சனாதன வன்முறை கும்பலால் பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதற்குண்டான முன்னேற்பாடாக பா.ஜ.க. தலைவர் அத்வானி நாடெங்கும் கலவர பேரணியை 1990ஆம் ஆண்டு தொடங்கினார். ஓ.பி.சி. மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் மண்டல் பரிந்துரைக்கு எதிராகத் தொடங்கப்பட்டதே பா.ஜ.க.வின் பேரணி என்பதே அதன் பின்னணி.
நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அரசு, வழிபாட்டு இடங்கள் சட்டத்தை கொண்டு வந்தது. அச்சட்டத் தின் அறிமுகத்தில்.. ”1947 ஆகஸ்ட் 15ஆம் நாளன்று இருந்தவாறான வழிபாட்டு இடங்களை உருமாற்றம் செய்வதைத் தடை செய்வதற்கும், அவற்றை வகைசெய்வதற்குமான ஒரு சட்டம்’ என்கிறது.
மேலும் இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 4 (1) & 5 சொல்வது...…
4. (1) 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தன்மை யானது, அதேபோன்று தொடர்ந்திருக்கும்.
5. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் அமைந்திருக்கிற இராம ஜென்ம பூமி பாபர் மசூதி தொடர்பான உரிமை வழக்கு, மேல்முறையீடு அல்லது பிற நடவடிக்கை எவற்றிற்கும் பொருந்தாது’என்பதே.
அயோத்தி பாபர் மசூதி வழக்கை மட்டும் தவிர்த்து, 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளில் அமைந்த எந்தவொரு வழிபாட்டு இடத்தின் சமயத்தன்மை யையும் மாற்றுவது தொடர்பான எந்த வழக்கும் செல்லுபடியாகாது, அது குறித்து எந்த நீதிமன்றத் திலும் வழக்கு தொடர முடியாது என்று தெளிவு படுத்துகிறது சட்டம்.
பாபர் மசூதி தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை, இந்து தரப்புக்கு வழங்கி 2019ல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வு தீர்ப்பளித் தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகாய். அந்த ஐவரில் போப்டே மற்றும் சந்திரசூட் இருவரும் பின்னர் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். அயோத்தி தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயர் ரகசியமாக இருந்த நிலையில், சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்தான் என வெளிப்பட்டது.
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் கருவியாக வரலாற்றையும், அதன் தவறுகளையும் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தான் வழிபாட்டு இடங்கள் சட்டம் மூலம் நாடாளு மன்றம் தெளிவாக சொல்லியுள்ளது. மதச்சார்பின் மையை பாதுகாக்கும் நோக்கத்திலும், அதற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது”என்று பாபர் மசூதி தீர்ப்பில் தனி தலைப்பிட்டுச் சொல்லியுள்ளனர்.
வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கு
உத்தரபிரதேசம் வாரணாசியில் அமைந்துள் ளது காசி விஸ்வநாதர் கோவில். இதற்கு அருகே உள்ளது 16ஆம் நூற்றாண்டில் அவுரங்கசீப் மன்னனால் கட்டப்பட்டது ஞானவாபி மசூதி. இந்த மசூதி தொடர் பாக 1991ஆம் ஆண்டு வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்ட தாகவும், மசூதியின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள 4 நிலவறைகளில் ஒன்றில் இந்து தரப்பு பல நூற்றாண்டு களாக வழிபாடு நடத்தி வருவதாகவும், எனவே மசூதி அமைந்துள்ள பகுதியின் நிர்வாகத்தை இந்து தரப்புக்கு வழங்க வேண்டும் என்பதே வழக்கு.
1998ஆம் ஆண்டே மசூதிக்குள் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அயோத்தி பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு வெளியானதும், வழக்கறிஞர் விஜய்சங்கர் ரஸ்தோகி என்பவர் காசிவிஸ்வநாதர் கோவிலில் கருவறையில் அமைந்துள்ள சுயம்பு ஆதி விஷ்வேஷ்வரின் நண்பர் என்ற பெயரிட்டு, ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு கோரி வழக்கு தொடர்ந்தார்.
