"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலினின் டெல்லிப் பயணம் பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுது.''”

"ஆமாம்பா. பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட ஏற்கமாட்டோம்னு அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுத்தானே அவர் டெல்லிக்கு ஃப்ளைட் ஏறினார்.''”

ff

Advertisment

“"ஆமாங்க தலைவரே, இதன்மூலம் டெல்லியின் எந்தவிதமான நிர்பந்தத்துக்கும் படியத் தயாராக இல்லை என்பதை டெல்லிக்கு உணர்த்திவிட்டுத்தான் ஸ்டாலின் அங்கு சென்றார். புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரிடம் நீட் விலக்கு குறித்து வலியுறுத்த மாட்டேன் என்றும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்த பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லவும், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வைக்கவும்தான் டெல்லி வந்தேன்னும் அவர்கள் இருவரையும் சந்திக்கும் முன்பாகவே அறிவித்துவிட்டார் ஸ்டாலின். இதனால் அவரது பயணம் அங்கே எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. அதேசமயம், நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை ஜனாதிபதியிடம் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்கிற கருத்து இங்கேயுள்ள கூட்டணிக் கட்சிகளிட மும் எதிர்க்கட்சிகளிடமும் இருக்குது.''”

"சரிப்பா, ஸ்டா லின் -மோடி சந்திப்பின்போது என்ன நடந்தது?''”

"மோடியை சந்தித்தபோது, தமிழகத்தின் பாரம்பரிய தானியங்களான கம்பு, கேழ்வரகு, தினை உள்ளிட்ட 9 வகையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகத்தை அவருக்குப் பரிசளித் திருக்கிறார் ஸ்டாலின். அதை மோடி வியப்போடு பார்க்க, அந்தத் தானியங்களின் பலன்களை அவருக்குச் சுருக்கமாகத் தெரிவித்து விட்டு, பிறகு நீட் பிரச்சனை, காவிரி விவகாரம், மின்சார ஒழுங்குமுறைச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, மேகதாது உள்ளிட்ட பிரச்சனைகளை முன் வைத்திருக்கிறார் ஸ்டாலின். இதில், காவிரி விவகாரம் மற்றும் மேகதாது விவகாரம் குறித்து மட்டும் பாசிட்டிவ் பதில் மோடியிடம் இருந்து கிடைத்திருக் கிறது. அதேபோல் அரசியல் ரீதியாக சில விசயங்களை மோடியும் ஸ்டாலினும் அப்போது விவாதித்ததாகவும் டெல்லி வட்டாரம் சொல்லுது. இதற் கிடையே, டெல்லியில் சோனியாவை சந்தித்து உடல்நலம் விசாரிக்க விரும்பினார் ஸ்டாலின். அவர் கொரோனா தாக்குதலால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. போன் மூலம் அவரிடம் உடல்நலம் விசாரித்தாராம் ஸ்டாலின்.''”

"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை நிரப்ப அந்தக் கட்சி திட்டமிடுதே?''”

ff

Advertisment

"ஆமாங்க தலைவரே, தற்போது காங்கிரசின் தற்காலிகத் தலைவராக சோனியாகாந்தி இருக்கிறார். அவர் தலைவர் பதவியை ஏற்கனவே ஏற்க மறுத்துவிட்டார். அதனால் ராகுல்காந்தி கட்சிக்குத் தலைமை ஏற்கணும் என்று காங்கிரஸின் சீனியர்களும் இளம் தலைவர்களும் வற்புறுத்தறாங்க. அவரும் முடியாதுன்னு பிடிவாதம் பிடிக்கிறார். அடுத்த வருடம் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வரப்போவுது. கூடவே 2024-ல் நாடாளுமன்ற தேர்தலையும் சந்திச்சாகணும். அதனால், இந்த குறுகிய காலத்தில் தலைவர் பதவியை ஏற்க வேண்டுமாங்கிற தயக்கம் சீனியர் தலைவர் களுக்கு இருக்கிறதாம். அதனால், இதில் அங்கே குழப்ப நிலையே தொடருது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது, தலைவர் பதவியில் இருக்கணும்னு ராகுலிடம் வேண்டுகோள் வைக்க, மல்லிகார்ஜுன கார்கே, ரஞ்சன் சௌத்ரி, ப.சிதம்பரம், கே.கே. வேணுகோபால், அம்பிகாசோனி உள்ளிட்ட சீனியர்கள் தயாராகறாங்க.''”

"சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ்பவன் வைத்த தேநீர் விருந்தை எடப்பாடித் தரப்பு புறக்கணிச்சிடுச்சே?''”

"உண்மைதாங்க தலைவரே, எடப்பாடித் தரப்பு ஏன் இந்த விருந்தை புறக்கணித்ததுன்னு தெரிஞ்சிக்க பா.ஜ.க. தரப்பு அதிக ஆர்வம் காட்டுச்சு. அதேபோல் பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலையும் அந்த விருந்துக்குப் போகலை. அதேசமயம், எடப்பாடி ஏன் போகலைன்னு தெரிஞ்சிக்க, அவருக்குப் பலமுறை போன் போட்டும், எடப்பாடி போனை எடுக்கவே இல்லையாம். எடப்பாடித் தரப்பிடம் அவர் மனநிலை குறித்து அறிய நாம் தொடர்புகொண்ட போது, பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு வருவதற்குள் மோடி அல்லது அமித்ஷா ஆகிய இருவரில் ஒருவரை சந்தித்து விடவேண்டும் என தங்களின் டெல்லி லாபிகள் மூலம் தொடர் முயற்சியை எடப்பாடி எடுத்திருந்தார். ஆனால் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. அதேபோல, கவர்னர் மூலமாக டெல்லியை வலியுறுத்தலாம்னு கவர்னர் ரவியைச் சந்திக்க எடப்பாடி முயற்சித்தார். அவரும் கண்டுக்கலை. தீர்ப்பு விவகாரத்தில் அவர்கள் மனநிலையைப் புரிஞ்சிக்கிட்ட தால்தான் எடப்பாடி கடுப்பாகி, ராஜ்பவன் விருந்தைப் புறக்கணித்தார் என்கிறார்கள்.''”

dd

"தீர்ப்பு பற்றி ஏற்கனவே ஸ்மெல் பண்ணியதால்தான் உற்சாக மூடிலேயே ஓ.பி.எஸ். இருந்தார்னு அவர் தரப்பே சொல்லுதே?''”

"ஆமாங்க தலைவரே, அவருக்கு டெல்லிப் பக்கம் இருந்து வந்த செய்திகள், அவரை உற்சாகப்படுத்தி இருக்கு. இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் தி.மு.க. அரசு, நிவாரணப் பொருட்களை அளித்த நேரத்தில், எங்களின் குடும்ப நிதியாக 50 லட்ச ரூபாயை அரசிடம் வழங்குவோம்னு ஓ.பி.எஸ். அறிவித்திருந்தார். இது டுபாக்கூர் அறிவிப்புன்னு எடப்பாடித் தரப்பினர் விமர்சிக்க ஆரம்பித்ததால், உடனே நிமிர்ந்து உட்கார்ந்த அவர், அவசரம் அவசரமாக தனது மகன்கள் ரவீந்திரநாத், ஜெய்பிரதீப் இருவரின் வங்கிக் கணக்கில் இருந்தும் தலா 25 லட்சத்துக்கான டி.டி.யை எடுத்து, அதை தமிழக நிதித்துறைச் செய லாளருக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அரசு ஊழியர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகராஜன், அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது பற்றியும், அதை அவர் ஏற்றுக்கொண்டது பற்றியும் நாம் அண்மையில் பேசியிருந்தோம். அதன்படி, அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்தி அறிவித்துவிட்டார் ஸ்டாலின். இதன் மூலம் சுமார் 13 லட்ச அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலனடைவார்கள். எனினும், மத்திய அரசுபோல், ஜனவரி 1 முதல் கணக்கிட்டு அகவிலைப்படியை வழங்குவதுபோல், தமிழக அரசும் வழங்கவேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள் சங்கத்தினர்.''”