திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்துள்ளது. புரோக்கர்களை வைத்து பணம் வசூல்செய்து அட்மிஷன் போட்டுள்ளார்கள். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை, அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டுமென மாவட்ட சி.பி.எம். செயற்குழு கண்டன தீர்மானம் இயற்றி பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, கல்லூரி முற்றுகை, உள்ளிருப்புப் போராட்டம், சாலை மறியல் என தொடர்ச்சியாக நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய மா.செ. செல்வம், “கல்லூரியில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை, பணம் வாங்கிக்கொண்டு அட்மிஷன் நடத்தியுள்ளார்கள். தி.மு.க.வைச் சேர்ந்த காலேஜ் ரவி என்பவர் அட்மிஷனுக்கு 10 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு அவர் யாருக்கு டோக்கன் தரு கிறாரோ அவரையே கல்லூரி முதல்வர் சேர்த்துள் ளார். இதனால் ஏழை மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்''’என குற்றம்சாட்டினார்.

gg

Advertisment

இதுகுறித்து தி.மு.க. தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காலேஜ் ரவியிடம் பேசியபோது, "நான் பணம் வாங்கிக்கொண்டு டோக்கன் தந்தால்தான் அட்மிஷன் போட்டார்கள் என குற்றம்சாட்டுவது சரியானதல்ல. எந்தவித விசாரணைக்கும் தயார். உள்ளே நடப்பது சாதியச் சண்டை. இதில் தேவையில்லாமல் உண்மை தெரிந்தும், தெரியாததுபோல் என்னை உள்ளே இழுக்கிறார்கள்''’என்றார்.

கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவரிடம் பேசியபோது, “"1966-ல் தொடங்கப்பட்ட கல்லூரி. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்றுவருகிறார்கள். மெரிட் அடிப்படையிலேயே கல்லூரியில் அட்மிஷன் நடக்கும். என்னதான் மெரிட் பாலோ செய்தாலும் ஆளும்கட்சி, எதிர்க் கட்சி, லெட்டர்பேட் கட்சிகள், உயர்கல்வித்துறை அமைச்சகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சிபாரிசுகளோடு வருவார்கள். என்னைப் போன்ற பேராசிரியர்களும் சிபாரிசு செய்வோம். ரெகுலர் அட்மிஷன் முடிந்ததும் மீதியுள்ள இடங்களை வராண்டா அட்மிஷனில் நிரப்புவோம். அதில் சிபாரிசு செய்தவர்களின் தகுதிக்கேற்ப சீட் வழங்குவார்கள், இது காலம்காலமாக நடப்பது தான். இதில் எங்கே பிரச்சனை என்றால், கல்லூரிக்குள் பட்டியலினத்தவர், பட்டியலினமல்லாதவர்கள், இதில் சேராதவர்கள் என மூன்று குரூப் உள்ளது. இதில் பட்டியலினத்தவர் களுக்கும் - பட்டியலினமல்லாதவர்களுக்கும் இடையே கல்லூரியை யார் கண்ட்ரோலில் வைத்திருப்பது என்கிற யுத்தம் நடக்கிறது.

Advertisment

கல்லூரியில் அட்மிஷன் கமிட்டி உள்ளது. இதில் கல்லூரி முதல்வர், மூத்த பேராசிரியர்கள் 4 பேர் என ஐவர் இந்த கமிட்டியில் இருக்கிறார்கள். பல்கலைக்கழக விதிகளின்படி இவர்கள்தான் அட்மிஷன் போடுவார்கள். கடந்தாண்டு வரை வெளிப்படையாக நடந்த அட்மிஷன், இந்தாண்டு அப்படி நடக்கவில்லை. ரேங்க் பட்டியல்கூட ஒட்டவில்லை. 1600 மாணவர்கள் சேர்க்கை நடத்திமுடிக்கப்பட்டது. தி.மு.க. அரசு இந்தாண்டு மாணவர் சேர்க்கையில் 20 சதவிகிதம் கூடுதலாக சேர்க்கலாம் என உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு பல்கலைக் கழகத்திலிருந்து கல்லூரிக்கு வரவில்லை. உத்தரவு வரும் முன்பே 20 சதவித கூடுதல் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வில் மீதியுள்ள இடங்களுக்கு என சுமார் 758 இடங்களுக்கான சேர்க்கையை, அட்மிஷன் கமிட்டி நடத்தியது. திடீரென கல்லூரி முதல்வருக்கு இடமாறுதல் வந்துவிட்டது.

