திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல் வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், கூத்தை பார் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக் செய்திருந்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் கொறடாவுமான மனோகரன் ஆகியோர் வந்தபோது, அவர்களை வரவேற்பதற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்த வாழவந்தான் ராஜா என்பவர் வெடியைப் பற்றவைத்துள்ளார்.
அந்த வெடி வெடித்ததில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் வெடி தெறிக்க, அவர் நிலைகுலைந்தார். உடனடியாக அவரை திருவெறும்பூர் பகுதியிலுள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளரின் கண்ணின் கருவிழியில் வெடியிலிருந்த நெருப்புத்துண்டு நேரடியாக வந்து விழுந்ததில், கருவிழி மற்றும் அதைச் சுற்றியுள்ள மெல்லிய நரம்பு மண்டலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருடைய பார்வை பறிபோனதாகத் தெரிவித்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளரின் கண் பார்வை பறிபோனதையறிந்த திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் மற்றும் திருவெறும்பூர் இன்ஸ் பெக்டர் கருணாகரன் ஆகியோர் சுப்பிரமணியனை, மதுரையிலுள்ள பிரபல கண் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திருவெறும்பூர் போலீசார், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் கொறடாவுமான மனோகரன், வெடிவைத்த ராஜா உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, வெடிவைத்த வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த ராஜா அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பன் ராகவன், வடக்கு காட்டூரை சேர்ந்த முகமது ரபிக் ஆகிய மூவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் எந்த ஒரு பாதிப்பும், அசம்பாவிதமும் ஏற்பட்டால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, தங்கள் கட்சிக்காரர்களின் செயலால் சிறப்பு உதவி ஆய்வாளரின் கண் பார்வை பறிபோனது குறித்து இதுவரை எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. மேலும், அவரது மேல்சிகிச்சைக்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார்!