இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் ஒன்பது மாத பெண் குழந்தைக்கு டுவிட்டரில் ஆபாசமாக, இழிவாக, "டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்காக மானபங்கப்படுத்துவேன்' என மிரட்டல் விடுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்நாகேஷ் என்பவனை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் பாலியல் தொந்தரவு தரும் ஆசிரியர்கள் மீது புகார் கொடுத்தால், பள்ளி நிர்வாகங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ராஜகோபாலன், அந்தப் பள்ளியில் 20 வருடங்களாக வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடம் நடத்திவந்தார். அவரது காமாந்தக செயல்களை பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு மாணவிகள் கொண்டு வந்தார்கள். பள்ளி நிர்வாகம் ராஜகோபாலுக்கு ஆதரவாகவே இருந்தது.
பல்வேறு பாலியல் நெருக்கடித் தொல்லை களுக்கிடையே, அந்தப் பள்ளியில் படித்த ஒய்.ஜி. மகேந்திரனின் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரிடம் பாட வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை காட்டுவது, அவரது கேவலமான செயல்களை பெற்றோர்களிடம் சொல்லக்கூடாது என மிரட்டுவது... இதை யெல்லாம் செய்யாவிட்டால் மாணவிகளை ஃபெயில் ஆக்குவது, இவற்றை புகாராக எழுதி முன்னாள் மாணவி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதன்பிறகே போலீசார் ராஜகோபாலனை கைது செய்தார்கள். குழந்தைகள் மற்றும் மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமிதான் கைது செய்தார்.
ராஜகோபாலன், மாணவிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய லேப்டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. போக்சோ சட்டம், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு எதிரான சட்டம், ஆபாச படங்கள் அனுப்புவதை தடை செய்யும் தகவல் தொடர்பு சட்டம் ஆகியவை ராஜகோபாலன் மேல் பாய்ந்தது. சில நாட்களிலேயே விளையாட்டுப் பயிற்சியாளர் கெவின்ராஜ், மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டார் என்கிற புகாரில் கைது செய்யப்பட்டார். மொத்தம் ஏழு மாணவிகள் ராஜகோபாலனுக்கு எதிராக புகார் கொடுத்தார்கள். ராஜகோபாலன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டாக்டர் ராமதாஸ் எனப் பலர் குரல் கொடுத்ததன் விளைவாக... ராஜகோபாலனின் குற் றங்கள் பற்றி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது நீதிமன்றத்தில். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன், சிறையில் ஜாலியாக இருக்கிறார் என்கிறார்கள் சிறைவாசி கள்.
"இவையெல்லாம் வர்ணாசிரமத்தால் வரக்கூடிய கேடு' என்கிறார் பிரபல கல்வியாளரான பிரின்ஸ் கஜேந்திர பாபு. “"ராஜகோபாலனும் கெவினும் பிராமணர்கள் இல்லை. ஆனால் அவர்கள் வேலை செய்த நிறுவனம் ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பத்தால் நடத்தப்படுவது. அதனால்தான் பத்ம சேஷாத்ரி பள்ளிக்கூடத்திற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகளை கண்டித்து சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் குரலெழுப்பினார்கள். இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள். இது நமது சமூகத்தில், மாணவர்கள் மத்தியில் நிலவும் விழிப்புணர்வின்மையைக் காட்டுகிறது. ஒரு ஆசிரியர் இதுபோன்ற ஆபாசக் கூத்துக்களில் ஈடுபடுகிறார் என்றால் அது நிச்சயமாக மற்ற ஆசிரியர்களுக்கோ, நிர்வாகத்திற்கோ தெரியாமல் இருக்காது. இதுபோன்ற ஆபாச கூத்துக்கள் அரங்கேறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப் பொழுதுதான் இந்தக் கொடுமை ஒழியும்''” என்கிறார் பிரின்ஸ்.