உலக வெப்பமாகிக் கொண்டே இருக்கிறது. மனிதன் தனது வசதியான வாழ்க்கைக்காக இயற்கை வளங்களை அழிப்பதுதான் இதற்கு காரணம் எனத் தொடர் எச்சரிக்கை விடப்பட்டாலும் ஆள்வோரே அதில் அக்கறை காட்டுவதில்லை. எட்டுவழிச் சாலையை எதிர்த்து சேலம் தொடங்கி சென்னை வரையிலான போராட்டம் ஓய்வதற்கு முன் மாமல்லபுரம் பூஞ்சேரி -எண்ணூர் துறைமுகம் ஆறுவழிச் சாலை திட்டபணியை வேகப்படுத்தியிருக்கிறது அரசு.
இதில், ஜமீன் சொத்தைப் பாதுகாத்து, விவசாய நிலத்தை அபகரிப்பதுதான் கூடுதல் கொடூரம்.
இந்த திட்டம் தொடர்பாக, நம்மிடம் பேசிய தோழர் வெற்றிமாறன் ""பூஞ்சேரி - எண்ணூர் புறவழிசாலை 2011ல் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஆரம்பித்து சிங்கப்பெருமாள்கோவில், ஸ்ரீபெரும்பத்தூர், திருவள்ளூர், தாமரைபாக்கம் வழியாக பெரியபாளையம், புதுவயல், எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் போய் சேர்கின்றது, மொத்தம் 122 கிலோ மீட்டர் ஆறுவழி சாலை பணி, ஐந்து கட்டமாக நடக்கும். இதில் நான்கு கட்டப்பணிகளுக்கான நிலம் ஆர்ஜிதம் செய்து, ஏற்கனவே இருந்த சாலைகளை சீரமைத்து பணிகள் நடந்து வருகிறது. ஐந்தாம் கட்டப்பணி சிங்கப்பெருமாள்கோயில் முதல் பூஞ்சேரி கூட்டுச்சாலையில் முடிவடைகின்றது. இந்த 22 கிலோமீட்டர் முழுக்க காட்டூர் காப்புக்காடு, அஞ்சூர் முதல் எஸ்.பி கோயில் வரை வனப்பகுதி, ஏரிகள், பாசன கால்வாய்கள் நீர்பிடிப்பு பகுதிகள் என சுற்று சூழல் மாசுபாடு ஏற்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
எங்கள் மானாபதி கிராமம் மட்டுமல்ல. வீரால்பாக்கம், சிறுங்குன்றம் கிராமங்களும் மிகவும் பாதிக்கப்படும்.
மானாபதி கிராமத்தில் கடந்த 2013ல் நிலம் அளவிட்டு கல் பதித்த நிலையில், கடந்த மாதம் வந்த நிலஅளவை அதிகாரிகள் மானாமதி மக்கள் வசிக்கும் பகுதியை குறியீடு செய்து வீடுகளையெல்லாம் காலி செய்ய சொல்லிவிட்டு போனார்கள். கேட்டால், சாலை அமைக்கும் பணி சற்று மாற்றியுள்ளதாக தெரிவித்துவிட்டுச் சென்றனர். முழுவிவரம் கேட்பதற்காக அலுவலகம் சென்ற எங்களை, கொரோனாவைக் காரணம் காட்டி, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கடைசியில் நெடுஞ்சாலை துறையை சேர்ந்தவர் அளித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது'' என்றார்.
அந்த அதிர்ச்சியை நம்மிடம் விவரித்தார் விவசாயி கார்த்திக் ""2013ல் நிலஅளவை செய்தவர்கள் நாங்கள் வசிக்கும் பகுதிக்கும் எங்கள் விவசாய பகுதிக்கோ வரவில்லை. மண்பரிசோதனைகூட ஜமீன் குடும்பம் ஆன வாசுதேவன் நிலத்தில்தான் செய்தார்கள். தற்போது திடீர் என்று தலித் மக்கள் வசிக்கும் 140 வீட்டையும், நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வரும் ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான 64 ஏக்கர் விவசாய நிலத்தை யும் அளவிட்டு குறித்து விட்டு சென்றுள்ளார்கள். ஒரு ஜமீன் குடும்பத்தை காப்பாத்துறதுக்காக ஊர்ல இருக்கிற தலித் வீடுகளை யெல்லாம் இடிக்கலாமா? நாங்க எங்க போறது?'' என்றார் வேதனையுடன்.
மானாபதி ஊராட்சிமன்ற முன்னாள் துணைதலைவர் கதிர் வேல் ""இந்த ஊரோட ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான 64 ஏக்கர் நிலத்தோட வருமானத்தை நம்பித் தான், காலம் காலமா அதில் குத்தகை விவசாயம் செய்யும் 80 குடும்பம் வாழ்ந்து வருது. அதைப் பிடுங்கப் பார்க்குறாங்க. ஊர்காரங் களூக்கே தெரியாம மாசுகட்டுப் பாட்டு வாரியம் கூட்டம் கூட்டி யிருக்காங்க'' என்றார். அதே ஊரை சேர்ந்த சங்கீதா ""எங்க முன்னோர் கள் காலாகாலமாக குடிசை வீட்லதான் வாழ்ந்து வந்தாங்க. சில வருசம் முன்னாடி பெய்த மழை வெள்ளத்துல அது மூழ்கி போச்சு. ஏதோ சில சமூகசேவை அமைப்பு எங்களுக்கு வீடு கட்டி கொடுத்துடுச்சு. முதல்முறையா என் தலைமுறைதான் மாடி வீட்டுல வாழ்றோம். அதையும் இடிக்க அரசு உத்தரவாம்'' என்றார் வேதனையுடன். நம்மிடம் பேசிய மாகாலட்சுமியோ, ""ஏரி வேலை, குளத்து வேலை, விவசாய வேலைனு செய்துட்டு வறோம், நாங்க இங்க இருந்து போயிட்டா என்ன வேலை தெரியும்? எப்படி சாப்பிடுவோம், குழந்தைகள் படிப்பு என்னவாகும்?'' எனக் கோபக் கேள்விகளை அடுக்கினார்.
தொகுதியின் எம்.எல்.ஏவான தி.மு.க இதயவர்மன் ""மக்களுக்கு பாதிப்பு வராமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பழைய மேப்படியே சாலை அமைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வந்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், திமுக கூட்டணி சார்பில் மாபெரும் போராட்டம் நடக்கும்'' என்கிறார் எச்சரிக்கை குரலில்.
""நான் செத்த பின்னாடி இந்த இடத்திலே புதைச்சிட்டு மேலயே ரோடு போட்டுக்கிடட்டும்'' என்று ஆவேசமாகப் பேசினார் சின்னம்மா என்பவர்.
ஆறுவழிச் சாலைக்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் அதிகாரி செல்லதுரையை பலமுறை தொடர்பு கொண்டோம். பேசவில்லை, செங்கல்பட்டு மாவட்டஆட்சியர் ஜான்லூயிஸை நேரிலும் பார்க்க அனுமதிக்கவில்லை. செல்போன் தொடர்பையும் எடுக்கவில்லை. மக்களின் பரிதவிப்பை உணர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-அரவிந்த்