக் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது. புதிதாக கட்சி தொடங்கிய துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங் களில் வென்றிருந்தது. 7 சுயேட் சைகள் வெற்றி பெற்றிருந்தனர். பாரதிய ஜனதாவுக்கு முந்தைய தேர்தலைவிட 7 தொகுதிகள் பின்னடைவு. காங்கிரஸுக்கு 16 தொகுதி கள் ஆதாயம்.
ஆனாலும் பா.ஜ.க. அசராமல் துஷ்யந்த் சௌதாலாவையும், சுயேட்சைகளையும் வளைத்துப்போட்டு ஆட்சியில் அமர்ந்தது. மனோகர்லால் கட்டார் முதல்வ ரானார். துஷ்யந்த் சௌதாலா துணைமுதல்வ ரானார்.
தற்போது, அக்டோபர் 1-ஆம் தேதி அரியானாவுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. அரியானாவில் இம்முறை ஐந்துமுனைப் போட்டிக்கான களம் ஒருங்குகிறது. காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சிகள் தனியாக தேர்தலை எதிர்கொள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய தேசிய லோக் தள் கட்சியுடன் கூட் டணியமைத்துப் போட்டி யிடுகிறது. அது போல சந்திர சேகர ஆசாத்தின் ஆஸாத் சமாஜ் பார்ட்டியும், ஜனநாயக் ஜனதா கட்சியும் இணைந்து தேர்தலை எதிர்கொள் கின்றன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், ஜே.ஜே.பி. 70-லிலும், ஆசாத் கட்சி 20 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில், இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, விவசாயிகளின் இரண்டாம் கட்ட போராட்டத்தின்போது அரியானா போலீசார் விவசாயி களிடம் காட்டிய கடுமை, மக்களவைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு சீட்டுகள் ஒதுக்காததால் ஏற்பட்ட இக்கட்டில், முதல்வர் கத்தார் ஒதுக்கப்பட்டு நயாப்சிங் சைனி முதல்வரானது, நுஹ் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய யாத்திரை யின் தொடர்ச்சியாக, சிறு பான்மை முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், மக்களவைத் தேர்தல் தொடர்பான கசப்பால் துஷ்யந்த் சௌதாலா கூட்டணி யிலிருந்து விலகியது, அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்தது, பின் சுயேட்சைகள் பா.ஜ.க. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கியது என நித்ய கண்டம் பூரண ஆயுசு என தட்டுத் தடுமாறி ஐந்து ஆண்டு களைப் பூர்த்திசெய்துவிட்டது பா.ஜ.க.
அரியானாவின் மக்கள்தொகையில் 27% பேர் ஜாட்டுகள். அதனால் ஜாட்டுகளின் ஆதரவைப் பெறும் கட்சி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்யும். அதனால் அனைத்துக் கட்சிகளும் ஜாட்டு களின் ஆதரவைப் பெற முனைப்புக் காட்டுகின் றன. 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 10 இடங்களையும் வென்ற பா.ஜ.க., 2024 தேர்தலில் 5 இடங்களில்தான் வென்றிருக் கிறது. ஆக மக்களுக்கு பா.ஜ.க. மீதான அதிருப்தி வெளிப்படையாகவே தெரிகிறது.
மத்திய அரசு அறிவித்த புதிய பென்ஷன் திட்டத்தை, அரியானா, பஞ்சாப்பின் பணியாளர்கள், ஓய்வூதிய தாரர்கள் நிராகரித்துள்ளனர். அவர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை நடை முறைப்படுத்தக் கோருகின்றனர். அரியானாவில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஓய்வூதிய விவகாரம் பா.ஜ.க.வுக்குப் பின்னடைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாட்டுக்கு அடுத்தபடியாக அரியானாவில் 21 சத தலித்துகள் இருக்கின்றனர். ஜனநாயக் ஜனக் கட்சி, சந்திரசேகர ஆசாத்துடன் கூட்டணியமைத்துள்ள நிலையில், மாயாவதி கட்சி தேர்தலில் போட்டி யிடுவது, தலித் வாக்குகள் முழுமையாக அந்தப் பக்கம் போய்விடாமல் தடுக்குமென பா.ஜ.க. நம்புகிறது.
அக்டோபர் 1-ஆம் தேதி அரியானாவுக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வேட் பாளர் தேர்வு, பிரச்சாரத்தில் மும்முரம் காட்டிவருகின்றன. இந்நிலையில் குழந்தையொன்று பா.ஜ. கட்சிக்கு ஆதரவாகத் கருத்துத் தெரிவிப்பது போல் பிரச்சார வீடியோ ஒன்று வெளி யிடப்பட்டிருந்தது. பிரச்சார வீடியோவில் குழந்தை கள் இடம்பெற தடையிருப்பதைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத் தில் ஆம் ஆத்மி புகார் செய்திருந்தது. இதையடுத்து அரியானா மாநில பா.ஜ.க. தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதுடன், அந்த வீடியோவுக்கு தடையும் விதித்திருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவு.
