பொங்கலுக்குள் "அண்ணாத்தே' படத்தின் ஷூட்டிங், டப்பிங்கை முடித்துவிடுமாறு இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரத்தில் ஷூட்டிங் பிஸியில் இருக்கும் ரஜினி, ஒவ்வொரு நாளும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி இருவரையும் தொடர்பு கொண்டு விவாதித்தபடி இருக்கிறார்.
""மக்கள் மன்றத்தின் மா.செ.க்களை எட்டு எட்டு மாவட்டங்களாக வரவைத்து, பூத் கமிட்டி விசயமாகப் பேசுங்கள். ஆலோசிப்பது எதுவும் வெளியில் தெரிய வேண்டாம். எந்த பரபரப்பும் கூடாது'' என்றிருக்கிறார்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி, சுதாகர் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ.க் களை அழைத்து நடத்திய ஆலோசனையில், 25 நபர்களை உள்ளடக்கி பூத் கமிட்டி அமைப்பது எந்த நிலையில் உள்ளது என கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலான மா.செ.க்கள் முழுமையாக பூத் கமிட்டி அமைக்கவில்லை. கட்சி ஆரம்பிப்பதில் ஏற்பட்ட சுணக்கம்தான் காரணம் என்பதைச் சொல்லி, இன்னும் ஒரே வாரத்தில் பூத் கமிட்டியை முழுமைப்படுத்தி பட்டியலை கொடுத்து விடுவோம் என சொல்லியிருக்கிறார்கள்.
இதனையடுத்து, அவரவர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு தரலாம் என்கிற 3 நபர்கள் கொண்ட பட்டியலையும் தருமாறு மா.செ.க்களுக்கு உத்தரவிட்டதுடன், வேட்பாளர்களை பரிந்துரைப்பதிலும், நிர்வாகிகளை நியமிப்பதிலும் பணம் விளையாடக் கூடாது என ரஜினி எச்சரிக்கை செய்திருப்பதை மா.செ.க் களுக்கு நினைவுபடுத்தி யுள்ளனர். இத்தகைய ஆலோசனைகளால் மன்ற நிர்வாகிகளிடம் புது சுறு சுறுப்பு தெரிகிறது.
மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடமிருந்தும், மன்றத்தின் வெளியே இருந்தும் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படவிருக்கிறது. மா.செ.க்களிடமிருந்து பட்டியல் கிடைத்ததும் அந்த பட்டியலில் உள்ளவர்களை பற்றி தனியார் ஏஜென்ஸி மூலம் விசாரிக்கவும் திட்ட மிட்டுள்ளது ரஜினி தரப்பு.
தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி விட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ""ரஜினியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறேன். கூட்டணி அமையும் பட்சத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் முதல்வர் என்பது முடிவு செய்யப்படும்'' என்று தெரிவித்திருக்கிறார். இதனால் ரஜினியும் கமலும் இணைவார்களா என்ற விவாதம் பெரிய கட்சிகள் மட்டத்திலும் விறுவிறுப்பாகியுள்ளது. அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது, ""ரஜினியும் கமலும் கூட்டணி சேர்ந்தால் திராவிட கட்சிகளுக்கு சேதாரம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், கமலை ரஜினி ஏற்பாரா என்பது சந்தேகம்தான்'' என்கின்றனர்.
கமலின் கூட்டணி விருப்பம் பற்றி ரஜினி மக்கள் மன்றத்தின் சென்னை வேளச்சேரி பகுதி செயலாளர் ரஜினி பாஸ்கர் நம்மிடம், ""எங்கள் தலைவரின் வழி தனி வழி. சினிமாவில் எப்படி எங்கள் தலைவரும் கமலும் தனித்தனிப் பாதைகளில் அவரவர் பாணிகளில் பயணித்தார்களோ அப்படித்தான் அரசியல் பயணமும் இருக்கும். அதனால் கமலின் கூட்டணி விருப்பம் நிறைவேறுவதற்கு சாத்தியமில்லை'' என்கிறார் உறுதியாக.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ரஜினியை ஒருமுறை கமல் சந்தித்தபோதே கூட்டணி விருப்பத்தை வெளியிட, ""சினிமா வாழ்க்கையில் நாம் என்ன முடிவெடுத்தோமோ, அரசியலிலும் அப்படியே இயங்குவோம். இருவரின் வெற்றியிலும் பரஸ்பரம் மகிழ்ச்சியடைவோம்'' என சொல்லி, கமலின் கூட்டணி விருப்பத்தை அப்போதே மறுத்துவிட்டார் ரஜினி என்கிறார்கள் கமல்-ரஜினி இருவருக்கும் நெருக்கமானவர்கள். இதன்பிறகும், கூட்டணி விருப்பத்தை கமல் தெரிவித்திருப்பது ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் ஒருவித பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வருவதை தள்ளிப்போட நினைத்திருந்த ரஜினியை, பா.ஜ.க. தலைமைதான் அழுத்தம் தந்து வரவழைத்திருக்கிறது. அதுபோல, ரஜினி-கமல் கூட்டணி என்ற வியூகமும் பாஜக தலைமையின் விருப்பம்தானா என்கிற சந்தேகமும் கிளம்பியுள்ளது. கூட்டணி விருப்பத்திற்கிடையே, எம்.ஜி.ஆரின் நீட்சி-வாரிசு என கமல் பேசுவது ஆளுந்தரப்பை டென்ஷனாக்கியுள்ளது. அதன் விளைவுதான் கமல் மீதான எடப்பாடியின் பாய்ச்சல்.
“கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பம்கூட உருப் படாது. பிக்பாஸ் நடத்து பவருக்கு அரசியல் என்ன தெரியும்? நல்லா இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருக்கு தெரியும் என கடுமையாக சாடினார். இதற்கு பதிலடியாக, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் முதல்வருக்கு நன்றி’ என ட்விட் செய்து டேக் பண்ணிய கமல், நெடுஞ் சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடி ரூபாயை வருமான வரித் துறை கைப்பற்றியது நினைவில் இருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக் பாஸ் யார்? என்றும் கேட்டார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர்ராஜூ போன்றவர்களும் கமல் மீது பாய்ந்தனர்.
எம்.ஜி.ஆர். ஆட்சியை நான் அமைப்பேன் என ஏற்கனவே ரஜினி சொல்லியுள்ள நிலையில், கமலும் தன் பங்கிற்கு எம்.ஜி.ஆரை இழுப்பதால், எம்.ஜி.ஆரை தக்க வைத்துக்கொள்ள அ.தி. மு.க. திணறி வருகிறது.
இதற்கிடையே ரஜினி தனது நண்பர்கள் சிலரிடம், ""டி.டி.வி. தின கரனின் கட்சி எப்படி?'' என சாதக-பாதகங்களை கேட்டு விசாரித்திருப்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
-இரா.இளையசெல்வன்