நாடாளுமன்றத் தேர் தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு களை கூட்டி -கழித்துப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலை கடந்த 2019, ஏப்ரல் மாதம் சந்தித் தது தமிழ்நாடு. மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் மதசார்பற்ற முற்போக்கு கூட் டணியும், எடப்பாடி -பன்னீர் தலைமையில் அ.தி.மு.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தலை எதிர்கொண்டன. இது தவிர, சீமானின் "நாம் தமிழர் கட்சி', கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்' ஆகியவைகள் தனித்து களம் இறங்கின. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 20, காங்கிரஸ் 10 (தமிழகத்தில் 9, புதுவை 1), சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகளுக்கு தலா 1 என்றளவில் போட்டியிட்டன.
அதேபோல அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 20, பா.ம.க. 7, பா.ஜ.க. 5, தே.மு.தி.க. 4, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 1 என்று களத்தில் குதித்தன. கலைஞர், ஜெயலலிதா இல்லாத நிலையில் நடந்த தேர்தல் என்பதால் தேர்தல் களம் சூடாக இருந்தது. அந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணி 39 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 1 இடத்தையும் (ஓ.பி.எஸ். மகன் மட்டும்) கைப்பற்றின. மு.க.ஸ்டாலின் தலைமைக்கும், கனிமொழி, உதயநிதி ஆகியோரின் தேர்தல் பரப்புரைக்கும் மகத்தான வெற்றியை தமிழக மக்கள் தந்தனர். அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான் 2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40-ம் ஜெயிக்க வேண்டும் என்ற மனக்கணக்கில் தேர்தல் வியூகங்களை வகுத்துவருகின்றன திமுக, அ.தி.மு.க. தலைமைகள்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் அதிருப்திகள் அதிகரித்திருந்ததாலும், தி.மு.க.தலைமையி லான மதசார்பற்ற கூட்டணி வலிமையாக இருந்ததாலும், தி.மு.க. கூட்டணிக்கு இமாலய வெற்றி கிடைத்தது. அதேபோன்ற இமாலய வெற்றியை வென்றெடுக்க வேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறது அறிவாலயம். தேர்தல் கூட்டணி கணக்குகள் குறித்து தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலரிடம் விசாரித்த போது, "ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கழிந்துள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்திகள் பெரிதாக எதுவும் இல்லை என நினைக்கிறார் ஸ்டாலின். அதனால், இந்தமுறை 30 இடங்களில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருக்கிறது.
கடந்த முறை 20 இடங்களில் போட்டியிட்டு 20-லும் வெற்றிப் பெற்ற தி.மு.க., இந்த முறை 30 இடங்களில் போட்டியிட்டு ஜெயித் தால்தான் நாம் நல்லாட்சி தந்துவருகிறோம் என்பதாக இருக்கும் என்பதே ஸ்டாலினின் கணக்கு. அதனால், கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை குறைப்பதற்கான திட்டம் போடப் படுகிறது. குறிப்பாக, காங்கிரசுக்கு 10 சீட்டுகள் தரப்பட்டன. இந்த முறை அதனை 5 ஆக குறைக்கவும், அதேபோல தலா 2 இடங்களை வைத்துள்ள சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க. கட்சி களிடமிருந்து தலா 1 சீட் குறைக்கவும் ஆலோ சிக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் தலா 1 சீட் பெற்ற கட்சிகளில் 2 கட்சிகளுக்கு இந்தமுறை சீட் கிடையாது. இந்த கணக்கின்படிதான் தி.மு.க. 30 இடங்களில் போட்டியிட முதல்கட்டமாக யோசித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அதுமட்டுமல்ல கூட்டணி கட்சிகளின் சிட்டிங் தொகுதியில் நிறைய மாற்றங்கள் உண்டு. காங்கிரசின் சில சிட்டிங் தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொள்ளவிருக்கிறது. காரணம், சிட்டிங் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட் டால் வெற்றி உறுதியில்லை என்று ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள ரிப்போர்ட். காங்கிரசின் தோல்வி அக்கட்சியை மட்டும் பாதிப்பதில்லை; கூட்டணியையே பாதிக்கும் என்பதுதான்.
இதற்கிடையே, பா.ம.க.வும் தே.மு.தி.க.வும், தி.மு.க. கூட்டணிக்குள் வருவதற்கு முயற்சிக்கின் றன. இதில் பா.ம.க. மீது தி.மு.க.வின் பார்வையும் இருக்கிறது. ஒருவேளை குறைந்த எண்ணிக்கை யில் தி.மு.க. ஒதுக்கும் சீட் ஷேரிங்கில் பா.ம.க.வுக்கு திருப்தி ஏற்பட்டால், கூட்டணி கட்சிகளிட மிருந்து பறிக்கப் படும் சீட்டுகளிலிருந்து சில இடங்கள் ஒதுக்கப்படும்.