தேர்தல் நடக்கும் மாநிலத்தை, பா.ஜ.க.வின் பெருந்தலைவர்கள் முற்றுகையிடுவது அக்கட்சியின் தேர்தல் யுக்தி. அதுவே இம்முறையும் நடக்கும். மத்தியில் அதிகார மையத்தில் பா.ஜ.க. இருப்பதும், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல எதிர்க்கட்சிகள் நான்கு அணியாகப் போட்டியிடுவதும் தனக்குச் சாதகம் என பா.ஜ.க. நம்புகிறது. தவிரவும் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை, மாநிலத் தேர்தல் வெற்றிகளின்மூலம் ஈடுகட்ட பா.ஜ.க. மும்முரம் காட்டுகிறது.
மாறாக, ஜனநாயக் ஜனக் கட்சி, ஆம் ஆத்மி, சந்திரசேகர ஆசாத்தின் ஏதோவொரு கட்சியுட னான கூட்டணியை உறுதிசெய்திருந்தால் காங் கிரஸுக்கான ஆதரவு இன்னும் வலுப்பட்டிருக்கும். ஆனால் காங்கிரஸோ, தனித்தே தேர்தலில் வென்றுவிடலாமென நம்புகிறது. சமயங்களில் அளவுக்கதிகமான தன்னம்பிக்கை ஆபத்திலும் முடியலாம்.
ஹிஜாரின் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜேந்திர சிங் தற்போது காங்கிரஸில் இணைந்திருப்பதுடன், களத்தில் பா.ஜ.க. பலவீனமாக இருக்கிறது எனப் பேசிவருகிறார். “மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 110 தொகுதிகளை வெல்வோம் என்றுகூட பா.ஜ.க. சொல்லிக் கொள்ளட்டும். எங்களுக்கென்ன... இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியமைக்கும்” என்கிறது காங்கிரஸ்.
விவசாயிகள் அதிருப்தி, அக்னிவீர் திட்டம் காரணமாக ஜாட்டுகள் பா.ஜ.க. மேல் அதிருப்தி யடைந்திருப்பது, மல்யுத்த வீரர்கள் போராட்டம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பா.ஜ.க. வின் பலவீனங் களையும், மாநில காங்கிரஸ் தலை மையான பூபேந் தர் சிங் ஹூடா வின் ஆளுமை யும் மட்டும் போதுமென நம்புகிறது காங் கிரஸ். ஜே.ஜே. பி.யின் துஷ்யந்த் சௌதாலா, “"மூன்று சுயேட்சைகள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை வாபஸ் பெற்றும், நயாப் சிங் சைனி அரசை, பூபேந்தர் சிங் ஹூடா கவிழ்க்காமல் இருக்கிறார் என் றால், பா.ஜ.க. அரசுக்கும் காங்கிரஸுக்குமான கொடுக்கல்லி வாங்கலால்தான். பூபேந்தர் மேல், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொள்கிறது பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்காமல் காங்கிரஸ் பாதுகாக் கிறது''’என பிரதான கட்சிகள் இரண்டையும் குற்றம் சாட்டுகிறார். ஆம் ஆத்மி தரப்பில், பிரதான தலைமையான அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் சிறையிலிருந்து வெளிவராததே பெரிய பின்னடைவாக இருக்கிறது. இருந்தும் அக்கட்சி தனித்துக் களம் காணத் தயாராகிவருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலம் அரியானா என்றபோதும், டெல்லி, பஞ்சாப்பில் கிடைத்த வரவேற்பு அரியானாவில் ஆம் ஆத்மிக்குக் கிடைக்கவில்லை. உள்ளூர் செல்வாக்குமிக்க தலைவர்கள் கிடைக்காதது அதற்கொரு காரணம். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் குரு ஷேத்ரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குப்தா, அங்கு போட்டியிட்ட நவீன் ஷிண்டாலுக்கு நெருக்கமாக வாக்கு வாங்கி பலரது கவனத்தையும் ஈர்த்தார். 90 தொகுதிகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, டெல்லியைப் போன்றே அரியானாவையும் மாற்றிக்காட்டுவோம். சுகாதாரம், மருத்துவ வசதிகளை கிராமங்களுக்கும் கொண்டுசெல்வோம் என தனது பாணியிலான வாக்குறுதிகளை அளிக்கிறது. அதுமட்டும் தேர்தலில் வெல்லப் போதுமா என தெரியவில்லை.
தலித் வாக்குகள் ப்ளஸ் தனது ஜனநாயக் ஜனக் கட்சிக்கான வாக்குகளை நம்பி களமிறங்குகிறார் துஷ்யந்த் சௌதாலா. அரியானாவிலிருக்கும் 56 சத இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இந்தியாவில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை நிலவும் மாநிலம் அரியானா. அவர்களின் அதிருப்தியே பா.ஜ.க.வின் தோல்விக்குக் காரணமாகும் என கணக்குப் போடுகிறார் சௌதாலா.
பகுஜன் சமாஜ், இந்திய தேசிய லோக் தள் கட்சி இரண்டும் தலித் வாக்குகளையும், கட்சியின் பழைய பெருமையை நம்பிக் களமிறங்கினாலும் அவர்களது இருப்பு தேர்தல் தளத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என யூகிக்கமுடியவில்லை. இப்படி ஒவ்வொரு கட்சியும் தங்கள் பக்கத்தில் ஒரு கணக்கோடு களமிறங்கினாலும், யாரை அரியணையில் அமர்த்துவதென்ற கணக்கோடு மக்கள் இருக்கிறார்கள் என்பது அக்டோபர் 4-ஆம் தேதிதான் தெளிவாகும்!