ஐ.பி.எஸ். அதிகாரியை பந்தாடியுள்ளது எடப்பாடி அரசு. திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருந்தவர் சிபிசக்கரவர்த்தி. இவரை திடீரென்று திருவண்ணாமலைக்கு மாற்றிவிட்டு திருவண்ணாமலையில் எஸ்.பி.யாக இருந்த பொன்னியை திருவள்ளூருக்கு கொண்டுவந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லையை ஒட்டியுள்ளது ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீசிட்டி எனப்படும் சர்வதேச தொழிற்பேட்டை. பல வெளிநாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஸ்ரீசிட்டியில் அங்கிருக்கும் பணக்கார வெளிநாட்டவர்களுக்காக சூதாட்டம், விபச்சாரம், வெளிநாட்டு உணவகங்கள் அமைந்துள்ளன. இதற்கு சமீபத்தில் சந்திரபாபு நாயுடு செக் வைத்தார். பணக்காரர்கள், பலான ஆசையில் பரிதவித்துப்போனார்கள். அவர்களுக்கு கைகொடுக்க முன்வந்தனர் இரண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். ஒருவர் ஆந்திர-தமிழக பார்டரை ஒட்டிய கும்மிடிப்பூண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வான விஜயகுமார். மற்றொருவர் தி.நகர் எம்.எல்.ஏ.வான சத்யா.
கும்மிடிப்பூண்டி விஜயகுமார், தன்னுடைய தாய்மொழியான தெலுங்கில் உரையாடிய ஆந்திர தொழிலதிபர்களை அதே தாய்மொழியைக் கொண்டவரும் ஆந்திரமாநில எல்லைப் பகுதியான ஆரம்பாக்கத்தில் மிக பெரிய ரிசார்ட் ஒன்றை நடத்திவருபவருமான தி.நகர் எம்.எல்.ஏ.வான சத்யாவிடம் அழைத்துப்போனார்.
இதையடுத்து, கோடம்பாக்கத்தில் நன்கு பரிச்சயம் பெற்றவரான சத்யாவுக்கு வேண்டிய திலீப் என்பவர் ஆரம்பாக்கம் காவல்நிலையத்திற்குப் பக்கத்தில் சிறிய அளவில் சூதாட்ட விடுதி ஒன்றை நடத்திவருகிறார். ஆரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சத்யாவுக்குச் சொந்தமான ஸ்ரீவாரி பார்ம்ஸ் அண்ட் ரிசார்ட்சை பலான சூதாட்ட விடுதியாக மாற்றலாம் என விஜயகுமாரும் ஆந்திர பார்ட்டிகளும் சொன்னதை ஏற்றுக்கொண்டார் சத்யா.
இதுபற்றி திருவள்ளூர் எஸ்.பி.யான சிபிசக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். சிபி உடனே தனது உயரதிகாரியான டி.ஐ.ஜி. தேன்மொழியிடம் சொன்னார். இருவருமே ஹானஸ்ட் ஆபீசர்ஸ் என பெயர் எடுத்திருந்தாலும், ஒருவருக்கொருவர் ஆகாது.
"அலுவலகப் பதிவுகளில் "சிபி எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்' என தேன்மொழி குறிப்பெழுத... அதைக் கவனித்த வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், "சிபி வேலையில் மிகச்சிறந்தவர்' என அந்தக் குறிப்பைத் திருத்தினார். இந்தப் பின்னணியில் கும்மிடிப்பூண்டி விஜயகுமாரிடமும் தி.நகர் சத்யாவிடமும் "சிபிதான் உங்கள் முயற்சிகளைத் தடுக்கிறார்' என போட்டுக்கொடுக்கும் வேலையும் காவல்துறைக்குள்ளேயே நடந்தது.
போலீஸ் அதிகாரிகள் இடமாறுதலில் முக்கியப் பங்காற்றும் சேலத்தைச் சேர்ந்த ஜிம் அருண், சேலம் கமிஷனருக்கு வரும் ரகசிய தகவல்களை நேரடியாகப் படிக்கக்கூடியவரான, எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் உள்ளிட்டோர் சத்யாவின் கிளப்புக்கு கஸ்டமர்கள். அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி தரப்புவரை இது நீடிக்கிறது. ஒரே ஒருமுறை முதல்வர் எடப்பாடியும் சத்யாவின் கிளப்பிற்கு வருகை புரிந்துள்ளாராம்.
அனைவரிடமும் "சிபிசக்கரவர்த்தி எனக்கு எதிரியாக உள்ளார், அவரை மாற்றுங்கள்' என கூறினார் சத்யா. "இவர்கள் அனைவரும் ஒரேமாதிரி சொல்வதால் சிபியை மாற்றுங்கள்' என உள்துறை செயலரிடம் எடப்பாடி சொன்னார். உள்துறை செயலாளர் டி.ஜி.பி.யிடம் சொன்னார். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஏற்கவில்லை. சிபிசக்கரவர்த்தி நேர்மையான அதிகாரி என்பதை முதல்வரிடமே தெரிவித்துள்ளார் டி.ஜி.பி.
மறுபுறம் தி.நகர் சத்யா சூதாட்ட கிளப் தொடங்க சிபிசக்கரவர்த்தி அனுமதி மறுத்த விவகாரத்தில் இருவருக்கும் வார்த்தைப்போர் வெடிக்க... உயரதிகாரியான தேன்மொழி, இந்த மோதலை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் சேலம் ஜிம் அருண், சேலம் இளங்கோவன், செங்கோட்டையன், வேலுமணி மூலமாக முதல்வரின் காதில் விழுந்தது. உள்துறை செயலாளருக்கும் உத்தரவு பறந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி பற்றி நல்ல அபிப்பிராயத்தை எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.
பொன்னியை திருவள்ளூருக்கு மாற்றிவிட்டு, சிபியை முக்கியத்துவமில்லாத இடத்தில் போடலாம் என ஜிம் அருணும், சேலம் இளங்கோவனும் முதல்வரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து டி.ஜி.பி.யிடம் முதல்வர் பேசினார். அவரோ, "பொன்னியை திருவள்ளூருக்கு மாற்றலாம், ஆனால் சிபிசக்கரவர்த்தியை முக்கியத்துவமில்லாத இடத்திற்கு தூக்கியடிக்க முடியாது' என்று சொல்ல... "அப்படியானால் இருவரையும் பரஸ்பரம் இடம் மாற்றுங்கள்' என எடப்பாடி கூறினார். அதன்படிதான் இந்த மாற்றம் நடந்தது என்கிறார்கள்'' காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
தற்பொழுது சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையுடன் பழவேற்காடு ஏரியை இணைக்கும் 1500 ஏக்கர் பரப்பளவுள்ள சத்யாவின் ரிசார்ட்டை சூதாட்டம், பலான சமாச்சாரம் ஆகியவை இணைந்த ரிசார்ட்டாக மாற்ற எல்லா வேலைகளையும் வேகமாக நடத்த அனுமதியளித்துள்ளார், புதிய எஸ்.பி.யாக திருத்தணி கோயிலில் பதவியேற்ற எஸ்.பி. பொன்னி என்கிறது காஞ்சி வட்டாரம்.