ரஸ்தோகியின் வழக்கை வழிபாட்டு இடங்கள் சட்டத்தை முன்வைத்து மசூதியின் நிர்வாகக் குழுவான அஞ்சுமான் இண்டேசா மியா மஸ்ஜித் கமிட்டி எதிர்த்தது. இருப்பினும் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு உத்தரவிடப் பட்டு, ஆய்வறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில் மசூதிக்குள் செயற்கை நீரூற்று அருகே சிவலிங்கம் போன்ற அமைப்பு உள்ளதாகவும், குறிப்பாக மசூதி கட்டப்படுவதற்கு முன்னர், அங்கு இந்து கோவில் இருந்தது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தொல்லியல் துறை தெரிவித்தது.
மசூதியின் நிலவறைப் பகுதியில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் தாக்கல் செய்த வழக்கில், அதற்கு அனுமதி அளித்தது வாரணாசி நீதிமன்றம். தற்போது அரசு கட்டுப்பாட்டில் அந்த நிலவறை கொண்டு வரப்பட்டு, பார்ப்பனர் ஒருவரால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
வாரணாசி நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பி னரின் மேல்முறையீட்டு வழக்கில் தான், அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அரசியலமைப்பை சீர்குலைக்கும் மோசமான நிலைப்பாட்டை எடுத்தார். வழிபாட்டு இடங்கள் சட்டத்தை முன்வைத்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தவும், அதன் நிலவறையில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளித்த தீர்ப்பையும் எதிர்த்தது மசூதி நிர்வாகம்.
மசூதிக்குள் இந்து கடவுளர் சிலைகளை வழிபடும் உரிமையை தான் மனுதாரர் கேட்டுள்ளார். அந்த இடத்தின் உண்மையான மதத்தன்மையை தீர்மானிப்பது, அதன் தன்மையை மாற்றுவதோ அல்லது திருத்து வதோ ஆகாது. இந்த வழக்கு வழிபாட்டு இடங் கள் சட்டத்துக்கு எதிராக இல்லை” என்று வாய்மொழியாக கருத்து தெரிவித்தார் தலைமை நீதிபதி சந்திரசூட். மேலும், மசூதிக் குள் தொல்லியல் ஆய்வு நடத்தவும், இந்துக்கள் சென்று வழிபடவும் மாவட்ட நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவில் தலையிடவும் மறுத்துவிட்டார்.
தலைமை நீதிபதியின் இந்த நிலைப்பாடு சட்டத்தை வலுவிழக்கச் செய்வதாகவும், பாபர் மசூதி வழக்கில் அவர் எழுதிய தீர்ப்புக்கே முரணாகவும் இருந்தது.
மதுரா ஷாஹி இத்கா மசூதி வழக்கு
கிருஷ்ணர் பிறந்த இடம் என்று கருதப்படும் இடத்தில் உ.பி.யின் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்துக்கு அடுத்து ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. மசூதியை கொண்ட வளாகம் மொத்தம் 13.37 ஏக்கரில் உள்ளது.
1964ல் இருதரப்பினர் இடையே சிக்கல் எழுந்தபோது, 1968ல் சமாதான உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது. அதன்படி, வளாகத்தில் உள்ள நிலம் கோவிலுக்கும், அதிலுள்ள மசூதியின் நிர்வாகம் இஸ்லாமிய தரப்புக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும், மசூதி மீது கோவிலுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
2019ல் பாபர் மசூதி வழக்கில் சனாதன தரப்பு முதல் வெற்றியை பதிவு செய்ததும், வாரணாசியை தொடர்ந்து மதுராவிலும் வழக்கு தொடரப்பட்டது. மசூதி அப்புறப்படுத்தப்பட்டு நிலம் முழுவதும் கோவிலுக்கு தரப்பட வேண்டும் என்று மதுரா நீதிமன்றத்தில் இந்து தரப்பு சார்பாக 18 வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன.
