டி.டி.வி.யை அதிகம் டி.வி.யில் காட்டாதீர்கள் என எடப்பாடி டீம் சேனல்களுக்கு பிரஷர் கொடுக்க, கொஞ்சநாளைக்கு டி.டி.வி.யை டி.வி.கள் மறந்தே போயின. தூத்துக்குடி சம்பவத்தால் அங்கே நேரடியாக சென்று தங்கியிருந்து மறுபடியும் சீனுக்கு வந்தார் டி.டி.வி. அத்துடன் தி.மு.க.வினர் சட்டமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்ததனால் சுயேட்சை எம்.எல்.ஏ.வான அவர் எதிர்க்கட்சி அந்தஸ்தில் கேட்ட கேள்விகளை அமைச்சர் தங்கமணி ஆக்ரோஷத்தோடு எதிர்கொண்டதால் முழுமையாக டி.வி.களில் வர ஆரம்பித்தார்.
வந்த சூட்டோடு தனது கட்சியான அ.ம.மு.க.விற்கு சென்னையில் புதிய தலைமைக் கழகத்தையும் திறந்து வைத்தார். சென்னை அசோக் நகரில் ஆக்கிரமிப்பு புகார்களுக்கு ஆளாகி ஜெ. காலத்தில் அமைச்சர் பதவியை இழந்த இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான கட்டிடத்தில் அமைந்த தலைமைக் கழகத்தை திறந்து வைத்த விழாவில், தினகரனுடன் இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதே நேரத்தில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் பதவி கேட்டதற்கு, குடும்பத்தினருக்கு பதவி இல்லை என மோதிய தினகரன், கட்சி அலுவலக திறப்பு விழாவில் ஜெயா டி.வி.யை நிர்வாகம் செய்து வருபவரும் சசியுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகனுமான விவேக்கை வரவழைத்தார். டாக்டர் வெங்கடேஷும் இருந்தார்.
எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட்டும் விவேக்கின் வருகையும் ஏற்படுத்திய பரபரப்புக்கு தினகரன் அணியினர் விளக்கம் அளித்தனர்.
குடியாத்தம் எம்.எல்.ஏ.வான ஜெயந்தியின் உறவினர் இறந்து போய்விட்டார் என்றனர். அவர் இறந்து ஒருவாரமாகிவிட்டது என்றார்கள் லோக்கல் கட்சிக்காரர்கள். விழாவுக்கு ஆப்சென்ட் ஆன மற்றொரு எம்.எல்.ஏ.வான தங்க.தமிழ்ச்செல்வனுக்கு உடல்நிலை சரியில்லை என்றார்கள். அதற்குப் பதிலளித்த மன்னார்குடி வகையறாக்கள் "தங்க.தமிழ்ச்செல்வன் தினகரன் மீது அதிருப்தியில் இருக்கிறார் என திவாகரன் சொல்லி வந்தார். அதை தங்க.தமிழ்ச்செல்வன் மறுக்கவில்லை' என சுட்டிக் காட்டுகிறார்கள். விழாவுக்கு வராத வெற்றிவேல் கோடைகால சுற்றுலாவாக வெளிநாடு சென்றிருக்கிறார் என்றார்கள். அது உண்மைதான் என்கிறார்கள் சென்னை மாவட்ட ர.ர.க்கள்.
""சசிகலா மட்டத்தில் எடப்பாடி பேசி வருகிறார். 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால் சசிகலா மூலமாக சமாதானப்படலம் நடக்கும்'' என்கிற எடப்பாடி தரப்பினர் ""எடப்பாடிக்கு தினகரனை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வேண்டப்பட்டவர்கள்தான்'' என காய்நகர்த்தல்களை விவரிக்கிறார்கள்.
தினகரனின் தனிப்பட்ட செல்வாக்கை சசிகலா விரும்பவில்லை. அதனால்தான் அ.ம.மு.க. நிர்வாகத்தில் விவேக்கை கூடுதலாக நுழைத்திருக்கிறார். விவேக்கும் அவரது மாமனார் கட்டை பாஸ்கரும் தினமும் ஜெயா டி.வி.க்கு பக்கத்தில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்களாம்.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ஸ்டாலின்