ராமநாதபுரத்தில் இருந்து இடமாற்றத்தில் வந்த கணேசன் முதல்வராக பதவியேற்றார். பல்கலைக்கழக உத்தரவு வராமல் 20 சதவிகிதம் மாணவர் சேர்க்கை எப்படி நடத்தலாம் எனக் கேள்வியெழுப்பியவர், அனுமதி வரட்டும் கூடுதல் இடங்களுக்கு அட்மிஷன் போடலாம் என நிறுத்திவிட்டு ஒரு பயிற்சிக்காக சென்னை சென்றுவிட்டார். பழைய தேர்வுப் பட்டியலி-ருந்த பெயர்களில் பலவற்றை நீக்கி புதியதாக பட்டியல் தயாரித்து சேர்க்கை நடந்ததாலே பிரச்சனை''’ என்றார்.

கல்லூரி ஊழியர்களுள் ஒருவரிடம் பேசியபோது, "இடஒதுக்கீடு பின்பற்றாமல் அட்மிஷன் போடமுடியாது. இதில் எங்கே விதிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றுவார்கள் என்றால், எம்.பி.சி அல்லது எஸ்.சி. அல்லது எஸ்.டி. வகுப்பில் 10 சீட் காலியாகவுள்ளது என்றால் தகுதியிருந்தாலும் சம்பந்தப்பட்ட சாதி மாணவர்களை சேர்க்கமாட்டார்கள். சீட் இல்லை எனச் சொல்லிவிடுவார்கள். காலியாகவுள்ள இடத்தில் மற்ற சாதி மாணவர்களைச் சேர்க்க பல்கலைக்கழகத்தில் அனுமதிபெறவேண்டும். அனுமதி வாங்கியபின் முதல்வர் தலைமையிலான அட்மிஷன் கமிட்டியில் யார் வலிமையாக உள்ளார்களோ அவர்களே அதில் பெரும்பாலான இடத்தை எடுத்துக்கொள்வார்கள். கடந்த சில ஆண்டுகளின் அட்மிஷன் ஃபைல்களை எடுத்துப்பார்த்தாலே கல்லூரி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியவரும்.

gg

இடமாற்றம் செய்யப்பட்ட முதல்வர் கணேசன் சென்னை மாநில கல்லூரியில் பணியாற்றியவர். அப்போது அ.தி.மு.க. அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமாக இருந்தார். அவரோட பினாமின்னே இவரை சொல்லுவாங்க. சில பேராசிரியர்கள் சாதிய பாசத்தோடு நடந்துகொள்கிறார்கள். மாணவர்களை பட்டதாரிகளாக்கவேண்டிய இவர்கள், அவர்களை சாதியவாதிகளாக வளர்க்கிறார்கள். இதனைக் கேள்வியெழுப்பும் பேராசிரியர்களுக்கு, பலவிதமான குடைச்சல்களைத் தருகிறார்கள். இதற்குப் பயந்து கொண்டே பலரும் அமைதியாக இருக்கிறார்கள்'' என்றார்.

சமத்துவம், சமூகநீதி பேசிய, செயல்பட்டு சாதித்த தலைவரின் பெயரைக்கொண்ட கல்லூரி, ஒருகாலத்தில் திராவிடக் கட்சிகளின் கட்டுப்பாட் டில் இருந்தது. இப்போது சாதி ஆதிக்கத்திலுள்ளது. இந்த பிரச்சனையைத் தீர்க்காவிட்டால், கல்லூரி மட்டுமல்ல... இந்தப் பகுதியே நாளை சாதிய மோதல்கள் நடக்கும் பகுதியாக மாறும்.