சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 டைப்ரைட்டிங் (தட்டச்சு) தேர்வில் விடைத்தாள்கள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கிறது’’ என்று புகார்கள் வர விசாரணையில் இறங்கியபோதுதான் பல வருடங்களாக மோசடி நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது.
""தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-4 தேர்வானது தற்போது சி.சி.எஸ். தேர்வு (COMBIND CIVIL SERVICES EXAMINATION) என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், டைப்பிஸ்ட் எனப்படும் தட்டச்சுப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே, தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் (Directorate of Technical Education) நடத்தும் டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சிபெற்றிருந்தால் சுமார் 10 மதிப்பெண்களிலிருந்து 20 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். அதனால், பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு தனியார் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து டைப்ரைட்டிங் தேர்வையும் முடித்துவிட்டு சி.சி.எஸ். தேர்வு எழுதி டைப்பிஸ்ட் பதவியை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில்தான், விடைத்தாள் மாற்றும் மோசடி நடக்கிறது''’ என்றவர்களிடம் எப்படி நடந்தது மோசடி? என்று நாம் கேட்டபோதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல்களை விவரிக்கிறார்கள் நம்மிடம் பேசிய தேர்வர்கள்,
""டைப்ரைட்டிங் தேர்வு எழுதக்கூடியவர் எந்த மையத்தில், யார் பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதவேண்டும் என்பதையெல்லாம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்களே தீர்மானிக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு இன்ஸ்டிடியூட்டில் 100 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள் என்றுவைத்துக்கொள்வோம். இதில், 10 பேரை பணம் வாங்கிக்கொண்டு தேர்ச்சிபெற வைக்கவேண்டும் என்றால் ஏற்கனவே டைப்ரைட்டிங் தேர்வில் ஜூனியர், சீனியர் தேர்வுகளில் நன்றாக எழுதி தேர்ச்சிபெற்ற, ஸ்பீடாக டைப் செய்யத் தெரிந்த 10 பேரை கூடுதலாக விண்ணப்பிப்பார்கள் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்கள். தேர்வின்போது புதிதாக தேர்வு எழுதுகிறவரா? ஏற்கனவே, தேர்வெழுதி தேர்ச்சிபெற்றவரா? என்பது எக்ஸாம்ஹால் சூப்பர்வைஸர்களுக்கு தெரியாது.
முதல் பேப்பர் தமிழ் அல்லது ஆங்கிலம்… பத்து நிமிடங்கள்தான் தேர்வு. அதில், 10 நிமிடங்களில் வேகமாக பிழையில்லாமல் எவ்வளவு டைப் செய்கிறோமோ அதற்கேற்றாற்போல்தான் மதிப்பெண். அப்படி டைப் செய்யும் விடைத்தாளைத்தான் மாற்றுகிறார்கள். இரண்டாவது பேப்பர் தேர்விலும் இப்படித்தான். ஒரு மையத்தில் சுமார் 200 பேர் வரை தேர்வு எழுதுவார்கள். இதனால், யாருடைய விடைத்தாளை யார் மாற்றுகிறார் என்பதை கண்டுபிடிப்பது சிரமம். அப்படியே தெரிந்தாலும் தனியார் இன்ஸ்டிடியூட்டுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளவும் மாட்டார்கள்.
இதுக்கு உதாரணம், கடந்த 2019 பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த டைப்ரைட்டிங் தேர்வில் மதுரையிலுள்ள ஸ்ரீ நாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் என்னும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஏற்கனவே தேர்ச்சிபெற்ற விக்னேஷ் மற்றும் இன்னொருவர் என இரண்டுபேரை மீண்டும் தேர்வு எழுதவைத்து முதல்நாள் 5 பேட்ச் தேர்வுகளில் 10 பேரையும், இரண்டாவது நாள் 4 பேட்ச்களுக்கு நடந்த தேர்வுகளில் 8 பேரையும் என 18 பேருக்காக தேர்வு எழுதியிருக்கிறார்கள்''’’ என்று அதிர்ச்சி குற்றச்சாட்டை வீசினார்கள்.…
இதுகுறித்து, நாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் எனப்படும் டைப்ரைட்டிங் பயிற்சி மையத்தின் உரிமையாளர் செல்லதுரையை தொடர்புகொண்டு நாம் விளக்கம் கேட்டபோது, விக்னேஷ் ஏற்கனவே தேர்ச்சி பெற்றதை முதலில் மறுத்தவர் பிறகு ஒப்புக்கொண்டு, ""எனது இன்ஸ்டிடியூட்டில் எனக்கு உதவியாக இருக்கும் விக்னேஷ் மீண்டும் தேர்வு எழுதியது முன்பைவிட கூடுதலாக மார்க் எடுக்கவேண்டும் என்பதால் தேர்வு எழுதியிருப்பார்''’என்று சமாளித்தவரிடம், ""முதுநிலையில் ஏற்கனவே தேர்ச்சிபெற்ற விக்னேஷ் தற்போது ஏன் தேர்ச்சிபெறவில்லை? அவர், விடைத்தாளை மாற்றிக்கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் தேர்வரான மரகதம் எப்படி தேர்ச்சி பெற்றார்?''’’என்று நாம் கேட்டபோது, முறையான பதில் இல்லை.
இகுறித்து, தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தை தொடர்புகொண்டபோது, மண்டல அதிகாரி பாலச்சந்திரன் நம்மிடம், “""ஏற்கனவே, தட்டச்சு முதுநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மீண்டும் தேர்வு எழுதினால் அது மோசடிதான். அவர் மீதும் அவரை எழுதவைத்த இன்ஸ்டிடியூட் உரிமையாளர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விடைத்தாள் மாற்றம் நிகழ்ந்ததா என்பது குறித்து விசாரணை செய்யப்படும். ஏற்கனவே, தேர்வு எழுதியவர்கள் மீண்டும் தேர்வு எழுதாமல் இருக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டுவர இருக்கிறோம்''’என்றார் அவர்.
சாதாரண டைப்ரைட்டிங் தேர்வுதானே என்று அலட்சியம் காட்டாமல்… அரசுப்பணிக்குவர இப்படியொரு மோசடி நடப்பதால் தீவிர விசாரணை நடத்தி… யாரெல்லாம் இப்படி அரசு பதவிகளை பிடித்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும்.
-மனோசௌந்தர்