போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம், நீட் எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம், ஐ.பி.எல். எதிர்ப்புப் போராட்டம் என ஒரே போராட்டமயமாக இருக்கிறது தமிழ்நாடு.
இந்நிலையில்தான், ஜாக்டோ-ஜியோ அமைப்பு, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவுசெய்து மே 8-ஆம் தேதி போராட்டத்தில் இறங்கியது.
புதிய ஓய்வூதிய முறையை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பணியாளர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைதல், 21 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பிப்ரவரி மாதம் முதல் தொடர் சாலைமறியல் போராட்டத்தில் இறங்கிவந்தனர். பாராமுகம், கேளாச்செவி என போக்குக்காட்டிய அரசின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் முடிவுக்கு வந்தனர் ஊழியர்கள்.
அதற்காக மாவட்ட, மண்டல அளவில் தீவிரமாக வேலைசெய்துவந்தனர் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர். 2003, ஜெ. ஆட்சிக்காலத்தில் போராட்டத்துக்கு முன்னர் இரவோடு இரவாக எப்படி ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனரோ, அதேபோல எடப்பாடி அரசும் போராட்டத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கைது நடவடிக்கையில் இறங்கியது. போராட்டக்காரர்கள் பயணிக்கும் வழிகள் குறித்து முன்கூட்டியே காவல்துறையில் சர்க்குலர் அறிக்கை சுழன்றது.
அரசு இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்பதை யூகித்து, மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள் முன்கூட்டியே சென்னை வந்துவிட்டனர். முதல் அடிவைப்பிலேயே கோட்டைவிட்ட உளவுத்துறை, அடுத்து சுங்கச்சாவடிகளை குறிவைத்து, தனியாக பேருந்து எடுத்து சென்னை வந்த அரசு ஊழியர்களைத் திருப்பியனுப்புவதில் மும்முரமாயினர்.. அதைத்தாண்டி அரசுப் பேருந்து, ரயில் மூலம் சென்னைக்கு வந்தவர்களையும் அடையாளம் கண்டு கைது நடவடிக்கையில் வேகம்காட்டினர்.
""2003 அனுபவம் இருக்கிறதல்லவா...… அதனால் உஷாராகச் செயல்பட்டோம். வாட்ஸ் அப் குழு ஒன்றை அமைத்து, மாட்டிக்கொள்ளாமல் சென்னை வருவது எப்படியென தகவல் அனுப்பினோம். இதை உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. பொறுப்பாளர்களையே முதன்மையாகப் முடக்கப் பார்க்கும் என்பதால் அவர்களை முன்கூட்டியே சென்னைக்கு அனுப்பிவிட்டோம்''’என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
தலைமைச் செயலகம் செல்லும் சாலையை முழுமையாக தடுத்து வைத்திருந்தது காவல்துறை. எப்போதும் இல்லாத அளவில் முள்வேலி கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை சென்ட்ரல் தொடங்கி, சேப்பாக்கம், தலைமைச் செயலகம் செல்லும் பேருந்துகளில் இருந்தவர்கள் ஒவ்வொருவரையும் விசாரணை செய்யவே பிற பயணிகள் விவரம் தெரியாமல் அதிர்ச்சியடைந்தார்கள்.
சேப்பாக்கம் சாலையில் சாதாரணமாக நடந்துசென்றவர்களைக்கூட சோதனைசெய்து திருப்பியனுப்பினர். அரசு ஊழியர்களை அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த பைகளைக் கொண்டே அடையாளம் கண்டு காவல்துறை கைது செய்ததைப் பார்க்க முடிந்தது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் விடுதிகளில் இரண்டு தினங்கள் முன்பே நிறையபேர் வந்து தங்கியிருந்தனர். கோயம்பேடு, சென்ட்ரலில் வந்து இறங்குகிறவர்கள் கைது செய்யப்படுவது தெரிந்துவிட்டதால், இங்கே இருந்தவர்கள் மாவட்ட வாரியாகப் பிரிந்து தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவே, காவல்துறை திணறித்தான் போனது.
