"சரக்கு அடிக்குறதில அவதான் எக்ஸ்பர்ட். அப்படியே சாப்பிடுவா அவ.'' "அவ மட்டும் என்னவாம்?'' கிண்டலும் கேலியுமாக 9ஆம் வகுப்பு மாணவிகள் பேசிக்கொண்டது பள்ளி வளாகத்தைத் தாண்டி வெளியில் உலாவ, "மாணவிகளுக்கு மதுவா?'' என உடன்குடி தாலுகாவே களேபரமானது. இதன் தொடர்ச்சியாகக் கட்டாய விடுப்பில் உடற்கல்வி ஆசிரியர் செல்ல, பெற்றோர்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளித் தாளாளரையும் கைது செய்துள்ளது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறை.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பரமன்குறிச்சி சாலையிலிருக்கின்றது அந்த சர்ச்சைக்குரிய தனியார் பள்ளி. மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியின் தாளாளர் செய்யது அகமது. தலைமை ஆசிரியராக பணிபுரிவர் கிறிஸ்டியா நகரை சேர்ந்த சார்லஸ் ஸ்வீட்டிலின். இங்கு உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் அதே கிறிஸ்டியா நகரை சேர்ந்த பொன்சிங்.
"தூத்துக்குடியில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்காக மாணவிகளைத் தயார்செய்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், கடந்த 22ஆம் தேதியன்று 15 மாணவ, மாணவிகளை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றார். கூடவே தன்னுடைய குடும்பத்தையும் அழைத்துச் சென்றிருக்கிறார். பள்ளி வாகனத்திலேயே அழைத்துச்சென்றவர், முதல்நாள் போட்டியில் தோற்ற மாணாக்கர்களில் 8 நபர்களை மட்டும் திரும்பப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, 5 மாணவிகள், 2 மாணவர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டார். தூத்துக்குடி சண்முகபுரத்திலுள்ள தனியார் விடுதியில் நான்கு அறைகளை வாடகைக்கு எடுத்து, தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு அறையும், 5 மாணவிகள் கொண்ட குழுவிற்கு 1 அறையும், 2 மாணவர்களுக்கு ஒரு அறையும் ஒதுக்கி தங்க வைத்துவிட்டு, மீதமுள்ள ஒரு அறையை காலியாக வைத்துக்கொண்டார். இரவு உணவு முடித்த நிலையில் 5 மாணவிகள் கொண்ட அறைக்கு சென்ற ஆசிரியர் பொன்சிங், "இது மால்ட் பீர்! இதை சாப்பிட்டால் நாளைக்கு கப் அடிச்சிடலாம். அடுத்து ஸ்டேட் லெவல்தான்... சாப்பிடுங்க'' எனக் கட்டாயப்படுத்தி 5 மாணவிகளுக்கும் மதுவை (பீர்) கொடுத்து, இவரும் அவர்களோடு சாப்பிட்டுள்ளார். மது அருந்தும்போது அமைதி காத்தவர், சற்று நேரத்தில் காலியாக இருக்கும் அறை எண்ணினைக் கூறி, "நான் கூப்பிடும்போது வாருங்கள்... டிப்ஸ் தருகிறேன்' என்றிருக்கிறார். குறிப்பிட்ட 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மாணவிகளை தனித்தனியே அழைத்தவர், பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்'' என்கின்றார் மாவட்ட உளவுப்பிரிவு காவலர் ஒருவர்.
இரவில் நடந்த பாலியல் சீண்டல், மற்ற மாணவிகளுக்கு தெரியவர, அவர்களின் பாதுகாப்புக்காக ஒரு ஆசிரியை 23ஆம் தேதியன்று அனுப்பப்பட, அவர் மூலமாக தலைமையாசிரியை சார்லஸ் ஸ்வீட்டிலினிடம் தகவல் தெரிவிக்கப்பட, "இதைப்பத்தி வெளியில் கூறக்கூடாது. பள்ளித்தாளாளர் வந்தவுடன் பேசிக்கொள்ளலாம்'' என்றுள்ளாராம். கொஞ்சமும் பதட்டமில்லாமல் 4ஆம் தேதியன்று வந்த பள்ளித்தாளாளரிடம் தெரிவிக்க... அவரோ, பொன்சிங்கை சிறிது நாட்கள் விடுப்பில் அனுப்பி, மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட இரு மாணவிகள் பள்ளிக்கு வராமல் தவிர்க்க, விஷயம் பூதாகரமானது.
"10ஆம் தேதியே இதுகுறித்து பாதிக்கப் பட்ட மாணவியின் தந்தை காவல்துறையிடம் கூற, "இதை பெரிசு பண்ணாதீங்க' என அறி வுறுத்தியுள்ளனர். இன்னொரு மாணவியை பெண் போலீசார் அழைத்து விசாரித்ததில், கால் பாதத்திலிருந்து தொடை வரை மருந்து தடவினாரென்று கூறியிருக்கிறார். இன்னொரு மாணவியும் ஆசிரியரின் பாலியல் அத்துமீறலை முழுமையாகக் கூற, அவர்மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. அனைத்தையும் மறைக்கப் பார்த்த தலைமை ஆசிரியை, பள்ளித் தாளாளரை கைது செய்துள்ளோம்'' என்கிறது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறை.
தலைமை ஆசிரியை, பள்ளித் தாளாளரை பரமன்குறிச்சியில் கைது செய்தது காவல்துறை. உடனே நெஞ்சுவலி நாடக மாடினர் தலைமை ஆசிரியையும், தாளாள ரும். முதலில் பள்ளித் தாளாளர் செய்யது அகமது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படுக்க, அவர் வழியிலேயே பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லினும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலிப்பதாக நடித்தார். இதேவேளையில் பள்ளியும் ஒருவார காலத்திற்கு விடுமுறை விடப்பட்டது.
"இந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், இதற்கு முன்னதாக தண்டுபத்து, திசையன் விளை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பள்ளி களில் பணிபுரிந்திருக்கிறார். அங்கும் இதே போல் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளாரா? நிகழ்வின்போது வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றோம்'' என்கின்றது மாவட்ட காவல்துறை. உடற்கல்வி ஆசிரியர்களை நம்பித்தானே நம் பிள்ளைகளை சாதிக்க அனுப்புகிறோம்?
-நாகேந்திரன்
படங்கள்: சதீஷ்