மதுரா கோவிலில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீகிருஷ்ண விராஜ்மான் சார்பில் அவரது ’நண்பர்’ என்ற பெயரில் வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி வழக்கு தொடர்ந்தி ருந்தார். இந்த வழக்கில் 2023 டிசம்பரில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மசூதியில் ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இஸ்லாமிய தரப்பின் மேல்முறையீட்டில் அதற்கு ஜனவரியில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கிலும் வழிபாட்டு இடங்கள் சட்டத்தை தான் தங்கள் தரப்பு வாதமாக மசூதி நிர்வாகம் முன்வைத்தது. ஆனால் மதுரா மாவட்ட நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என எங்கும் அது ஏற்கப்படவில்லை.
சம்பல் ஜமா மசூதி வழக்கு
உ.பி.யில் சம்பல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷாஹி ஜமா மசூதி. இது ஒன்றிய தொல்பொருள் ஆய்வகத் தின் கீழ் வரும் இடமாகும். இந்த இடத்தில் முன்னர் இந்து ஹரிஹர் கோவில் இருந்ததாக சம்பல் மாவட்ட நீதிமன்றத் தில் நவ.19ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், மசூதி தரப்பை ஆலோசிக்காமல் வழக்கு தாக்கலான சில மணிநேரத்தில் நீதிமன்றம் நியமிக்கும் கண்காணிப்பாளர் தலைமையில் மசூதியை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நாள் மாலையில், நீதிமன்றத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மசூதிக்குள் பெரும் போலீஸ் படையுடன் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர் இந்து தரப்பினர்.
இந்த நிலையில் கடந்த நவ.24ல் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என முதல் நாள் நள்ளிரவில் தகவல் கொடுத்தது காவல்துறை. அடுத்த நாள் காலை 6.15 மணிக்கே போலீஸ் படையுடன் மசூதிக்குள் நுழைந்து காலை தொழுகையில் இருந்தவர்களை வெளி யேற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதனை எதிர்த்து இசுலாமியர்கள் ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
இந்து தரப்பினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்துடன் மசூதியை நோக்கி செல்லும் காட்சியும், போராடும் இஸ்லா மிய இளைஞர்களை நோக்கி காவலர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடும் காட்சியும் நாடெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
ஜமா மசூதி தரப்பின் மேல்முறை யீட்டு வழக்கை விசாரித்த புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு, ”மசூதியில் இருமுறை நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை சீலிடப்பட்ட உறையில் வைத்திருக்கவும், சம்பல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகும் வரை வழக்கில் வேறு எந்த முடிவும் எடுக் கப்படக்கூடாது” என்றும் உத்தரவிட்டது. வழிபாட்டு இடங்கள் சட்டம் குறித்து இப்போதாவது உச்சநீதிமன்றம் சரியான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமா என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
அஜ்மீர் மொய்தீன் ஷிஷ்தி தர்கா வழக்கு
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி துறவி மொய்தீன் ஷிஷ்தியின் உலகப் புகழ்பெற்ற தர்கா அமைந்துள்ளது.
இந்து சேனா என்ற அமைப்பின் தலைவன், "அஜ்மீர் தர்காவுக்கு கீழே சிவன் கோவில் இருந்தது. அதை இடித்த பின்பே தர்கா கட்டப்பட்டது. எனவே ஆய்வு மேற் கொண்டு அதனை கோவிலாக அறிவிக்க வேண்டும்' என மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசார ணைக்கு ஏற்று தர்கா நிர்வாகம், ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது நீதிமன்றம்.
