ருத்ரா, ஐ.எஃப்.எஸ். போன்ற மோசடி நிறுவனங்கள், 10 ஆயிரம் கோடி, 20 ஆயிரம் கோடி என பொதுமக்களிடம் ஆட்டையைப் போட்டுவிட்டு, மோசடியாளர்கள், பா.ஜ.க. தலைவர்களின் பின்னால் பதுங்கிக்கொண்டார்கள். இதோ, இப்போது மொபைல் ஆப் மூலமாக கோடிக்கணக் கான பணத்தை மக்களிடம் ஏமாற்றிவருகிறது ஒரு கும்பல். ""எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம் பட்டு, குடியாத்தம் பகுதி தொழிலாளர்கள் புகாரளித்து வருகிறார்கள்.

ss

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆம்பூரை சேர்ந்த பாஸ்கர், ""க்ராஸ் வேல்ட் என்கிற மொபைல் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கிறது. இதில் நாம் பணம் டெப்பாசிட் செய்தால் அந்த பணத்துக்கு தினமும் வட்டி தருவார்கள். அது காலம் முழுவதும் வரும் என ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கூறியதால் நானும் அந்த மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்தேன். 6 ஆயிரம் கட்டினால் தினமும் 340 ரூபாய், 37 ஆயிரம் கட்டினால் தினமும் 2,000 ரூபாய், 1,10,000 கட்டினால் தினமும் 5,500 ரூபாய், 3.75 லட்சம் கட்டினால் தினசரி 18,750 ரூபாய் வாழ்நாள் முழுவதும் தரப்படும் எனக்காட்டியது. அதில், நானும், என் மனைவியும் கூகுள் பே வழியாக 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியதும், நான் டெப்பாசிட் செய்த தொகையைக் காட்டியது. அதற்கு தினமும் எவ்வளவு வட்டி தரப்படும் என்பதையும் காட்டியது. இரண்டு வாரம் வட்டித் தொகை வந்தது, அதன்பின் வரவில்லை. அதில் அட்மின் எனக் குறிப்பிட்டு கொடுக்கப்பட்ட எண்ணில் தொடர்புகொண்டால், நம்பர் பயன்பாட்டிலேயே இல்லை. என்னைப்போலவே இப்பகுதியில் ஐயாயிரம் பேருக்கும் மேல் பணத்தை டெப்பாசிட் செய்து ஏமாந்துள்ளார்கள். எனக்கு அந்த ஆப்-ஐ அறிமுகப்படுத்தியவர்களிடம் கேட்டபோது, 'நாங்களும் தான் ஏமாந்து நிற்கிறோம்'னு சொல்றாங்க. இப்போது அந்த ஆப் ப்ளே ஸ்டோரிலும் இல்லை, என்ன செய்வது எனத்தெரியவில்லை'' என்றார்.

ஆம்பூர் ராமதாஸ் என்பவரோ, ""க்ராஸ் வேல்ட் ஆப்பில் இன்வெஸ்ட் செய்தால் நல்ல லாபம் கிடைக்குது என சில நண்பர்கள் சொன்னார்கள். ஏற்கெனவே ஒரு ஆப்பில் இப்படி பணம் செலுத்தி சில லட்சங்கள் ஏமாந்ததால் தயங்கினேன். நாங்கல்லாம் நல்லா லாபம் சம்பாதிக்கிறோம், லட்ச ரூபாய்க்கு தினமும் 3 ஆயிரம் வரும்னு சொன்னாங்க. நான் 10 வட்டிக்கு கடன் வாங்கி 80 ஆயிரம், என்னோட தொழில் பார்ட்னர் 1.20 லட்சம் என 2 லட்சம் டெப்பாசிட் செய்தோம். இரண்டு நாள் வட்டி வந்தது. அதுக்கப்புறம் வரல. யார்கிட்ட கேக்கறதுன்னு தெரியல, சைபர் க்ரைம்ல புகார் தரலாம்னு இருக்கோம்'' என்றார்.

ss

ஆம்பூர் பகுதியிலுள்ள தொழிலாளர்களிடம் நிர்மலா என்பவர் தான் இந்த ஆப்-ஐ அறிமுகம் செய்திருப்பதாகத் தெரிகிறது. அவரைப்போல் இன்னும் சிலரும் இதற்காக கேன்வாஸ் செய்து நூற்றுக்கணக்கானவர்களை சேர்த்துவிட்டி ருக்கிறார்கள். தங்க நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கி இந்த ஆப்-பில் டெப்பாசிட் செய்துள்ளார்கள். சில வாரங்களிலேயே இதன் எண்ணிக்கை சில ஆயிரங்கள் அதிகரித்துள்ளன. டெப்பாசிட் செய்தவர்களை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்துள்ளனர். அதில் அட்மினாக இருந்தவர்களின் மொபைல் எண்ணுக்கு போன் செய்தால் யாரும் எடுக்க மாட்டார்கள். மெசேஜ் வழியாக மட்டுமே உரையாடியுள்ளார்கள். தமிழ்நாடு மேனேஜர் எனச்சொல்லிக்கொண்டு சுனில்குமார் என்பவன் வாட்ஸப் குரூப்பில் டெப்பாசிட்தாரர்களுக்கு தமிழில் பதில் சொல்லியுள்ளான். இப்போது அந்த க்ராஸ் வேல்ட் ஆப் காணாமல் போனதுபோல் அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின்கள் 7 பேரின் மொபைல் எண்களும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டன. க்ராஸ் வேல்ட் ஆப் க்ளோஸான மறுநாளே ஜி5 என்கிற பெயரில் அதே ஆப் ப்ளே ஸ்டோரில் வருகிறது. அதே அட்மின்கள் இதிலும் இருப்பதாகத் தெரிகிறது.

இதுக்குறித்து இந்தியா சைபர் செக்யூரிட்டி சொசைட்டி உறுப்பினரான சென்னையை சேர்ந்த விநோத்ஆறுமுகத்திடம் பேசியபோது, ""இதுபோன்ற ஆப்களை குளோனிங் ஆப் எனச் சொல்வோம். ஆப் உருவாக்கிய கோடிங்கை மார்க்கெட்டில் விற்பனை செய்துவிடுவார்கள். யார் வேண்டுமானாலும் வாங்கி பெயர் மாற்றி பயன்படுத்த முடியும், அப்படித்தான் இந்த ஆப் கள் உருவாகின்றன. இதுபோன்ற ஆப்களில் பொருள் விற்கிறோம் எனக்கூறி ப்ளே ஸ்டோரில் இணைகிறார்கள். இவற்றை தடுக்க முடியாது. இந்த ஆப்கள் ஆர்.பி.ஐ.யிடம் சான்றிதழ் வாங்க மாட்டார்கள். இன்வெஸ்ட் செய்யுமுன் பொதுமக்கள் இதை யெல்லாம் பார்க்க வேண்டும். ஆப்களில் செலுத்திய பணம் இந்தியாவிற்குள் பரிமாற்றப்பட்டிருந்தால் அதனை மீட்க முடியும். இந்தியாவுக்கு வெளியே கிரிப்டோகரன்ஸியாகச் சென்றால் மீட்பது கடினம்'' என்றார்.

ஆப்படிக்கும் ஆப்களிடம் உஷார் மக்களே!

Advertisment