சட்டமன்றத் தேர்தல் களம் களைகட்டும் நிலையில், "அவர் சரியில்லை, இவர் சரியில்லை' என போட்டாபோட்டி போட்டுக் கொண்டு கட்சித் தலைமைக்கு பாய்கின்றன குற்றக் கடிதங்கள். தி.மு.க. எம்.பி. கனிமொழியின் நேரடிப் பார்வையிலிருக்கும் தூத்துக்குடி மாவட்ட உள் மோதல்கள் தனிரகம்.
சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவனின் கட்டுப் பாட்டிலுள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து அவருக்கு எதிராக புகார் கடிதங்கள் தலைமைக்குப் பறக்க ஆரம்பித்துள்ளன.
விளாத்திக்குளம் ஒன்றியப் பொறுப்பாளரும், நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற வசந்தம் ஜெயக்குமா ரின் கடிதம் கீதாஜீவனுக்கு எதிராக 4 பக்கத்தில் 13 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
""தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட் பட்ட 8 பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஒன்றில் மட்டும் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திக்குளம் மற்றும் புதூர் ஆகிய நான்கு ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் கீதாஜீவனின் செயல்பாடற்ற நடவடிக்கையினால் கழகம் அனைத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, கயத் தாறு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வார்டுகளில், 7 வார்டுகளில் தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சியினரின் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. அ.ம. மு.க.வின் மாணிக்கராஜா வுடன் இவர் செய்து கொண்ட மறைமுக ஒப்பந்தத்தாலேயே இவர் வேட்பாளரை நிறுத்தாமல் தலை மையை சீட்டிங் செய்துவிட்டார்.
இதேபோல் அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் கைகோர்த்துக்கொண்டு கோவில்பட்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் 8 வார்டுகளில் தி.மு.க.வும் மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ ஒரு வார்டிலும் என மொத்தம் 9 இடங்கள் பெற்றிருந்தும் வெறும் 5 வார்டுகளில் வெற்றிபெற்ற அ.தி.மு.க.வினை கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவ ராக்கியது கீதாஜீவனே!
விளாத்திக்குளம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் தி.மு.க. 4 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டிலும் மட்டுமே வெற்றிபெற்று தோல்வியைத் தழுவியது குறிப்பிடத் தக்கது. இதைவிடக் கொடுமை! புதூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13-வார்டுகளில் 7, 10 ஆகிய இரண்டு வார்டுகளில் தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. மொத்தமுள்ள வார்டுகளில் தி.மு.க. ஒரே ஒரு வார்டிலும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது வேதனைக்குரியது.
தற்போது புதூர் ஒன்றியத் தலைவராக 7-வது வார்டைச் சேர்ந்த ஆண்டாள்தேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் போட்டி யிட்ட 7-வது வார்டில் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டது ஏன்? அனைத்திலும் பணம் விளையாடியுள்ளது"" என்பது உள்ளிட்ட பல புகார்களுடன் தலைமை யைச் சென்றடைந்திருக்கிறது அந்தக் கடிதம்.
புகார் கடிதம் அனுப்பிய விளாத்திக்குளம் ஒன்றியப் பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமாரைத் தொடர்புகொண் டோம். பதிலில்லை. அவரது ஆதரவு வட்டத்திலுள்ள பெயர்கூறா நபர் ஒருவரோ, ""தேர்தல் நேரத்தில் கட்சியினருக்குக் கொடுக்கவேண் டிய பணத்தை தேர்தல் பொறுப் பாளர் மதுரை வேலுச்சாமி வசம் ஒப்படைக்காமல் பெரும்தொகை சுருட்டப்பட்டது. இதுகுறித்து தலைமையிடம் புகார் கூறிய நிலையில் வழக்கறிஞர் பரந்தாமன், எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் தொகுதிக்கே வந்து விசாரணை செய்தனர். அதுபோக, ஆளுங்கட்சி அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.ம.மு.க. மாணிக்கராஜா ஆகியோருடன் தொழில்ரீதியாக ஒன்றிணைந்து விளாத்திகுளம் பகுதிகளான தாப்பாத்தி, கீழ்நாட்டுக் குறிச்சி, விருசம்பட்டி, வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் சவுடு மண் மூலம் நிறைய குவிக்கின்றார். கட்சியினை வைத்து சம்பா திக்கும் இவர் கொஞ்சமாவது கட்சியினைக் காப்பாற்றலாமே..? இவரை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால் அதோ கதிதான். வடக்கு மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி ஒன்றைக் கூட கைப்பற்றமுடியாது"" என்கிறார் அவர்.
நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர் தலில் 14 பேர் போட்டியிட்ட நிலையில் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரைவிட அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் 28 ஆயிரத்து 554 வாக்குகள் கூடுதலாக பெற்று தொகுதியைக் கைப்பற்றி னார். எனினும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டி யிட்ட கனிமொழி இத்தொகுதியில் மட்டும் 79,039 வாக்குகள் பெற்றார். இதில் தி.மு.க.வின் சட்டமன்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளைவிட 37 ஆயிரத்து 454 வாக்குகள் கனிமொழி கூடுதலாகப் பெற்றது குறிப் பிடத்தக்கது.
குற்றச்சாட்டுக்கள் குறித்து தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவனிடம் பேசினோம். ""வரவிருக்கின்ற தேர்தலைக் குறிவைத்து சிலர் தூண்டுதலால் இதுமாதிரி அபாண்டங்களைக் கிளப்பிவிடுகிறார்கள். அவம் ஒரு சைக்கோ.!! உள்ளாட்சித் தேர்தலில் காணாமல்போன ஆள் இப்படிப் பேசக்கூடாது.! கயத்தாறு ஊர்மக்கள் ஒன்றுகூடி கேட்டதால் இரண்டு இடத்தில் வேட்பாளரை நிறுத்தலை. மற்றபடி அவம் கூறிய குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்.!"" என மறுத்தார் அவர்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன உட்கட்சி விவகாரங்கள் வெளிவரப் போகின்றதோ..?
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்