ருகின்ற பாராளுமன்ற அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதாகவே அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பின்பேரில் டெல்லிக்குச் சென்ற எடப்பாடி... வேலுமணி, தங்கமணி என எந்த மணிகளையும் அழைத்துச் செல்லவில்லை. எப்போது டெல்லிக்குச் சென்றாலும் எடப்பாடியுடனே இருக்கும் தம்பிதுரையைக்கூட எடப்பாடி அழைக்கவில்லை.

எடப்பாடியை மட்டும் தனியாக வருமாறு டெல்லி அழைத்ததன் பேரில் டெல்லி சென்ற எடப்பாடியிடம் அமித்ஷா தனியாகப் பேசினார். பொதுவாக எடப்பாடி டெல்லிக்குப் போய்விட்டு வந்தால் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி போன்றவர்களிடம் டெல்லியில் நடந்தது பற்றி விவாதிப்பார். இந்த முறை பேயறைந்தது போல் மவுனமாகவே இருந்தார் எடப்பாடி.

சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை அறிஞர் அண்ணாவைப் பற்றி தரக்குறைவாக பேசியதை அ.தி.மு.க. சார்பில் கண்டித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலைக்கு தக்க பதிலடியாக, “"உன் பெயரிலேயே அண்ணா உள்ளார். அறிஞர் அண்ணாவைப் பற்றிய அவதூறுப் பேச்சுகளுக்கு அண்ணாமலை மன்னிப்புக் கேட்கவேண்டும்; இல்லையேல் அ.தி.மு.க. தொண்டர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள்''’என்று காட்டமாக பதிலளித்தார்.

eps

Advertisment

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கூப்பிட்டு அவருக்கே உரிய மொழியில் பாணியில் அண்ணாமலையைத் திட்டச் சொன்னார் எடப்பாடி. அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, சி.வி.சண்முகத்தை ‘திருடன்’ என்றார். ‘திருடனுக்குப் போலீஸ்காரனைப் பார்த்து பயம்’ என அண்ணாமலை பேசியதைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார் எடப்பாடி.

உண்மையில் டெல்லியில் அமித்ஷா பேசிய அதே விஷயத்தை அண்ணாமலை பேசியிருந்தார். அதுதான் எடப்பாடியின் அதிர்ச்சிக்குக் காரணம். செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தபொழுது ஊழல் செய்தார் என வழக்கு போடப்பட்டது. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தற்பொழுது செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்துள்ளது.

“தி.மு.க. ஆட்சி, எடப் பாடி உட்பட அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக பலகோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்த தாக ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. "செந்தில்பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. அதுபோல அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுத்தால் நீங்கள் எல்லோரும் சிறைக்குச் செல்ல நேரி டும்''”-இதுதான் டெல்லியில் அமித்ஷா சொன்ன வார்த்தை.

அத்துடன், "மகாராஷ்ட்ராவில் சிவசேனா வை பல துண்டுகளாக உடைத்தோம். அ.தி.மு.க.வும் பல துண்டுகளாக இன்று உடைந்துள்ளது. உங்கள் தலைமையில் உள்ள அ.தி.மு.க.வை உடைக்க முடியாதா? கொங்கு பெல்ட்டை உடைக்க வேலுமணி தயாராக இருக்கிறார். அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகள் பாயும் என்றால் அவர்கள் அனைவரும் உங்களை விட்டு விலகிவிடுவார்கள். நாங்கள் ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தந்துவிடுவோம். உங்கள் மீது கொடநாடு வழக்குப் பாயும். அமலாக்கத்துறையில் உங்கள் உறவினர்கள் மீது இருக்கக்கூடிய வழக்குகளை தூசி தட்டி எடுப்போம். எப்படி உங்கள் வசதி?''” என எடப்பாடியிடம் அமித்ஷா கேட்டதைத்தான் இங்கு வேறு வார்த்தைகளில் அண்ணாமலை திருப்பிக் கேட்டு எடப்பாடியை சீண்டுகிறார். அதை எடப்பாடியால் ஜீரணிக்கவே முடியவில்லை என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

அ.தி.மு.க.வில் எடப்பாடியால் ஒரு மாவட்டச் செயலாளரைக் கூட மாற்ற முடியவில்லை. இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க எடப்பாடி முடிவு செய்தார். அதற்காக எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் வேலுமணி, ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர் ஆக இருக்கும் சி.வி.சண்முகம், சேலம் இளங்கோ, தங்கமணி, உதயகுமார் ஆகியோரிடம் பேசினார் எடப்பாடி. அவர்கள் உடன்படவில்லை. அதனால் மா.செ.க்கள் மாற்றம் தள்ளிப்போனது. அ.தி.மு.க.வில் எடப்பாடியை விட பெரிய தலைவராக வேலுமணி உருவெடுத்து வருகிறார். அதைக் கட்டுப்படுத்த எடப்பாடியால் முடியவில்லை.

இப்படி எடப்பாடியைச் சுற்றி ‘செக்’ வைத்துள்ள பா.ஜ.க., அமித்ஷா மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளை பா.ஜ.க.விற்கு கொடுக்க வேண்டும் என எடப்பாடிக்கு உத்தரவிட்டுள்ளது. அந்தத் தொகுதிகளில் ஓ.பி.எஸ்., தினகரன், பாரிவேந்தர், ஆகியோர் விரும்பும் தொகுதிகளை அ.தி.மு.க. விட்டுத்தர வேண்டும் என தொகுதிப் பங்கீட்டையும் அமித்ஷா பேசி முடித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியான எடப்பாடி மவுனமாக டெல்லியிலிருந்து கிளம்பிவந்தார் என்கிறது அ.தி.மு.க. டெல்லி வட்டாரங்கள்.

அந்தக் கோபத்தில் அடுத்தகட்டமாக அண்ணாமலை எதிர்ப்பில் எடப்பாடி தீவிரம் காட்ட அமித்ஷாவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, எடப்பாடியை தாக்க ஆரம்பித்திருக்கிறார் அண்ணாமலை. அமர்பிரசாத் ரெட்டியும் அவர் பங்குக்கு எடப்பாடியை மட்டம் தட்டிப் பேச ஆரம்பித்துள்ளார்.

எண்ணெய்யும் தண்ணீரும் போன்று ஒட்டாத அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதை விட மறைந்த முதல்வர் ‘ஜெ.வைப் போல் பா.ஜ.க.வின் தேர்தல் உறவையே அடியோடு கழட்டிவிட்டு விடுவதுதான் அ.தி.மு.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது என அடித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க.வினர். இல்லையெனில் தோல்விதான் கிடைக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் அடிப்படைத் தொண்டர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

சுந்தர் சிவலிங்கம்