அண்ணாசாலை தொடங்கி எழிலகம் வரை காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து 5 மணி நேரம் அரசு ஊழியர்கள் வெவ்வேறு வழிகளில் வந்திறங்க, காவல்துறையும் விடாமல் கைது நடவடிக்கைகளில் இறங்கியது. பறக்கும் ரயிலில் வந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் எழிலகம் அமைந்திருக்கும் பகுதியில் போராட்டம் நடத்த... இத்தனை பாதுகாப்பை மீறி இவர்கள் எப்படி வந்தார்கள் என அரசும், காவல்துறையும் அதிர்ந்தன.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியரைக் கைதுசெய்ய முயன்றபோது, ""உங்களுக்கும் சேர்த்துதான் போராடிக்கிட்டிருக்கோம். நீங்களும் அரசு ஊழியர்கள்தான்''’என காவலர்களிடம் கோபத்தைக் கொட்டினர். பல இடங்களில் ஊழியர்கள் கைதாக மறுக்கவே... தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்துக்குமேல் பொறுமை இழந்த காவல்துறையினர், அரசு ஊழியர்களைத் தாக்கத்தொடங்கினர். 5 மணி நேரம் போராடி அரசு ஊழியர்கள் அனைவரையும் கைதுசெய்தது போலீஸ்.
மாலை அனைவரையும் விடுவித்ததாக போலீஸ் அறிவிக்க, விடுதலையாக மறுத்து இரவு வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் அரசு ஊழியர்கள். அடுத்தகட்ட போராட்டம் குறித்து, வரும் 20-ஆம் தேதி அறிவிக்கப்படுமென கூறி போராட்டத்தை ஒத்திவைத்தனர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.
போராட்டங்களையும் கைகலப்புகளையும் ஊடகத்துறையினர் படம்பிடித்துக்கொண்டிருக்க, போட்டோகிராபர் சீனிவாசன் பேருந்து உள்ளேயிருந்து படம் பிடித்தபோது, காவல் அதிகாரி செந்தில்குமார், ஆனந்த்பாபு ஆகியோர் சீனிவாசன் சட்டையைப் பிடித்து "இது போலீஸ் பிராப்பர்ட்டி' என மிரட்டினர். அங்கு வந்த ஜெ.சி. அன்பு விலக்கிவிட, அதன்பின்னரும் ஆனந்த்பாபு, சீனிவாசனைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பொதுச்செயலாளர் அன்பரசிடம் போராட்டம் குறித்துக் கேட்டபோது, “""அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசு செய்திருக்கும் விளம்பரத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேரடி வரி வருவாயில்தான் சம்பளம் உள்ளிட்டவை செலவுசெய்யப்படுகிறது. அதுவும் அரசு சொல்வதுபோல அது 70 சதவிகிதம் அல்ல. 40 சதவிகிதம்தான். அரசு எங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத்தொகை 21 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைத்தான் கேட்கிறோம்''’என்கிறார் விளக்கமாக.
ஆட்சி கவிழாமலிருக்க போராடுகிறவர்கள், எங்கே அடுத்தவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்?
-சி.ஜீவாபாரதி
ஆதரிக்காத தலைமைச் செயலகம்!
"தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் போராட்டத்திற்குத் தலைமைச் செயலகத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்குக் காரணம், தலைமைச்செயலக ஊழியர் சங்கத் தலைவரான பீட்டர் அந்தோணிசாமி, அமைச்சர் ஜெயக்குமாருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதுதான்' என்கிறார்கள் அரசு ஊழியர்கள். "அதனால்தான் தலைமைச் செயலகத்தை எங்களால் நெருங்க முடியவில்லை' என வருத்தப்படுகிறார்கள்.
இதனிடையே, தலைமைச் செயலக ஊழியர்களின் சம்பள விகிதம் குறித்த அமைச்சர் ஜெயக்குமாரின் புள்ளிவிவரங்களுக்கு மறுப்பு தெரிவித்து, அமைச்சர் குறிப்பிடும் சராசரி சம்பள அளவு என்பது 25 ஆண்டு சர்வீஸ் நிறைந்தவர்களுக்குத்தான் பொருந்தும் என விளக்கமாக அறிக்கை தந்துள்ளார் பீட்டர் அந்தோணிசாமி.
-பிரகாஷ்