டந்த வியாழனன்று காலை எட்டு மணியளவில், பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில் டூவீலரில் பணிக்காக சென்றவனை கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டி, தலையை சிதைத்திருக்கிறது ஐந்து நபர்கள் கொண்ட கும்பல்! இதே பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கலைஞ ரின் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் சாமிநாதன் வரவுள்ளார் என்பதால் காவல்துறை ஜரூராகக் களத்திலிறங்கியது.

as

"தலை சிதைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவரை முதலில் அடையாளம் காண இயலவில்லை. அமைச்சர் இந்த பகுதிக்கு வருகின்றார் என்கிற அழுத்தம் வேறு! சிதைந்து கிடைந்த முகத்தை மாநிலம் முழுக்க அனுப்பிய நிலையில், கொலை யானவரின் பெயர் வினோத் கண்ணன் என்பதும், சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் வேளூர் என்பதும் தெரிய வந்தது. பிச்சுவா வினோத் கண்ணன் எனும் பெயரெடுத்தவன் மீது கொலை மற்றும் ஆட்கடத்தல் வழக்குகள் உள்ளன. உள்ளூர் பகை அதிகமாகவே, தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை திருப்பதியில் பாதுகாப்பாக வசிக்க வைத்துவிட்டு, பல்லடம் பகுதியிலுள்ள பேக்கரியில் தன்னுடைய அடையாளத்தை மறைத்து இவன் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. எதனால் இந்த பகை? எனும் விசாரணையில் இறங்கியபோது, சிவகங்கை மாவட்ட போலீஸாரின் ஒத்துழைப்பு கிடைத்ததால், பழிக்குப் பழியாக இந்த கொலை என முடிவுக்கு வந்தோம். இவனோடு டூவீலரில் வந்து தப்பித்த பொன்னையா என்பவரையும், கொலையாளிகளையும் தேடி வருகின்றோம்'' என்றது திருப்பூர் மாவட்ட காவல்துறை.

இதே வேளையில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தாலுகா, மானாமதுரை மற்றும் திருப்புவனம் தாலுகாக்களில் வசிக்கும் குறிப்பிட்ட சிலர், அக்னிராஜ் என்பவரின் படத்தில் கொலையுண்ட வினோத் கண்ணனின் புகைப் படத்தை இணைத்து, "பழிக்குப் பழியாக நான்கு முடிந்து விட்டது. பகைகள் வளரும், தலைகள் சிதறும்!' என இவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எச்சரிக்கையும் செய்திருந்தனர். இதுகுறித்து காவல்துறையின் உளவுப்பிரிவும் எச்சரிக்கை குறிப்பு அனுப்பியது கவனிக்கத்தக்கது.

aa

Advertisment

யார் இந்த அக்னிராஜ்? எதற்காக பழிக்குப் பழி?

"சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவரான அக்னிராஜ். இவருக்கு மிதுன், வசந்த் என்பவர்கள் நண்பர்கள். இவர்களோடு பெரிய நண்பர்கள் கூட்டமும் உண்டு. நண்பர்களான இவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே பைக்கில் போவார்கள். வருவார்கள். மிதுனும், வசந்தும் 2021, ஜனவரி 6ஆம் தேதி, மானாமதுரையிலுள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக்கொண்டிருந்த பொழுது அங்கு ஏற்கெனவே தற்பொழுது கொலையான வினோத் கண்ணனும், மைனர் மணி என்கின்ற அருண் நாதனும் மது அருந்திக் கொண்டிருக்கின்றார்கள். இதில், "என்னங்கடா! பெரிய மனுஷன் குடிக்கையில் சரிக்கு சமமாக குடிக்கிறீங்க... சின்னப் பயலுக இங்க இருக்கக் கூடாது!'' என மிதுனையும், வசந்தையும் அடித்து அனுப்பி விட்டுள்ளனர் வினோத் கண்ணனும், மைனர் மணியும். இதனை தன்னுடைய நண்பர்களிடம் கூற, அதே வாரம் ஜனவரி 10ம் தேதியன்று இரவு 9.40 மணியளவில் மானாமதுரை நீதிமன்றம் எதிரில் மது அருந்திக்கொண்டிருந்த வினோத் கண்ணனையும், மைனர் மணியையும் அட்டாக் செய்கின்றது மிதுன், வசந்த் டீம். இதில் சம்பவ இடத்திலேயே மைனர் மணி இறந்து போக, வினோத் கண்ணன் வெட்டுப்பட்டு உயிர் பிழைக்கின்றான். இந்த கொலை வழக்கில், சம்பந்தமே இல்லாமல் 9வது குற்ற வாளியாக சேர்க்கப்பட்டவர் தான் சட்டக்கல்லூரி மாணவரான அக்னிராஜ். 40 நாட்கள் கழித்து அக்னிராஜ் நிபந்தனை ஜாமீனில் வந்திருக்கின்றார். நிபந்தனை ஜாமீனுக்காக மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தவரை, மார்ச் 5 அன்று வெட்டிக் கொன்றது வினோத் கண்ணன் டீம். இதனை செய்தது நாங்கள் தான் என பரமசிவம், பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், ஆகாஷ், அழகுபாண்டி ஆகியோர் திருப்பாச்சேத்தி காவல்நிலையத்துல சரண்டர் ஆகிறார்கள். ஆனால் வினோத் மட்டும் எஸ்கேப்'' என்கிறார் ஆவரங்காட்டை சேர்ந்த சிவா.

"நமக்காகத் தானே அவன் படிக்கவே போனான். சம்பந்தமேயில்லாத அவனை எதுக்கு அவனுக கொலை செய்யணும்? சின்னப்பையன்னு பார்க்காமல் கூட உன்னைக் கொன்றவர்களை பழிக்குப் பழி வாங்குவோம். உன்னைய எப்படி வெட்டிக் கூறு போட்டார்களோ அதேபோல் அவர்களது தலையை சிதறச் செய்வோம்'' என அக்னிராஜ் சமாதியில் சபதம் செய்து, இதற்காக "அக்னி பிரதர்ஸ்' எனும் பெயரில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் குழுவினை ஆரம்பித்திருக்கின்றனர் கொலையுண்ட அக்னிராஜின் நண்பர்கள்.

Advertisment

மானாமதுரை காவல் நிலையத்தில் பணியாற் றும் அதிகாரி ஒருவரோ, "அக்னிராஜ் கொலைக்குப் பிறகு சிறையிலிருந்து வெளி வந்திருக்கின்றான் கொலையின் முக்கிய சூத்ரதாரியான பரமசிவம். 15, ஜூலை 2022 அன்று, கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியின் பொழுது அவனை இழுத்துவந்து தலையை சிதைத்து பழிக்குப் பழியை ஆரம்பித்திருக்கின்றனர் அக்னி பிரதர்ஸ் டீம். இந்த கொலைக்கு நாங்கள் தான் காரணமென அக்னிராஜ் சித்தப்பா தொடங்கி, நண்பர்கள் 10 பேர் மதுரையில் சரண்டர் ஆனார்கள். ஆனால் அக்னி பிரதர்ஸின் டீமில் யார் யார் இருக்கின்றார்கள்? என இப்பொ ழுது வரை யாருக்கும் தெரியாது. அதுதான் அவர் களின் பலம். அடுத்த பழிக்குப் பழியாக, நவம்பர் 3, 2022 அன்று, முத்துப்பட்டி அருகில் காமராஜ் காலனியிலுள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆகாஷை, அக்னி பிரதர்ஸின் வசந்த் டீம் தலையை சிதைத்து கொலை செய்யுறாங்க.. அதன்பின், ஜனவரி 25, 2023 அன்று, மேலூர் உறங்கான்பட்டி யில் மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்த அழகுபாண்டியை கதவை உடைத்து வழக்கம்போல் தலையைச் சிதைத்து கொலை செய்கின்றது இதே அக்னி பிரதர்ஸ் டீம். அதன்பின் இப்பொழுது வினோத் கண்ணன். இருப்பினும் இது நீளக்கூடாது என்பது தான் காவல்துறையின் விருப்பம்'' என்கின்றார் அவர்.

