திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தொகுதி எம்.எல்.ஏ.வாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக 2012 முதல் 2016 வரை இருந்தவர் முக்கூர் சுப்பிரமணி. அவர் அமைச்சராக இருந்தபோது, பைங்கிணர் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டிலுள்ள ஆதிபராசக்தி துர்கையம்மன் கோவிலைப் புனரமைத்துக் கட்டும்போதே பக்கத்தில் கோவிலுக்கென திருமண மண்டபமும் கட்டப் பட்டது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர் தலில் முக்கூர் சுப்பிரமணிக்கு எம்.எல்.ஏ, சீட் கிடைக்கவில்லை. எனினும், அ.தி.மு.க. ஆட்சி என்பதால் கோவில் மற்றும் திருமண மண்டபம் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே விடப்பட்டது. இதற்காக எஸ்.எஸ்.எஸ். என்கிற பெயரில் டிரஸ்ட் தொடங்கி அதன்மூலமாக அந்த மண்டபத்தை நிர்வகிக்கிறாராம் முக்கூர் சுப்பிரமணி.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், அந்த கோவில் மற்றும் திருமண மண்டப வரவு-செலவுகளை ஆய்வு செய்யவேண்டும் என அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் அறநிலையத் துறை அதிகாரிகளி டம் முறையிட்டும், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், செய்யார் தொகுதியின் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ஜோதி, துர்கையம் மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக முக்கூர் சுப்பிரமணியை நியமனம் செய்ய வேண்டுமென்று திருவண்ணா மலை உதவி ஆணையருக்கு சிபாரிசு செய்துள்ள தகவல் பரவி தி.மு.க. வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்யார் பகுதி தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "முக்கூர் சுப்பிர மணி அமைச்சராக இருந்தபோது, பொதுமக்களிடமும் தொழிலதிபர்களிடம் வசூல் செய்த பணத்தை வைத்துதான் கோவில், திருமண மண்டபம் கட்டப்பட்டது. ஆனால், அந்த கோவிலைத் தனது சொத்து போல் அவர் பாவித்ததால் அது குறித்து கேள்வி கேட்டவர்களை தனது அதிகாரத்தால் ஒடுக்கினார். தி.மு.க. ஆட்சியில் அந்தப் பகுதி தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர், அறங்காவலர் குழுத் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அவருக்கு வழங்காமல், ஏற்கெனவே குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்காக தி.மு.க. எம்.எல்.ஏ. சிபாரிசு செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார்.
செய்யார் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதியிடம் கேட்டபோது, "மாவட்ட அறங்காவலர் குழு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, "அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது கட்சி பார்க்க வேண்டாம், கோவில் பணியைச் சிறப்பாகச் செய்யும் யாராவது பதவி கேட்டால் அவர்களுக்குத் தாருங்கள்' எனச் சொன்னார். அந்தகோவில் கட்டுமானம், பராமரிப்பு போன்றவற்றை முக்கூர் சுப்பிரமணி செய்ததால் அவர் பெயரை சிபாரிசு செய்தேன். இன்னும் அவரை நியமிக்கவில்லை, இதை வேண்டாத சிலர் பிரச்சனையாக்குகிறார்கள்" என்றார். தி.மு.க. தொண்டனின் உழைப்பில் பதவிக்கு வந்துவிட்டு அ.தி.மு.க. பிரமுகர்கள் பதவிக்கு வர வேலை செய்வது சரியா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தி.மு.க.வினர்.