அயோத்தி பாபர் மசூதி வழக்கு தொடங்கி பெரும்பாலான மசூதிகளுக்கு எதிரான வழக்குகளில் இந்து தரப்பினருக்கு ஆதரவாக வழக்கை நடத்துபவர்கள் வழக்கறிஞர்களான ஹரி சங்கர் ஜெயின் மற்றும் விஷ்ணு சங்கர் ஜெயின் தான். இருவரும் தந்தை - மகன் ஆவர். நாடு முழுவதும் சங் பரிவார் அமைப்புகள்
இந்த விடயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதை இது உணர்த்துகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் பொதுக்கூட்டத்தில் பேசிய உ.பி. முதல்வர் ஆதித்யநாத், "ஞானவாபியை மசூதி என்று அழைப்பது தவறு, அது ஒரு சிவன் கோவில். தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாடுக்கும் மசூதியின் பெயர் தடையாக உள்ளது'' என்றார்.
பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி, இஸ்லாமிய வழிபாட்டு இடங்களை உரிமை கோருவதற்கு சனாதன கும்பல் முன்வைக்கும் வாதம், ஒரு வழிபாட்டு இடத்திலிருந்து கடவுளர்களின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், அந்த இடம் கோவிலாகவே தொடர்கிறது. கடவுள்கள் எல்லா காலத்துக்கும் உரியவர்கள் என்பதால், அந்த இடத்தின் மதத் தன்மை மாறுவதில்லை என்பதே.
1991ஆம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, பெரும் பான்மைவாத பயங்கரவாதத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் வேலையில் மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றமே ஈடுபட்டுள்ளது.
ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்னர் தலைமை நீதிபதி சந்திரசூட் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
பாபர் மசூதி வழக்கில் முடிவு எடுப்பதற்கு 3 மாதங்களாக மிகவும் சிரமப்பட்டதாகவும், அப்போது கடவுளின் சிலை முன்பு அமர்ந்து, அவ்வழக்கிற்கு அவரையே தீர்வைச் சொல்லும்படி வேண்டினேன் என்றும் தெரிவித்துள்ளார். கடவுளிடம் கேட்டு பாபர் மசூதி தீர்ப்பை முடிவு செய்தேன் என்று சொன்ன நீதிபதி சந்திர சூட்டின் கருத்தும் பெரும்பான்மைவாத பயங்கரவாதம் தான். அதன் நீட்சியாகத்தான் தனது அரசு இல்லத்துக்கு கேமராக்கள் புடைசூழ, பிரதமர் மோடியை வரவேற்று விநாயகர் பூஜையில் பங்கெடுக்க வைத்தார் சந்திரசூட்.
சமண -பௌத்த வழிபாட்டுத் தலங்களை வன்முறையின் மூலம் தனதாக்கிக் கொண்டது சனாதன பயங்கரவாத கும்பல். பௌத்தத்துக்கும் பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கும் இடையே நடைபெற்ற போராட் டமே இந்திய வரலாறு என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த போராட்டத்தின் தொடர்ச்சியைத்தான் இப்போதும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதில் சனநாயகத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பும் வீழ்த்தப்பட்டு வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஞானவாபி மசூதி விவகாரம் வெளிவந்த காலத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத், “"ஏன் ஒவ்வொரு மசூதிக்கு அடியிலும் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்?'’என்று தங்கள் வன்முறை கும்பலுக்கு கேள்வி எழுப்பினார்.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பில் தொடங்கி, காசி, மதுரா, சம்பல் என தொடர்ந்து இப்போது அஜ்மீர் தர்காவுக்கு வந்து நிற்கிறது சனாதன வன்முறைக் கும்பல்.
நீதிமன்றங்களில் சனாதனக் கும்பல் முன்வைக்கும் வாதப்படி, பூர்வகுடி பவுத்த - சமணர்கள், திருவரங்கம் மற்றும் திருப்பதியின் மதத்தன்மையை ஆராயும்படி சனநாயகவாதிகள் கோரினால் ஏற்குமா?
இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டை கொண் டாடும் மோடி அரசு அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி படுகொலை செய்கிறது என்பதற்கு இவை உதாரணங்கள்.