"அடுத்த கொலை தானாக இருக்கக்கூடும் என வினோத் கண்ணன், பூச்சி இருளப்பன், விக்கி, சக்தி வேல், தர்மராஜ் ஆகியோர் தங்களது குடும்பத் தினை வெவ்வேறு இடத்தில் குடியமர்த்திவிட்டு திருப்பூர் மாவட்டத்தில் அடையாளத்தை மறைத்து பணியாற்றி வந்திருக்கின்றனர். இதில் ஒரு சிலர் கோழிக்கடையிலும், மேலும் சிலர் பேக்கரிகளிலும் பணியாற்றி வந்திருக்கின்றனர். இவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள் என அடையாளம் கண்டு, குறிப்பிட்ட அக்னி பிரதர்ஸ், தாங்களும் பல்லடம் பேக்கரிகளில் பணியாற்றியுள்ளனர். தகுந்த நேரம் உணர்ந்து இதனைச் செய்திருக்கின்றனர்'' என்கின்ற னர் சிவகங்கை உடையாங்குளத்தை சேர்ந்தவர்கள்.

இதே வேளையில், பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் ஆகியோரை இனம் காணும் முயற்சியில் களமிறங்கியுள்ளது காவல்துறை. அக்னி பிரதர்ஸ் டீமில் யார் யார் இருக்கிறார்கள்? யார் தலைமை? என்பதை அறியவும், இவர்களுக்கு உதவி செய்யும் திண்டுக்கல் டீமை அறியவும், கொலைக் குற்றவாளிகளைத் தேடியும் காவல்துறையின் விசாரணை வளையம் விரிந்துகொண்டே... விரைந்துகொண்டேயிருக்கிறது! தொடர் கொலை களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா காவல்துறை?

- நா.ஆதித்யா

படங்கள்: விவேக்

_________

FOLLOW-UP போக்சோ காவலர்! இப்போது கஞ்சா கடத்தலில்!

aa

முக்கொம்பு சுற்றுலா தளத்தில் 17 வயது சிறுமி யிடம், சாதாரண உடையிலிருந்த 4 காவலர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து, 'காதல் ஜோடிகளை குறி வைத்த முக்கொம்பு காவலர்கள்! அணிவகுக்கும் ஆபாச சாட்சியங்கள்!' என்ற தலைப்பில், ஆகஸ்ட் 07-09 நக்கீரன் இதழில் விரிவாக எழுதியிருந்தோம். மாணவியிடம் அத்து மீறிய உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர் பிரசாத், முதல்நிலை காவலர் சங்கரராஜா பாண்டியன், காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் திருச்சி எஸ்.பி. தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள், 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தபிறகும் குற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை யென்றும் நக்கீரனில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், ஆந்திராவிலிருந்து புதுக் கோட்டைக்கு இருவர் காரில் கஞ்சா கடத்தி வருவதாக எஸ்.பி. தனிப் படைக்கு தகவல் கிடைத்ததை யடுத்து, பெரம் பலூர் சுங்கச் சாவடியில் தனிப் படையினர் மடக்கிப் பிடித்து காரை சோதனையிட்டபோது, 4 மூட்டைகளில் 117 கிலோ கஞ்சா இருப்பதும், கடத்தல்காரர்களில் ஒருவர், போக்சோவில் கைதாகி ஜாமீனிலிருக்கும் காவலரான சங்கரராஜா பாண்டியன் என்பதும் தெரிய வந்தது. காவலரே கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதும், அதுவும் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்தவர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதும், தமிழகக் காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்துவ தாக உள்ளது. கஞ்சா வேட்டை குறித்தும் பொதுமக்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. சம்பந்தப்பட்ட காவலர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் குரலெழுப்புகிறார்கள்!

- துரை மகேஷ்