இதற்காக 30 இடங்களில் போட்டியிட நினைக்கும் தி.மு.க., அந்த எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளவும் ஒரு யோசனை இருக்கிறது. அதேசமயம், பா.ம.க. வரும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் வெளியேறினால், அது குறித்து தி.மு.க. தலைமைக்கு கவலை இல்லை. ஆக, இப்படிப்பட்ட கூட்டல் கழித்தல்கள் முதல் கட்டமாக ஆலோசித்திருக்கிறது தி.மு.க.'' என்று விவரிக்கிறார்கள் சீனியர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, "கடந்த முறை 10 சீட் வாங்கி 9 சீட் ஜெயித் திருக்கிறோம். காங்கிரசின் பாரம்பரிய வாக்குகளும் சிறுபான்மை வாக்குகளும்தான் தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வெற்றியை தந்தது. அதனால், இந்த முறை 15 சீட் கேட்போம்; 12 சீட்டுக்கு ஒப்புக்கொள்வோம் என்ற திட்டத்தில் இருக்கிறது. எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமையிடம் பேசி பேசி தி.மு.க. சமா தானப்படுத்தினாலும், காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 இடங் களிலிருந்து ஒன்று குறைந்தாலும் கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது. இதனை மனதில்கொண்டே தி.மு.க. ஆலோசிக்க வேண்டும்'' என்கிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
காங்கிரசை போலவே தி.மு.க. கூட்டணியின் மற்ற கட்சிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதல் சீட் பெறவேண்டும் என்கிற மனக்கணக்கில் இருக்கின் றன. அதெல்லாம் மணல் கணக்கு என்பதை உணர்த்தவிருக்கிறது தி.மு.க. தலைமை. அ.தி.மு.க. கூட்டணியில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் அதிகார மோதல் நடந்து வருவதால், தங்களின் விருப்பத்துக்கு அவர்களை மிரட்டி அடிபணிய வைக்க காய்களை நகர்த்து வருகிறது பா.ஜ.க. ஆனால், இந்த மிரட்டலுக்கு பணியாமல் பா.ஜ.க. வை எதிர்க்கத் துணிந்திருக்கிறார் எடப்பாடி.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் கணக்குகள் குறித்து எடப்பாடிக்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசியபோது,”"கடந்த தேர்தலின்போது, ஆட்சியில் அ.தி.மு.க. இருந்த தால் சில பல காரணங்களுக்காக பா.ஜ.க. தலை மையின் உத்தரவைக் கேட்கும் நிலை எங்களுக்கு. இப்போது நாங்கள் எதிர்க்கட்சி. நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. அதனால், பா.ஜ.க. வின் மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை. அ.தி.மு.க. கூட்டணிக்கு எடப்பாடிதான் தலைமை; அ.தி.மு.க. ஒதுக்குவதுதான் பா.ஜ.க.வுக்கு சீட். இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே கூட்டணி நீடிக்கும்.
தி.மு.க. 30 இடங்களில் போட்டியிட்டால் அதற்கேற்ப அ.தி.மு.க.வும் போட்டியிடும். தேர்தல் நேர சூழல்களை கணக்கில்கொண்டு இதில் ஓரிரு இடங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். மற்ற படி, அ.தி.மு.க.வின் கூட்டணி கணக்கும் ரொம்ப சிம்பிள். அதாவது, தி.மு.க.வை மையப்படுத்தியே அ.தி.மு.க.வின் எண்ணிக்கையும் முடிவாகும். கார ணம், தி.மு.க. ஆட்சி மீதான மக்களின் அதிர்ப்தி எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு 15; பா.ஜ.க.வுக்கு 25 என்றும், அந்த 25-ல் ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்டவர்களுக்கு பா.ஜ.க. சீட் ஒதுக் கும் என்றும் சொல்லப்படுவதெல்லாம் ஹம்பக்.
அப்படிப்பட்ட டீலிங் எதுவும் இதுவரை பா.ஜ.க. எங்களிடம் பேசவில்லை. அப்படியே பேசி னாலும் அது நடக்காது. அதேசமயம், "ஓ.பி.எஸ்.ஸை வைத்து கட்சியை உடைப்பேன்; சின்னத்தை முடக்குவேன்' என்றெல்லாம் பா.ஜ.க. சூழ்ச்சிசெய்து தங்களது விருப்பத்தை நிறைவேற்ற மோடியும் அமித்ஷாவும் முயற்சித்தால், அதனை உடைத் தெறிய வேறு பல ரூட்டுகளை போட்டு வைத்திருக் கிறார் எடப்பாடி. மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பதுதான் கட்சியின் 90 சதவீதத்தின ரின் கருத்தாக இருக்கிறது. அதனால், நாடாளுமன் றத் தேர்தல் பா.ஜ.க.வுக்குத்தான் முக்கியமே தவிர; அ.தி.மு.க.வுக்கு இல்லை. ஆக, பா.ஜ.க.வின் கணக்கு எடப்பாடியிடம் பலிக்காது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள். பா.ஜ.க.வின் சிந்தனையாளர்களிடம் நாம் பேசியபோது, "சமீபத்தில் அண்ணாமலை ஒரு சர்வே எடுத்திருக்கிறார். 39 இடங்களிலும் தோல்வி என ரிசல்ட் வந்தது. அதன் பிறகுதான், அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்தும் ஜீரோதான் எனில் கூட்டணி எதற்கு? தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வின் ஓட்டு சதவீதமாவது அதிகரிக்கும். அதை வைத்து ராஜ்யசபா சீட் வாங்கி, மத்திய அமைச்சராகி விடலாம் என்பதே அவரது கணக் காக இருக்கிறது. இந்த திட்டத்தின் அடிப்படை யில்தான், "தனித்துப் போட்டியிடுவோம்' என சொல்லிவருகிறார் அண்ணாமலை. ஒரு பூத்தில் 1000 வாக்குகள் இருப்பின் அதில் 300-350 வாக்கு கள் தி.மு.க.வுக்கும், 200-250 வாக்குகள் அ.தி.மு.க.வுக் கும் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கோ 15 முதல் 50 வாக்குகள் மட்டுமே இருக்கிறது. இதனை பா.ஜ.க. வின் தேசிய தலைமை உணர்ந்திருப்பதால்தான், அ.தி.மு.க.வின் வாக்குகளை அறுவடை செய்ய எடப்பாடியிடம் ஒற்றுமையை போதிக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
முதல்கட்ட கூட்டணி கணக்குகள் இப்படியிருக்கும் நிலையில்... "தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல யுக்திகளும் வியூகங் களும் அணிவகுக்கும்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.