திருமங்கலம் அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து யாருமே ஓட்டுப்போட வராததும், அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தையை ஏற்காததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா, கே.சென்னம்பட்டி கிராமப் பகுதியில் கேரளாவை சேர்ந்த எர்த்வைஸ் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இறைச்சிக் கழிவுகளை சுத்திகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளா மற்றும் மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொண்டுவந்து சுத்திகரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம், பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இறைச்சிக் கழிவுகளிலிருந்து வெளியேறக்கூடிய கழிவு நீரால் சுற்றுவட்டக் கிராமப்புறங்களில் மண்வளம் மற்றும் நீர்வளம் பாதிக்கப்படுவதாக வும் குற்றம்சுமத்தினர். எனவே அந்நிறுவனத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கடந்த இரண்டு வருடமாக போராட்டம் நடத்தியும், மாவட்ட ஆட்சியரிட மும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி களிடமும் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 12 மணியளவில், கோழிக்கழிவுகளை ஏற்றிவந்த மினி வேனை சிறைப்பிடித்து, கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையினரும், அதிகாரிகளும் அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அதை ஏற்றுக்கொண்டு அமைதி யாகக் கலைந்து சென்ற னர்.
அதையடுத்து, அந்த நிறுவனத்தை மூடி சீல் வைக்கவில்லையென்றால் நாங்கள் யாரும் ஓட்டுப் போடப் போவதில்லை எனக்கூறி, தேர்தலைப் புறக்கணித்து தேர்தல் நாளன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிவைத்து, வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க அப்பகுதி மக்கள் வரவேயில்லை. அதையடுத்து, திருமங்கலம் டி.எஸ்.பி., வருவாய் கோட்டாட்சியர் சாந்தி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்ததாக மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் அப்பகுதி மக்களிடம் ஒலிபெருக்கி மூலம், தற்காலிகமாக அந்த நிறுவனம் மூடப் பட்டதாகவும், வருகிற 22ஆம் தேதி கூட்டம் நடத்தி அதில் தீர்வு காணப்படும் எனவும் அறிவித்தபோதிலும் அதற்கு உடன்பட மறுத்து, ஐந்து கிராமத்து மக்கள் ஓட்டு போட முன்வரவேயில்லை.
இதுகுறித்து சென்னம்பட்டி கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் நம்மிடம், "ஓடபட்டி, மேலப்பட்டி, சென்னம்பட்டி, பேய்குளம், நல்லமநாயக்கன்பட்டி, உம்மிபட்டி, ஆழ்சூரன்பட்டி ஆகிய கிராம மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து போராடிவரு கிறோம். இவ்வளவு நாட்களாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஒவ்வொரு அதிகாரியாகத் தேடித் தேடிப் பார்த்து புகார் கொடுத்தோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போதும் ஓட்டுப் போடத்தான் வற்புறுத்துகிறார்களே ஒழிய அந்த நச்சு ஆலையை நிரந்தரமாக மூட உறுதி கூற மறுக்கிறார்கள். மக்களிடம் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று சொல்லி மீண்டும் மீண்டும் தேர்தல் புறக்கணிப்பை கைவிடச் சொல்கிறார்களே தவிர காவல்துறை அதிகாரிகளிலிருந்து, வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனைவரும் அந்த நிறுவனத்தின் பக்கம்தான் நிற்கிறார்கள். இந்த ஆலையால் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இதுவரை 40க்கும் மேற் பட்டவர்களுக்கு கிட்னி செயலிழப்பு முதல் நுரை யீரல் பாதிப்பு வரை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கூடங்குளம் போல் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க சுற்றுவட்டார மக்கள் தயாராகிவிட்டனர். இன்னும் இதன் பாதிப்பை உணராத 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வை ஏற் படுத்தி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெ டுக்க இருக்கின்றோம்'' என்றார்.
நாம் சென்னம்பட்டியில் உள்ள எர்த்வைஸ் ஆர்கானிக் ஆலைக்கு சென்றோம். பூட்டப்பட்டி ருந்தது. அங்கிருந்த ஊழியரிடம், இதன் நிறுவனர் அலெக்ஸ் ஸ்கேரியா ஜார்ஜிடம் பேசவேண்டும் என்று கூறியபோது, "யாரிடமும் எந்தத் தகவலும் சொல்லக்கூடாது என்று உத்தரவு'' என்று சொன்னவர், அங்கிருந்து நகர்ந்தார். நிறுவனர் போன் நம்பரை கடைசிவரை தரவில்லை. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், "மக்களின் போராட்டத்தையடுத்து தற்காலிகமாக அந்த ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து ஆய்வு செய்தபின் மக்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டு, சுகாதாரத்துறையின் மூலமும் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை கட்டாயமாக எடுக்கப்படும்'' என்றார். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் இன்னொரு ஸ்டெர்லைட்டாக உருவெடுத்து விடக்கூடாது என்பதே நம்முடைய பதைபதைப்பு.